Sunday, November 10, 2013

மாயா - தொடர்ச்சி 3


காடும் காடு சார்ந்த இடமும்
எங்கள் பிழைத்தலுக்கான ஆதாரம்...
கொல்லுதலும்
வெல்ல முடியாததை வெல்லுதலும்
வீரத்தை நிலைநாட்டுதலும்
எம் குலப்பெருமை...
பாற்கடல் அமுதத்திற்காக
மல்லுக்கட்டி நின்றவர்கள்
எம்மூதாதையர்கள்..
பாலை பல கடந்து
நாடு பல வென்று
பளிங்குக்கல் சிங்கச்சிலை செதுக்கி
சென்றவிடமெல்லாம் நிறுவி
நின்று திமிர் செய்தவர்
எம்குலச் சிங்கம்
என் தந்தை...
...
தினம் பூக்கும் குறிஞ்சி,
தாய்மையின் தூயபிரதி,
இருள்சூழ்ந்த எம் கானகத்தின்
தனிப்பெரும் சோதி,
எம் ஒட்டுமொத்த வெற்றிகளையும்
விதைத்து தினந்தோறும்
பயிர்செய்த பக்குவக்காரி,
வேட்டுவ தலைவனை
வாள்முனையில் வளைத்து
‘பிழைத்துப்போ’ எனச்சொல்லி
பின் அவனே
பரிசம்போட்டு பழிவாங்க,
பாசம் கூட்டி
பாடம் பல சொல்லி
நடமாடும்
எம் குலச் சாமி
ஆகிப் போனவள் என் தாய்
...
வீரம் விளைத்து
காடும் வீடும் காக்க
காளைகள் நாலு பெற்றும்
களையற்றுப் போனாள் ..
விட்டுப் பிரிந்த தாய்
மீண்டும் பிறப்பதாய்
செய்து போன சத்தியம்
சாத்தியம் ஆகாது நீடிக்க
நொந்து நூலாகி
உடைந்துபோய் உருகி,
கடைசியாய் காவி தரித்து
கோவில் கோவிலாய்
சுற்றித் திரிந்து,
சூட்சுமமாய் சொல்லிப்போன
ஏதோ ஒரு
ஏழைக்கிழத்தியின் வழிபற்றி
நிலவைக் குறித்து
தீர்க்கமாய் தவமேற்று
நள்ளிரவு நிச்சலனத்தில்
நிலவின் ஒற்றைக்கீற்று
உள்வாங்கி தரித்து
எனைச் சூல் கொண்டாள்
என் சாமி, என் தாய்...
...
எனைத் தாங்கியிருந்த
மாதம் பத்தும்
என் தாய் பேசியதெல்லாம்
இசையாகிப் போக,
அவள் நடை
தனியொரு நடனமாகி,
தனைச் சுற்றி
தன்னியல்பு மீறி,
ஏதோவொன்று
எப்போதும் பிரகாசிக்க,
பகலுறங்கி,
இரவு விழித்து
நிலவோடு நித்திரை காத்து
நடமாடித் திரிந்திருக்கிறாள்
....
நான் வெளிவந்த நொடி,
எம் கானகம் முழுதும்
மஞ்சள் ஒளியும்
மந்தாரப்பூ மணமும்
மாரியெனச் சொரிந்ததாம்..
முதல் மூணு மாசமும்
பசியின்றி , வேட்டையின்றி
தன்னிலை மறந்து
தியானத்தில் மூழ்கித்
திளைத்ததாம்
எம் தீரர் கூட்டம்
...
வால்முனைச் சிணுங்கலும்
யானைப் பிளிறலும்தான்
நான் கேட்ட தாலாட்டு..
குறுங்கத்தி பிடித்து
குளக்கரையில்
அகரம் எழுதி,
காற்றில் வால்நுனியில்
கவிதை எழுதச் செய்தான்
எம் தாய் தந்த மாமன்
...
பல்லாங்குழி வயதில் தொடங்கி
யாருக்கும் முன் எழுந்து
முந்தைய இரவின்
கனவுக் கோலத்தை
கதிரவனுக்குச் சமர்ப்பித்து
எம் குலச் சாமிக்கு
விளக்கு வைத்து முற்றத்தை
வெளிச்சத்தில் மொழுகி வைத்து,
வீரன் என் மூத்த அண்ணனின்
கருப்பழகி குதிரைக்கு
கண் கட்டி பயிற்சி கொடுத்து,
களரி புரிந்து – பின்,
காத்திருக்கும் பலநிற
தோட்டத்து மலர்களுக்கு
தாகம் தீர்த்து,
விரும்பி அடுக்களை புகுந்து,
அமிர்தமாய் சுவைகூட்டி,
அரிசில் படைத்து,
அக்கம் பக்கத்து,
அன்றாடங்காய்ச்சிகளைத் தேடி,
அவர்தம் சிறாருடன்
ஆடி விளையாடி ,
நீராட்டி,
மையிட்டு
வீரமீசை வரைந்து
அழகு சேர்த்து,
காடு சுற்றக் கிளம்பி
மாலை வரை
எமக்கேயான எல்லா
தந்திர விளையாட்டும்
ஆடிக் களைத்து,
நிலாப் பள்ளியெழுச்சி பாடி,
வீடு சேர்ந்தது – என்
மலரக் காத்திருந்த
மொட்டுப் பருவம்...
...
எம் குல
வீரத்தின் சின்னமான
வலம்புரி சங்கைக்
களவு செய்ய வந்து
கடைசி நொடியில் மாட்டி,
கட்டி வைத்து அடித்து
சிரச் சேதம் செய்யப்போன
இறுதி கணப்பொழுதில்,
வானகம் அதிர
இடியாக முழங்கி ,
கண்ணில் மின்னல் தெறித்து
கட்டவிழ்த்து,
தலை கொய்யக்
காத்திருந்த தலையாளியின்
தலைத் திருகி,
திமிறி இவன் சிதறிய
மூர்க்கத்துளி ரத்தம் - என்
முகம் சேர்ந்து
என்னில்
ஏதோ புரியாத
ஏக்கமொன்றை
விதைத்துப் போக,
மறுநாள் காலை
மூலை சேர்ந்தது - என்
திமிறித் திரிந்த பெண்மை
...



Thursday, November 7, 2013

மாயா - தொடர்ச்சி 2


நேற்றைய கனவில்
இவன் காற்சிலம்பு
தெறித்துச் சிதற
பதறி எழுந்து
நான் வரைந்த
இவன் ஓவியத்தின்
திமிர் பார்த்து
பெருமூச்சு விட்டு
எப்போதும் பக்கத்தில்
துணையாய் வைத்திருக்கும்
இவன் பரிசளித்த
அப்போதே உதிர்ந்த
மயிலிறகைத் தொட்டுப்பார்த்தேன்...
மீண்டும் என்னுள்
இவன் குறித்த
போய்விடுவானோ என்ற பயம்
தொற்றிக்கொள்ள,
தலைகவிழ்ந்து தரை பார்த்து
தனித்திருந்தேன்
...
அன்றொரு நாள்,
ஆற்றங்கரையில்
ஆழமாய்ச் சிந்தித்து
தென்றலைக் கீறி முடைந்து
கற்பனை கோட்டையெல்லாம் கட்டி
ஒய்யாரமாய் ஊஞ்சலாடியபோது,
எனக்காகவே
கடவுள் கொடுத்த வரமான
வழக்கமான மயக்கமென்னைத் தழுவ
தனியாய் நீந்தியிருந்த
தங்க மீனுக்குத் துணையாய்ப்போய்
ஆற்றில் விழுந்தேன்...
எப்படித்தான் வருவானோ
ஒவ்வொருமுறையும்
எனைக்காப்பாற்ற!!
...
விழித்துப் பார்க்கையில்
இவன் ஆண்மையின் அரவணைப்பில்
முகமூடிக்குள்ளான
மூர்க்கத்தின் முணுமுணுப்பில்
முறைத்துப் பார்த்த – இவன்
கூரிய விழிகள் விலக்கி
மெலிதாய்ப் புன்னகைத்தேன்..
ஏதோ தோன்றியவனாய்
திடீரென ஓடி,
அடர்ந்து சுற்றியிருந்த
ஆலமர விழுதுகளை
கட்டிப் பிணைத்து
ஏதோ செய்து ,
‘இதோ பார்,
உனக்கான அந்தரத்துக் கட்டில்’ என்றான்
என்னவோ – இவன்
எனைத் தொடும்போது மட்டும்
எனைச் சுற்றிலும்
தென்றலடிக்கிறது ...
எனையறியாமல் எனைத்தூக்கி
அந்தரத்தில் மிதக்க விட்டு,
‘இன்னிக்கு ராத்திரிக்கு
நீ தான் நிலா’ என்றான்..
அன்றைய இரவு
என் வெட்கத்தில் சிவந்தது...
...
தெரியாமலிருந்தும்
தெரிந்ததாய் நான் செய்த
தட்டையும் முறுக்கும்
தின்று விக்கி –இவன்
திணறிய நேரம்,
முடியாமல் சிரிக்க முயன்று – என்னில்
கண்ணீர் கொணர்ந்தான்,
‘பரவால்ல மாயா,
யாரோ திட்றாங்க,
தண்ணி குடு’ என்றான்..
‘கண்ணம்மா தவிர
யாரிருக்கா உன்ன நினைக்க?’
‘ஏன், நீ இல்லியா?’
‘நான்தான் உன்ன
ஜென்மசனியா புடிச்சு
என்கூடவே
வச்சிருக்கேனே’
‘ஏன், கூட இருந்தா
நெனைக்கமாட்டியா?’ என்றான் ..
சில நொடி மௌனம் காத்து,
‘உன்கூட இருந்தா
எனக்கும் சேத்து
நீ தானே யோசிக்ற!’ என்றேன்
...
வழக்கமான ‘ம்ம் ம்ம்’ போட்டு,
‘ஆமா,
கண்ணம்மாவ நேர்ல பாத்தா
என்ன செய்வ?” என்றான்
துளியும் யோசிக்காம,
‘சட்டுன்னு கால்ல விழுவேன்,
அப்புறம் கட்டிக்குவேன்’ என்றேன்..
‘ஏய், அவ என் கண்ணம்மா,
நீ எப்படி கட்டிக்கலாம்’
குழந்தையாகக் கேட்டான்..
‘கண்ணம்மா தானே
என் கண்ணா உன்ன
பாத்துக்கச் சொன்னா,
உனக்கெங்க புரியப்போகுது,
போப்பா போ!’ என்று சீண்ட,
ஏதும் புரியாமல்
அவனுக்கே உரிய
திருட்டு முழியில்
வார்த்தையற்று திக்கினான்
...
“அது சரி,
நீயும் நானும் யாரு?’ என்றேன்
“அப்படின்னா?’
‘நமக்குள்ள என்ன?’ என்றேன்
‘என்னன்னா?’
‘அது வந்து,
வந்து,
நம்ம உறவுக்கு பேர் என்ன?’
இதைக் கேட்கையில்
சத்தியமாய் என்னுயிர்
என்னில் இல்லை..
மௌனமாய் சிலநொடி
வானம் பார்த்து,
அருகே வந்து – பின்
முகம்பார்த்து,
நாடி பிடித்து,
‘நல்லா கேட்டுக்கோ,
நீ மாயா,
நான் மாயன்,
நாம் மாயை’
என்றான்...
இதை நிச்சயிப்பதாய்
எங்களுக்காக
அன்றைய இரவு
புதிதாய் ஒரு
மஞ்சள் மலர்,
ஏழு கடல் தாண்டி,
மிதக்கும் தீவின்
ஏகாந்தத்தில் மலர்ந்திருக்கும்
...


Monday, November 4, 2013

மாயா - தொடர்ச்சி 1


இந்த நொடி – இவன்
எனக்கான மஞ்சள் மலரின்
வாசத்தை நெருங்கியிருப்பான்
...
என் சுண்டு விரல் ஈரம் பட்டு
ஏதோ ஒரு மழைநாளில் – இவன்
சிணுங்கி எழுந்திருக்க
எனையறியாது உந்திப் போய்
இவனுள்ளே விழுந்து விட்டேன் ..
மீண்டு வர முடியாத
அவ்வீழ்ச்சியின் தாக்கத்தில்
என் மனம் சூல்கொள்ள
எந்தப் பூவிலும் இல்லாத
வாசமொன்று எனைப் பிடித்துக்கொண்டது
...
எனக்கும் இவனுக்கும்
மட்டுமே சுவாசிக்க முடிந்த
அவ்வாசத்தின் பிறப்பிடம் தேடி
ஏதுமற்ற ஏழை முதல்
எல்லாம் தெரிந்த வள்ளல் வரை
வானுயர இமயம் முதல்
முக்குளிக்கும் பாடகபுரம் வரை
இருத்தலின் அடித்தளம் முதல்
இல்லாமையின் உச்சம் வரை
இன்னும்
எல்லையுள்ளவை முதல்
எல்லையற்ற ஏதுமற்றது வரை
அலைந்து திரிந்து
களைத்துப் போன பின்னிரவில்
நிலவும் இவனும் தனித்திருக்க
குளிரோடு சேர்ந்து தானும்
ஊளையிட்டு பறந்து வந்த
செஞ்சிவப்புப் பறவையொன்று
இவன் மீது மோதி
மஞ்சள் மலராகி – இவன்
மடியில் விழுந்தது
...
வார்த்தையற்று – என்
வாசம் கிடைத்த மகிழ்ச்சியில்
திளைத்து தூங்கிப் போனான்..
அலைகடலின் மிதத்தலையொத்த
நித்திரை அது..
விழித்தெழுகையில்
மிதக்கும் தீவின்
மஞ்சள் மலரை
எனக்குப் பரிசளிப்பதாய்
இவனுக்குள் பித்துப்பிடித்துப் போனது..
...
இவன் என் கைப்பிடித்து
நின்ற நொடி நினைவிருக்கிறதா?
அந்த நொடி
யாருக்கும் கேளாமல்
என்னருகே வந்து
“மன்னிச்சுக்கோ மாயா”
என்று சொல்லியிருக்கிறான்..
எனக்கே தெரியாமல் – அது
என் மனவெளியில் – ஒரு
புரியாத புதிராக – இன்னும்
சுற்றித் திரிகிறது
...
இவன் கை பற்ற
ஏங்கியிருப்போர் எத்தனை,
அப்படியிருக்க
இவனே வந்து பற்றியதில்
சிலையாகிப் போன நான்
இவனாகியும் போனேன் போலும்..
எதற்கு மன்னிப்பு?
இவன் காலடியில் கிடந்து
காதல் செய்து கிடத்தல்
எனக்கான வரமல்லவா?
இல்லை,
இவனை மன்னிக்கத்தான்
யாரால் முடியும்?
வணங்கா மகுடங்களும்
இவன் வாள்வீச்சும்
சொல்வீச்சும் கண்டு
வாடியிருக்க,
இவனை மன்னிக்க
இவனைப் போலவே
யுகம் பல முன்னர்
வாழ்ந்து போன
வெண்ணைக் கள்ளனாலும்
இயலாதுதானே போகும்..
அப்படியிருக்க,
என்னுள் ஏன் – இப்படி
ஒரு குழப்பத்தை
விதைத்து நின்றான்?
...
ஒரு நாள்
யாருமறியாமல் – இவன்
விட்டு விட எத்தனித்த
கண்ணீர்த்துளியை
கடைசி நொடியில்
கையேந்தி காப்பாற்றி
கண்ணில் ஒற்றி
கண்ணீர் விட்டேன்..
கல்லுக்குள் ஈரம் கண்டு – என்
பேதை மனம் பதைபதைக்க
நடிக்கத் தெரியாமல் நடித்து
ஏதுமற்றதாய்
ஏதோவொன்றை சொல்லிப்போனான்..
அவன் கண்களின்
அப்போதைய வலி
பால் வற்றிய தாயின்
பரிதவிப்பு
...
அமைதியாக நானும்
பின் தொடர,
நிலவு நோக்கி நடந்தவனாய்
தன் நிலவைப் பற்றி
கதை சொன்னான்,
இல்லையில்லை
கவிதை சொன்னான்
கண்ணம்மாவின்
காவியம் சொன்னான்
...
இந்த வரி எழுதி முடிக்கையில்
சராசரி பெண்ணின்
அத்தனை வன்மமும்
பிடிப்பும் பிடிவாதமும்
என்னுள் உச்சநிலை தாண்டி
உயிர் வலி கொடுக்கிறது..
இருந்தாலும் – இவன்
என்னுள் விதைத்துப் போன
ஒவ்வொரு நொடி வாழ்தலும்
இவன் கரம்பிடித்து
என் வாழ்தலை
நீட்டித்துச் செல்கிறது...
...

Tuesday, October 29, 2013

மாயா

என் பெயர் மாயா
ஓர் காட்டுக் கொள்ளையனின்
காதலி நான்...
இதைச் சொல்லிச் சிரிக்கையில்
உலகின் அனைத்துப் பெண்களையும்
வென்றுவிட்ட திமிர்
என்னுள் தலை தூக்கத்தான் செய்கிறது..
எவர்க்கும் அடங்காத இவன் – என்
கடைக் கண் பார்வைக்கும்
அதனோடு சேர்ந்த
மெல்லிய மௌனத்திற்கும்
எப்படி அடங்கியிருக்கிறான் என்பது
எனக்கும் அவனுக்கும் கூட
தெரியாத, தெரிந்துகொள்ள விரும்பாத
உன்னத ரகசியம்...
..
இன்று, இந்த நொடி
உயிர் மீண்டு வருவானா
இல்லையா என்ற
பரிதவிப்போடு
அவன் சார்ந்த கடந்த கால
நிகழ்வுகளும் – அவற்றோடு
பின்னிப்பிணைந்த
என் வெட்கமும் சேர்ந்து
எனைப் பாடாய்ப் படுத்த
ஒரு நொடி புன்னகைத்தும்
மறு நொடி கண் கலங்கியும்
எங்கள் முதற் சந்திப்பை
பரிசளித்த இதோ
இந்த ஆலமரத்தடியில்
கன்னி காத்து காத்திருக்கிறேன்...
...
நான் தலை தூக்கிப் பார்த்த
உலகின் முதல் ஆண்மகன் இவன்..
அந்த நொடி,
என்னுள் ஏதோ ஆகியிருக்க
என்னவென்று குழம்பிப் போய்
நான் உறைந்து நிற்க,
தன் பிறப்பையும் வாழ்வையும்
அதற்குக் காரணமான
அத்தனையும் வெறுத்து
உக்கிரத்தின் உச்சத்தில்
தலைகுனிந்து நின்றிருந்தான்...
...
கானக ராஜனின்
அதிசய பொக்கிஷத்தை
களவு செய்யப் போய்
கடைசி நொடியில்
திரை மறைவில் நின்று
கறுப்புத் துணியில் கண் கட்டி
கண்ணாமூச்சி ஆடியிருந்த
கன்னியின் கீச்சுக் குரலில்
தடுமாறி நின்றான்..
விதி அவளைத் தடுக்கி
இவன் மேல் விழச் செய்ய,
மூவுலகைத் தாண்டிப் போய்
யாரும் பார்த்திரா பூக்களின்
வாசத்தில் விழுந்திருக்கிறான்..
விழித்தெழுந்தபோது
வதைக்கப் படுதலின்
உச்சகட்ட வலியில் இருந்தபோதும்
இவன் கண்கள்
அக்கன்னியின் கடைசி ஸ்பரிசத்தை
தேடித் தவிக்க,
ஒய்யாரப் பல்லக்கில் வந்து
இவனைச் சிரச் சேதம்
செய்யச் சொல்லி
சூழ்ச்சிச் சிரிப்பில்
சேதி சொல்லிப் போனாள் அவள் ..
ஏதும் புரியாமல்
பிணைக்கப்பட்ட சங்கிலிகளின்
ஏளனத்தோடு எடை கூட்டி
கடைசி ஆசைக்கு
தரை பார்த்து
துணிந்திருந்தான் இவன்...
...
தூக்கிலிடுவதற்குத்  துணையாக
வசை பொழிந்து
மண் வாரி இறைத்திருந்தனர்
இவனது களவில்
உடல், பொருள் , உள்ளம்
இழந்தவர்கள்...
கறுப்புத் துணி மூட
கடைசித் துளி இரக்கத்தோடு
வீரன் ஒருவன் முன்னேற,
மெதுவாக தலைதூக்கி
‘மாயா’ என்றான்..
அந்தச் சொல்
என் காதுகளை மட்டுமே எட்டியது..
அடுத்த நொடி
என் கண்களும்
அவன் கண்களும்
எங்களின் புரியாத
முந்தைய உறவின்
முடிச்சுகளை அவிழ்த்தெறிந்து
மூர்க்கமாக சங்கமித்தன...
திடீரென,
அசைவற்ற ஆலமரம்
புயலென ஆர்ப்பரிக்க,
புதைந்து கிடந்த வீரமனைத்தும்
புழுதியாய் சுழற்றியடிக்க,
ஆழிப் பேரலையாய்
காட்டாறு பொங்கியெழ ,
கட்டவிழ்த்து கம்பீரமாய்,
என் கை பிடித்து நின்றிருந்தான்
இவன்..
...
நேற்றைய நள்ளிரவில்
எனக்குத் தெரியாதென எண்ணி
என் பிறந்தநாளுக்குப் பரிசளிக்க
எவரும் கண்டிராத
மிதக்கும் தீவின்
மஞ்சள் மலர் தேடிப்
போயிருக்கிறான்...
..
இவன் உயிர்மீண்டு
வருவானா இல்லையா – என்ற
பரிதவிப்போடு
பாதை பார்த்திருத்தல்
எனக்கு மட்டுமே
கிடைத்த சுகம்...
...
இவன் வந்து சேரும் வரை,
இனி வரும் சில நாட்கள்
இவனுக்கும் எனக்குமான
இயல்பான இரகசியங்களை
இவ்வுலகிற்குப் பகிர்ந்திருக்கும்..
...





Wednesday, July 24, 2013

பாவிமகன் நல்லாருக்கட்டும்

எப்படா என்ன
எல்லாத்துக்கும் காட்டுவ?
எப்படா உன் கைபிடிச்சு
ஊரெல்லாம் நடப்பேன்?
...
நமக்குன்னு மாத்தின மோதிரமும்
ஆத்தா கோயில் தாலியும்
எப்படா வெளிய காட்ட?
...
யோசிச்சு பேரு வச்சு
இன்னும் பொறக்காமையே
இருக்காளே உம்பொண்ணு!
...
சாதி சனம் சுத்திநின்னு
சடங்கெல்லாம் செஞ்சுவச்சு
உத்தரவா உரிமையோட
கூட்டிக்கிட்டு போவியா?
இல்ல
எப்பவுமே இப்படியே
என்ன கவிதைக்குள்ள
முடக்கிடுவியா?
...
முத நாள் தொட்டு
நேத்தைய நிலா வரைக்கும்
உன்னையும் என்னையும்
சேத்து வச்சுப் பாத்தது
ஊருக்கு வெளிய
ஒத்தயடிப் பாதையில
சாமியா நிக்குற – அந்த
ஒத்தப் பனமரந்தான்
இன்னிக்குப் போனாலும்
எங்க ஆத்தா போலப்
பாசமாப் பாக்குது
கூட்டிக்கிட்டுப் போனவன்
நல்லாப் பாத்துக்குறானான்னு
கேக்காமக் கேக்குது..
என்னத்த நானுஞ்சொல்ல?
அவனப் பாக்கவே முடியல,
அவன் எங்க என்னப்பாக்கன்னு!
..
அப்பப்போ வானத்தையும்
சும்மாப்போற மேகத்தையும்
பேருக்காச்சும் தூதுவிட்டு
காதலக் காட்டுறானாம்..
கள்ளப்பய அவன்,
கையில சிக்குனா
வசமா தூக்கியாந்து
சிறவச்சு சொகமா
சித்ரவத பண்ணியாச்சும்
குடும்பம் நடத்தப்போறேன் ..
..
மரியாத ரொம்ப உண்டு
பாசத்த சொல்ல வேணா
என்ன கொஞ்சம் கோவக்காரன்
பொசுக்குன்னு அடிச்சுட்டு
பேசாமப் போயிடுவான்
பின்ன கொஞ்சம் நேரம்போயி
அவனாவே வந்துநின்னு
ஆகாசத்தப் பாத்துக்கிட்டே
என் ஆத்தா நீ தாண்டி
தங்கக்கொடமே வாடீன்னு
தெரியாம செல்லங்கொஞ்ச
மானங்கெட்டு நானும்போயி
மாரோட சாஞ்சுக்குவேன்
...
இப்போதைக்கு என்ன செய்ய
ராத்திரிக்கு அவன் நெனப்பும்
காலையில எம்பொழப்பும்
போகிறவர போகட்டும்
பாவிமகன் ,
எங்கிருந்தாலும்
நல்லா இருக்கட்டும்...
...

உனை விட்டுக் கவியாயிருத்தல்

நீ நினைப்பதையெல்லாம்
எழுதி நான்
கவியாகியிருத்தல்
என்ன பெரிய விஷயம்?
நீ நினைக்கப் போவதையும்
நெடுநாள் முன்பே
எழுதி முடித்து
உன் வாழ்வையும்
அது சார்ந்த வனப்பையும்
நமக்குத் தெரிந்த,
நமக்கு மட்டுமே தெரிந்த
ஓர் தனி இடத்தில்
ஒளித்து வைத்திருக்கிறேன்!
..
அதை நீ
தேடிக் கண்டு
மகிழ்ச்சி மிகுதியில்
எனை முத்தமிடத் துடிப்பாய்!
மூவுலகத் தொலைவில் நான்
உனக்கான
எதிர்காலக் கவிதைகளுக்கான
வார்த்தைகளை
நட்சத்திரங்களுக்கிடையே
விதைத்துக் கொண்டிருப்பேன்
...
எனைக் காணாது
நீ தேடித் தவித்து
துக்கித்துப் போய்
விடுகின்ற பெருமூச்சில்
கடலலையும்
இளந்தென்றலும்
ஒரு கணம்
நின்று, யோசித்து
எனக்குச் சேதி அனுப்பும்
...
வேண்டுமென்றே கண்டு கொள்ளாது
காதலைக் கட்டுப்படுத்தி
தொலைவு பல
இன்னும் கடந்திருப்பேன் நான்..
..
நான் கொடுத்த
முக்குளித்த முத்தையும்
மழை நேரத்து
மயிலிறகையும்
மார்பில் அணைத்து
வான் பார்த்து
ஏதேதோ புலம்பி
உறவு தவிர்த்து
அங்குமிங்கும்
புரண்டிருப்பாய் நீ..
..
பசி ஏது ?
தாகம் ஏது?
பகல் ஏது?
இரவேது?
நேற்று ஏது?
இன்று ஏது?
நாளைதான் ஏது?
ஏதுமற்ற ஏதோ ஒன்றில்
கண் பதித்து
நிலை குத்தி
தானாகக் காலாட்டி
விரல் பிசைந்து
சீரற்ற உடை விலக்கி
உள்ளும் புறமுமற்று
உனக்கான என்
முதல் கவிதையின்
முதல் வார்த்தையை
முணகிக் காத்திருப்பாய் நீ!..
...
உன் வலி
என்னில் உணர்ந்து
ஏகாந்தம் வெறுத்துப் போய்
ஏதும் ஓடாமல்
எனையறியாமல்
ஏதோ ஒன்று
உந்தித்தள்ள
விருப்பு வெறுப்பு தாண்டிய
ஓர் உன்னத ஏக்கத்தில்
எனது உயிர்
உனது உயிர் நோக்கி
என் உடல் விட்டுப் புறப்பட்டு
பறந்து போக
பின் தொடர்கிறேன் நான்...
...
எப்போது நம்
அடுத்த சந்திப்பு என்பதை
நமைப் பற்றி
ஏதும் புரியாத
எவனோ ஒருவனோ
இல்லை
எவளோ ஒருத்தியோ
கனாக் காணட்டும்...
...

கண்ணம்மாவின் காகித முத்தம்

தொலைதூரப் பூக்களின் வாசத்தையும்
வரப் போகும் வானவில்லின் வனப்பையும்
வசதியாய் கவியிருத்தி,
உறக்கமற்ற வேளைகளின்
அலைக்களிப்பையும் - இன்னும்
இடையறாது துரத்தும்
இயல்பான சிரிப்புகளையும்
ஏற்ற இறக்கங்களையும்
இம்சித்திருக்கும்
இஷ்ட தெய்வங்களையும்
மறந்திருந்து ,
இருத்தலை மெய்ப்பிக்க வேண்டி
கண்ணம்மாவின்
கடிதம் தேடி
காத்திருக்கும் கவி!
..
இடையிடையே வந்து போகும்
உன் லேசான புன்னகையும்
குறும்புப் பார்வையும்
அன்றைய இரவின்
அயில மீன் கொழம்பும்
நிலா வெளிச்சக் கண் சிமிட்டலும்
கை கோர்த்த கண நேரமும்
நமக்குப் பின்னால்
ஒளிந்துகொண்ட வெட்கமும்
ஏதோ நான் உளறப் போய்
வருத்தி நீ
வெளிப்படுத்திய
வேண்டாக் கோபமும்
தொடர்ந்த விவாதமும்
முடிவாய் வந்து நின்ற
மௌனமும் - அதைச் சார்ந்த
இஷ்டமில்லா இடைவெளியும் ,
இப்போதைய
கண்ணம்மாவின் இல்லாதிருத்தலும்
கவியின் காத்திருத்தலை
கடினமாக்கி நிற்க,
கலங்கியிருத்தலை
கடந்திருக்க வேண்டி
கண் மூடி நொடிதோறும்
வடக்கிருந்தான் கவி!
...
கடிதம் வராது
கனவு வந்தது
...
நேற்றைய பொழுதின்
நிறைவேறா ஆசையாய்
ஆதங்கமாய்
கண்ணம்மா மனதில்
ஏதோ ஒன்று..
அவள் இமையில்
ஒளிந்திருந்த சோகத்தை
சுலபமாய் உணர்ந்து
சுண்டு விரல் பிடித்திழுத்து
"என்ன ஆச்சு?" என்றான் கவி.
...
வழக்கமான "ஒண்ணுமில்ல"
தவிர்த்து தந்திரமாய்
தலை குனிந்து கண்ணம்மா!
...
கவியும் நமுட்டுச் சிரிப்புடன்
"என்னன்னு சொன்னா,
இன்னொன்னு தாரேன்"
என்று வழிய,
"போ! உனக்கென்ன
என்னப்பத்தி !" என்றாள் ..
"சரி போறேன், விடு!" என்று
கடைசி யுத்தியை
கச்சிதமாய் வீச,
"நேத்து பூவாகிப் போனியாமே?
யாரோ சொன்னாங்க " என்றாள்

"ஏன் உனக்குத் தெரியாமலா?"

"யாருக்கோ தான எழுதின,
எனக்கென்ன?" என்று
கண்ணால் கண் ஊடுருவி
கேள்வியாய் மாறி நின்றாள் ..
..
மூக்கு நுனி கோவத்தில்
"என் கவிதைய
கேவலப் படுத்துறியா ?"
சிவந்து நின்றான்
கவி,
காதலில்!
..
"எனக்கு எழுதுனா
கவிதைல எங்க என் பேரு ?"
என்று தாவணி நுனியால்
விழுவதற்கு முன்
கண்ணீர் தாங்கி
கச்சிதமாய்
கனம் கூட்டினாள்
...
பதிலற்ற நேரங்களில்
பாவம்!
என்ன செய்வான் கவி!
இடைவெளி குறைத்து
உயரம் தாழ்த்தி
அவள் தலை நிமிர்த்தி
கண் ஈரம் உலர
லேசாய் ஊதி
பின்
இறுக்க அணைத்து
"அட பைத்தியமே!
நீ வேற, என் கவிதை வேறயா?
நீ என் கூட இரு,
நான் எதுக்கு
கவிதை எழுதப்போறேன்?
நீ அப்பப்போ விட்டுப் போற,
நான் உன்ன எழுதி
என்னுள் இருத்திப் பாக்கிறேன்!
அவ்ளோதான் என் கவிதையெல்லாம்..."
என்று
அவனுக்கே தெரியாத
உன்னத உண்மையெல்லாம் சொல்லி
இன்றைய பொழுதின்
இதமான உறக்கத்திற்கு
கண்ணம்மாவை
அழைத்துச் சென்றான்
அசட்டுக் கவி!
...
கனாக் கலைந்து
கடிதத்தின் வாசம் பிடித்து
பிரித்துப் பார்க்க
"என்னடா?
மறுபடியும் ஏமாத்துறியா ?"
என்று இரண்டே வரி!
..
கீழே
காகித முத்தத்துடன்
கண்ணம்மா!
....



Tuesday, July 23, 2013

நான் பூவாகிப் போகிறேன்

நீ கொடுத்து நானும்
நான் கொடுத்து நீயுமாய்
வாழ்வதால் இந்த வாழ்வு
நமைத் தாண்டி
எங்கோ நிகழ்கிறது...
விரல் பிடித்து சாவதாய் நீயும்
மடி சாய்ந்து முழுதாய்
உறங்கிப் போவதாய் நானும்
கண்ட காட்சிகள்
இன்னும் இந்த
வாழ்தலை புனிதமாக்க ,
தொலைத்த மூச்சை மீட்டெடுக்க
உன் கானத்தில் கரைகிறேன் நான்
நெடுநாளாய் ..
..
நீ கேட்கும் கேள்விகளில் ஒளிந்திருக்கும்
எனக்கான காதலில் – நான்
பதிலற்றுப் போகிறேன்
நீயோ
காதல் முத்தி
கோவித்துப் போகிறாய் ..
..
ஒரு வழியாய்
நினைவு திரும்பி நான்
உனக்கான பதிலை – என்
காதலில் பொதிந்து அனுப்ப
பாவம் உன்
பாசாங்கு கோவத்தில்
அது பொசுங்கி
புகையாய் மாறி – உன்
கூந்தலிடையே மறைகிறது..
உன் வாசம் கூடிப்போன கதை
இது தானோ?
..
வியந்து கேட்கும்போது
வெட்கப்படுகிறாய்
அதில் விழுந்து – நான்
என் வார்த்தைகளை இழந்து
இப்போது உனை
வரைய இயலாது தவிக்கிறேன்..
வாயோரம் எனை
லேசாக வசை பாடேன்
என் வரிகள் உயிர்பெற்று
வெட்கம் கொண்டு – பின்
சுரனை உணர்த்தட்டும் ..
..
வசை பாடச் சொன்னால்
காதல் சொல்கிறாய்..
இப்படி என் உயிரை
அவ்வப்போது
ருசித்துப் பார்க்கிறாயோ?
உன் வார்த்தைகள்
இப்படித்தான் என் இதயத்தின்
கல்வெட்டுகளாகிப் போகின்றனவோ?
..
காதல் கூறி பின்
தலை மேல் கை
வைக்கக் கேட்பாய்
தலை கோதி – உன்
விதி படித்து
நான் மீள்கையில்
மீண்டும் கை பிடித்து
கண் ஒற்றி – எனை
கலங்கச் செய்வாய்..
உன் உச்சி முகர்ந்து
என் உள்ளங்கை ரேகை
உன்னில் பதிக்கின்ற
ஒவ்வொரு நொடியும்
முடியாது தொடர்கின்றது..
..
சிற்சில கோவங்களின் போது
முறைத்து முனகி – பின்
சிரிக்கும் நொடி ஒவ்வொன்றிலும்
என் இதயம் நின்று
பின் துடிக்கின்றது...
நீயோ
இதை அறியாது
அதையே தொடர்கிறாய்..
இப்படி என்னால்
இந்த இதயத்தை
நீண்டநாள்
பொத்தி வைக்க முடியாது
வா, வந்து எடுத்துப் போ ..
..
உனை நான்
உனக்கு உணர்த்த
என் கண்களும்
கவிதையும் இருக்க
என் கைகளுக்குள்
இருந்தால் மட்டுமே
போதும் என்கிறாய்
கை பிடித்து நீ விடாவிடின்
நான் என்ன
இதழிலா கவியெழுத ?
..
“எனை விட கவிதை முக்கியமா?”
எனக்கேட்டு
சிணுங்குகிறாய் !!!
..
ஒவ்வொரு நொடியும்
நமக்குப் பிறக்கும்
குழந்தைதானே
என் கவிதை...
ஆயினும்,
நீ எனக்கு
உயிரும் தமிழுமாய் இருப்பதால்
நம் குழந்தை
உன் காதலின்முன்
தோற்றே போகிறது..
..
எனை
வெளியிலும் உள்ளும் சுமந்து
தள்ளாடி நீ நடக்கையில்
உன் நிழலுக்கு விடுமுறை
..
கவிதையின் உச்சம்தொட்டால்
நீ அழுது அழகு சேர்க்கிறாய்..
உன் ஒவ்வொரு துளி கண்ணீரும்
என் பிரசவ வலி
பாத்து அழு..
..
உன் கண்ணீர் தேற்ற
உன்னருகில் வந்தாலே
என் உடல் முழுதும்
இதழ்களாய் மாறி – உன்
வாசத்தை உறிஞ்சி
நான் பூவாகிறேன்..
நீ எனை முகர்ந்து முத்தமிட்டு
உன் காதல் மொட்டினை
மலரச் செய்துகொள்..
..





Thursday, June 20, 2013

பனித்துளியின் கருணையில்..

நீண்ட நாள் வாட்டிய
தனிமையிலிருந்து தப்பித்து
எண்ணமற்று
சோகத்தின் அடி ஆழத்தில்
அசையாது நிலைத்திருக்க
எங்கோ சென்று
ஒளிந்து கொண்டான் கவி!
விடாது விரட்டிய
எண்ணங்களுக்கும் அவனுக்கும்
இடையே - பெரும்
போராட்டம்..
'பணயமாக மானத்தைக் கொடு' என
எதேச்சையாக கேட்டு
தீர்க்கமாகப் பார்த்தன எண்ணங்கள்..
இல்லை,
'உறக்கமற்று கொடுங்கனவில்
தொலைந்து போ' என
ஏளனம் வேறு..
கனவின் சாட்சியாக
சில எண்ணங்கள் பல்லிளித்தன..
மறைத்த குரல்கள்
முன்பு எப்பொழுதையும் விட
துல்லியமாக
காதருகே ஒலித்தன..
மறந்த சில முகங்களும்
சமயம் பார்த்து
வெடுக்கிட்டு திரும்புவதாய்த்
தோன்றின..
சுகம் கொடுத்த
வருடிய நகங்களும்
முகம் மறைத்து
மோகத்தில் மூழ்கடித்த
கருங்கூந்தலும் கூட
தொலைதூரத்தில்
தப்பித்து ஓட,
விட்டுச் சென்ற வாசம் மட்டும்
விடாமல் வதைக்கிறது..
 காலடியில் ஈரம் சேர்க்கும்
பனித்துளியின் கருணையில்
நிறுத்தி வைத்திருந்த கவிதையை
எழுத எத்தனிக்கிறான் - கவி!


Saturday, May 11, 2013

ஒரு பாக்கட் நேர்மை பார்சல்!!!

                          "அவருக்கு மட்டும் சீட் குடுக்கறீங்க, எனக்கு ஏன் தர முடியாது ? என்ன பாத்தா எப்படி இருக்கு?"
                           "உன்னலாம் பாக்க முடியாது..உன் மூஞ்சி பாக்குற மாதிரி இல்ல..போ போ !"
                              டிக்கட் பரிசோதகருக்கும் ஒரு பயணிக்குமான இன்றைய பயணத்தின் உரையாடல் இது. ஒரு நேர்மையான அதிகாரியாக முதல் பார்வையிலேயே என்னுள் பதிந்து போயிருந்தார் அவர். மூன்றாம் வகுப்பு டிக்கட் எடுத்து கூடுதல் கட்டணம் கட்டி நான் இரண்டாம் வகுப்பு இருக்கை வாங்கி முடிக்கும்போது தான் இந்த சண்டை ஆரம்பித்தது.
                                பார்க்க முடியாத மூஞ்சிக் காரர் ஒரு காவல்துறை ஆய்வாளராம். அவர் தன் பதவி பற்றி கூறியும் டிக்கட் பரிசோதகர் அசரவில்லை. "நீ போலீஸ்-னா நான் சீட் தரணுமா? , போய் எங்க உக்காரணுமோ அங்க உக்காரு..."
                                ஆய்வாளர் செல் போன எடுத்து வீடியோ பிடிக்கிற மாதிரி நடிச்சார்.."நல்லா வீடியோ எடுத்து தினசரி பாரு, புத்தி வரும்..வேணும்னா என் போட்டோவ உன் வீட்டுல மாட்டி வச்சுக்கோ.."
                                ஆய்வாளர் வாய பொளந்துட்டார். "நான் இங்க தான் இருப்பேன் ..நீ என்ன பண்ணுற பாக்குறேன்.."
                                 எதுக்காக அந்த பரிசோதகருக்கு அவ்வளவு கோபம்? தன்னுடைய நேர்மைக்கு அங்கீகாரம் தேடுகிறாரா? இல்லை வளைந்து கொடுப்பதின் கேவலத்தை மற்றவருக்கு உணர்த்த முயல்கிறாரா? நான் கொடுக்க வேண்டிய பதினைந்து ரூபாய்க்கு சில்லறை இல்லாததால் இருபதாய்க் கொடுத்தேன்.."அஞ்சு ரூபா சில்லறை இல்ல, சில்லறை கொடு" என்றார்..கொடுங்க என்று மரியாதையாய் பேசுகிற ஆளும் இல்லை அவர்.."இருபது வாங்கிக்கோங்க சார், அப்பறமா நானே வந்து மீதி வாங்கிக்கிறேன்" என்றதற்கு, "நீ வாங்காமப் போய்டுவ, சில்லறை கொண்டு வந்து டிக்கட் வாங்கிக்கோ.."என்றார்...எனக்கு புன்முறுவலும் ஆச்சரியமும் முந்திக்கொண்டு வர, சில்லறைக்காக துணை தேடி இருந்தேன்..
                              மூன்று மணி நேர பயணத்தில் என் மனம் முழுதும் அவர் நடத்தை சார்ந்த சிந்தனை தான் ஓடியது..இத்தனை நிகழ்ந்தாலும் அவர் என்னைப் பார்த்த போதெல்லாம் ஒரு புன்னகை விடுத்தார்.
                               இருவேறு உச்சகட்ட நடத்தைகளைப் பார்த்து, ஆராய்ந்து, சுலப விடை கிடைக்காமல் இரயில் நிலையத்திலிருந்து வெளியேறி ஓர் பேருந்தில் ஏறி அமரவும் ஒரு ஆண் குரல். "ஒரு பொங்கல் இருபத்தஞ்சு ரூபாவா? அநியாயம்..பெங்களூர்ல இருபது ரூபாதான்..அதுவும் நெறைய கொடுப்பான்..சரியில்ல..சரியில்ல..பொங்கல் விலை ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு சொல்றான்..அப்பப்பா, சரியில்ல..சரியில்ல..இனி இங்க வந்தா டீயும் பன்னுந்தான் சாப்பிடணும் போல.."
                              அப்பா பேசுவதை ஆவென பார்த்து எனைப் பார்த்து லேசாய்ச் சிரித்தாள் அந்தக் குட்டிப் பெண்..இன்னும் சில வருடங்களில் அவள் சிரிப்பு பர்தாவிற்குள் ஒளிந்துவிடும்...

Friday, March 29, 2013

காத்தா இருக்கேன்..

மூச்சுமுட்ட
நீருக்கடியில்
முங்கியிருக்கும்போது
மயங்கிய ஒளியில்
தெளிவின்றி கண்ட
உன் கால் கொலுசின்
பிரகாசத்தில்
முத்தெடுத்து - நான்
வெளிவருகையில்
மீண்டும் எனக்குள்
ஒரு புதிய கவிதை
பிறந்து வெளி விழுந்தது
...
கரையில் காலாட்டி
உட்கார்ந்து எளிதாய்
என் கவியை
விமர்சனம் செய்வதாய்
மேலும் கீழும் பார்த்தாய்..
...
எடுத்த முத்தையே
உனக்குப் பரிசளிக்க
துணைக்கு மலர் தேடி
சுற்றுமுற்றும் பார்க்கையில்
எருக்கம்பூ தவிர
ஏதுமில்லை, என்ன செய்ய?
...
பால் வடிய
பக்குவமா - உன்
பளிங்குப் பல் பார்த்து
தரை மறந்து நடந்து
தடுக்கி விழுந்து
உன் ஒட்டு மொத்த சிரிப்பையும்
ஒரு நொடியில்
உதிர வைக்க
சுத்தி நின்ன மரமெல்லாம்
சில்லுனு சிலிர்த்துப் போச்சு..
...
அன்னிக்குப் பார்த்த
அதே முகம் தான்
இப்ப வரை நெஞ்சுக்குள்ள
கூடு கட்டிக் குடியிருக்கு..
...
ஏதேதோ கோவத்துல
பேசாம இருக்கியே?
என்ன கொஞ்சம்
நெனச்சுப் பாரு..
...
குங்குமம் தொட்டு வச்சு
என்னோட ஆக்கினப்ப
எதுக்காக ஒரு துளி
தண்ணி விட்டு ஒட்டிகிட்ட?
...
சாமி டாலர் போட்டு
'இது தான் டி தாலி'ன்னு
பாசமா சொன்னப்ப
பட்டுன்னு கால் புடிச்சு
நெஜமா பொஞ்சாதி ஆயிட்ட..
...
இப்ப
கொஞ்ச தூரம் போனதுக்கு
கோவிச்சு மூஞ்ச தூக்கி
மௌனத்தில நீ இருந்தா
நான் எங்க போக?
என்ன செய்ய?
..
விதி வசந்தான்
நா இங்க, நீ அங்க..
காத்தா இருக்கேன்
மூச்சா இருக்கேன்
முழுசா இருக்கேன் -நான் இங்க
ஏங்கி இருக்கேன் - நீ அங்க
என் உசிர தாங்கி இருக்க..
பத்திரமா பாத்துக்க
முத்தெடுத்த காதலுக்குப்
பரிசா சாமி தந்த சொத்த..
..
சீக்கிரமா வந்துருவேன்
பேசாம மட்டும் இருக்காத
அன்னந்தண்ணி எறங்கல
அனாதையா நான் இங்க
...



கடைசி மாலைக்காக...

ஒரு காலைச் சூரியனைப்
பார்த்து பெருமூச்சுவிட்டு
புல்லின் மேல்
இறந்து கொண்டிருந்த
அந்த ஒற்றைப்
பனித்துளியோடு - நான்
ஏதேதோ பேசிக்கொண்டிருந்தேன்..
இடையிடையே
இரைச்சலா இசையா
எனத் தெரிந்துகொள்ளவியலா
ஏதேதோ சத்தங்கள்..
வாழ்க்கை தேடி
சில கால்களும்
வாழ்க்கையைத்  தொலைத்து
தேடுவதை நிறுத்திக் களைத்த
சில கால்களும்
காரணம் தெரியாது
எதற்கோ
யோசித்தலின்றி
விரைந்து ஓடும்
சில கால்களும்
இன்னும்
பற்பல இயக்கங்கள்
இயல்பாய் இருந்திருக்க,
நான் மட்டும்
நிலை குத்திய கண்களுடன்
சிந்தனைகளின் எண்ணிக்கை
குறைந்து சூன்யம் நோக்கி
விரைந்து கொண்டிருந்தேன்..
அவ்வப்போது தழுவிச் செல்லும்
அப்போது பிறந்த தென்றலும்
வாழ்க்கையைக் கூவி விற்கும்
சிறகொடிந்த வாண்டுகளும்
எத்தனையோ முகமறியா கால்களின்
தொடர்பில் தெறித்து - என்
முகமூடியை அர்ச்சித்த மண்ணும்
எனையறியாமல் - நான்
குவித்த மண் குவியலும்
கால் புதைந்த ஈரமும்
இன்னும்
சிதைந்து தெளிவின்றி
வராமல் வந்துபோன
காட்சிகளும் - கண நேர கற்பனையும்,
எந்த வதைப்பிலிருந்து
எனைக் காப்பாற்ற
இப்போராட்டம்?
இல்லை,
காப்பற்றப்படுதல் என்ன
அவ்வளவு எளிதானதா?
வேண்டி விரும்பி
மாட்டிகொள்வதும் - பின்
விழி பிதுங்கி
வழி தெரியாது நிற்றலும் தான்
இந்த வாழ்க்கையின் சூட்சுமமா?
இதைக் கடந்து
மகிழ்ந்திருத்தல்
வாய்க்கப்பெறுதல் என்ன
அவ்வளவு கடினமா?
கனமின்றி சுகமாய் சுற்றித்திரியும்
எத்தனையோ உயிர்களின்
மத்தியில் தானே நானும்
நொடிக்குநொடி
தள்ளாடிப் புலம்பித் திரிகிறேன்..
முடிவு தேடிக் கொள்ளும்
தைரியமும் இல்லை..
முன்னோக்கிப் பாயும்
துணிச்சலும் இல்லை ..
எக்காளங்களின் மத்தியில்
மேடை போட்டு
எதற்காக இந்த
நாடக அரங்கேற்றம்?
எப்போது கிடைக்கும்
எனக்கான கைத்தட்டலும்
மாலை மரியாதையும்?
இல்லை
கடைசி மாலைக்காகத்தான்
இந்தப் பரிதாபப் பயணமா?
..
 





Wednesday, March 27, 2013

மலைச்சாரலின் வதைப்பு...

மலைச்சாரல் என்றதும்
என்ன நினைவு வரும்
உனக்கு?
...
பின்னின்றிழுத்த கூந்தலா
இல்லை - நான்
சூடிய சூடக் கூடாத பூவா?
அதன் வாசம் தாங்கிய
ஒற்றை முடியை
பத்திரமாய் எடுத்து
நான் கொடுத்த கைக்குட்டையில்
ஒளித்து வைத்திருக்கிறாய் தானே ?
..
நீ "அவ்ளோதானா" என
முதல்முதலாய்
சொல்லிச் சிரித்த நொடி
இன்னும் என் இதயத்தில்
கல் வெட்டாய்
..
"பொய் சொல்லாத" என
பொய்யாய் நீ வீசும்
கோவப் பார்வைக்காகவே
பல பொய்களைச்
சொல்லியிருக்கிறேன் தெரியுமா?
..
கெட்டவார்த்தை
சொல்லித்தரச் சொல்லி
நச்சரித்தாயே ,
நானும்
எனக்குத் தெரிந்தன தவிர்த்து
உனக்காக ஒரு சில
சொல்லிக் குடுக்க,
பின்னாட்களில்
என்னையே திட்டிச் சிரித்தாயே ,
அழகாகிப் போயின கெட்டவார்த்தைகள்,
அவை தாங்கி நானும்
நீ திட்டிய பெருமிதத்தில்
அலாவுதீன் போல
பறக்க ஆரம்பித்தேன்
..
கடுங்குளிரில்
துண்டு பீடி கேட்டாய்..
இன்னும் என்னென்ன செய்தாய்?
எத்தனை காலம் காத்திருந்தாய்
இவையெல்லாம்
என்னோடு செய்ய?
இன்று
இவை யாவும் இருக்க
உனைத் தேடி நான்
எந்த மலைச் சாரலிலோ
சுற்றித் திரிகிறேன்..
..
மாய்த்துக்கொள்ள
முடிவெடுக்கும் கணங்கள் எல்லாம்
எப்படியோ
எதன்மூலமோ
எனைத் தடுத்து
இந்த வாழ்வின் வலியில்
நீடித்து இருக்கச் செய்கிறாய்
...
கவி எழுதி
எத்தனை காலம் தான்
கடத்தியிருக்க?
நீயின்றி தமிழ் கூட
வதைப்பதாய்த் தோன்றுகிறது..
 ..
இந்த நொடி இருளும்
இன்னும் கொஞ்சம்
இருள் சேர்க்கும்
மயங்கிய உன் நினைவும்
வெளிவர முடியா
சுழலுக்குள் - எனை
சிக்கச்செய்ய
நானும்
சிக்கியிருத்தலையே
விரும்புகிறேன்
..
நீயற்றுப் போன நான்
கூடிய சீக்கிரம்
கவியற்றுப்
போக வேண்டும்
எங்கிருந்தோ
வரம் அனுப்பி
வதைத்திரு கண்ணம்மா..
...


நமக்கான ஆலமரத்தடி...

இந்த நொடியும்
நேற்றைய அந்த நொடியும்
உனக்காக படைக்கப் பட்டது
கடைசி நொடியில்
கண்ணால் இறுக்கி அணைத்து
பிரிவதுபோல் பிரிந்து
தூரம் செல்லும் வரை
திரும்பித் திரும்பி
துள்ளிப் போகும் - உன்
கண்கள் - அவை
தாங்கிய வசீகரம்
...
ஒவ்வொரு முறை
பிரிகையிலும்
"போ, நீ வேணாம் " என்று கூறி
மீண்டும் வந்து
கட்டிக்கொள்கிறாய்..
வறட்டு கௌரவமா உனக்கு?
அதுவும் என்னோடு!
...
என்னோடு பேசித்திரிகையில்
அவ்வப்போது
அலட்சியமாய்
மிகப் பெரிய
விசயங்களைச் சொல்லி
மெலிதாய் சிரிக்கிறாய்...
நான் வியந்து - உனை
ரசித்து ஆழ்கையில்
தலை தட்டி
மீண்டும் இயல்பாய்
உன் சுட்டித்தனத்தால்
எனைச் சிலிர்க்க வைக்கிறாய்
...
சின்னச் சின்ன சோகங்களை
பகிர்ந்து நீ
தோள் சாய்கையில்
எதைச் சொல்லி
உனை நான் தேற்ற?
உன் மௌனமே எனை
சோகத்தின் அடி ஆழத்திற்கு
இழுத்துப் போகுமே!
பின் உன் சோகமுகம் காண
எப்படி முடியும் கண்ணம்மா?
..
முன்பொரு நாள்
முடியாமல் முணகி
முன் வந்து நின்றாய்..
நான் முடிந்தே போனேனே!
உலகின் மிகக்கொடிய
துயரம் - உனை நான்
சிரிப்பின்றி பார்த்தல் தான்..
..
எதிர்காலம் குறித்த
கவலையோடு
ஒரு கோப்பைத் தேநீரோடு
நமக்கான - அந்த
ஆலமரத்தடியில்
நுனிப்புல் கிள்ளி
எதுவும் பேசாமல்
கழித்த பொழுதுகள்
இன்னும் உள்ளே
உறைந்து கிடக்கின்றன
..
ஒவ்வொரு முறை
கவி எழுதி
ஓய்ந்து சாயும்போதும்
கண்ணிமை மூடும் - அந்த
கணப்பொழுதில்
கழுத்தோடு கட்டிக்கொண்டு
நீ சொல்லும் "கண்ணா" வும்
எனக்கான காதலை
வெட்கத்தோடு கசியும் - உன்
கண்ணீர்த்துளியும்
முன் வந்து நிற்கின்றன
...
பேசிய கணங்களை விட
பேசாமல் கைகோர்த்து
கண் பார்த்திருந்த கணங்கள் தானே
நம்மில் அதிகம்..அழகு
...
நினைவிருக்கிறதா?
நான் வைத்த முதல் முத்தத்தில்
நீ விட்ட கண்ணீரில்
என் கடந்த காலம்
கரைந்து போனது
...
நீ வைத்த முதல் முத்தம்
எனை ஒரு கவிதையாக்க
நீ கவி ஆகிப் போனாய்
...
இன்னும் எத்தனை எத்தனை ?
..
இன்றைய உன்
இத்தனை நேர
மௌனம் கூட - எனை
ஒரு விதமாய்
யோசிக்கச் செய்ய ,
வந்த கவிதையைப் பார்
என்ன சொல்ல கண்ணம்மா?
...


Tuesday, March 26, 2013

போ போய் கவிதைய கட்டிக்கோ..

"நீ அழுதிருக்கிறாயா கிருஷ்ணா?"
இது
அவ்வப்போது
கண்ணம்மா கேட்கும்
கொஞ்சல் கேள்வி..
ஒவ்வொரு முறையும்
விடை சொல்லி
முகம் நோக்காது
திரும்பி நிற்கும் கிருஷ்ணா..
அது ஏனெனத் தெரிந்தும்
வேண்டுமென்றே
"சொல்லு! எதுக்கு அழுத?"
என்பாள்..
உடனே
"அமைதியாய் இரு" என
அழுத்தமாய் சொல்லி
காகிதம் தேடி
தொலைந்து போவான் கிருஷ்ணா..
அவன் மீண்டு வருதலைச்
சீண்டிப் பார்க்க
செல்லச் சதித் திட்டம்
தீட்டிச் சரிந்திருப்பாள்..
நடந்தது மறந்து
ஆசையாய் வந்து
அணைக்கத் தேடி
களைத்துப் போவான் ..
பின்
ஊரின் ஓரமாய்
ஒதுங்கிப் போன
ஒற்றையடிப் பாதையில்
சீட்டியடித்து
சிறுவருடன் சண்டையிடும்
சுட்டிப்பெண்ணாக
வேடம் கட்டி
அழகு கூட்டி
தேடி வரும் கிருஷ்ணாவை
கண்டும் காணாது
கடுப்பு செய்வாள்..
கெஞ்சுதலின் உச்சத்தில்
அவள் கால்தொட்டு
கண்ணொற்றி
அவனும் நடிப்பான்..
"அய்யய்யோ" என
கண் கலங்கி,
மீண்டும் சிணுங்கி ,
"போ, போய் நிலா புடிச்சு வா"
என்பாள் ..
அவனும் தாவிப் போய்
கண்ணாடி கொணர்ந்து
"பாத்துக்கோ என் நிலா " என்பான்..
"இதுக்கு ஒண்ணும் கொறச்சலில்ல"
என மேலும் சீண்டி
"என்ன அழ வச்சவன் தானே நீ
போய் உன்
கவிதையையே கட்டிக்கோ" என்பாள்
ஒரு நொடி
தாமதித்தாலும்
இந்தப் புள்ளி மான்
துள்ளி ஓடுமென
தெரிந்து லாவகமாய்
பின்னிருந்து அணைத்து
"போதும் போதும்
இன்னிக்கு கவிதை,
வா போலாம்" என
இந்தக் கவிதையையும்
முடித்து வைத்து
கவிஞனுக்கு
கனாக் காண நேரம் ஒதுக்கி
மறைந்து போவான் கிருஷ்ணா..
...








விரல் தொட்டுப் பிரிந்த சாதல்..

வெந்து தணியும் காடும்
பால் சுரந்து படர்ந்திருக்கும்
கள்ளியும் - அதன் பின் பதுங்கி
அழுது தீர்க்கும் அவளும்
சற்று தொலைவில்
வீராப்பாய் திமிறி நடக்கும்
கவிஞனும் - அவன்
கையில் கிழிந்த
காகிதக் கட்டும்
காற்றில் பரந்த
கண்ணீர்க் கவிதைகளும்
ஏதோ
நடக்கக் கூடாதது
நடந்ததை ஊர்ஜிதம் செய்ய,
எழுந்து வர மனமின்றி
ஒளிந்து கொள்வதிலேயே
நிலைத்திருந்த கண்ணம்மா..
அவள் சிணுங்கலின் கூர்மை
அவன் பாதத்தில்
நறுக்கென முள்ளாய்த் தைக்க
"கண்ணம்மா" என
அவனையறியாது
கதறிக் குனிந்தான்..
முன்ஜென்ம முதல் காதலும்
விரல்நுனி
தொட்டுப்பிரிந்த சாதலும்
இன்று வரை தொடரும்
அத்தனை நிகழ்வும்
அவன் கண்முன் விரிய
சரிந்து விழுந்தான் ..
உயிரையும்
உடன் தொடரும்
சோகச் சுமையையும்
வலிந்து இழுத்து
துடிக்கும் தன் இதயம் தேடி
விரைந்தாள் கண்ணம்மா..
அவன் விடுகின்ற
அத்தனையும் தாங்கிப்பிடிக்க
இத்தனை நாள்
தனியாய்த் தவமிருந்த
வேதனை தாங்கி
கல்நெஞ்சக் கவிஞன்
காலடி தேடி
காதல் தேடி
இப்போதும் தனியாய்
தன்னிலை மறந்த கண்ணம்மா..
..
கூட இருத்தல் சாத்தியமா
என்ற ஒரே கேள்விக்கு
பதில் சொல்லத் துணிவிலா
தனிமை வேண்டும் கவிஞனுக்கு
கண்ணம்மாவின் காதல்
நச்சரிப்பாய்த் தானே தோன்றும்!
இதுகாறும் காத்திருந்து
தான்பட்ட வேதனை
இந்தக் கவிஞனின்
எந்த வார்த்தையாலும்
சுகம் பெறாது - என்பது
தெரிந்தும் , இன்னும்
கூடவே இருந்து - மனம்
வதைப்புற்று
கவிஞனின் கடைசி நொடி
கண்ணிமைத்தல் வரை
காதலித்தல் - இவளுக்கு
மட்டுமே சாத்தியம்..
..
தூரத்தில் இருந்தாலும்
அப்போதைக்கு அருகிலிருக்கும்
ஒவ்வொரு செடியும்
பூக்கும் ஒவ்வொரு மலரும்
அவளுக்கு கவிஞனின்
சிருஷ்டி தான்..
ஏன்?
கவிஞனே தான்..
இது புரிந்தும் புரியாததாய்
புதுப்புது அர்த்தம்
படைத்துக் களைத்து
காதலை கண்டுகொள்ளாமல்
இருத்தலாய் நடித்தல்
இவனுக்கேனோ
இயல்பாய்த் தோன்றுகிறது?
...
இன்றைய சந்திப்பிற்காக
இவள் காத்திருந்த நொடிகள்
ஒவ்வொன்றும்
ஒரு காவிய நிகழ்வு தானே?
..
இவன் என்னமோ
புறந்தள்ளிப் போகிறானே!
கவிதையில் ஊறிப்போய்
காதல் மறந்துவிட்டதா என்ன?
..
இவன் இனி
நிமிர்ந்து பார்த்தல்
இவளது
கரிய கூந்தலின்
கருணையில்தான்
நிகழக் கடவது என்பது
இவனால் இவனுக்கே
கிடைத்த
தூர தேசத்துக் கடவுளின்
பாசச் சாபம்..
..



தூர தேசத்துக் கடவுளின் சேதி..

உலகிற்கு
அதிசய சேதி
கொண்டு வந்த
தொலை தூர
நடைபாதை களைப்பில்
தூதன் துயில் கொண்ட நேரம்
கவிஞனின் முதல் காவலன்
சேதி திருடிக் கொணர்ந்தான்
...
காவியக் களைப்பில்
கண்ணம்மாவிற்கான
காத்திருத்தலின் கடைசி நொடியில்
கவிஞனும் துயில் தேட
முதல் காவலனுக்கு
தானும் ஒரு
முதல் கவிதை எழுதிப் பார்க்க
சின்னதாய் ஒரு ஆசை
...
இருந்து சிந்தனை செலுத்தி
நேரம் பல போயினும்
கவி வராமல் போக
என்னதான் சேதி என
ஏதோ ஒரு ஆர்வத்தில்
துணிந்து பிரித்து
மடிந்து விழுந்தான்
...
ஓசை கேட்டு
ஓடி வந்த கண்ணம்மா
செய்வதறியாது திகைத்து
கவிஞனை எழுப்ப ,
அவனோ
உலகம் புதிதாய்ப்  பார்த்து
திகைத்து நின்றான்
...
கனாவிலிருந்து
கனநேரத்தில்
வெளிவருதல் சாத்தியமா என்ன ?
பின்,
எப்போதோ எழுதிய
அரைகுறை கவிதையை
கவிஞன் போல
கண்ணம்மா நடித்து வாசிக்க
துள்ளி எழுந்து
"உத்தரவு" என்றான்
முதற்காவலன்
...
ஏதும் நிகழாதது போல
வீறுடன் சிலை போல்
நின்ற வீரனைப் பார்த்து ,
'அப்படி என்னதான் சேதி' என
கண்ணம்மா கேட்க,
அடுத்த நொடி
கவிஞனின் காலடிக் காகிதமாய்
கசங்கி விழுந்தாள்
...
தொலை தூர கானகத்தில்
ஏதோ நோக்கத்தில்
எங்கோ செல்வதாய்
தான் கண்ட கனவிலிருந்து
துடித்து எழுந்தான் கவிஞன்..
...
நொடிப் பொழுதில் - அவன்
கண்கள் சாரை சாரையாய்
கண்ணீர்க் கவிதை பொழிய
சேதி அனுப்பிய
தூர தேசத்துக்  கடவுளும்
உருகிப்போனான்
...
உலகின் முதல் மழை
அப்போதுதான் விழுந்தது..
அதில் நனைந்து
புதிதாய் எழுந்தாள்
கவிதைக்குப் பிறந்த கவிதை
கூடவே கவிஞனும்
காதலோடு எழுந்தான்
..
கடைசிவரை
உலகிற்கான சேதி புரியாது
கடமை தொடரப் போனான்
கவிஞனின் முதற்காவலன்..
...

இப்பேதைமை முற்றுப்பெருமோ?

இரு வேறு துருவங்களில்
ஒரே நொடியில்
தரை தொடும்
மழைத்துளிகள்
இயல்பாகவோ
இல்லை இயல்பு மீறியோ
ஏதோ ஒரு புள்ளியில்
சந்திக்க நேருமோ ?
...
இது
இதனால் ஆகப்பெரும்
என்ற தீர்க்கமான
வரையறையில்
இயல்பாய் இணைந்திருக்கும்
ஏதும் தொடர்பற்ற
பேதை உயிர்கள்
புரிந்தோ புரியாமலோ
பிரிந்து போதலும் சாத்தியமோ?
...
வல்லமை படைத்ததாய்
பிதற்றிக் கொள்ளும்,
சொற்களைப் பின்தொடர்ந்து
சுவாசித்து வெறுமனே
வாழ்ந்திருக்கும்
வெற்று ஊடக உடல்கள்
உலகில் உணர்ச்சியோடு
ஒரு முறையேனும்
கால் பதித்தல் நிகழுமோ?
...
ஊருக்காக உடையுடுத்தி
பேருக்காக பெரும் தானம் செய்து
பின் அவ்வப்போது புலம்பி
அரைகுறை அறிவில்
அநியாயத்துக்கு
அறிவுரை சொல்லித் திரியும்
ஆண்டவர்களுக்கு
எந்தக் கருப்பசாமி வந்து
நிஜ பூஜை செய்ய?
...
உண்மையும் - அதை
இறுக்கிப் பிடித்து
மானம் வளர்த்து
பின்
காணாப் பிணமாய்
கரைந்து போகும்
மிச்சமிருக்கும்
கொஞ்சம் சனமும்
காடு தேடி
மாமிச வாசம் விலக்கி
புகையாகப் போய்த் தொலையும்
வேதனை மிகு நாளும்
வெகு தொலைவில் இலையோ?
...
இவை கண்ணுற்று
வெறுத்து - கண்ட
காட்சி தொலைக்க
எண்ணங்களில் ஆழ்ந்து போய்
விரும்பி பித்துப் பிடித்து
வேடிக்கைப் பொருளாய்ச்
சுற்றித் திரியும்
பைத்தியக்கார ஞானிகள்
முழுதாய் உறங்கிப் போகும்
முழுநிலா இரவும் வருமோ?
...
புதிது புதிதாய்
புதுமை படைக்க
அழகுத் தமிழ் தொட்ட
இந்தக் கவிஞன்
தினந்தோறும்
புலம்பித் தீர்க்கும்
இப்பேதைமை
இயல்பாய் என்றுதான்
முற்றுப்பெருமோ?
..

Monday, March 25, 2013

the poet's final soldier...

it was indeed a dead end..
the poet could sense
the dying pulse
of his final soldier..
great warrior he was,
known are his moments
when he saved
this pitiful poet
in the slips and
suspense, and even
when the fairy left
forever
without showing
any glimpse of return..
so long journey
this has been,
amongst the mutlitudes
of timeless moments
and fragrance of
the unseen buds..
only his sword
saw the poet's
stillness and suffocation..
never did the poet
mind his intrusion
or being attached,
for their connection
is not of this life
but a droplet of chain
that they never wanted
to be broken..
even the first meet
of the poet and the fairy
happened under
his sword's security..
nobody knows this,
not even the poet himself..
pity the fairy,
she knows him not,
for he never brought
any ring from her
distant hero..
..
now,
the final breathe
of the last hope,
desired to be sunk,
still again
is the poet
or may be drunk
in gloom or
under everlasting spell..
..
may be
he resurrects
when the poet
comes to conscience
and delivers his
desperate delicacy ...
...


கண்ணம்மாவிற்கான ஓவியம்...

கண்ணம்மாவிற்காக
நீண்ட நாள் கழித்து
ஒரு ஓவியம்
...
தொலை தூர காற்றின்
வருகை கண்டு
வாசம் பரப்ப
தயாரான ஒவ்வொரு மலரும்
இதழ்களின் ஓரத்தில்
சிந்தியும் சிந்தாமல்
தாக்கி வைத்திருந்த
வெட்கத்தையும் ,
நீண்ட நாளைய
அலைக்களித்தலை
பொழுது விடியா உறக்கத்தில்
தொலைத்துவிடத் துடிக்கும்
துறவியின்  தவிப்பையும்
ஒரு சேர
பின்னிப் பிணைத்து
அங்கங்கே
வண்ணமற்ற வெறுமை கூட்டி
அவளுக்கே பிடித்த
அடுத்த நொடி அறியா
திருப்பு முனையை
எனக்குத் தெரிந்த
தூரிகைக் கிறுக்கலில்
படைத்து
சாமிக்கு
முதல் நெல் சாத்தும்
ஏழை விவசாயி போல
பக்குவமாய் பரிசளித்தேன்..
பார்த்து
ஒரு துளி ஈரம் தாங்கி
அவள் பார்த்த நொடி
என் கடந்த காலம்
அனைத்தையும்
சலவை செய்து
எங்கோ தொலைதூர
சிகரத்தில்
உதிரக் காத்திருக்கும்
ஒற்றைப் பனித்துளியாக
எனை ஏனோ
மாற்றிச்சென்றது
...
இவள் விரல் பிடித்து தான்
நான் கவிதை எழுதியிருக்கிறேன்
பெரும்பாலும்..
என் எழுத்துப்பிழைகளும்
உலகம் தாண்டிய உவமைகளும்
இவளின் என்னோடிருத்தல்
காரணமாகத்தான்
...
எதார்த்தமாக
எத்தனையோ முறை
இவளது இமைகளை
ஈரமாக்கி
கல்லாய் இருந்தாலும்
அடுத்த நொடி
எனக்குள்
பெரும் அணுச்சிதறல் தான்..
கூடவே வந்து
விழுகின்ற கவிதைகள்
நானின்றி - என்
இதயமே எழுதுவதை
எவரும் ஒத்துக்கொள்ளப்
போவதில்லை தான்
...
பல நாட்கள்
எனைச் சுற்றி
என்ன நடக்கிறது
என்பதைக் கூட அறியாமல்
திணறியிருக்கிறேன் ,
பின் மெதுவாய் - அவள்
பின் வாசல் தட்டி
கூந்தல் இழுத்து
விழிகள் குறுக்கி
நான் பார்க்கின்ற
ஒவ்வொரு முறையும்
ஒரே தாவலில்
எனை முழுதும்
தழுவியிருப்பாள்..
...
எதற்காக
என் உயிர் தாங்கி
இன்னொரு உடலை
இந்தக் கடவுள்
படைத்திருப்பான்?
..
பேசுதல் தொடங்கி
சுவை, கோவம்,
சுட்டித்தனம்,
பிடித்தன பிடிக்காதன - என
அனைத்திலும் - எனை
உள்ளடக்கி
இந்த உயிர்ப்பு
எப்படிச் சாத்தியமாயிற்று?
..
எல்லா நொடிகளிலும்
நினைத்தலும்  மரத்தலும்
தாண்டி
ஏதுமற்ற வெளியில்
எல்லாமுமாய்
இந்த அழகிக்கான
என் பரிசினை
சுவாசத்தில் கலந்து
பக்குவமாய் விடுகிறேன்
..
இது
ஒவ்வொரு நொடியும்
அவள் இதயம்
தொட்டுத் திரும்பும் ..
..
திரும்பும் ஒவ்வொரு
சுவாச இழையையும்
எனக்குள் பின்னித்தான்
இங்கு
தமிழாய்ப் படைக்கிறேன்..
இன்றைய ஓவியம் கூட
ஏதோ ஒரு நொடியில்
அவள் அதிகமாய்
திருப்பி அனுப்பிய
சுவாசத்தின்
சின்ன பிரதிபலிப்பு தான்..
..
இன்னும்
சுவாசித்திருத்தல்
சாத்தியம் எனில்
இவள் மற்றும்
இவளது படைப்பு
சார்ந்த - ஒரு
குறுக்கு விசாரணை
ஏகாந்தத்தில் சுகித்திருக்கும் - அந்த
ஒரே கடவுளிடம்
நடத்தித் தீருவதாய்
இந்தப் புலவனின் புலம்பல்
எனக்குள்
எங்கோ கேட்கிறது
...


Saturday, March 23, 2013

wordless pity...

once
when the final breeze
was gone and dead,
and when the last ray
was about to dissolve,
he just woke
from his sleep
of not knowing,
hungry was he
to the fullest
of it, he found nothing
but the dry left overs
of the precedent poets
and of murderers..
there he sat,
not letting the temptation
to take over,
all he needed was
words, just some words,
to decorate his poem,
first ever poem,
of no source
of no real inspiration
but
to dedicate to her..
he knew her not,
but even before
the poem was born,
he knew it was
for her alone,
something told him
that his first poem
would kill him or
take him to altitude
that he would never like..
but..
pity him
not even a word
came as it was
not just a poem
of normal beauty,
but it was divine,
the surrounding responded
the upcoming birth
of the holy poem,
but
there he sat still
awaiting his first word..
then came the first star
reminding his
maid's stud,
he jumped in joy,
assuming that
he got his word..
but still
he could not pen..
then came the distant flute
must be of the mad follower
of krishna himself,
the poet hated krishna
these days,
as he himself was once
krishna ..
and his life as krishna
was the best and
the most joyous
still not his favorite..
so even the flute
fell ill in bringing
his first word..
sad and silent
he closed his eyes
not to think
of anything..
not to sleep too..
he just sat..
and sat...
thus,
the poem started
writing him..
...

his past's legacy

every step of this journey
craving rhythms
of unsaid emotions
and even
those favorite ones,
the poet walks
tasting every bit
of his remaining time
for life has not been
so favoring him..
multitudes of questions
from as many directions
as possible,
stood alone is
his own words
screen less,
straight from
the firing pulse
of his kind heart..
what mystic combination
does he possess,
that he dances
among whores,
for their heartfelt invite
touches him,
and meditates
amongst the fish mongers,
nobody dares disturb him though,
when people ask
if flush matters
he would say yes,
but when his
flush matters,
he goes beyond,
not caring
whether to surpass
or to quit,
he just lets go,
and some envy him
for being unattached,
but he calls it
fully attached...
that's how he himself
has made it..
this excessive confidence
in life and his words
he brought not
but his soul's part
who flew from
the farthest island
to the proximity
of stealing his share
of breathe and heat..
she wrote poems
on him,
which he never could have..
and those deep lines
of solid piercing
made this poet
a poet of no time..
or beyond time
and matter..
but..
being away from
what's tasted is
how he becomes cruel..
not just neglecting
but fully abandoning
the beauty of his past..
bygones can never
appeal  being
his past's legacy,
for even he dwells not
after every little deed,
how on earth would he
let his reminiscence
to resurrect
from his self made tomb?
and that's how
the fairy and the poet
strike a unique balance,
you call it chemistry or
whatever,
but he would just say,
it just happens...
...

Friday, March 22, 2013

the fairy and the poet...

walking the ignored paths
every step being different
and myriad thoughts of disguise
and suspense to its maximum
that's how he goes
and that's why he is..
being a poet,
of past and future
but not of the now
ignorance is to know
and knowing is to ignore
not all the time but
sometimes when he
becomes like this..
this moment of
uncertain company
or of loneliness
drags him close
to the mighty blades
of death or
sometimes of no-mind..
then he goes
in directions that
he chooses not,
and does whatever
in styles that
nobody ever knew,
and further
questions whoever,
dares to answer,
if not,
he waits not,
goes on and on,
his target
not known
to his maker
or even to himself..
there come the feathers
of the soft and fragrant fairy
of the farthest beauty-land
to impress him?
or to oblige him?
she waves her
fingers in endless storm
of infatuation ..
he stands as strong
as ever before..
for his past
has been spun in mysteries,
carved in stains
of unspoken controversies
and his own guilt
is what he dwells upon..
what mighty spell
this poor fairy
tries to woo
the unbreakable sword
of this mighty poet???
...


she..herself..she alone...

to brush up
the dormant skill
of carving a live poem,
here he goes,
hiding the sorrow
of being unseen
and of being accused
of acting in love,
and in lust too...
what can quench
the thirsty mind of
his beloved ?
what answers can
make her satisfy?
or is she one
who actually satisfies?
she never comes with
straight questions but
stimulus of doubt
flows through
her eyes ..
and beware
of those mighty drops
of fierce attack
that penetrates even
the unshaken souls,
how else can life
be written as a poem
of the beauty and mystery
his lady love has?
however
firm and focused
is the poet now,
starting his
so called magical rhythm..
..
oh this life..
her..
oh this life
her..
here she comes,
not letting the poet..
pity him..
look at his hands,
trembling to write..
here she is..
as his sunset,
as his finest poem,
as his only last hope..
as his love's penalty
as his lust's extra
as he himself..
what else
of poem and poetry..
come on..
it is she, herself
and she alone..
... 

நடைபாதை...நீ...நான்...

காரணமின்றி பயணித்தல்
உனக்குப் பிடிக்குமா?
அதுவும்
கால் கடுக்க காத்திருந்து
எதிர்பார்த்த நிகழ்வு
நிகழாது போய் - பின்
வேறு வழியின்றி
தென்பட்ட திசைகளில்
ஏதோ ஒன்றை
திருப்பு முனையாய்க் கொண்டு
அடுத்த அடி
எடுத்து வைக்க
அத்தனை யோசித்து
ஒரு வழியாய்
எடுத்து வைத்து
முன் பார்க்க
எதிர் திசையில்
எதிர் பார்த்தது
நிதானமாய்
நிகழ்ந்து போக ,
என்ன செய்வாய்?
சுய மரியாதை தாங்கி
முன்னோக்கி முழு மனதாய்
போவாயா?
இல்லை
துணிவின்றி திரும்பி
விட்டுவிட்ட
கடந்த கால நிகழ்வின் பின்
உயிரின் வலியறிந்து ஓடுவாயா?
..
கொஞ்சம் பின்னோக்கி பார்..
எத்தனை நொடிகள்
உன் இஷ்டப்படி
கடத்தியிருக்கிறாய்?
உன் வாழ்க்கை
உனதாக
எத்தனை நிமிடங்கள்
வாழ்ந்திருக்கிறாய்?
..
உனைப் பிறப்பிக்க
உனக்குத் தெரியாத யாரோ
உயிர்விடுதலின் உச்சத்தில்
விரும்பியோ வெறுத்தோ
முகம் பார்க்கா இருளில்
கலந்துபட்ட - அந்த
ஒரு குறிப்பிட்ட நொடி
உன்கையில் ஏதுமில்லை தான்..
..
பின்
எடுப்பார் தோள்தொட்டு
தேற்றுதல் வேண்டி
விரும்பி அழுது
வருடிக்கொடுக்க
நீ ஏங்கிய கைகள்
எத்தனை எத்தனை?
எதுவும் இல்லாது
எல்லாமும் இருந்ததாய்
இயல்பாய் இருந்திருக்கிறாய் தானே?
...
இசையும் நடனமும்
உனைப் போல
எவருக்கும் வாய்க்கவில்லை தானே?
கையேந்தி
கண்ணோடு கண் பார்க்கும்
தீர்க்கமும் துணிவும்
எதுவாயினும் ஏற்றுக் கொள்ளும்
பக்குவப் பிடிப்பும்
யார் கற்றுத் தந்தது உனக்கு ?
..
சிதறிப் போன சில்லுகளுக்காக
எவ்வளவு வியர்வை?
திகட்டிப் போகா
தேங்காய்த் துண்டுகள் !!!
உனைப் பார்த்துதானே
இந்த உயர் சமூகம்
நாய் வளர்க்க கற்றுக் கொண்டது..
பலரது முகவரி
இப்போதெல்லாம்
நாய்களை வைத்தே
அடையாளம் காட்டப்படுகிறது...
...
"நாய்கள் ஜாக்கிரதை"
பலகைக்கும்
பதவி கல்வி தாங்கிய
பலகைக்கும்
என்ன பெரிய வித்தியாசம்?
உனக்கு எல்லாம் ஒன்றுதானே?
...
திருமண போஸ்டர்களைப்
பார்த்து அப்படி என்ன
பல்லிளிப்பு உனக்கு?
வேண்டுமென சிரிக்கிறாயா ?
இல்லை
வேண்டாமென சிரிக்கிறாயா?
எப்படியோ ,
போஸ்டர் பார்த்து
பதமாகப் போய் விடுகிறாய்
விருந்து சுவைக்க...
ஆமா,
நிஜமாகவே
சாக்கடையிலிருந்து ஆப்பிள்
கிடைக்குமா என்ன?
..
காவல் தேவையின்றி
கற்பு பயமின்றி
களவு பயமின்றி
காற்றோடு காற்றாக
கண்ட இடத்தில்
கண்ணுறங்கி
கலர் கலராய்
கனவும் கண்டு
கடைசி வரைக்கும்
என்ன அழகாய்
கழித்து விடுகிறாய்?
இதற்கு மேல்
என்ன பெரிய
மேலாண்மை வேண்டுமாம்?
...
அது சரி,
சாவு பத்தி
என்ன நெனைக்கிற?
உனக்கும் அது
இருக்கு தெரியுமா?
நீ என்ன அத
உன் கூடவே
கூட்டிகிட்டா சுத்துற?
அலட்டிக்கவே மாட்டேங்கிற!
அந்த ரகசியம் தான் என்ன?
கொஞ்சமா சொல்லிப் போயேன்
உனக்காக எவ்ளோ
எழுதுறேன் பாரு..
எனக்கும் பெருசா பயமில்ல
இத எழுதும்போதே
போனாலும் சரிதான்..
என்ன ,
உன்னையும் என்னையும்
நம்பித்தான்
ரொம்ப பேரு
யோசிக்காம சுத்துறான்...
...
இப்படித்தான்
போன வாரம்,
கண்ணம்மா பத்தி
வழக்கம்போல
கவிதையும் காதலுமா
கற்பனைல இருந்தப்ப ,
தாடி வேற வச்சிருந்தனா ,
போறவன் வாரவன்லாம்
ஒரு மாதிரியா பாத்தாங்க..
ஒரு தாத்தா
பக்கம் வந்து
ஒரு ரூபா
போட்டுட்டே போயிட்டாரு...
பத்திரமா எடுத்து
உன்கிட்ட
காமிக்க வச்சிருக்கேன்..
..
நெஜமா சொல்லுறேன்
உன்னையும் என்னையும் தவிர
எல்லாப்பயலும்
நல்லாத்தான் இருக்கானுங்க..
கெளம்பு ,
நீ போய் கானா பாடு
ஓரமா
நான் உக்காந்து
பேனா புடிக்கேன்...
...







Wednesday, March 20, 2013

விழுந்து கிடப்பதாய் நடிக்கிறேன்...

கடைசியாய் எனக்குத்
துணையிருந்த கால் செருப்பும்
அறுந்து போக,
கானல் நீர் பாலையில்
அலை தேடித் தோற்று
மனம் மிக அலைவுற்று
சுவாசிக்க இஷ்டமின்றி
வெறுத்து விழுந்துவிட்டேன்..
...
இதுவரை நடந்த தொலைவு
என்னென்ன சொல்லி
எனை இயல்பாய்
கடந்து போயிருக்கிறது..
ரசித்த சோலைகளும்
சாய்ந்து கொண்ட மரங்களும்
இதமான நிழலும்
என்னுடன்
நேற்றைய இரவு வரை
வந்தவனும் கூட
நானறியா எந்த
ரகசியத்தையும் - எனக்கு
சொல்லிப் போகவில்லையே..
..
கடைசியாய் என்
பாவங்களின் அடையாளமாய்
என்னோடு ஒட்டிக்கொண்டிருந்த
ஒரே கந்தலாடையும்
அந்த மதிப்பற்ற
ஒற்றை நாணயமும்
வேண்டுமென்றே
கூட வைத்து நடந்த
கண்ணம்மாவின் கிறுக்கல்களும்
மலையுயர நீர்வீழ்ச்சியின்
அடி ஆழத்தில்
அவளுக்காய் கண்டெடுத்த
கூழாங்கல்லும்
அவள் தாங்கிய
பல்வேறு செல்லப் பெயர்களை
செதுக்கிய சிரட்டை ஓடுகளும்
எனக்காய் அவள்
பரிசளித்த கை வளையமும்
இவை யாவும் தாங்கிய
சாக்குப்பையும்
அவள் இஷ்டப்படி
எல்லையில்லா நிலப்பரப்பில்
எல்லை எனத்தோன்றிய
எதோ ஒரு இடத்தில்
விட்டுத் தொடர்ந்தேன்..
இன்னும் ஏதோ
எனை விட்டுப் போகாமல்
தொட்டுத் தொடர்வதாய்
உணர்ந்து துடிக்கிறேன்...
...
நேற்றைய இரவில்
உறக்கம் கொள்ளாது
புலம்பித் தவித்த அவனும்
கடைசியாய்
"கவனம் வேணும் !" என
அறிந்தோ அறியாமலோ
சொல்லிச் சரிந்தான்..
எனக்காகத்தான்
அவன்
தேர்ந்தெடுத்த
அந்த வார்த்தைகளை
சொல்லிப் போனானா?
மனதறிந்து யாருக்கு - நான்
என்ன கொடுமை
இழைத்திருக்கிறேன்?
...
ஒருவேளை
கண்ணம்மா அவ்வப்போது
"நல்லா நடிக்கிற!" என்பதுபோல
நிஜமாகவே நான்
எனைமறந்து நடிக்கிறேனோ?
எது
இந்த மாயையின்
நிறுத்தற்குறி?
...
எனைச் சூழ்ந்திருக்கும்
எல்லாரும்
எனைவிட நல்லவராய்
எனைச் செதுக்கி
அடங்கியிருக்க
நான் மட்டும் எப்படி
இப்படி வந்து மாட்டிக்கொண்டேன்?
...
நட்புத் துரோகங்களையும்
நேர்கொண்ட பகைகளையும்
நெடு நேர நச்சரிப்புகளையும்
நிலைத்திருந்த
நச்சுப் பேச்சுகளையும்
இன்னும்
எத்தனையோ
உச்சகட்ட தடுமாற்றங்களையும்
அசராது அமைதியாய்
எனக்குள்ளே
அடக்கியிருந்தேனே ..
...
எனை மறந்திருந்த
சிற்சில வேளைகளில் கூட
நிச்சயமாய்
நிலைத்திருந்தேனே...
கடந்த காலத்தை
கலைத்து போட்டவனுக்கு
எடுத்துக்காட்டி வாழ்தல்
இகழ்ச்சி தானே..
..
இயல்பாய் இருத்தல்
இந்த உலகிற்கு
ஏற்புடையது இல்லையோ?
உதாரணம் கேட்டு
உயிரை மதிப்பதில்லையே !
மானத்திற்கும்
சுய மரியாதைக்கும்
எங்குபோய்
ஓட்டு  சேகரிக்க?
..
இந்த நொடியின்
அவசரமற்ற - இந்த
வீழ்ந்து கிடத்தல்
மிகவும் சுகமாக
எனை நான் துவங்கிய
சலனமற்ற இடம் நோக்கி
சத்தமின்றி இழுத்துப்போகிறது..
எழுந்துகொள்ள
ஏதோ உள்ளிருந்து உந்தியும்
தொடர்ந்து விழுந்தே கிடந்து
தூங்குவதாய் நடிக்கிறேன்...
..
நிஜமாய் நித்திரை
என் நிழலாகிப் போகும்போது
எனை விட்டு
என் சுவாசம்
எங்கோ
போய்த்தொலையட்டும்...
...


Tuesday, March 19, 2013

வேறு வழியின்றி நிராகரிக்கிறாயா?

உன் ஒரு நொடி
தீர்க்கப் பார்வையில்
மோட்சமடையக்  காத்திருந்த
நீண்ட நாள் காத்திருத்தலில்
எனக்கும்
என் காதலுக்குமான
இணக்கம் இலேசாக
விட்டுப் போனது...
அதை மீட்டெடுக்க
நீ எடுத்த
எத்தனையோ முயற்சிகள்
தோற்றுப் போக
நீயும் எனைவிட்டு
நீங்கிப் போவது
எவ்விதத்தில் நியாயம்?
...
முந்தைய கவிதையில் தானே
நிராகரிப்பைச் சாடியிருந்தேன் ..
இப்போது எனக்குள்ளாக
உன் இந்த நிராகரிப்பு
என்னவெல்லாம் செய்யும் கண்ணம்மா?
...
நீ இருந்த தைரியத்தில்தானே
என் கவனம்
கவிதையில் ஊறியிருந்தது..
இப்போது
நீ போவதாய் கூறி
என் கவிக்கு கல்லறை
கணக்கு வழக்கு முடிக்கிறாயா?
...
மிக எளிதாக
காரணம் சொல்லிப்போகிறாயா?
நீ கூறும் எதுவும்
வெறும் வார்த்தையில்லை கண்ணம்மா..
என் இதயத்தையும்
ஒட்டிக்கொண்டுள்ள உயிரையும்
பிணைத்து வைப்பதே
உன் குரல் தானே..
...
மணி நேரங்களை
எளிதாக என்னுடன்
பேசாமல் போக்கியிருக்கிறாயே!
இங்கே ஒவ்வொரு நொடியும்
உறைந்து கொண்டு
அசையாது பிடிவாதம் செய்ய
நான் எப்படி
சுவாசித்திருப்பது?
...
மீண்டு வருதல்
குறித்த எண்ணமே
இல்லைதானே உனக்கு?
...
நினைவிருக்கிறதா?
முந்தைய எத்தனையோ
தடுமாற்றங்களில்
துணிந்து வந்து
எனை மீட்டெடுத்து
முழுதாய் முத்தமிட்டாயே!
பின்
யாருமற்ற நிலவில்
எனக்கான
எதிர்கால ரகசியங்களை
உன் கூந்தல் சுருளில்
நான் முயங்கிக் கிடந்தபோது
முணுமுணுத்து
மீளா மயக்கத்தில்
எனை மூழ்கடித்தாயே !
நீ தானா
இப்போது இலகுவாக
விலகிப் போகிறாய்?
நான் வேறு என்ன
செய்ய முடியும்?
காத்திருத்தலைத் தவிர?
என்ன,
இந்த உயிரைப்
பிடித்து வைத்தல் மட்டும்
எனக்கு பிடித்தமானதாக இல்லை..
நான் வாழ்ந்து முடித்தபோது
வந்தவள் நீ..
மீண்டும் பிறக்கச் செய்து
இப்போது
துணிந்து சாகச் சொல்கிறாய்...
ம் ..ம்..ம்...



நிராகரிப்பின் மிச்சம்

நீட்டிய கைகளை
கோர்த்துக் கொள்ளாவிட்டாலும்
நொடிப் பொழுதில்
தட்டி விட்டு
நிராகரித்து
நேர் நோக்கிய பார்வை
தரை நோக்கச் செய்யாது
அடுத்த நொடி
தரை தொடும்
ஒரு துளி கண்ணீரின்
ஆழம் உணர்ந்து
அடி வயிற்றின் வலி
அறிந்து - அது சார்ந்த
மூலம் மதித்து
மேல் நோக்கி
தூக்கி விட
இன்னும் இந்த
உன்னத உலகில்
யாரும் உளரோ என
எத்தனை முறைதான்
நானும்
ஏங்கி ஏங்கி
பார்த்து களைப்பது ?
...
ஒவ்வொரு முறை
நிமிர்ந்து பார்த்தலும்
உள்ளூர ஏன்
எனைத் தாழ்த்துகிறது?
....
எனக்கு மிக அருகில்
ஒவ்வொரு நாளும்
இயல்பாய் இசைந்து
கடந்து போகும்
பழகிய முகங்கள்
நான்
கண்ணோடு கண் நோக்கி
கூர்ந்து பார்க்கும்போது மட்டும்
யாருமறியா பதற்றத்தை
எனக்கு மட்டும்
காட்டிப் போவதேன்?
...
எனைப் பார்த்து
இவர்கள் ஏன்
ஒதுங்கிப் போகிறார்கள்?
எது என்னை
சோகத்தில் சுகமாகவும்
இவர்களை
சுகத்தில் சோகமாகவும்
இருத்தி வைக்கிறது?
...
இவர்கள்
கண்ணாடி பார்க்கிறார்களா?
இல்லையா?
ஒருவேளை
நான் பார்க்காததால் தான்
இப்படி இருக்கிறேனோ?
...
எதுவாக இருந்தாலும்
வீண் செய்வதுதான்
இவர்களுக்குப்
பிடிக்கிறதா?
பிறர் வீண் செய்வதில்தானே
என் வாழ்க்கை
தினசரி ஓடுகிறது..
...
வேகத்தில் சுகித்து
விவேகத்தை மறந்து
அழகியலிலிருந்து தொலைவில்
அவசர கதியிலேயே
அலைந்து திரிகிறார்களே...
எங்கு போய் தான்
முடியும்
இவர்களின்
வீரிய ஓட்டம்?
..
வெறும் நடத்தலில்
நான் பெறும் சுகம்
இவர்களுக்கு ஏன்
கிடைக்கப் பெறுவதில்லை?
..
பாதையோர சுவர்களைச் சார்ந்து
என்றேனும் இவர்கள்
பொழுது போக்கியிருப்பார்களா?
இல்லை
சாலையோர நடைபாதையின்
அகலம், அமைப்பு ,
அங்கங்கே
உயிர் வாங்கக் காத்திருக்கும்
பாதாள சாக்கடை உடைப்புகள் ,
அதன் நாற்றம்,
நீண்டு கொண்டே செல்லும்
அதன் முடிவு வேண்டா முதிர்ச்சி,
இவை ஏதேனும்
இவர்கள் உணர்ந்தது தான் உண்டா?
...
சுட்டெரிக்கும் வெயிலின்
காட்டமும் - அதன்
பிந்தைய கந்தல் துணியின்
விசுவாச துடைப்பும் ,
அதில் சாயும்போது
எனை தனதாக்கிக் கொள்ளும்
துயிலின் தீர்க்கமான தீண்டலும்
கனவற்ற கண் மூடலும்
எனக்கேயான தியானமும்
இயல்பாய் பின் எழுதலும்
உடன் கிடைக்கும்
எச்சில் டீ யும்
ஒரு ரூவா பன்னும்
மூத்திர சந்தின்
மௌனமும் ,
நாற்றம் தாண்டிய நிலையும்,
சில இரவுகளின்
சில்லரைப் பரிமாற்றங்களும்
ஓரிரவு உறவு முறைகளும்
பகை மறந்த புகைத்தலும்
தெரு விளக்குகளுடன் மட்டுமேயான
நடுநிசி நியாயப் பேச்சுகளும்
நானும் பாடும் கானாக்களும்
இவை எல்லாவற்றிலும்
நான் என்னை
ஆழமாய் கண்டெடுக்க
இவர்கள் மட்டும்
எனை விட்டு விலகி
ஏன் எங்கோ இருக்கிறார்கள் ?
..
நான் வேண்டா இடைவெளி
இவர்களுக்கு மட்டும்
அத்தனை ஆறுதல்
தருமா என்ன?
விடுப்பு எடுத்தால்தான்
இவர்கள்
வாழ முடியுமா என்ன?
இவர்களை சுழற்றி விட்ட சாட்டை
திரும்பத் தேவையே இல்லையோ?
காலம் கடந்த இந்தச் சுழற்சியில்
இவர்கள்
அச்சாணி மறந்து
தரை நிலைத்தல் தோணாது
ஒருவரோடு ஒருவர்
மோதி விழத்தானே முடியும்?
...
இவர்கள் விட்டுப்போகும்
தடயம்
அழிக்க முடியாததாய் இருக்கிறதே!
தொற்றுநோயாகக்  கூட
சில சமயம்
மாறிப் பிறப்பெடுக்கிறதே!
..
ஒரு நொடி
இவர்கள்
நாதியற்ற என்
நேற்றைய குப்பைத்தொட்டி
தத்தெடுப்பை
வந்து பார்க்கட்டும்..
அதன் கண்களை
ஒரு சில கணங்கள்
தரிசித்து மோட்சம் பெறட்டும்..
...




Monday, March 18, 2013

ஒரு துளி மை...

தொலைதூர வெளிச்சம்
இல்லாத நேரங்களில்
சூழ்ந்திருக்கும் இருள்
கடந்து போன நாட்களின்
கழிவுகளை
நினைவுறுத்துவது ஏன்?
...
எத்தனையோ நொடிகள்
எனக்காகவே
இனிமையில் வாழ்ந்திருக்க
அவ்வப்போது சுவைத்த
கசப்பின் மிச்சம் மட்டும்
இன்னும் ஒட்டிக் கொண்டிருப்பதேன்?
...
எதிர்மறை தான்
நிலையானதா?
...
ஒவ்வொரு புல்லும்
புவியீர்ப்பை எதிர்த்துதானே
வளர வேண்டும்..
இல்லை
வளர்ந்திருக்கிறது..
இதன் சூட்சுமம்தான் என்ன?
..
மலர்தல்
மேல்நோக்கிய
சாதாரண நிகழ்வு மட்டுமா?
இல்லை
ஒவ்வொரு மொட்டின்
ஞானமடைதலா?
...
நீரும் காற்றும்
இயல்பாகக் கிடைப்பனவா?
இல்லை
உயிரோடு நீடித்திருத்தல் சார்ந்த
விடாமுயற்சியின் பலனா?
..
கோவத்தில் சிதறும்
ஒவ்வொரு துளி மையும்
படைக்கத் தவறிய
உன்னத கவிதைதான் இல்லையா?
..
விடையிலா கேள்வி
எனத் தெரிந்தும்
சுழல்களுக்குள்
சிக்கிச் சுழன்று வருவதில்
இந்த மனத்திற்கு
அப்படி என்னதான்
சுகமோ?
..
தொடர்பே இன்றி
இங்கொன்றும் அங்கொன்றுமாக
பார்த்த, பார்க்காத
மனித முகங்கள்
தோன்றி மறைவதேன்?
..
நான் படைத்த கவிகளும்
எனைப் படைத்த கவிகளும்
எங்கோ யாரோ
வாசிப்பது கேட்கிறதே!
இது நிஜம் தானா?
..
நெடுநாள் முந்தைய
உச்சகட்ட முடிவின்
நீண்ட நகம் கடித்தல்
கண்முன் விரிவது ஏன் ?
..
உச்சிமுகர்ந்த
உன்னத நொடிகளும்
உச்சகட்ட மௌனமும்
நீடித்த வெறுமையும்
நொடிப் பொழுதும் நீங்கா
கண்ணம்மாவின்
கைப்பிடித்தலும்
இக்கனத்தில் சாத்தியமா?
..
புத்தி பேதலித்தல்
என்பது இதுதானா?
இல்லை
புரிந்துகொள்ளுதலின்
உச்சம் நோக்கிய பயணமா?
தொடர்ந்து
இவ்வுயிரை
தக்கவைத்துக் கொண்டு
எதைத் தாண்டப் போகிறேன்?
..
நிகழ்காலம் கூட
எனக்கு அடிமையாயிருக்க
அடுத்த நொடியின்
நிலைப்புத்தன்மை
எனை ஏன்
இப்படிக் கொல்கிறது ?
இது தான்
இயற்கை எனக்குக் காட்டும்
நியாயத்தின் நிலைநாட்டலா?
...
முடிவற்ற இந்த
முரண்படுதலை
முடித்து வைத்தல்
சாத்தியமா?
முற்றுப் புள்ளிக்குள்
முகம் புதைத்து
ஒளிந்துகொள்ள
இந்த மூடனுக்கு
வாய்ப்பு இருக்கிறதா?
..
எல்லாவற்றிற்கும் மேல்
எது நடந்தாலும்
ஏற்றுக்கொள்வதாய்
சொல்லித்திரியும் எனக்கு
என்னதான் உரைக்கும்?
..
இப்போதைக்கு
இன்னுமொரு துளி
மை சிதறல் மட்டுமே
என்
அடுத்த நொடி  சாதனை ..
பார்க்கலாம்
போரிடத்தானே - இந்தப்
புதிர் வாழ்க்கை
...

இறகின் இரகசிய ஓவியம் ...

சற்று முன்பு 
இலகுவாக உதிர்ந்து போன 
இறகின் மீது 
எப்போதும் தவித்து 
எதையோ தேடி அலையும் 
காற்றிற்கு என்ன பாசம்?
தொடக்கம் முடிவின்றி 
தாங்குதலும் 
நீடித்து உடன் இருத்தலுமாக 
இந்தப் பயணம் 
எதை நோக்கி தொடர்கிறது?
அடுத்த ஏதோ ஒரு 
திடப் பொருளின் ஸ்பரிசம் 
தேடித்தான் இந்த 
ஆட்டமும் அலைக்களிப்புமா?
இல்லை 
இல்லாத ஒரு உறவை 
தங்களுக்குள்ளாக ஊர்ஜிதம் செய்யவா?
நேர்நோக்கி 
நிமிர்ந்த நடைபோடும் 
ஆணவத்தில் அடங்காத 
ஒவ்வொரு தலையும் 
இந்த இறகின் 
இதமான மிதத்தலை 
ரசித்தே செல்கின்றன..
எத்தனை கைகளுக்கு 
இதனைத் தொட்டுப் பார்க்க 
துடிப்பும் துள்ளலும் 
இருக்கின்றது?
உயரம் பார்த்து
உண்மை விட்டுவிடத்தான் 
இந்த மனிதப் பிறவியா என்ன ?
பிரிந்து போன 
தாய்ப்பறவையின் 
தற்போதைய பரிதவிப்பு 
இந்த இறகிற்கு 
தெரியுமா என்ன ?
அது சரி,
நிஜமான தவிப்பு 
என்றொன்று இருக்கிறதா?
நேற்றைய சிணுங்கலில் 
துவங்கிய திடீர் பிரிவு 
எனக்குள் ஏன் 
இத்தனை சோகத்தை 
விதைத்து நிற்கிறது?
நிரந்தரமாய் 
இருந்துவிடப் போகிறதா
இந்தப் பிரிவும் 
பிரிவு சார்ந்த வலியும்?
உலகின் ஒவ்வொரு பிரிவும் 
மறத்தலை மருந்தாக 
பூசிக் கொண்டுதானே 
மங்கிப் போகின்றது..
அழகியல் தேடுபவனுக்கு 
அழகாகவும் 
விரும்பி 
அழிவைத் தேடி 
தனித்திருப்பவனுக்கு 
கடைசி மூச்சின் மர்மத்தையும் 
இயல்பாய் சொல்லிப் போகிறதே 
இந்த எடையற்ற இறகு...
தேற்றிக்கொள்வதில் தான் 
வாழ்தலின் அருமை 
புரியுமா என்ன?
இறகாய் இருந்துவிட 
முடியாதா என்ன?
ஒரு வேளை,
என் கவி புனைய 
மை தேடி 
இந்த இறகு 
எனைச் சுற்றி 
வருகிறதா என்ன ?
..
சோகத்தில் சுகித்திருக்க 
எனக்கு நானே 
போட்டுக் கொள்ளும் 
உவமைகளைப் பார் கண்ணம்மா..
மிதந்து வரும் இறகாம் 
காற்றாம், உறவாம்,
இன்னும் போனால் 
முன் ஜென்மத்து தொடர்பு 
என்று கூட எழுதுவேன் போலும்...
..
நேர்நின்று 
எனக்கே எனக்காக 
வாய்த்திருக்கும் 
இந்த நொடி சோகத்தை 
ஏற்றுக் கொள்வதுதானே 
நான் உயிர்த்திருத்தலின் அழகு?
...
அதைவிட்டு 
கவிதைக்குள் ஒளிந்து 
வார்த்தைகளின் வழியே 
எத்தனை நாள்தான் 
கண்ணீர் வடிப்பது?
..
மிதந்து போகும் 
இந்த இறகும் 
விழுந்து படும்..
முன்னர் விழுந்துபட்ட 
இறகுகளின் வழித்தோன்றலாய் 
எனக்குள் தோன்றிய 
எத்தனையோ கவிதைகளில் 
ஒன்றாய் - இக்கவிதையும் 
இறந்துபடும்...
..
நீடித்திருத்தலின் 
மர்மப் புன்னகை தாங்கி 
எனக்கான எதிர்காலத்தின் 
எதிர்பார்ப்புகளை 
கலங்கடித்து 
இந்த இப்போதைய 
சோகம் 
இப்போதைக்கு 
வென்றதாகவே இருக்கட்டும்..
..
ஒவ்வொரு நொடி வாழ்தலின் 
ருசியறிய நானும் 
தோல்வியின் படியில் 
விழுந்துபட்ட இறகின் 
முதல் ஓவியத்தை 
தீட்டியிருக்கிறேன்
முடிவு நோக்கி..
...










Thursday, March 14, 2013

உதிரக் காத்திருக்கும் இலை ....

உதிர்ந்து விழும்
ஒவ்வொரு இலையும்
யாருமற்ற எனக்கேயான
வெளியிலிருந்து - எனை
உள்நோக்கி
விசையுடன் இழுக்க
வேண்டா வெறுப்புடன்
வாழ்வு நோக்கி
வந்து விழுகிறேன் நான்..
அசைவிலா புள்ளிகளில்
அதிகபட்ச அசைவுடன்
சிந்தனை செலுத்தி
செயலற்று இருத்தல்
என் சமீபத்திய
பெரும் சாதனை..
இதை பிதற்றிச் சொல்ல
என்ன இருக்கிறது
என
வான் பார்த்து
சிந்தித்து
வசை பொழியத்
தயாராய்
கவிதைத் தீ
தீண்டத் தகாதவர்கள் ..
வெறும் பிழைப்பா?
இல்லை
வேத வாழ்வா?
என்ற
விமர்சனங்களுக்கு அஞ்சி
குனிந்து செல்லா
மனப்பிறழ்வு எனக்கு - இது
சிலர் கவனித்து
அளித்த விருது..
சாலையோரம்
சற்று முன்பு
துவங்கிய இந்த
நடையில் கூட
ஏதுமற்ற ஒன்றை
ஒளித்துதான்
கொண்டு வந்திருக்கிறேன்..
அதைத் தேடித்தேடி
நான் தளர்ந்து போய்
தரையமரும் நேரம்
புல்லாய் எனைத் தீண்டி
புதிய பொருள்
தேடச் சொல்லும்
அந்த ஏதுமற்ற
ஏதோவொன்று..
குழப்பத்தில் வான் நோக்கி
சுற்றுமுற்றும் நோக்கி
பின்
விடாமல் முயன்று
குடைந்து மரத்தில்
தனக்கான - உலகின்
மிக அழகான வீடு கட்டி
ரீங்காரமிட்டு
எனக்கான
தாலாட்டோ
ஒப்பாரியோ
பாடும் இந்தச் சில் வண்டு..
அதன் இசை தொடர்ந்து
நினைவுகளில் தோய்ந்து
ஏதோவொரு
மரத்தூளியில்
தேன்மிட்டாய் சப்பிக்கொண்டே
தமிழற்ற கவிதை பாடி
எனை நான்
கடவுளாக்கிக் கொண்ட தருணம்
பின்
அக்கடவுள் மீதே
கோவம் கொண்டு
அம்மரக் கிளை ஒடித்து
எனை நானே
அடித்துக் கொண்ட
கேவல நொடிகளும்..
தனை விரும்பா
தறுதலையாய்
தற்கொலை தேடி
தொலைத்த கனங்களும்
மேலும் கீழும்
அசையும்
இவ்விலைக் கூட்டத்தில்
என் முகம் மறைந்து
இல்லாமல்
கரைந்து போக
தவித்து
தொடர்ந்து
இந்த நித்திரையில்
மூழ்கிப் போகிறேன்...
முடிந்தால்
மீண்டு வருகிறேன்...
...

தணல் மணலில் ...

விருப்பமின்றி வைத்த
முதல் அடியில்
ஆரம்பித்தது
என் முடிவிலா
கேள்விகளின் சோகம்..
நினைவின்றி சுகத்தில்
திளைத்துக் கிடக்க
வாய்த்திருந்தும்
வசமாக
எனைச் சுற்றிப் பின்னிய
தந்திர வலையில்
எளிதாய் சிக்கிப் போனேன்..
ஏதுமற்ற பொழுதுகளை
மட்டுமே விரும்பி
என்னோடு வைத்துக் கொண்ட
சூழ்ச்சி அறியா மனம்
சபலமடைந்து
சடுதியில்
அடிமட்டம் நோக்கி
வீழ்ந்துபட
நடப்பதை
அறிந்தும் அறியாமல்
அடுத்தடுத்த அடிகளுக்காக
ஏங்கியிருக்க
தொடர்ந்து
விளைவு ஆராயா
அவசரங்களை
வருத்தி சமைத்து
இதோ இந்த நொடியில்
இவ்விடத்தில்
பேதலித்து புலம்பத் தயாராகிறேன்..
..
எனக்குக் கிடைத்த
எப்போதைக்குமான
சாப விமோசனம்
என் கவி சார்ந்து
வாழ்வு கற்றுக்கொள்ளும்
கண்ணம்மா..
..
வேண்டுமென்றே
வாழ்க்கையை
விளையாட்டாய் வாழும்
எனை
உணர்ச்சிகளின்
ஒட்டுமொத்த பரிணாமத்தையும்
உள்கொண்ட
அந்த இளந்தளிர்
லேசாக தீண்டிப் போனதில்
மீண்டு வாரா
வேறு உலகில்
ஒரு நொடியில்
ஜன்மித்து மரணித்தேன் நான்..
...
அது தொடர்ந்து
அக்கனவில்
நிலைத்து - அவள்
நிழல் தொட்டுப்
போயிருந்தால்
இன்று
இந்த நிலை
எனக்கேது?
..
போ போ
என - அழுதும்
அழுத்தியும்
அடித்தும்  - அவள்
எனக்கான எதிர்காலத்தை
கணித்து
கனம் தோறும்
கண் கலங்கிய போதும்
விடாப்பிடியாக
அவள் கூந்தல் நோக்கி
நீண்ட என் கைகள்
இன்று
எவரும் தீண்டா தூரத்தில்
ஈரமற்ற
தணல் மணலில்
புதைந்து பட
இன்னும் - அவள்
கடைசியாய்க்
கருக்கொண்ட - எனக்கான
கவிதையை - என்
உதடுகள்
முணுமுணுத்து
வறண்டு போகின்றன..
..
மீண்டு வருதல்
சாத்தியமோ இல்லையோ
எனக்கான அவளின்
அந்தக் கடைசிக்
கவியின் மிச்சம்
என் புதைதலின் மீது
எழுதப்படும்..
..
அதற்கு
இசை சேர்க்க
எனைப் பிடித்து
என் உயிர் தாங்கிப்
பிடித்து இத்தனை தூரம்
என்னோடு
வாசித்து வசித்து வரும்
என் முதல் வாசகியின்
மௌனம் வந்து சேரும்..
அவளின் இந்த நொடி
வாசிப்பில்
கண்ணம்மாவும்
இக்கவியும்
உயிர் வாழ்ந்திருக்க
எனக்கென்ன பயம்..
போய் வந்து
இன்னும் தொடர்வேன்..
...
இம்சை தாங்கி
இன்னொரு யுகம் படைக்க
நீயும்
வந்து சேர் கண்ணம்மா..
..





Tuesday, February 12, 2013

விரைந்து வா கிருஷ்ணாவை மீட்டெடு...

என்றோ எழுதிய
ஈரப் பூங்காற்றின்
அழகியல் ரசித்து
என்பால் வலிய விழுந்து
என்னுள் ஆழ்ந்து
என் கவி ஊடுருவி
சுவை சேர்ப்பதாய்
வலி சேர்த்து
நீயே கவியாகவும்
மாறிப்போனாய் ..
மீண்டு வாரா
இந்த வாழ்தலில்
உனக்கேன் இத்தனை பிடித்தம்?
உனைக் கரைத்து
ஒவ்வொரு நொடியும்
எனக்கான வார்த்தைகளை
வெளித்தள்ளுகிறாய்
உள்ளூர படிந்து கிடக்கும்
உன் சார்ந்த
உணர்ச்சிப் படிமங்களை
பொறுக்கியெடுத்து
பதமாய் பதம் சமைத்து
எங்கோ எனக்காக
ஏங்கித் தவித்திருக்கும்
ஏகாந்தத்தை நோக்கி நான்
கவி புனைய..
கண் அசைவிலா
கவிதையொன்றை
கணப்பொழுதில் என் முன்
வீசியெறிந்து
விடை கேட்பாய் நீ...
விட்ட கவி
தொட்டும் தொடாமல்
கருத்து சொல்ல
உன் தாக்குதல் கண்டு
தன்னிலை மறந்து
வீழ்ந்து படுவேன் நான்..
வென்றதாய் மெல்லச் சிரித்து
என் கவியின் மீது
கடைசி பூச்சு
உன் பூவிதழால்
செய்வாய் நீ....
அவ்வப்போது
அமைதியாகத் தோன்றினாலும்
உன் வேறுபல
உருவங்கள்
நான் அறிந்ததே...
சமீபத்திய
கவிஞனின் சோகம்
உன் சார்ந்ததா?
இல்லையா?
இதை நீ ஆராய்ந்து முடிக்கையில்
கவிஞன் முடிந்து போயிருப்பான்..
கண்ணம்மா சார்ந்த எதுவும்
இப்போது அவனை
தட்டி எழுப்பத் தவறவில்லை தான்..
ஆயினும்
ஆழ்ந்து ருசித்த
சோகத்தின் சுகத்திலேயே
சுருண்டு கிடக்கிறான்
உன் கிருஷ்ணா..
இந்த ருசி
இவன் இதுவரை
பார்த்திரா ஒன்றாகிப் போனதால்
எதையும் முழுமையாய்
வாழ்வதாய் கொண்ட
நோக்கம் தழுவி
இன்னும் இறுக்கமாய்
இதனுள்ளே மூழ்கிப் போகிறான்..
எதுவும் யாரும்
நீயும் - இல்லை
இவன் பால்
கவி கொடுத்த
கடைசி மேய்ப்பனும்
அவன் சந்ததி வந்த
எந்தக் கொம்பனும்
இவன் இந்நிலை
மாற்றல் சாத்தியமன்று..
ஒருவேளை
இவன் என்றோ
எழுதி வெறுத்து
உள்வாழ்ந்து
ஒதுக்கி வைத்த
ஒன்றும் விளங்கா
கவிதையின் உறுத்தல்
இவனைத் தட்டி
எழுப்பக்கூடும் ..
ஆனால்
அதைக் கொணர்ந்து
இவன் முன்
வீசியெறிய
இன்றைய உன் நிலை
போதாது கண்ணம்மா..
உன் முதல் பார்வையையும்
முதல் வார்த்தையையும்
மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்து
விரைந்து வா?
மூர்ச்சையடையும் முன்
இந்த
மூர்க்கக் கவிஞனை
மீட்டெடுக்க
முயன்று பார்ப்போம்..
..


எதை நோக்கி கிருஷ்ணா?

உன் விழியசைவின்
வழிகாட்டுதலில்
விடியலை நோக்கிச்
செல்வதாய்
சென்ற என் நாட்கள் ...
மந்தையோடிருந்ததை
மறந்து நான்
நொடிதோறும்
வாழ்ந்து வாழவைத்து
சிறந்த மேய்ப்பனாக
உயர்ந்து
களமிறங்கி
வேட்டையாடி
வீரம் காட்டி
விமர்சனம் பல தாங்கி
வீழாது
வியப்பு மேம்படச் செய்து
வெற்றி நிலை நாட்டி
வேறுபல ஈர்ப்பு நோக்கி
வசதிக்காக சாய்ந்து
அசைந்து கொடுத்து
விளைவு வேண்டி
வளைந்து கொடுத்து
வசியம் செய்து
வன்மை ஆழப் பதித்து
பின் இயல்பாய்
எவர்நோக்கினும்
மேலவன் கண்டதாய்
வணங்கி
வணங்கச்செய்து
சிறந்த நடிப்புச் செய்து
சிந்தை பல
மனம் பலவற்றில்
ஊடுருவவிட்டு
உள்ளூரப் பதிந்து
உயிராகிப் போய்
பின்
சாதித்து சதித்து
ஏதுமற்ற நிலையில்
இருப்பதாய் சொல்லி
நகர்ந்து போய்
நிலைகுத்திய விண்ணில்
கவிதை புனைந்து
கடும் சோகத்தில் ஆழ்ந்து
அதிலேயே நீடித்திருந்து
சார்ந்தவர் சிந்திக்க
சூழ்நிலை அமைத்து
அசைவின்றி திமிராய்
அனாயாச திறன்களை
உளவியலில் இறக்கி
விளையாட்டு நடத்தி
சூழ்ச்சி செய்து
சூதாடி
நாடு பெண்
நல்லவை கெட்டவை
நித்தியம் நிதர்சனம்
எல்லாம் கவர்ந்து
கணம் கூட்டி
நிமிர்ந்து நீட்டி
நடை வீசிப்
புறம் பேசிப்
பொழுதில் ஒன்றாத
விழுதுகளைப் பழுது செய்து
பெருமரத்தின்
வீழ்ச்சிக்காக காத்திருந்து
மீண்டும் முரண்கூட்டி
கவிதை செய்து
காலட்சேபம் கரைந்து
கரைந்து போனதாய் காட்டி
கூடி இருந்து
முந்தைய
மேய்ப்பனை நினைந்து
பூஜை செய்து
பலபல படைத்து
பரிகாசம் அடக்கி
பணிந்து போனதாய் பிதற்றி
பிணம் நாடும்
இடம் தேடி
வேண்டாதன எவை
என அறிந்து
அவையும் சுவைத்தறிந்து
எக்காளமாய்
எத்தடையும் இன்றி
எதை நோக்கி
இந்தப் பாவப் பிழைப்பு ?






Monday, February 11, 2013

சிறியதாகிப் போகிறேன்...

நீண்டு கொண்டே சென்ற
கனவு திடீரென
நின்று போக
அடுத்த நொடி அசைவின்
வலி உணர்ந்து
நான் சுருங்கிக் கொள்ள
எழுந்தும் எழாமல்
எனது உயிர்
மேலும் கீழும்
பரிதவிக்க
மூர்ச்சையடைந்து
வார்த்தையற்றுப் போய்
வீழ்ந்து போகும்போதும்
ஏமாற்றத்தை அறிந்தே
என் கண்கள்
உன் கைகளைத் தேட
ஏதும் நடக்காதது போல
எளிதாகப் 'போய் விடு'
என்கிறாய்..
கண்ணம்மா
உனைப் புதைத்து வைத்து
என் காதல் செடி
வளர்ந்து
பூப்பூத்துக் கிடந்தது..
இனி
இலையுதிர்த்து
ஏதுமற்றுப் போகும்..
எந்த ஜென்மத்திலோ
தொட்டும் தொடாமல்
விட்டுப் போனதாய்
நீ
சொல்லிப்போனதை
எங்கே போய்
நானும் புலம்ப?
என்னுடன் இருக்கையில்
ஏதுமற்று எல்லாமாய்
இருப்பதாக
உன் கண்கள்
காதலைக் கண்ணீராய்
காற்றில் கலந்து சென்றதை
என்
எந்தக் கடந்த காலக்
கவிதையில் நான்
தேடிப் பிடிக்க?
என் கடந்த காலக் காதலை
கடிந்து
நிஜமாகவே அறைந்து போனாய்..
'என்ன அவசரம் உனக்கு?
நான் வருவேன்னு தெரியாதா ?'
என்றெல்லாம்
எக்கச்சக்கமாய் உன்
உணர்ச்சிப் பரிதவிப்பை
என்னில் கடத்திப் போனாய்..
அதுவரை இல்லாத
ஏக்கத்தில்
நானும் மூழ்கிப் போனேன் ..
..
இந்த நொடி
எழுத வேண்டி
எனை வருத்தி
உன் நினைவைத்
தவிர்க்க வேண்டி
எனை வருத்தி
நான் கோர்க்கும்
எந்தவொரு வார்த்தையும்
எனக்கு அழகாய்த்
தோன்றவில்லை கண்ணம்மா..
நீ கேட்டதால்
எழுதித் தொலைக்கிறேன்
எழுதித் தொலைகிறேன்..
இஷ்டமின்றி
நான் எழுதும்
என் வாழ்வின்
முதல் கவிதை இது..
எனக்கே பிடிக்காமல்
என் வருத்தத்தின்
வடிவமாய் வடிந்து வருகிறது..
எனை உள்ளிருந்து
ஏளனம் செய்யும்
எல்லா வார்த்தைகளும்
இதோ உனக்காக..
எடுத்துப் போ..
'போ போ ' என்பது தானே
உன் அதிகபட்ச
உபயோகம்..
முதல் முறை
சிறியதாகிப் போனதாய்
உணர்கிறேன்..
என் முகம்
எனக்குப் பிடிக்காமல் இருந்து
மெதுவாய்க் கொல்கிறது ...
நம் கடைசிப் பயணம்
நினைவிருக்கிறதா?
இன்னும் அதில் நான்
பயணித்துக் கொண்டுதானிருக்கிறேன் ..
என் அறை
இருளில் மூழ்கிக் கிடக்கிறது
எனக்குப் பிடித்த மாதிரி ..
ஆனால்
இதுவரை இல்லாத
ஏதோவொன்று
எனை எங்கோ
இந்தக் கணத்தில்
இழுத்துச் செல்கிறது...
மீண்டு வர விரும்பாமல்
என் மனம்
விரும்பித் தொடர்கிறது..
மௌனத்தின்
முடிவையோ இல்லை
தொடக்கத்தையோ தேடி
விரும்பித் தொடர்கிறது..
முடிவோ தொடக்கமோ
அதில்
முடிந்து போக
எனக்கு வரம் கொடு ..
இல்லை
சாபம் கொடு..
....



Tuesday, January 15, 2013

நாய்க்குட்டிப் பார்வை (முடிவு)


அடுத்த நாளு காலையில
கவர்ன்மெண்டு ஆபிசரு
கடையெல்லாம் காலி பண்ண
கண்டிப்பா கத்திப் போனார் ..
புல்டோசர் கொண்டு வந்து
பழசெல்லாம் புடுங்கிப் போட்டு
பாதையத்தான் விரிக்கப் போறான்
மனுசப்பய
மனசு மட்டும்
சுருங்கிக் கெடக்கு
வோட்டு கேட்டு வரும்போது
நோட்டுக் கட்ட மாத்திக்கிட்டு
ரோட்டு மேல சத்தியமா
“அத செய்வோம்
இத செய்வோம்”னு
ஆளாளுக்கு வாயடிச்சான்..
இப்போ
ஒரு பயலும்
துணைக்கு வரல !
மழையிலயும் வெயிலிலயும்
மறைவு தந்து
காத்து நின்ன
மகராசி வேப்ப மரம் !
முகராசி இழந்து
வாடி நின்னா!
மறைஞ்சு போன
அப்பா அம்மா
போட்டோவ மாட்டி வச்ச  
ஆணியத்தான் தாங்கி நின்னா !
சிவப்புத்துணி கட்டிவச்சு
மஞ்சள் குங்குமம்
பூசி வச்சு
‘மாரியாத்தா’ என்று சொல்லி
ஒரு
மாலையத்தான் கட்டி வச்சான்
இப்போ
அடியோடு புடுங்கப் போறான்
இக்குடும்பத்த
வேரோட
சாய்க்கப் போறான்
ஒத்த ரூவா நாணயத்த
உன் நெத்தியில ஒட்டிவைக்க
பாவிப்பய மனசுக்கு
யாரும்
பக்குவமா சொல்லித்தரல!
கட்டிவச்ச ஊஞ்சலையே
கெட்டியாப் புடுச்சிக்கிட்டு
பாசக்கார அண்ணங்காரன்
பரபரன்னு
முழிச்சு நின்னான்!
...
வேப்ப முத்த உடச்செடுத்து
மொழியில தான்
வச்சொடச்சு
இரத்தம் பார்த்து
ஆடிநின்னா
மூத்தக்கா தன லக்ஷ்மி
தலைமேல மண் விழுந்த
சோகத்த அறியாம
குழிதோண்டி வீடு கட்டி
தங்கச்சிங்க விளையாட
நான் மட்டும்
நா வலிக்க
நாள் பூரா
குரைச்சுக் கிடந்தேன் !
ரேசன் கார்ட பாக்காத
இவுக மேல மண்ண போட்டு
பளபளன்னு ரோடு போட்டு
பயணம் போகப் போறாக
அடுத்த ராத்திரி
என்ன செய்ய?
வாடகைக்கு
வீடு வேண்டாம்
வாடையில்லா
கூடு போதும் !
இல்ல
பாடையொண்ணு
செஞ்சுத்தாங்க
இவுக
பரலோகம் போகட்டும்!
..
ஒவ்வொண்ணா அள்ளிப்போட்டு
ஒட்டுமொத்த குடும்பமும்
ஒரு கோணியில
அடங்கிப் போச்சு !
“ஐ ! ஐ! “ன்னு
ஆடிக்கிட்டு
டூரு போறதா நெனச்சுக்கிட்டு
லக்ஷ்மிங்க படையெடுக்க
மனசுலயும் தோளுலயும்
பாரத்த தாங்கிக்கிட்டு
பைய நடந்தான் அப்பாக்காரன்
மரநிழலில் மட்டுமே
மறைஞ்சு குளிச்சத
மறக்க முடியாம
மனசின்றி மண்பார்த்து
பின் தொடர்ந்தா அம்மாக்காரி!
..
“வா மணி, போலாம்”னு
என்னையும் கூப்பிட்டான்
பாசக்கார அண்ணங்காரன்
இப்பவும் வாலாட்டி
அவன்
பின்னாடி நானும் போனேன்!
..
மூணு நாள் ராப்பகலா
ஊர் முழுசும்
சுத்திப் பார்த்தோம் ..
காலாற களைப்பாற
தெருவோரம் உக்காந்தா
‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ன்னு
காவல் துறை
நீதி பேச
‘புள்ளக்குட்டிக் காரன்’னு
பொழச்சுக்க இடங்கேட்டான் !
இந்தமுறை
இரக்கமின்றி
முட்டியில லத்தி பேச
பொழ பொழன்னு
அழுதுபுட்டான் !
எத்தனையோ வருசமா
அடக்கி வச்ச அத்தனையும்
கண்ணீரா வடிச்சுப்புட்டான்..
இருந்த கொஞ்சம் சில்லரையும்
இன்னிக்கே தீர்ந்து போகும் !
..
அடுத்த வேளை
அரை வயிறு
நமக்குன்னு இல்லாட்டியும்
நாக்கு செத்துப்
போன புள்ளங்க
மூச்சுவிட என்னசெய்ய?
..
முந்தானையில் முகந்தொடச்சி
மயங்கி விழுந்தா
அம்மாக்காரி!
..
சீவனத்த அப்பாக்காரன்
மூக்குபக்கம் கைய வச்சி
பாசமுள்ள பொண்டாட்டி
இருக்காளா போய்ட்டாளான்னு
பதபதச்சி சிதறிப்போனான்!
..
“அரசாங்க ஆஸ்பத்திரி
தூக்கிப் போக
ஆட்டோக்காரன்
ஓசியில வருவானா?
இல்ல
எனக்கிருந்த
ஒரே சொத்த
எருமையில தூக்கிப்போக
எமராசா வருவாரா?
என்னப் பெத்த மகராசி
வுட்டுப் புட்டு போய்ட்டான்னா  
எங்க போயி நானும் நிற்பேன்?
கொள்ளி போடா காசு இல்ல
கொழந்தகள என்ன செய்வேன்?
புண்ணியஞ் செஞ்சவ நீ!
சுமங்கலியா பொறியடீ!
மண்ணுல உன்னவிட்டா
மனுசியினு யாரிருக்கா?
பல வருஷம் முன்னாடி
படுத்துக்க கூப்புட்டான்னு
ஒருத்தன் தலையறுத்து
வந்து நின்னா !
உடம்ப வித்து
பொழப்பவங்க
உந்தன்
கால் கழுவி
குடிக்கணுன்டீ!
என்ன விட்டுப் போறீன்னா
எந்தன் உசிருந்தாரேன்
எடுத்துப் போடீ!
அழுது முடிச்சு
நெஞ்சப் புடிச்சு
சரிந்து விழுந்தான்
அப்பாக்காரன்!
..
இரு உடம்பும்
ஈ மொய்க்க
இறுதிச்சடங்கு
யாரு செய்வா?
புள்ளக்குட்டி இருந்துங்கூட
அனாதப் பொணமா
போயிட்டீங்களே!
..
சுத்தி சுத்தி
நானும் வந்தேன்
கண்ணோரம் ஈரமாக
இப்போதும் வாலாட்டி!
..
செஞ்சுவச்ச அப்பாக்காரன்
கொஞ்சி வளர்த்த அம்மாக்காரி
இனிமே இல்லையினு
புரிஞ்சுபோன பிஞ்சுகளும்
நெஞ்சுல ஏதுமின்றி
மிஞ்சியிருந்த
கொஞ்சம் கண்ணீரையும்
அஞ்சலியாய்
கொட்டித் தீர்த்தன..
அரசாங்க வண்டி வந்து
அலுத்துக்கிட்டு அள்ளிப்போய்
மின்சார சுடுகாட்டுல
சொகுசாக கொள்ளிவைக்க
அஞ்சே நிமிஷத்துல
சட்டியில சாம்பலாக
அண்ணங்காரன் கையில!
..
அத
கரைக்கணுமா ஒடைக்கணுமா
என்னனு தெரியாம
சாக்குப் பையில்
எடுத்துக்கிட்டு
ஊரவிட்டு
வெளிய வந்தோம்!
உச்சி வெயில் கானல் நீர்
கைதட்டி வரவேற்க,
சாக்குப்பையில் கால்வேக
தார் காய்ச்சி
ரோடு போடும்
அன்றாடங்காய்ச்சிகளை
அசதியுடன் கடந்து போனோம்..
..
வெட்டிவச்ச குழியினிலே
புதைக்காம விட்டுவச்ச
இம்மாம்பெரிய வட்டக் குழாய்..
ரோட்டோரம்
தாகத்தோடு தனிமையில்
தவம் இருந்தது!
“இருக்க இடம்
கிடச்சிப்புட்டா
நான்தான்
இங்கிலாந்து இளவரசன்”னு
தெளிச்சலோடு அண்ணங்காரன்
குழாய் வீட்டத்
திறந்து வச்சான் ..
..
வயிறெல்லாம் வத்திப்போய்
வறண்ட நாக்க சப்பிக்கிட்டு
பாசமுள்ள ரோசாங்க
வாசமின்றி வந்துச்சுங்க!
குழாயடித் தண்ணீர
கொஞ்சங்கொஞ்சமா
மொண்டு வந்து
தங்கச்சிங்க தாகத்த
அண்ணங்காரன் தீத்து வச்சான்!
எம்பொழப்பு நாய் பொழப்பு..
இதையெல்லாம் பாத்துப்புட்டு
நானும் ஓர் அண்ணந்தான்னு
உள்மனசு குத்திச்சு!
...
தங்கமான தங்கைகள
தவிக்கவிட்டு வந்துட்டனே!
எங்கபோயி நானுந்தேட?
எங்கம்மா இருக்காளோ?
காக்கி டவுசர் போட்ட மாமா
கார்ப்பரேசன் வண்டியில
கண்ணிவச்சு வந்திறங்கி
ஊசி போட்டு கொன்னுட்டானோ?
மந்திரிவீட்டு மரத்துக்கு
உரமாக்கிப் போட்டுட்டானோ?
எம் மருமகனப் பெத்துப்போடும்
வயசிருக்கும் தங்கச்சிக்கு..
பணக்காரப் பண்ணையாரு
செல்ல நாயா ஆயிட்டியோ?
இல்ல
பாவிப்பய என்னப்போல
பரிதவிச்சு பொலம்புறியோ?
..
வாசம் புடிச்சு
வந்துருவேன்
கொஞ்ச நாளு பொறு தாயி !
எங்கூட இருக்குதுங்க
நம்மப் போல
நாலும் ஒண்ணும்!
..
கரை சேத்து விட்டுப்புட்டு
வந்துருவேன் பொறு தாயி!
அதுக்குள்ள செத்துப்புட்டா
சாமிகிட்ட
போயி சொல்லு..
‘மறு சென்மம் வேணாஞ்சாமி!
படைச்சதுக்கு சோத்தப்போடு!’
..
இத்தனையும் பொலம்பிக்கிட்டு
கண் திறந்து பாத்தமுன்னா
ஒத்தயடிப் பாதையில
ஒரு கூட்டம் ஊர்ந்து போச்சு !
தெருக்கூத்து கூட்டம் போல
இசையோட சேர்ந்து போச்சு !
பின்னாடியே பசைபோட்டு
நாங்களுந்தான் ஒட்டிக்கிட்டோம்..
..
அன்னிக்கி ராத்திரி
அரிசிக்கஞ்சியும் அப்பளமும்!
ரொம்ப நாள் ஆச்சுதேன்னு
ஒரு புடி புடிச்சிட்டோம்
..
ரெண்டு பேரு மத்தளமும்
ரெண்டு பேரு தப்பட்டையும்
தட்டித் தட்டி
தாளம் போட
நாலு கம்பு நாட்டி வச்சு
கயிறு ஒண்ண கட்டி வச்சான்..
எங்கிருந்தோ பறந்து வந்தா
இடுப்பில்லா சிங்காரி!
சரசரன்னு மேல ஏறி
ராணியாட்டம்
ஒய்யாரமா
கயித்துமேல நடந்துபோனா..
..
வளையத்துல துணிய சுத்தி
கிஸ்னாயில கொஞ்சம் ஊத்தி
நெருப்ப வச்சான் குள்ள ராசா!
அத
கழுத்துலயும் இடுப்புலயும்
மாறிமாறி மாட்டிக்கிட்டு
பம்பரமா சுத்தி வந்தான்
மீசைக்கார பெரிய ராசா!
கத்தி ஒண்ண உருவிக்கிட்டு
அத
தீப்பறக்க தீட்டிக்கிட்டு
வாய்வழியா வயிறு வர
சொருகிக்கிட்டு உருவி எடுத்தான்..
எல்லாத்துக்கும் எசப்பாட்டு
ஏத்திக்கட்டி பாடினாரு
வெள்ளைமுடி கொள்ளுத்தாத்தா..
மயில் போல வளைஞ்சாடி
வட்டம்போட்டு நின்னாங்க
அக்காங்க மூணு பேரு
அத்தைங்க ரெண்டு பேரு!
..
 “புதுசா வந்திருக்கோம்
எங்களையும் சேத்துக்குங்க!”
ஆறு பேரும் போயி நின்னோம்
அழுகையெல்லாம் மறந்து நின்னோம்..
..
மூத்த அக்கா
பக்கம் வந்து
“அச்சச்சோ”ன்னு அள்ளிக்கிட்டா..
..
வித்தையத்தான் கத்துத்தந்து
விதியத்தான் மாத்திவிட்டா..
..
“வாழ்க்கையின்னா இதுதான்”னு
வாலக் கொஞ்சம் ஆட்டிக்கிட்டு
கயிறு மேல நான் நடந்து
கம்பீரமா கத்திச் சொன்னேன்
கடவுளுக்கும்
நன்றி சொன்னேன்..
....
...
..
(22-03-2009-ல் எழுதியது)

Monday, January 14, 2013

நாய்க்குட்டிப் பார்வை (தொடர்ச்சி 1 )


எனைப் போலவே
அவனுக்கும்
நான்கு சகோதரிகள்
வருடந்தோறும்
அறுவடை முடித்து – பின்
பருவ மழை பொய்த்ததால்
வறண்டு போன வயலாக
வாடிப் போயிருந்தாள்
அவன் தாய் !
இன்னும்
பத்து வருடங்களில்
ஆடை கிடைக்க வேண்டும்
இவன் சகோதரிகளுக்கு !
கவரிமான் இனம்
அழிந்து கொண்டிருக்கும்
இந்தப் பூமியில்
பிறந்த மேனியுடன்
கவலையின்றி
ஆடிக் கொண்டிருந்தனர்..
மகா லக்ஷ்மி ,
தன லக்ஷ்மி ,
பாக்ய லக்ஷ்மி,
விஜய லக்ஷ்மி !
..
விரல் விட்டு
எண்ணி விடும்
எலும்புகள்
வியர்வையில்
மட்டுமே நனைந்த
தேகம்!
...
‘கார் கூந்தல்’ என்று
வருணித்த கவிஞர்களும்
‘இயற்கையிலேயே
மணம் உண்டு ‘ என்றவர்களும்
இவர்களின்
சடைபிடித்த
தலைமுடியைக்
காணக் கடவர்..
சமையலுக்கு
எண்ணெய் இல்லை
அழகாய்
சமைதலுக்கு ஏது?
வறுமையின் நிறத்திற்கு
இவர்கள் பற்கள் தான்
வரையறை!
ஆனாலும்
அவை உதிர்க்கின்ற
புன்னகை – என்
ஒட்டுமொத்த சோகத்திற்கும்
ஒத்தடம் கொடுத்தது!
...
தினசரி இரவு
சோற்றுப் பருக்கைகளை
நீரில் நீந்தவிட்டு
ஓடிப்பிடித்து
விளையாடும்
இவர்கள் விரல்கள்!
இடது கையில்
25 பைசா
ஊறுகாய் பாக்கெட் ..
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு ஊறுகாய்!
பற்றாக்குறைக்கு
பச்சைமிளகாயும்
இவர்களுடைய நரம்புகளில்
சூடு சுரணை
ஏற்றிக் கொண்டிருக்கும்!
.....
பக்கத்து பங்களாவில்
பரபரப்பு
“கல்யாணத்துக்கு
ஏழு கறியா ?
ஒன்பது கறியா ?”
...
இவர்களும் ஒரு நாள்
இன்பத்துப் பாலில்
திளைத்திருக்க நேரும்!
அப்போது
இவர்கள்
மார்பின் மத்தியில்
மயங்கிக் கிடப்பது
மஞ்சள் கயிறு தானோ?
தங்கத்தை
தாலிக்கயிற்றில்
தாலாட்டும் பாக்கியம்
இவர்களுக்கேது?
அதுசரி!
இது போன்ற
வீடற்ற சராசரிகள்
முதலிரவு கொண்டாடுவது
நிலா வெளிச்சத்தில்
கூவத்துக் கரைகளில்தானோ?
பாலின்றி பழமின்றி
பகுத்தறிவை மட்டுமே
பஞ்சணையாகக் கொண்டு
நடந்தேறும்
பக்குவப் பரிமாற்றம்..
..
அடுத்த சந்ததிக்கு
உணவூட்ட
இவர்களது மார்புகள்
பால் சுரக்குமா?
இல்லை
வியர்வை மட்டுமே
சுரக்குமா?
உடைகளில்
இடைவெளி விட்டு
இடையையும்
தொடையையும் காட்டும்
போலிச் சடைப்
பெண்கள் மத்தியில்
கிழிந்தவற்றைத் தைத்து
மானங்காக்கும்
இவர்களும்
இருக்கத்தான் செய்கிறார்கள்..
இவர்கள்
வயதுக்கு வந்தால்
கூரைப் புடவையுடன்
சீர் செய்ய
மாமனும் வரப் போவதில்லை
கூட்டத்தோடு
வாழ்த்திப் பேச
மந்திரியும் வரப்போவதில்லை..
வயதையே மறந்துபோகும்
வர்க்கம் இது!
..
இவர்கள்
முகம் பார்க்கும்
கண்ணாடி
துண்டு துண்டாகத்தான்
இருக்கும்..
கம்மலும் ஜிமிக்கியும்
தொங்க வேண்டிய
காதுமடல் துளைகளைக்
காற்று
துளைத்து வெளியேற
எத்தனிக்கும்..
அதைத் தடுத்து நின்று
அழகு சேர்க்கும்
ஒரு சிறு துண்டு
ஈக்கிள்!
...
விளையாடும் போதெல்லாம்
உடைந்துபோய்
இவர்களின்
இரத்த நிறத்தை
சோதிக்கும்
கண்ணாடி வளையல்கள்
சோடி சேராமல்..
எப்போதோ கண்டெடுத்த
விவாகரத்தான
மெட்டி ஒன்றைத்
தன்
மோதிர விரலில்
மாட்டியிருப்பாள்
இவர்களில் ஒருத்தி..
கண்களைச் சுற்றி
கருப்பு வளையம் இருப்பதால்
இவர்கள்
மையிட்டுக் கொள்வதில்லை..
ஏழு வாரத்தில்
நிறம் மாறும் வித்தையும்
இவர்களுக்குத்
தெரிவதில்லை..
..
பக்கத்து வீதி
அம்மன் கோவிலில் திருவிழா!
இரவைப் பகலாக்கும்
கடைத்தெரு
ஈச்சி மொய்க்கும்
தேன் குழல்
மிட்டாய்க்கடை!
ஆவி பறக்கும்
மொளகா பஜ்ஜிக்கடை
எச்சில் ஊற
கையில்
வாட்ச் கட்டிக் கொடுக்கும்
சவ்வு மிட்டாய்க் காரன்
“எத எடுத்தாலும் பத்து ,
பத்து ரூவாய்க்கு மூணு “
என ஏகப்பட்ட
ஏற்ற இறக்கங்கள்!
எல்லாரையும்
இடித்துப் போகும்
ஏட்டு மாமா தொப்பை
கலர் கலராய் தாவணியும்
ஜதி சொல்லும் கொலுசொலியும்
அலம்பாத குஞ்சலமுமாய்
ஐயராத்து அக்காங்க!
இவை எல்லாவற்றையும்
வாய் பொளந்து பார்த்து
இவர்கள் செல்ல
பின்னால் நானும்
நாக்கைத் தொங்கவிட்டுத்
தொடர்ந்தேன்!
..
“ஐ! ராட்டு!” என
தனலக்ஷ்மி ஓட
அரைஞாண் கயிற்றின்
அறுக்க முடியா பந்தத்தில்
எங்கள் இரயில் வண்டி
கொஞ்சம்
தடுமாறி ஓடியது!
..
ஆகாய விமானத்தை
‘ஆ’ வென பார்த்து
துள்ளிக்குதிக்கும்
இவர்களுக்கு
வானத்தைச் சுற்றிக்காட்டும்
வாடகை விஞ்ஞானி
இந்த ‘இராட்டினம்’
எனப்படும்
‘ராட்டு’!
...
ராட்டு மாமா பக்கத்துல
பாவம் போல
நின்றிருந்தோம்..
இடம் பொருள் ஏவல்
அறிந்து
எதையும் பார்த்து
குரைக்கவில்லை நான் !
கூட்டமெல்லாம்
கலைஞ்ச நேரம்
வாடிப்போன ராட்டுமாமா
எங்களையும் ஏத்திக்கிட்டார்..
‘விண்வெளிக்குப் போகும்
இரண்டாவது நாய்
நான் தானோ?’
என்
அடிவயிறு கலங்க
உச்சியை அடைந்தபோது
இவர்கள்
நிலவையும் நட்சத்திரங்களையும்
பங்கு வைத்துக் கொண்டிருந்தனர்..
..
வானை அளப்போம்
கடல் மீனை அளப்போம்
வயிற்றுப்பசியுடன்
பாரதி படிப்போம் !
காக்கையும் குருவியும்
சேர்த்துக் கொண்டவன்
உயிரோடு இருந்திருந்தால்
என்னையும் சேர்த்திருப்பான்!
நானும் நன்றியோடு
வாலாட்டியிருப்பேன்..
...
பூக்காரப் பேச்சியக்கா
புருஷன் போனபின்னும்
பொழச்சிருக்கா !
பூவோடக் காத்திருக்கா
போற வரப் பொண்ணுக்கெல்லாம்
பூச்சூடிப் பாத்திருக்கா!
பேரமெல்லாம் பேசமாட்டா
பேராசைப் படமாட்டா
ஆசை மட்டும்
ஒண்ணே ஒண்ணு!
‘ரஜினிகாந்தப்’ பாக்கணுமாம்
‘என் ராசான்னு’ கொஞ்சணுமாம்!
..
தம் பொண்ணாத்தான் நெனச்சி
தனலக்ஷ்மி கையப் புடிச்சி
இத்துனூண்டு சரத்தைப் பிச்சி
தலையிலதான் சொருகி விட்டா..
வாடியிருந்த மல்லிகையும்
வாடாமல்லி ஆகிப்போச்சு!
..
அம்மன் கோயில் வாசலுக்கு
ஒருவழியா வந்து சேர்ந்தோம்
பூமிதிக்கப் போறாங்கன்னு
படபடன்னு
வேட்டுச் சத்தம் !
பயந்துபோன நானும்
பதறியடிச்சு ஓடிப்புட்டேன்!
பின்னாலயே ஓடிவந்தான் – என்
பாசக்கார அண்ணங்காரன்..
அன்னிக்கி ராத்திரி
எனக்கு மட்டும்
தூக்கமில்ல
ஏன்னுதான் தெரியவில்லை..
என் தங்கச்சிங்க ஞாபகம்
எங்க இருக்காங்களோ ?
திரும்பிப் போலாமான்னு
யோசிச்சுக் கிடந்தப்போ
“மணி..மணி”..ன்னு
தூக்கத்துல அண்ணங்காரன்
எம்பேரப் பொலம்புனான்!
அவன் கைல
என் கயிறு
வெறுங்கயிறாத் தெரியல!
பாசக்கயிறாத் தான்
தெரிஞ்சுது!
..
தன்னந்தனியா
நன்றியோட வாலாட்டி
கண்ணுல
உப்புத்தண்ணி
வடியவிட்டேன்!
என் சோகத்த
மடிய விட்டேன்!
பூர்வ சென்ம பந்தம்போல
புடிச்சுக்கிட்டே அலையிறான்
பாசமுள்ள அண்ணங்காரன்..
...