Monday, May 1, 2017

புழுதி வாசம்

காவியத்தலைவன் ஒருவன்
நீண்ட என் பயணத்தில் குறுக்கிட்டான்
ஏதேனும் பேசு என்றான்
அவன் கண்கள்
நிலைகொள்ளாமல்
சுற்றுமுற்றும் அலைந்தன
கைகள் நடுங்க
தண்ணீர் தண்ணீர் என்றான்
எதோ சொல்ல வாயெடுத்தவன்
மயங்கி என்
மடியில் வீழ்ந்தான்
பரபரத்து ஓடி
ஈரத்துணி கொண்டு
விரைகையில்
நூற்றாண்டுகள் பழைய
அவன் ஆடையின் புழுதி
என் கண்முன்
சுழன்று வீசியது
அந்த கணம் தான்
என் கடைசி நினைவு
ஏதோ ஓர் ஓலைச்சுவடியின்
இரு வரிகளுக்குள் சிக்கி
வெளியேறத் தவித்திருக்கிறேன் இப்போது
புழுதி வாசம்
இப்போதும் எனைச்சுற்றி


மறந்துபோன கணம்

ஒவ்வொரு முறை
எட்டிப்போகும்போதும்
மெல்ல அழைத்து
நீடிக்கச் செய்கிறது
எனக்காக இடப்பட்ட
என் பெயர்
குரல்தேடி திகைத்து நிற்கையில்
பின்னிருந்து தோள்தட்டி
சிரித்துப் போகிறது
நீண்டநாள்
மறந்திருந்த
அந்த சின்னஞ்சிறிய நான்.


பெருங்கவியுடன் ஒரு நடை

சில்லிடும் பனிமூட்டத்தினிடையே
பெருங்கவி ஒருவரோடு நடந்தேன்
அவரது அமைதி ஏனென்றேன்
அது மட்டும்தானே என்றார்
அமைதியிலிருந்து கவி எப்படி என்றேன்
அதிலிருந்துதானே என்றார்
அது சரி, ஆனால் எப்படி
என விழித்தேன்
தொலைதூரத்து மரக்கூட்டத்தை
சுட்டிக்காட்டி
அந்த ஒற்றை மரம் தெரிகிறதா என்றார்
அதன் தவம் புரிகிறதா என்றார்
இப்படித்தானே எப்போதும் என்றார்
இந்தப் பெருவெளிதானே
என் கவிதை என்றார்
சற்று யோசித்து
என் கவிதையா என்ன? என்றார்
வாழ்நாள் முழுதும்
பறவைகளைப் படிப்பவனுக்கு
ஏன் பறவைகளைப் பற்றி
எதுவுமே தெரியவில்லை என்றார்
அவர் விரல்களைப் பிடித்து
முத்தமிட எத்தனித்தபோது
சிறகடித்த ஓசை
என்னருகில்...