Tuesday, October 29, 2013

மாயா

என் பெயர் மாயா
ஓர் காட்டுக் கொள்ளையனின்
காதலி நான்...
இதைச் சொல்லிச் சிரிக்கையில்
உலகின் அனைத்துப் பெண்களையும்
வென்றுவிட்ட திமிர்
என்னுள் தலை தூக்கத்தான் செய்கிறது..
எவர்க்கும் அடங்காத இவன் – என்
கடைக் கண் பார்வைக்கும்
அதனோடு சேர்ந்த
மெல்லிய மௌனத்திற்கும்
எப்படி அடங்கியிருக்கிறான் என்பது
எனக்கும் அவனுக்கும் கூட
தெரியாத, தெரிந்துகொள்ள விரும்பாத
உன்னத ரகசியம்...
..
இன்று, இந்த நொடி
உயிர் மீண்டு வருவானா
இல்லையா என்ற
பரிதவிப்போடு
அவன் சார்ந்த கடந்த கால
நிகழ்வுகளும் – அவற்றோடு
பின்னிப்பிணைந்த
என் வெட்கமும் சேர்ந்து
எனைப் பாடாய்ப் படுத்த
ஒரு நொடி புன்னகைத்தும்
மறு நொடி கண் கலங்கியும்
எங்கள் முதற் சந்திப்பை
பரிசளித்த இதோ
இந்த ஆலமரத்தடியில்
கன்னி காத்து காத்திருக்கிறேன்...
...
நான் தலை தூக்கிப் பார்த்த
உலகின் முதல் ஆண்மகன் இவன்..
அந்த நொடி,
என்னுள் ஏதோ ஆகியிருக்க
என்னவென்று குழம்பிப் போய்
நான் உறைந்து நிற்க,
தன் பிறப்பையும் வாழ்வையும்
அதற்குக் காரணமான
அத்தனையும் வெறுத்து
உக்கிரத்தின் உச்சத்தில்
தலைகுனிந்து நின்றிருந்தான்...
...
கானக ராஜனின்
அதிசய பொக்கிஷத்தை
களவு செய்யப் போய்
கடைசி நொடியில்
திரை மறைவில் நின்று
கறுப்புத் துணியில் கண் கட்டி
கண்ணாமூச்சி ஆடியிருந்த
கன்னியின் கீச்சுக் குரலில்
தடுமாறி நின்றான்..
விதி அவளைத் தடுக்கி
இவன் மேல் விழச் செய்ய,
மூவுலகைத் தாண்டிப் போய்
யாரும் பார்த்திரா பூக்களின்
வாசத்தில் விழுந்திருக்கிறான்..
விழித்தெழுந்தபோது
வதைக்கப் படுதலின்
உச்சகட்ட வலியில் இருந்தபோதும்
இவன் கண்கள்
அக்கன்னியின் கடைசி ஸ்பரிசத்தை
தேடித் தவிக்க,
ஒய்யாரப் பல்லக்கில் வந்து
இவனைச் சிரச் சேதம்
செய்யச் சொல்லி
சூழ்ச்சிச் சிரிப்பில்
சேதி சொல்லிப் போனாள் அவள் ..
ஏதும் புரியாமல்
பிணைக்கப்பட்ட சங்கிலிகளின்
ஏளனத்தோடு எடை கூட்டி
கடைசி ஆசைக்கு
தரை பார்த்து
துணிந்திருந்தான் இவன்...
...
தூக்கிலிடுவதற்குத்  துணையாக
வசை பொழிந்து
மண் வாரி இறைத்திருந்தனர்
இவனது களவில்
உடல், பொருள் , உள்ளம்
இழந்தவர்கள்...
கறுப்புத் துணி மூட
கடைசித் துளி இரக்கத்தோடு
வீரன் ஒருவன் முன்னேற,
மெதுவாக தலைதூக்கி
‘மாயா’ என்றான்..
அந்தச் சொல்
என் காதுகளை மட்டுமே எட்டியது..
அடுத்த நொடி
என் கண்களும்
அவன் கண்களும்
எங்களின் புரியாத
முந்தைய உறவின்
முடிச்சுகளை அவிழ்த்தெறிந்து
மூர்க்கமாக சங்கமித்தன...
திடீரென,
அசைவற்ற ஆலமரம்
புயலென ஆர்ப்பரிக்க,
புதைந்து கிடந்த வீரமனைத்தும்
புழுதியாய் சுழற்றியடிக்க,
ஆழிப் பேரலையாய்
காட்டாறு பொங்கியெழ ,
கட்டவிழ்த்து கம்பீரமாய்,
என் கை பிடித்து நின்றிருந்தான்
இவன்..
...
நேற்றைய நள்ளிரவில்
எனக்குத் தெரியாதென எண்ணி
என் பிறந்தநாளுக்குப் பரிசளிக்க
எவரும் கண்டிராத
மிதக்கும் தீவின்
மஞ்சள் மலர் தேடிப்
போயிருக்கிறான்...
..
இவன் உயிர்மீண்டு
வருவானா இல்லையா – என்ற
பரிதவிப்போடு
பாதை பார்த்திருத்தல்
எனக்கு மட்டுமே
கிடைத்த சுகம்...
...
இவன் வந்து சேரும் வரை,
இனி வரும் சில நாட்கள்
இவனுக்கும் எனக்குமான
இயல்பான இரகசியங்களை
இவ்வுலகிற்குப் பகிர்ந்திருக்கும்..
...