Friday, November 2, 2012

எனக்கான கடவுளே ..கண்ணம்மாவைக் காப்பாற்று ..

எனக்கான கடவுளே
நீண்ட நாட்களின்
உன் மௌனம்
எனக்குப் பிடித்துப்
போகும் போலும்..
உனைக் கண்டுகொள்ளாது
நடிப்பதில்
என் மௌனம்
எனக்கே விசித்திரமாகிறது..
என் இப்போதைய
கேள்விகள் முற்றிலும்
முரணாகவே இருக்கின்றன..
எதிர்பார்த்திரா பதில்களை
எதார்த்தமாக
ஏற்றுக்கொள்கிறேன்...
எது வேண்டுமோ
அதை விட்டுவிட்டு
விட்டுவிடக்கூடியன பின்
வேண்டா வெறுப்புடன்
அலைந்து திரிகிறேன்..
என் கவியும் கூட
எனை வதைக்கிறது
எனக்கான வார்த்தைகள்
வராமல் போக
வசதிக்காக எதையெதையோ
எழுதித்தள்ளுகிறேன்..
என் வாசகனும்
எனக்காக என்
எழுத்தை ஏற்றுக்கொள்கிறான்..
இயல்பாக என்னோடிருந்த
எனக்கேயான இயல்பு
எங்கே போயிற்று?
எனைச் சோதிப்பது
இன்னும் உனக்குப்
பிடித்தமான விளையாட்டா?
உன் இந்த
எல்லையற்ற ஆட்டத்தில்
நான் கரைந்து போவதை
நீ அறிந்தே இருக்கிறாய்..
நான் இல்லாமல் போகத்தான்
எனை இங்கு
இருக்கச் செய்தாயா?
என்னோடு சேர்ந்து
என் கண்ணம்மாவையும்
எதற்கு அலைக்களிக்கிறாய் ?
எங்கோ பஞ்சணையில்
பாவையர் பாதம் வருட
பக்குவமாய் படுத்திருக்கப்
பிறந்தவள் அவள் ..
இன்று என்
பக்குவமற்ற வரிகளைப்
பாரமாகத் தாங்கி
பிறவிக்கடன் தீர்த்துக்
கிடக்கிறாள்..
அவள் பங்குக்கு
அவளுக்கே உரித்தான
அநாயாச கேள்விகளை
அடுக்கி விட்டு விழிக்கிறாள் ..
அவளை அரவணைத்தலைத்
தவிர வேறு
என்ன பதில்
கூறி விட முடியும்?
எதிர்காலம் குறித்த
எத்தனையோ கேள்விகள் ..
ஏமாற்றத்தைத் தவிர
அவளுக்கு நான்
என்ன தந்துவிட முடியும்?
எனக்குப் பிறகு
அவளைக் காப்பாற்று
ஏகாந்தத்திலிருந்து காப்பாற்று
என் வெறுமையிலிருந்து காப்பாற்று
என் மீளமுடியா
துயரின் வன்மை
அவளைத்
தீண்டாமல் காப்பாற்று..
வேண்டுமானால் - உன்
வதைத்தலின் அரசியாக
அவளை
எனைத் தொடர்ந்து
நரகத்திற்கு அனுப்பு...
என் காதல் செய்த
கொடூர சந்தோசங்களுக்கு
அவள்
பழி தீர்த்துக்கொள்ளட்டும் ..
உன் வதைத்தலில்
நொந்து போவதற்குப் பதில்
அவள் காலடியில்
கழிந்து போகிறேன்..
அவள் காரி உமிழும்
எச்சில்
என் பாவங்களைக்
கழுவித் தீர்க்கட்டும்..
உன் இரக்கத்தின்
எடுத்துக்காட்டாக
இந்த ஒரு வரம் மட்டும்
எனக்குக் கொடு..
இன்று  என்னோடு
என் கவியும்
மடிந்து போகட்டும்...
...






Thursday, November 1, 2012

நான் ..பொய்...நீ...கண்ணம்மா


உன் இதயத் துடிப்பை
தொட்டுப் பார்க்க
விரைந்த என் விரல்களை
உன் விரல்கள்
தடுத்து நிறுத்திய இடம்..
அதில் உனக்கான என் முத்தம்..
அடக்கி வைத்த
அத்தனை காதலையும்
மொத்தமாய் முத்தமாய்
எடுத்துப் போ ...
மீண்டு வா..
உன் பங்கிற்கு - என்
உயிரை மீட்டு எடுத்து வா...
....
ஏன் இந்த தூரம்
உனக்கும் உன் உயிருக்கும் இடையில்..
இந்த நொடி ..
உனக்கான என் சுவாசம்
எனை விட்டு
தூரமாக செல்கிறது..
எங்கோ கேட்ட உன் குரல் தேடி..
தேடிக் கொணர்ந்த
ஏழாம் கடலின் முத்து
உனக்கான
என் முத்தத்தின் முன்
மரித்துப் போயிற்று..
...
நீ மரித்துப் போக நேரின்
என் கவிதை நீர்த்துப் போகும்..
என் சுவையும்
என் கவியின் சுவையும்
நீ தானே..
நீ கூறும் ம்ம்ம்-ன் அர்த்தம்
எனக்கு மட்டும் எப்படிப் புரிகிறது?
இல்லை எனக்கு மட்டுமே
நீ ம்ம்ம் பிறப்பிக்கிறாயா ?
என் அத்தனை கவிதைகளையும்
அது விஞ்சி நிற்கிறதே...
...
என் காதல்
ஞானம் அடைந்தது
உன் கண்ணசைவில்..
பாடல் விளையாட்டின்
வேதியல் மாற்றத்தில்...
இன்னும் இனிக்கிறது
அப்போது பார்த்த- உன்
கழுத்தின் சுவாசம்.
நீ பார்க்காமல்
நான் பார்த்த
நம் கவிதை அது..
...
வீட்டுப் போனது நீ இல்லை..
என் வாழ்தலின் மிச்சம்..
விட்டுப் போனதால்
இன்று தொட்டுத் தொடர்கிறேன்..
..
பிறப்பின் வாசத்தை -என்
காதல் மறக்குமா?
மறந்து விட்டாயா என்கிறாயே?
என் காதலின் தாய் நீ..
நினைவில் கொள்..
உன் முதல் முத்தம்
என் முதல் வார்த்தை..
உன் முதல் முத்தத்தில்
நம் காதல் குழந்தை
முதல் வார்த்தை பேசியது..
தமிழில் என் அபிமான வார்த்தை அது..
...
நீ எனைப் பிரிந்ததை -ஒரு
கடிதமாக எழுதுகிறாய் - நான்
உனைப் பிரிந்ததை - ஒரு
புத்தகமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்..
ஆனாலும்
உன் கடிதமே ஜெயிக்கிறது..
புரிந்து கொள்ளுதலைத்
தாண்டிய எழுத்து அது..
நம் காதலுக்கு - மட்டுமே
அது புரியும்..
ஒரு வேளை
நம் குழந்தைக்கும் கூட....
...
உன் கண்ணீர்த்துளி ஏன்
என் முத்தத்துடன் போட்டி போடுகிறது ?
முத்தத்தின் முடிவிலும் கண்ணீர் விடுகிறாய்..
கண்ணீரின் முடிவிலும் முத்தம் கேட்கிறாய்?
இது தான் உன் விழி ஈர்ப்பு விசையா??
என் கவிதையின் முடிவில்
கண்ணீர் விடாதே..
கவிதையை முடிப்பதா?
இல்லை உன் கண்ணீரை முடிப்பதா?
என் கவிதை
உன்னைக் காதலிக்கிறது...
எனக்குத் தெரியாமல்..
...
பொய்யாக நீ சொல்லும்
ஒவ்வொரு பொய்யும்
என் சிரிப்பின் விதை..
என் உயிர்ப்பின் விதை..
என் கவிதையின் அலங்காரம்..
நம் குழந்தையின் திருஷ்டிப் பொட்டு ..
என் கவிதையின் பொய்..
உன் கள்ளக் கோவத்தின் விதை..
உன் கடைசி முறைத்தலின் விதை.
..
அடிக்கடி
இப்படி என் கவிதையை
முடிக்கவிடாமல்
பாதியிலேயே போய்விடுகிறாய்
கண்ணம்மா..
அடுத்த கவிதையின்
ஆரம்பத்தில் சந்திக்கிறேன்.
...