Wednesday, October 31, 2012

நூல் பொம்மை (முடிவு)


தாமரை
ஓய்வு பெறுவதற்கு முன்
பிரம்மா செய்த
ஒப்பற்ற காவியம்...
இவளுக்குப் பிறகு
இவ்வுலகில்
அழகு இருக்காது!
தாமரையை தரிசித்தவர்களுக்கு
அமாவாசை கிடையாது!
நிலவிலிருந்து பார்த்தால்
தாமரை
இன்னுமோர் நிலவு!
தாமரை பிறந்தபோது
அவள் அழகோடு
தானும் சேர்ந்துவிட
துடியாய் துடித்தாள்
தாமரைக்காரி!
இன்றும்
நாவில் ஏறி
நல்லவை பேச
நாளும் காத்திருக்கிறாள்
தாமரைக்காரி!
..
தாமரைத் திருக்கரங்களைத்
தழுவப் பாற்கடலில்
திருமாலுடன்
தவம் இருக்கிறாள்
இன்னொருத்தி!
...
தாமரைப் பாதம்
படுகின்ற போதெல்லாம்
பூமித்தாய் கொஞ்சம்
புல்லரித்துப் போகிறாள் ..
பொறுமையில்
தன்னை மிஞ்சியவளைப்
பார்த்து
பொறாமையும் கொள்கிறாள்...
...
கமலம்
கனவுகளுடன்
கல்லூரியில்
காலெடுத்து வைத்தாள்
காத்திருந்தன
காதல் கடிதங்கள் ..
“கண்மணி அன்போடு,
கண்ணே கலைமானே..”
என
வகை வகையாய்
வாலிபர்கள் வலைவீச
எவனையும் கண்டுக்காம
கருமமேனு கடந்துபோனா ..
தலைசாய்த்து அழுவதற்கு
தரமான தோளும் இல்ல ..
கைப்பிடித்து கடைத்தேற்ற
கண்ணியமா யாரும் வல்ல..
பொதச்சி வச்ச ரகசியத்த
பொலம்பித் தீக்க வேணுமுன்னு
பக்கத்து வீட்டு
குழந்தை கிட்ட
பாட்டி போல
பேசி நிப்பா!
வழித்துணைக்கு யாருமில்ல
வாய்த்துணைக்கும் வசதியில்ல ...
வாழ்க்கை பூரா
இப்படியானு
வருத்தத்தோட வாடி நிப்பா !
...
வாய் நீண்ட அம்மாக்காரி
கைநீட்டி காசுவாங்கி
ஊரெல்லாம் மலைபோல
கடனத்தான் ஏத்தி வச்சா!
வட்டி வாங்க வந்தவனெல்லாம்
“குட்டி என்ன பண்ணுது” னு
வெத்தல மாத்த
வெல வச்சான்
ஆட்டம் போட்ட அம்மாக்காரி
அடங்கி நிக்க மாட்டானு
அப்பாகிட்ட போயி நின்னா
அவருங்கூட அசையவில்ல..
...
பக்கத்து தெரு பண்ணையாரு
பெத்ததெல்லாம் ஒண்ணே ஒண்ணு
பாதை மாறிப் போச்சுதேன்னு
பரிதவிச்சு நின்னாரு..
படியேறி உள்ளே வந்து
பல்லிளிச்சு பந்திபோட
பக்குவமா பதுங்கினாரு ..
“பொத்தி பொத்தி வளத்தேம்மா
புத்தி கெட்டுப் போயிட்டான்,
பெருசா ஒண்ணும்
குடிக்கமாட்டான்
மாசத்துக்கு ரெண்டுவாட்டி
மத்தபடி நல்லபையன்
சேர்ந்ததுதான் கொஞ்சம் மோசம்!
பத்மத்தை கொடுத்தியின்னா
பொறுப்பு வந்து பாத்துக்குவான்..
பத்து வீடு வச்சிருக்கேன்
புஞ்ச நஞ்ச எக்கச்சக்கம்
விளக்கேத்த அனுப்பி வையி
மகாராணி நல்லாருப்பா!
..
..
கல்லூரி கவிதைப்போட்டி
முதல் பரிசு தாமரைக்கு !
என்னத்த எழுதியிருப்பா?
தன் எண்ணத்த எழுதியிருப்பா..
வாழ்கையில முதல்முறையா
வெற்றிபெற்று வீடுவந்தா
“வாடி என் மகராசி !
வாழ்க்கையொண்ணு வந்திருக்கு
வேணாமுன்னு சொல்லாதடி
வசதியான குடும்பமடி!
கைதட்டுனா வேலைக்காரன்
கால் அமுக்க வேலைக்காரி
நீ ஏதும் செய்யவேணாம்
கழுத்தமட்டும் நீட்டு தாயி!
கண்டவன கட்டிக்கிட்டு
காணாதேசம் போறதுக்கு
கிணத்துத் தவள வந்திருக்கான்
கூடவே நானிருக்கேன்!
...
சம்மதம் ஏதும் கேக்காம
சமயம் பாத்து சாச்சுப்புட்டா ..
நாளைக்கே நிச்சயமுன்னு
நாள்குறிச்சும் வச்சுப்புட்டா..
வாயிருந்தும் ஊமையானா
வசந்தமுல்லை வாடி நின்னா !
...
ராப்பகலா அழுதுபாத்தா
ராட்சசியோ இரங்கவில்ல
பணத்தாச புடிச்ச பேய்
பாசத்தையே பணயம் வச்சா
“புருசனாச்சும் புடிச்சமாரி
அமையணும்னு அம்மனுக்கு
விரதமெல்லாம் இருந்தேனே
வீணாகப் போயிடுச்சே
விளக்கேத்த நானும் போனா
என் வாழ்க்கை இருண்டிடுமே !
பையன்
பொறுக்கியின்னு கேள்விப்பட்டேன்
பொறுத்துக்கிட்டு எங்க போக?
கூண்டுக்கிளி என்னைக்கொண்டு
குரங்குகிட்ட குடுக்கிறியே
குலச்சாமி கோயிலுக்கு
என்னை
பலியாகக் குடுத்திருடீ ...
..
தெருவெல்லாம் தம்பட்டம்
திருமணமோ அடுத்த வாரம்
ஒண்ணுஞ்செய்ய முடியாம
ஒடஞ்சிபோனா தாமரையும்
பொறாமைல பல பேரும்
பரிதாபத்தோட சில பேரும்
புரளி பேசி திரிஞ்சிருக்க
பொட்டப்புள்ள பட்டுப்போனா..
...
கல்யாண போட்டோவுல
கொஞ்சங்கூட சிரிக்கவில்ல
கழுத்துத்தாலி ஏறும்போது
அறியாம அழுதுப்புட்டா ..
“அம்மாவப் பிரியணும்னு
அழாதேம்மா பாத்துக்கலாம் !”
சும்மாவாச்சும் சொல்லிவச்சான்
அசடு வழிஞ்சு அப்பாக்காரன்...
...
“பொம்பளையா பொறந்ததுக்கு
பொதிமாடா பொறந்திருப்பேன்
பொத்திப்பொத்தி
நான் வளர்த்த
பெருங்கனவு பொசுங்கிப்போச்சே ...
பஞ்சுமிட்டாய் வாங்கித்தாம்மா ,
பல்லெல்லாம் பாழாப்போகும் !
பட்டுப்பாவாட வாங்கித்தாம்மா,
பழசானா விட்டுப்போகும்,
படுத்துக்க கூட வாம்மா,
புருசன்காரன் வருவான் போடி!
பூச்சாண்டி போலிருக்கான்
பயமாத்தான் இருக்குதும்மா!
கண்ணமூடி சகிச்சுக்கோடி
‘கள்ளா’னாலும் கணவனாக்கும்
பக்கம் வந்தா கள்ளு வாடை
பொறுத்துக்க முடியலம்மா
பத்தி கொழுத்தி வச்சுக்கோடி
புல்லானாலும் புருசனாக்கும் !
பச்சையாப் பேசுறாம்மா
பல்லெல்லாம் கூசுதும்மா
பதில் பேச வேணாண்டி
படிக்காத பயதாண்டி !
நடுவீட்ல உக்காந்து
நீலப்படம் பாக்குறாம்மா
நானும்போயி இருக்கணுமாம்
நா கூசாம கூப்பிடுறான்..
எதுக்கும்மா என்ன பெத்த ?
இத்தனையும் பாக்கதுக்கா?
கரைச்சிருக்கக் கூடாதா
கருவாக இருக்கும்போதே ?
...
மகன் செய்யும் தப்பையெல்லாம்
மாமியாரு மன்னிக்கிறா!
மனைவியா நான் மட்டும்
மூச்சுமுட்டி முயங்கிக்கெடக்கேன்...
பத்துப்பாத்திரம் பூசிவச்சு
பல வகையா சமைச்சுவச்சு
ஒட்டுமொத்த அழுக்கையும்
ஓயாது துவைச்சுவச்சு
மாமியாரு கால் அமுக்கி
மத்தியானம் தூங்கவைப்பேன் ...
மாமனாரு நல்லவரு
“மருமகளே சாப்டியா”னு  
ஆறுதலா கேட்பாரு
அப்பா நெனப்பு
வந்துநிக்கும்...
பகலெல்லாம் வேலைக்காரி
படுத்துக்க வீட்டுக்காரி
இதுதாம்மா எம்பொழப்பு ..
வேறென்ன நானுஞ்சொல்ல?
...
ஒரு நாளு இப்படித்தான்
ஊருறங்கும் வேளையில
போதையில காளை வந்தான்..
பொத்திவச்ச பூவப்போல
தூங்கிப்போன தாமரைய
தூக்கிப்போட்டு மிதிச்சுப்புட்டான் ...
“வாய் தொறந்தா
கொன்னுருவேன்”னு
வந்ததெல்லாம் உளறி நின்னான்
வாங்கிவந்த பாட்டிலத்தான்
வயிறுமுட்ட ஊத்திக்கிட்டு
ஆடையின்றி வாடியின்னு
அருவறுப்பா ஆடி நின்னான்..
சொன்னதெல்லாம் செஞ்சுப்புட்டு
சிவனேன்னு படுத்திருந்தா...
பத்துப் பதினஞ்சு சிகரெட்டு
அத்தனையும் பத்தவச்சு
பூமேல பொட்டுவச்சான்
பொக்களமா பொத்துவச்சான்
புள்ளிமான் மேனியில
கொள்ளியால புள்ளிவச்சான் ..
‘அம்மா’னு கத்தக்கூட
அவமானமா இருந்துச்சு!
ஆண்டவன வேண்டிக்கிட்டு
அலுங்காம படுத்திருந்தா!
மோகத்தையும் தீத்துக்க
மிருகமா பாய்ஞ்சு வந்தான்
அடிமையாகி அழுதுகிடந்தா
அத்தனையும் தாங்கிக்கிடந்தா ..
உச்சக்கட்ட வேளையில
உயிர்போறத உணரும்போது
தாரத்த மறந்துப்புட்டு
வேறொருத்தி பேரச்சொன்னான்
தூக்கிவாரிப் போட்டுச்சு
தலை கெறங்கி இருட்டிச்சு!
..
“ஏகபத்தினி விரதன்னு
எல்லாத்தையும் ஏத்துக்கிட்டேன் ..
ஏமாந்து போயிட்டேனோ ?
என்ன செய்வேன்?
ஏது செய்வேன்?
புயலடிச்சு போயிடுச்சே
பொதஞ்சிபோன பூவானேன்!
கரைசேர நாம்புடிச்ச
கட்டுமரம் ஓட்டையாச்சே
இதுக்கு மேல தாங்காது
என்னுசிர எடு சாமி
தாலியத்தான் கழத்திப்புட்டு  
தூக்குலதான் தொங்கப்போறேன் ..
...
..
புருஷன்காரன் தூங்கினதும்
புதுப்பொண்ணா அலங்கரிச்ச
முகூர்த்தப்பட்ட மூணாக்கி
உத்திரத்தில முடிச்சுபோட்டா
மூணுமுடிச்ச மாரியம்மன்
போட்டோவுல மாட்டிப்புட்டு
கடைசியா ஒரு முடிச்ச
கழுத்துலதான் மாட்டிக்கிட்டா...
...
கால் இடறித் தொங்கும் முன்னே
கண்ணமூடி ஒரு நிமிஷம்
கடவுளத்தான் நெனச்சுகிட்டு
கடந்ததெல்லாம் ஓட்டிப்பார்த்தா ..
..
அப்போ...
...
அதர்மத்த அழிச்சிட்டு
தருமத்த நிலைநாட்ட
கலியுகத்துக் கண்ணபிரான்
காகிதமாப் பொறந்துவந்தான் ..
எங்கிருந்தோ
எப்படியோ
பறந்து வந்த
பேப்பர் துண்டு
கமலத்துக் கண்ணுலதான்
முத்தமிட்டு நின்னுச்சு..
..
கடைசி தியானத்த
கலச்சிட்டு கண்திறந்து
காகிதத்த கையிலெடுத்தா..
கருப்பு மையில கவிதை ஒண்ணு...
..
“ஏழு முறை தோத்துப்போன
எட்டுக்கால் பூச்சி ஒண்ணு
எட்டாவதா கூடுகட்டி
எசமானன் ஆகிடுச்சி ...
..
ஏழையா இருந்தாலும்
ஏணியா நானிருக்கேன்
ஏறிப்போடி என் தாயி
ஊருலகம் ஏத்துக்கிடும் ..
..
பாடையில போறதுக்கா
புள்ளையின்னு நீ பொறந்த?
படிச்சுக்குடு என் தாயி – உனக்காக
பாரெல்லாம் காத்துக்கிடக்கு...
..
வழித்துணைக்கு வேணுமுன்னா
‘பாரதி’ய கூப்புட்டுக்கோ
புதுப்பொண்ணா நீயும் போடி
புரட்சி ஒண்ணு காத்துக்கிடக்கு..”
...
..
..
தாமரை தரையிறங்கி
தாழ்திறந்து தனியே போனா!
திரும்பிக்கூட பாக்காம
தீயாகத் திமிரா போனா!
...
...

சுஷில் குமார் பாரதி 27-03-2009