Monday, December 31, 2012

கண்ணம்மாவின் புத்தாண்டு முத்தம்

வீசிப்போன புயலில்
தொலைந்து போன கட்டுமரம்
நான்!
தொலை தூர வானில்
வெளிச்சத்தை மெல்ல
வாரி வழங்கி வந்து
எனைக் கரை சேர்த்தாய்
நீ!
தேவதையா?
மாயையா?
கடவுளின் பிரதிநிதியா?
நீ!
செத்துப் போக நினைத்த
எத்தனையோ தருணங்களை
நான் தாண்டி வந்திருப்பது
உன்னுடனான
இந்தத் துயிலில்
தளிர்க்கத்தானா?
உயிர் வாழ்வதற்கும்
உயிர்ப்பித்து வாழ்வதற்குமான
வித்தியாசம் அறியா
வேடிக்கை மனிதனாக
வீழ்ந்து போயிருப்பேன்!
உன் ஒரு துளி
எச்சில் முத்தத்தில்
முழுதாக முற்றுப்பெறுதல்
சாத்தியமாயிற்று..
அது தொடர்ந்த
அத்தனை நொடிகளும்
என் வெளிவராத
உச்சகட்டங்களை
உந்தித் தள்ளின!
...
புகையாகிப் போயிருக்க வேண்டிய
பழுதுபட்ட பரிசு நான்!
இப்போது
பலருக்கும்
தீ மூட்டும் கவி!
இது
உன் ஒரு நொடி
ஸ்பரிசத்தில் விளைந்தது!
பாரதியின் பாதிப்பில்
பேசி மட்டுமே
திரிந்த பதர்
இன்று
புரட்சி பாடித் திரிகிறது...
..
நீடித்தல் தான்
வாழ்க்கை..
முடிந்துபோதல் அன்று!
இது
எனக்காக நீ
வடித்த முதல் வரி!
நான் நீடித்திருப்பதின்
மூலம், முடிவு
நீ!
..
அக்னிக்குஞ்சை
அடக்கி வைத்து
அடக்கமாக
இனிமேலும் நான்
அடிமை இல்லை !
எனக்குள் நீ
ஊற்றிச்சென்ற உயிர்
உணர்வற்ற உயிர்களை
உயிர் உணரச்செய்யும் !
உணர்ந்த உயிர்களை
உன்னதம் நோக்கி
மேலும் உயர்த்திச் செல்லும் !
...
கண்ணம்மா !
காணாமல் போவதற்கு
அலைகின்ற
கரைந்து போவதற்கு
விரைகின்ற மனங்கள்
ஏராளம்,
எத்தனை பேருக்கு
கண்ணம்மா கிடைக்க முடியும்
உயிர் ஊற்றிச்செல்ல?
..
நம் இந்த படைப்பும்
இதில் விளையும்
கவிகளும்
இனி வருகின்ற
அத்தனை உயிர்களும்
ஊறித்திளைக்கும்
உயிர்த் தொழிற்சாலையாக
இருக்கட்டும்..
...
தீயும்
தீ சார்ந்த வெக்கையும்
நோய் நீக்கி
வாய் கொடுத்து
இந்த வதைப்புகளுக்கு
வன்மம் சேர்க்கட்டும்..
சூழ்ச்சி உணரச் செய்யட்டும்
எதிர்த்து நிற்றல்
சாத்தியம் ஆகட்டும்
சாதனைகள்
சத்தியம் ஆகட்டும்
சாத்திரங்கள்
சாய்ந்து கொடுக்கட்டும்
தடைக்கற்கள்
நொறுங்கிப் போகட்டும்
இவர்களை
கட்டி வைத்திருந்த
கடிவாளங்கள்
இவர்கள் உருவாக்கும்
வெற்றிக்கு மேளம் கொட்டட்டும்
இனி வருகின்ற வாழ்க்கை
நீ எனக்குத் தந்த
அந்த நாள் ஸ்பரிசத்தின்
தொடர்ச்சியாகி
உயிர் பரப்பட்டும்...
...





கண்ணம்மாவுடன் புத்தாண்டு

வேண்டா வெறுப்பாய்
வீசிப்போன தென்றலில் - ஆடும்
உனக்கான ஜன்னலின் தாவணி ..
எனக்கான உன்
அத்தனை ஏக்கங்களையும்
எத்தனையோ விதமாய்
எனக்குள் வீசிப் பார்க்கிறது...
சோகத்தை மறைக்க
சுகங்களைப் பற்றிய நினைவில்
முகம் புதைத்திருக்கும் - நான்
வேகத்தில் தோன்றும் முடிவுகளையும்
விதண்டாவாதங்களையும்
விட்டு விலகி ,
விலக்கி நிற்கிறேன்...
விளக்கம் கேட்டு
தாங்கி நிற்கும்
பெற்ற பாசமும்
உற்ற நேசமும்
அசைவிலா மௌனத்தை
மட்டுமே - என்னில்
விடையாகப் பெற்றுச் செல்ல ..
நீயும் இதைத்தானே
முடிந்தும் முடியாமல்
செய்கிறாய் ..
..
நினைவிருக்கிறதா?
நீயும் நானும்
ஏதோவொரு புத்தாண்டின்
வருகைக்காக
யாருமற்ற நிலவொளியில்
நொடிகளை எண்ணி
கடந்துவிட்ட நொடிகளை எண்ணி
நினைவில் நனைந்து
நீண்ட சுவாசத்துடன்
மௌனத்தைக் கலந்து
கவிதை செய்து கொண்டிருக்க...
எங்கேயோ கேட்ட
குழந்தையின் அழுகைக் குரல்
அது கேட்டு
எனைப்பார்த்த உன் கண்கள்
நீண்டு கொண்டே சென்ற
அந்த நொடி..
...
மௌனத்தைக் கலைக்க
நீயும் நானும்
ஒரே நேரத்தில்
"துளசி" என்றோம்...
நீ
உன்னால் மட்டுமே முடிந்த
அதே முதல் புன்னகையை
உதிர்த்தாய்...
...
புனிதம்
தூய்மை
தெய்வீகம்
பண்பு
வாசம்
சுவாசம்
இசை
நடனம்
ஆனந்தம்
அற்புதம்
இன்னும் பல
இணைந்த "துளசி"
நமக்கான
நம் குழந்தை
காமம் கடந்த
நம் கனவு ...
..
கன நொடிப்பொழுதில்
கண்ணில்
கர்ப்பம் கொண்டோம்
நீயும் நானும் ..
..
அவளது பிறப்பு
அத்தனையும் தாங்கி
வரும் என்றோம்
அதுவே அழகின் இறுதி என்றோம் ..
அதுவே நிதர்சனத்தின் உறுதி என்றோம்  ..
...
இப்படி
ஒவ்வொரு நொடியும்
கடந்த காலத்தில்
எதிர்காலத்தை
வாழ்ந்து முடித்திருந்தோம்...
...
இன்றைய புத்தாண்டு
இரக்கமின்றி
நீயின்றி
நானுமின்றி
சுவாசமின்றி
வாசமின்றி
வறண்டு பிறக்கிறது..
..
எப்பவும்
இலேசாக
விட்டுவிடாத நான்
இதை மட்டும்
விட்டுவிடவா போகிறேன்?
..
எனக்கான
உன் மௌனத்தையும்
உனக்கான
என் மௌனத்தையும்
ஏதோவொரு
அதிசய நிகழ்வு வந்து
கலைத்து விடாதா?
...
நமக்குள்ளான
இந்த
விடைதெரியா விலக்கம்
விளக்கம் பெற்று
நமக்குள்
விதைந்துபோவது எப்போது ?
..
எதைக் காப்பாற்ற
ஏதுமற்ற இந்த
தலைக்கனம்
உனக்கும் எனக்கும் ?
..
விண்ணைத்தாண்டி
வருவதற்கும்
பொன் வசந்தமாகிப் போவதற்கும்
நாமென்ன
கதாபாத்திரங்களா?
..
வா என் கண்ணம்மா..
இன்னும் இருக்கின்ற
ஓரிரு மணித்துளிகள்
நமக்காக மட்டுமே
பிறக்கட்டும் ..
..
வா என் கண்ணம்மா
வராத கவிதையில்
ஒளிந்திருக்கும்
எனையும்
துளசியையும்
மீட்டுப்போ...
...