Tuesday, October 23, 2012

கண்ணம்மா நம் மௌனம் ...

துளித்துளியாக
சேர்ந்துகொண்ட இந்த
மௌனம் - அதன் ஊடே
இழையோடிக் கொண்டிருக்கும்
உன் மூச்சுக்காற்றின் இசை
விட்டு விட்டு
எனைப் பார்த்து
பரிசலோட்டும் உன் விழிகள்
கிறக்கமா இல்லை
உறக்கமா - என்ற
தெளிவிற்கு அப்பால் நான் ...
பதிலுக்காக காத்திருக்கும்
உன்
பழைய வினாக்கள்
அவை சார்ந்த பதிவுகள்
மனம் இச்சை சபலம்
இவை தாண்டி வந்த நெருக்கம்
மீண்டும் தொடரும்
எல்லையற்ற உன் வினாக்கள்
தெரிந்தும் தெரியாமலும்
அவை விரும்பும்
என் நிலையில்லா நிலை ...
தெரியாமல் சொல்லிப்போன
புரியாத பதில்கள்
அதில் சிக்கிக் கொண்ட
உன்
சிரிப்பற்ற உன் முகம்
வெட்கத்தைத் தவிர்த்து
சிவந்து போகும் நொடிகள்
எனக்காக நீ
தியாகம் செய்த
உன் அபிமான வார்த்தைகள்
அவற்றின் அர்த்தம் தேடி
இன்னும் அலைந்துகொண்டிருக்கும்
அமைதியற்ற நான்...
இவற்றின் ஊடே
வந்து வந்து போகிறது
ஓர் நினைவு ..
நேற்றைய
நம் நீண்ட உரையாடலின்
நடுவே
வந்து மாட்டிக்கொண்ட
மௌனம்-அதன்
அழகு - அதன்
ஆழம் ..
இந்த மௌனத்தின் ஆழத்திலேயே
நான் மூச்சுத்திணறி
முடிந்து விடக்கூடாதா ?
...


No comments:

Post a Comment