Tuesday, October 18, 2011

பச்சை மரம் (தொடர்ச்சி 2)

மீசை முறுக்கும்
ஆசை மாமனுக்கு
ஓசையின்றி
கஞ்சிக் கலயம்
சுமந்து வரும்
கருவாச்சி!
கேழ்வரகுக் கஞ்சியும்
கேப்பைக் கிழங்கும்
இடையிடையே தொட்டுக்க
இடையாம்புளியும்
" ஏய் புள்ள
கொஞ்சூண்டு
குடி புள்ள !"
"வேணாம் மாமா
நீ குடி !"
"இந்தா,
அப்புறம் உனக்கு
தாலி கட்ட மாட்டேன் !"
"அச்சச்சோ !
வேற யாரு
பொறந்திருக்கா
என் மாமனை
கட்டிக்க !"
...
"வெத்தல
கொண்டாந்தியா புள்ள ?"
"அய்யய்யோ
மறந்துட்டேனே !"
"அதோ
வச்சிருக்கியே .."
"எங்க மாமா ?"
"அதோ
வச்சிருக்கியே...."
....
"விடு மாமா
வூட்டுக்குப் போனும்
ஆத்தா வையும் !
...

இதையெல்லாம் பார்த்து
பருவப் பூ பூத்து
காத்துக் கிடக்கிறாள்
பச்சை மரக் கன்னி!
வந்து விட்டான்
வருணன் !
பசலை சுரந்த
உன் மார்பு - இனி
பால் சுரக்கட்டும்
வந்து விட்டான்
வருணன் !
...
..
முன்பொரு நாள்
வாயும் வயிறுமாய்
ஒரு நாய் !
ஒரே பிரசவத்தில்
எட்டு குட்டிகள்
எட்டும் சேர்ந்து
மெட்டுப் போட்டு
ஏழு ஸ்வரத்தில்
'வீல்! வீல் ! என
சாம்பல் நிறம்
சாந்து நிறம்
என்றில்லாது
தாய் நிறத்திலேயே
சேய்கள்!
மடி தேடி
படிப்படியாய்
அடியெடுக்கும்
பொடிகள் !
நொடிப் பொழுதில்
மடிந்து வீழ்ந்தது
கடைக்குட்டி!
கரு செய்து
உரு செய்த
கருப்பை
இரைப்பை ஆனது!
தாயின் வாயில்
சொர்க்க வாயில்!
அடுத்த நொடி
சிதறிய
ஒரு துளி கண்ணீர்!
அதன் சோகம்
இவளுக்குத் தெரியும் !
'கருவில் பிறந்த
கற்பக விருட்சம் தானே
இவளும்!'
பெண் மனது
பெண்ணுக்குத்தானே தெரியும்!
மிச்சமுள்ள
சப்த நாடிகளையும்
ருசி பார்க்க
பசியோடு காத்திருக்கும்
பருந்து!
கிளையோடு கிளையாக
உரசி
காட்டுத் தீயாக
உருமாறி
ஏழு ஸ்வரங்களை
காப்பாற்ற
முயன்றாள் - இப்
பச்சை மரக்கன்னி!
புல்லாங்குழலாக மாறி
ஏழு ஸ்வரம் காத்த
இவளுக்கு
விறகாக மாறி
ஏழு ஸ்வரம் காப்பது
பெருசா என்ன ?
...
காதலி
கண்ணகியாக
மாறக்கண்டு
வந்துவிட்டான் வருணன்!
கண்ணீர் தேசத்தை
தண்ணீர் தேசமாக
மாற்ற
வந்துவிட்டான் வருணன்!
பருந்தின் பசியும்
குட்டிகளின் நிசியும் - உணர்ச்சிப்
புயலுக்குப் பின்
அமைதியாக
அடங்கிப் போயின!
...
முன்பொரு நாள்
உன்
மஞ்சள் பூசிய பூக்கள்
வெட்கம் பூசி
சிவந்து போயிருந்தன!
வருடங்களைத் தொலைத்து
சோதிடம் பார்த்தே
சொத்துக்களைத் தொலைத்து
ஊர் வாய் அடைக்க
ஓர் வாய் சாப்பாடு போட
திருமண சாப்பாடு போட
காத்திருந்தே களைத்த
கண்ணம்மா!
உன்னைச்சுற்றி வந்து
அவள் சிந்திய
ஓர் துளி கண்ணீர் !
சிவந்து போன பூக்கள்
கருத்துப் போயின !
பெண் மனம்
பெண்ணுக்குத்தானே தெரியும் !
என்ன செய்வாய் நீ?
உனக்காக
வந்துவிட்டான் வருணன்!
சோகத்தோடு - அவன்
காமத்தைக் காப்பாற்று !
வந்துவிட்டான் வருணன்!
....

வருந்த வேண்டிய
நேரமெல்லாம்
வறண்ட பாலையின்
கள்ளியையும்
கரிசல் காட்டு
சுள்ளியையும்
நினைத்து
தேற்றிக்கொள்கிறாள்..
இவள் !
கள்ளியையும்
சுள்ளியையும்
உயிர்ப்பிக்க
ஆயுள் முழுதும்
மழை யாகம்
செய்யும்
பச்சைத் துறவி
இவள்!
.....
தேர் கொடுத்தவனை
விட்டுவிட்டு
உன்னைச் சுற்றி
படர்கிறதே
இந்தக்கொடி !
போன ஜென்மத்துப்
பாசமோ என்னவோ !
...
சமயத்தில் நீ
கலப்புத் திருமணமும்
செய்கிறாயே!
ஆலும் வேலும்
உன்னில்
ஐக்கியமாவது ஏனோ?
...
உன்னைத் தொடமுடியாமல்
தொலைந்து போன
மேகங்கள்
கருத்துப் போய்
கோபத்தில்
மின்னல் தெறிக்க
உனைச் சூழ்கின்றன பார்!
பாவம்
அவைகளுக்கு
எப்படித் தெரியும்!
உன்
வருணக் காதலனின்
வாடகை வாகனங்கள் தானே!
அவைகளுக்கு
எப்படித் தெரியும்!
உங்கள்
காதல் சுழற்சியில்தான்
பூமியே
சுழல்கிறது என்று!
...
உன்னுடைய
மகரந்தத் துகள்களை
நிலவிற்கு
அனுப்பி வையேன்!
மனிதன் போய்க்
குடியேற
கொஞ்சமாக
பச்சைப் பிரதேசங்களை
உருவாக்கு!
நிழலும் நீரும்
கொடுத்தவளுக்கு
நிலமும் நிஜமும்
கொடுக்கத் தெரியாதா
என்ன?
....
பசித்திருட்டையும்
பச்சைத் துரோகத்தையும்
பாகப் பிரிவினையையும்
பஞ்சாயத்து செய்யும்
நீதி தேவதை
நீ தானே!
...
பள்ளிக்கு அஞ்சும்
பால் மனம் மாறாப் பிஞ்சு!
உன்னிடம் மட்டும் தஞ்சம்!
பொன்வண்டு பிடித்தும்
புளியங்காய் கடித்தும்
ஊஞ்சல் கட்டி
வானத்தைப் பிடித்தும்
ஓரமாய் ஒதுங்கும்
வழுக்கைத்தலையில்
கிட்டிப்புல் அடித்தும்
"நீ அப்பா
நான் அம்மா" - என
கூட்டாக
கூட்டாஞ்சோறு வடித்தும்
சாமி சிலை
சாணியில் பிடித்து
பல்லக்கு எடுத்தும்
இடுப்பில் நிற்காத
வேட்டியும்
மார்பில் தங்காத
சேலையுமாய்
வேடம் பல தரித்தும்
'தத்தோம் தத்தோம்
தளாங்கு தக தத்தோம்' - என
பரத நாட்டியமும்
'தொந்தனத்தோம் என்று சொல்லியே '
வில்லுப் பாட்டும்
வளராத மீசையை
தளராத ஆசையுடன்
இங்கும் அங்குமாய்
முறுக்கி விட்டும்
'ஓ' வென்று அலறி
நாக்கை வளைத்து கடித்து
'நான்தான்டா மாடன் வந்துருக்கேன் !'
எனச்
சாராய பாட்டில்
பிடித்து நடித்தும்
பத்து பைசா
பிளிச்ச முட்டாய்க்கு
பாயும் புலியாகி
பல்லை உடைத்தும்
மழை பெய்து
சாயம் வெளுத்து
சிவப்புச் சூரியனாய்
விறைத்து நிற்கும்
அப்பா!
தினமும் இரவு
தூங்கிப் போன கன்னத்தில்
போதை முத்தம் வைக்கும்
அப்பா!
கோபத்தில் தருகின்ற
முதல் அடிக்கு
மாத்திரம் அழுது
குளத்தில் மூழ்கி - கண்ணீர்
குளத்தில் மூழ்கடித்த
ஆருயிர் தோழனுக்கு
அஞ்சலி செலுத்தி
ஓடி விட்ட நாட்கள்!
நீ
இழந்து விட்ட இலைகளாக!
மீண்டு வராமலே போகும்!
உனக்கென்ன
வந்துவிட்டான் வருணன்!
....

Monday, October 17, 2011

பச்சை மரம் (தொடர்ச்சி 1 )

கூட்டிக் கொடுத்தவனும்
காட்டிக் கொடுத்தவனும்
வேட்டியின்றி
அம்மணமாய் போகட்டும்
இப் பச்சை மரக் கன்னியின்
பின்னால்
பச்சையாக
ஒளிந்து போகட்டும்
ஒழிந்து போகட்டும்..

தாய்க்குப் பிறந்து - அத்
தாயை மறந்தவர்கள் - இப்
பச்சை மரக் கன்னியின்
கருணைக் கரங்களில்
பேயாகத் தொங்கட்டும்
தூக்கில்
பேயாகத் தொங்கட்டும்
விழுதுகளைத்
தொழுது வணங்கட்டும்
என்னோற்றாள்
கொல்!
தொழுது வணங்கட்டும்!
...
முன்பொரு நாள்
பச்சைக் கன்னியின்
உச்சித் தலையில்
நடந்தேறிய
காதல் காவியம்
துள்ளிக் குதித்து
கேட்டது ஆண் அணில்
"எப்போது காண்போம்
இன்னோர் ராமனை?"
சிரித்தது பெண் அணில்
"பொறுத்திரு !
இன்னோர் சீதை பிறக்கட்டும் ,
பொறுத்திரு!"
மூன்று அடிகளால்
உலகை அளந்தவனும்
பதில் சொல்ல முடியாமல்
பாற்கடலில்
ஒளிந்து கொண்டிருக்கிறான்!
மூன்று வரிகளை
முதுகில் சுமந்து
காத்திருக்கின்றன
அணில் முனிகள் !
..
முன்பொரு நாள்
பச்சைக் கன்னிக்கு
ஓர் இச்சை !
கொஞ்சம்
நடந்து பார்க்கலாமா என்று
முயன்று பார்த்தது
முடியவில்லை!
தென்றல் தங்கையை
தூது விட்டு
சூறாவளிச் சகோதரனை
வரச் சொல்வோமா ?
பெயர்த்துக் கொண்டு போகட்டும்
பறந்து பார்க்கலாம் !
முயன்று பார்த்தது
முடியவில்லை !
சாமி குத்தம்
ஆயிடும்
கம்பீரமாய் கர்ஜித்தது
இவள்
காலடியில்
காப்பாய் நின்ற
கருப்பசாமி வீச்சருவா !
...
...
மழை முத்தத்தில்
நனைந்து போனது
பச்சைக்கன்னியின்
கச்சைத் துணி !
பிழிந்து காயப் போட
பக்கத்து வயல் வெளியில்
படர விட்டாள் ..
இருட்டும் முன்
காய்ந்து விடு
இல்லையெனில்
சூரியக் காவலனை
உளவு பார்க்கும்
நிலவு மகன்
உன் கற்பைக்
களவு செய்வான் !
இருட்டும் முன்
காய்ந்து விடு !
உன்
ஆபாச மேனியின் அழகு
நிலமகன்களுக்கு தெரியாது
நிலவு மகனுக்குத் தெரியும்
அதோ
உன் கச்சைத் துணி
நுனியில்
ஒளிந்திருக்கும்
வயற்காவலனைப் பார்
பெயர்
சோளக்கொல்லை பொம்மை
வயது
வயதுக்கு வராத வயது!
அவன்
கைகளை நீட்டி
அழுவது ஏன் தெரியுமா ?
ஒரு முறையேனும்
உன் கச்சைத்துணியை
உன் கொசுவத்தில்
சொருகிப் பார்க்க
வேண்டுமாம்!
பார்த்துப் பத்திரமாக இரு!
பஞ்சும் நெருப்பும்
பத்திக் கொள்ளப் போகிறது !
நாற்று நடுதல் முதல்
அறுவடை வரை
நெற்கதிர் போலவே
வளைந்திருக்கும்
கருப்புத் தமிழச்சிகளின்
இறுகிய இடுப்புகளுக்கு
காவல்
இவன்தான் !

பச்சை மரம் (தொடக்கம் )

வருடங்களாய்
வராத வருணன்
வந்து விட்டான்!
வாடிப்போய்
வற்றிப்போய்
வதங்கிப் போன
வயதுக்கு வந்த கன்னி!
பச்சை மரக் கன்னி !
அடக்கி வைத்த
அத்தனைக் காதலையும்
மொத்தமாய்
முத்தமாய்
பச்சைக்கன்னியின்
சிவப்பு இதயம் நோக்கி
தூது விட்டிருக்கிறான்
வருடங்களாய்
வராத வருணன்!

முதற்காற்றும்
முதல் சொட்டு பாலும்
முதல் அழுகையின்
முதல் மருந்து!
முதல் சொட்டு மழையுந்தான்!
பட்டவுடன்
சட்டென
உயிர்பெற்றாள்
பச்சை மரக்கன்னி!

தலைமுறைகளைக் கடந்தும்
தலை குனிந்து நிற்கும்
இவளின் மௌனம் !
எத்தனை தலைகள்
தருதலைகளாயின
எத்தனை தலைகள்
இருதலைக் கொல்லிகளாயின
இவளைக் கடந்து சென்ற
அத்தனை தலைகளும்
தங்கள் தலைவிதிகளை
இவள் காலடியில்
சமர்ப்பித்தே சென்றிருக்கும் !

எத்தனையோ சேலைகள்
கைநீட்டி வரவேற்று
தொட்டிலாக்கி
தாலாட்டு பாடுவாள்
பக்குவமாய்
பழுத்த இலைகளை
தன்
அழுத்த இதழ்களாய்
அனுப்பி
முத்தமிட்டு தூங்க வைப்பாள் ..
காய்த்துப் போன
எத்தனையோ
கைவளை கரங்களுக்கு
இவள்
ஓய்வு கொடுப்பாள் ..

காணாமல் போனவனும்
கடன் வாங்கிப் போனவனும்
கற்பை விற்றவளும்
கஞ்சிக்கு வழியற்றவளும்
மரத்துப்போய்
மரித்துப் போவது
இவள்
வேர்க் கொலுசுகளில்தான் ...
சமயத்தில்
கயிற்றுத்தாலியில் தொங்கும்
மணப்பெண்
பிணப்பெண்!

வாழ்கை வெறுத்தவர்களும்
வேரறுக்கப்பட்டவர்களும்
வேறு வழியின்றி
மாறு வழியாக
தம்மையே கொல்ல
தனியாக வரும்போது
உதவிக்கரமாக
தன் கிளை நீட்டி
தற்கொலைக்கு உதவுவாள் ..
இக்கொலைகளின் பாவம்தான்
பட்டுப் போய் கிடக்கிறாள்
ஊருக்கு வெளியே
வந்துவிட்டான் வருணன் ...

முன்பொரு நாள்
மூவேட்டும்
ஈரெட்டும்
கும்மிருட்டில்
சீர்கெட்டுப் போனதும்
ஊர்விட்டுப் போனதும்
இவள் காட்டிய
பச்சைக் கொடியில்தான்..
வண்ணமாய்ப் பிறந்துவிட்டு
வருந்துகிறாள் இப்போது ...

பிள்ளை யாருக்கும்
இல்லையெனில்
நூற்றி எட்டு
சுற்று சுற்றி
தொட்டில்கட்டி
புழு பூச்சி பிறக்கும்!
என்ன ஆச்சு
பிள்ளையாருக்கு
இவள்
காலடியிலேயே
காத்திருக்கிறார் ..

மறைந்திருந்து பார்க்கும்
மர்மங்கள் எல்லாம்
இவள்
முதுகுப் புறத்தில்தான் !
நீராடும்
கோபியர்களின்
கண்ணன்கள்
இவள்
முதுகுப் புறத்தில்தான் ...

இவளில்
தேடிக் கொணர்ந்து
பாரதி வைத்த
அக்கினிக் குஞ்சு
இவளால்
கண்மூடி உணர்ந்து
போதி வந்த
புத்தனைப் போய்ச்
சேர்ந்தது..

இவள்
சுவாசம் உணர்ந்த
விஞ்ஞானியும்
இவளுடன்
சேர்ந்தே சுவாசித்தான் ..
இவள்
கால்களைத் தன்னோடு
அணைத்துக் கொள்ளும்
புவியீர்ப்பின்
வாசம் உணர்ந்த
விஞ்ஞானியும்
இவளுடன்
சேர்ந்தே வாசித்தான் ..
பச்சைப் புடவை
அறிவியல் ஆசிரியை
இவள் ..

நடை வண்டியாக
இவள்
இன்னோர் தாய் !
விரல் பிடித்து
ஓட்டி விட்டாள்
உரல் இடித்து
ஊட்டி விட்டாள்
ஏணியாக
ஏற்றி விட்டாள்
தோணியாக - கரை
ஏற்றி விட்டாள்
திராணியற்று
விழும்போதும்
கட்டிலாக
தட்டிக் கொடுத்தாள்
கட்டில்களில் விளைந்த
தொட்டில்களையும்
ஆட்டிவிட்டாள்..
இறந்துபடுகின்ற
பிறந்த உயிர்கள்
நன்றி மறந்து போயினும்
இறுதி வரை
கூட வரும்
ஒரே பெண் இவள்
இன்னோர் தாய்..

கருப்பு காக்கை
கூட்டில்
கருப்பும் இன்றி
மறுப்பும் இன்றி
மற்றோர் பிறப்பு !
பறவை பிடிக்கும்
மனிதனுக்கு
பறவை படிக்கத்
தெரியாது
விருந்தோம்பலில்
தமிழனுக்குத் தாத்தா - இந்தக்
கறுப்புக் காக்கா ..
கருப்பு முடி வெட்டும்
கந்தசாமியும்
வெள்ளை நுரையில்
கண்ணாடி பார்க்கும்
வெற்றிலைப் பண்ணையாரும்
வைத்து வணங்கட்டும்
இக் கறுப்புக் காக்கா
நிழற்படத்தை !
நிழலைப் போல
நிழற்படமும்
கருப்பு தான் ..

Friday, October 14, 2011

தொடரும் ..

நண்பர்களே
தேவதைக்கு தந்த முத்தம் தொடக்கம் முதல் தொடர்ச்சி 1 2 3 4 5 6 மற்றும் முடிவு வரை தொடர்ச்சியாகப் படிக்கவும்.. (இவை தலை கீழ் வரிசையில் உள்ளன )..பகுதி பகுதியாக டைப் செய்வது எனக்கு எளிதாகிறது ...
விரைவில் மற்ற நெடுங்கவிதைகள் ...

தேவதைக்கு தந்த முத்தம் ..(முடிவு)

நிலவை
கருமேகம் மறைத்தால்
பொறுத்துக் கொள்வேன்
மழை வருமென்று!
அமாவாசையை கூட
புது நிலவின்
பிறவிக்காக
பொறுத்துக் கொள்வேன் !
வெறும்
தேய்பிறையாகவே
நிலவு நீடித்தால்
என்ன செய்வது?
நிலவுக் காவலனோ
உலகையே
விலைக்கு வாங்க
கிளம்பிவிட்டான் ..
..
தங்கத்தையே
உரசிப்பார்ப்பவர்கள்
நிலவை
விட்டு வைப்பார்களா என்ன ?
போட்டு வைத்த
பாதையில் தானே
நிலவு சுற்றியாக வேண்டும் ..
அப்போதுதானே
சூரியக் குடும்பத்தில் இடம்...
..
என் நிலவும்
சங்கிலியால் கட்டப்பட்டது ...
வேக வைத்து
வெந்து போவதும்
ஒப்புரவு செய்து
ஒடுங்கிப் போவதும்
ஊருக்காக சிரிப்பதும்
உள்ளுக்குள் சிணுங்குவதும்தான்
திருமண வாழ்வா ?
..
என் நினைவு
அவளை வாட்டுமா
என்றெல்லாம் யோசனை ..
ஆமாமா ..
அவளைப் பற்றி
நினைக்கவே
நேரமில்லையாம் ..
அங்கே
அடைகாக்கும்
இயந்திரமாகத்தான்
இதுவரை இருக்கிறாள்..
....
மறுமுறை பார்த்தேன்!
மாற்றான் மனைவி
என்றெல்லாம் தோணவில்லை ..
நிலா
ஒளியிழந்து
உலர்ந்துபோயிருந்தாள்!
தேவதையாகப் பார்த்தவள்
தேய்ந்து போகக் காண்பது
கொடுமை!
மறைவாகச் சிரித்தாள் ..
அப்போதும்
கண்களில் கேள்வி!
என்ன பதில் ?
எங்கே போய்
நானும் கூற ?
...
..
தொலைபேசி ..
தாழ்வான குரல்..
இனிப்புச் செய்தி !
நிலவு
சூல்கொண்டது ..
என்னிடம்தான்
முதலில் சொன்னாளாம்!
"வாழ்க்கை எப்படி?" என்றேன்,
"வியாபாரக் காந்தத்திற்கு
வாழ்க்கைப்பட்ட
விலைமகள் நான் !" - என
சொல்லாமல் சொல்லிப்போனாள் ..
சந்தோசம் கண் நிறைக்க
துக்கம் தொண்டை அடைத்தது ...
அவள்
குரலை மட்டும்
அணைத்துக் கொண்டேன்!
..
அவள்
வயிறு வளர - என்
வாழ்த்துக்களைத்
தூது அனுப்பியிருந்தேன்
சில காலம்!
நிறை மாத நிலவு
அதன் அழகு
அற்புதம்!
வார்த்தைகளில் அடங்காத
வசன கவிதை!
..
..
"என் குழந்தை
உங்களை
எப்பிடிக் கூப்பிடணும்?"
அழகாய் கேட்டாள்..
"மாமா வேண்டாம் ,
பேர் சொல்லிக்
கூப்பிடச் சொல்லு !"
"ஆமா,
உன் குழந்தைக்கு
என் பேரு வைக்கப் போறியா? "
"இல்லப்பா !
தினசரி கூப்பிட
யாரால முடியும்!"
"சீக்கிரமா
பெத்துப்போடு
கொஞ்சிட்டுத் திரியுறேன் !"
"ஒரு வாரம்
பொறுத்துக்கோங்க
ரெண்டு நிலா
புடிச்சுத் தாரேன் "
ஆமா!
நிலாவுக்கு
ரெட்டைப்புள்ளைங்க..
அவள்
இரண்டு கண்களிலும்
தவமிருந்தன போலும்!
ஆண் ஒன்றும்
பெண் ஒன்றும்
என் கையில்!
நீண்ட நாள் கழித்து
நீர் சொரிந்தன
என் கண்கள்!
சொல்வதெல்லாம்
சொல்லிவிட்டு
என் பெயரில்
எழுத்துக்களை
குலுக்கிப்போட்டு
குட்டி நிலவிற்கு ,
பெண் நிலவிற்கு
பெயர் வைத்திருக்கிறாள் ...
இந்த ரகசியம்
எங்களுக்கு மட்டுமே தெரியும்!
...
இன்று
தாயுடன்
அதிகம் பேசுகிறாளாம் ..
தொலை பேசித் தடை..
அவளுக்கான ஆறுதல்
என் தினசரி " குட் மார்னிங் "
இப்போது
அதுவும் இல்லை..
ஒரு குழந்தை தொட்டிலில் ..
ஒரு குழந்தை கட்டிலில் ..
இவள் மட்டும் சமையல்கட்டில் !
இதெல்லாம் காணும்போது
"எங்கள் காதல்
காமத்துடனே இருந்திருக்கலாமோ ,
நிலவு நிலவாகவே இருந்திருக்குமோ ?"
என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது!
...
..
இன்னும்
"இவள் இன்புற்றிருப்பது
சாத்தியமோ ?,
உலகம்
நிஜமான பௌர்ணமியை
காண முடியுமோ ?
நிலவுக் காவலன்
உயிர் பெற்று வருவானோ?"
கேள்விகளுடன் முடிக்கிறேன்..
...
..
ஒன்று மட்டும் நிச்சயம் ..
இதுமட்டும் படித்திருந்து
எம் காதல் குறித்து
கேள்விக் கணைகளுடன்
காத்திருப்போரே!
கேளீர் !
எத்தனை குற்றச்சாட்டுகளோ
எத்தனை வசைகளோ
அத்தனையும்
எனக்கே அனுப்புங்கள் ..
துணிந்து ஏற்றுக்கொள்கிறேன் ..
ஏற்கெனவே
உடைந்துபோன
என்னுடைய நிலாவை
உங்கள்
குற்றப்பார்வை
குத்தாமல் இருக்கட்டும்!
அவள்
வெள்ளை முகம்!
கறை படாமல்
ஜொலிக்கட்டும்
.....
காதலை
காதலாக மட்டுமே
காத்தவர்கள் நாங்கள் ..
எங்கள் அகராதி
ஒரு சிலருக்கு
மட்டுமே விளங்கும்!
காற்றின்
ஒவ்வொரு இழையையும்
காதலாக மாற்றுபவர்களுக்கே
புரியும்!
சரி! சரி!
இன்று
மூன்றாம் பிறை !!
நானும் என் நிலவும்
நடுநிசி நோக்கி!!!
--சுஷில் குமார் பாரதி
(10-04-2010)