Saturday, May 11, 2013

ஒரு பாக்கட் நேர்மை பார்சல்!!!

                          "அவருக்கு மட்டும் சீட் குடுக்கறீங்க, எனக்கு ஏன் தர முடியாது ? என்ன பாத்தா எப்படி இருக்கு?"
                           "உன்னலாம் பாக்க முடியாது..உன் மூஞ்சி பாக்குற மாதிரி இல்ல..போ போ !"
                              டிக்கட் பரிசோதகருக்கும் ஒரு பயணிக்குமான இன்றைய பயணத்தின் உரையாடல் இது. ஒரு நேர்மையான அதிகாரியாக முதல் பார்வையிலேயே என்னுள் பதிந்து போயிருந்தார் அவர். மூன்றாம் வகுப்பு டிக்கட் எடுத்து கூடுதல் கட்டணம் கட்டி நான் இரண்டாம் வகுப்பு இருக்கை வாங்கி முடிக்கும்போது தான் இந்த சண்டை ஆரம்பித்தது.
                                பார்க்க முடியாத மூஞ்சிக் காரர் ஒரு காவல்துறை ஆய்வாளராம். அவர் தன் பதவி பற்றி கூறியும் டிக்கட் பரிசோதகர் அசரவில்லை. "நீ போலீஸ்-னா நான் சீட் தரணுமா? , போய் எங்க உக்காரணுமோ அங்க உக்காரு..."
                                ஆய்வாளர் செல் போன எடுத்து வீடியோ பிடிக்கிற மாதிரி நடிச்சார்.."நல்லா வீடியோ எடுத்து தினசரி பாரு, புத்தி வரும்..வேணும்னா என் போட்டோவ உன் வீட்டுல மாட்டி வச்சுக்கோ.."
                                ஆய்வாளர் வாய பொளந்துட்டார். "நான் இங்க தான் இருப்பேன் ..நீ என்ன பண்ணுற பாக்குறேன்.."
                                 எதுக்காக அந்த பரிசோதகருக்கு அவ்வளவு கோபம்? தன்னுடைய நேர்மைக்கு அங்கீகாரம் தேடுகிறாரா? இல்லை வளைந்து கொடுப்பதின் கேவலத்தை மற்றவருக்கு உணர்த்த முயல்கிறாரா? நான் கொடுக்க வேண்டிய பதினைந்து ரூபாய்க்கு சில்லறை இல்லாததால் இருபதாய்க் கொடுத்தேன்.."அஞ்சு ரூபா சில்லறை இல்ல, சில்லறை கொடு" என்றார்..கொடுங்க என்று மரியாதையாய் பேசுகிற ஆளும் இல்லை அவர்.."இருபது வாங்கிக்கோங்க சார், அப்பறமா நானே வந்து மீதி வாங்கிக்கிறேன்" என்றதற்கு, "நீ வாங்காமப் போய்டுவ, சில்லறை கொண்டு வந்து டிக்கட் வாங்கிக்கோ.."என்றார்...எனக்கு புன்முறுவலும் ஆச்சரியமும் முந்திக்கொண்டு வர, சில்லறைக்காக துணை தேடி இருந்தேன்..
                              மூன்று மணி நேர பயணத்தில் என் மனம் முழுதும் அவர் நடத்தை சார்ந்த சிந்தனை தான் ஓடியது..இத்தனை நிகழ்ந்தாலும் அவர் என்னைப் பார்த்த போதெல்லாம் ஒரு புன்னகை விடுத்தார்.
                               இருவேறு உச்சகட்ட நடத்தைகளைப் பார்த்து, ஆராய்ந்து, சுலப விடை கிடைக்காமல் இரயில் நிலையத்திலிருந்து வெளியேறி ஓர் பேருந்தில் ஏறி அமரவும் ஒரு ஆண் குரல். "ஒரு பொங்கல் இருபத்தஞ்சு ரூபாவா? அநியாயம்..பெங்களூர்ல இருபது ரூபாதான்..அதுவும் நெறைய கொடுப்பான்..சரியில்ல..சரியில்ல..பொங்கல் விலை ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு சொல்றான்..அப்பப்பா, சரியில்ல..சரியில்ல..இனி இங்க வந்தா டீயும் பன்னுந்தான் சாப்பிடணும் போல.."
                              அப்பா பேசுவதை ஆவென பார்த்து எனைப் பார்த்து லேசாய்ச் சிரித்தாள் அந்தக் குட்டிப் பெண்..இன்னும் சில வருடங்களில் அவள் சிரிப்பு பர்தாவிற்குள் ஒளிந்துவிடும்...