Monday, December 31, 2012

கண்ணம்மாவுடன் புத்தாண்டு

வேண்டா வெறுப்பாய்
வீசிப்போன தென்றலில் - ஆடும்
உனக்கான ஜன்னலின் தாவணி ..
எனக்கான உன்
அத்தனை ஏக்கங்களையும்
எத்தனையோ விதமாய்
எனக்குள் வீசிப் பார்க்கிறது...
சோகத்தை மறைக்க
சுகங்களைப் பற்றிய நினைவில்
முகம் புதைத்திருக்கும் - நான்
வேகத்தில் தோன்றும் முடிவுகளையும்
விதண்டாவாதங்களையும்
விட்டு விலகி ,
விலக்கி நிற்கிறேன்...
விளக்கம் கேட்டு
தாங்கி நிற்கும்
பெற்ற பாசமும்
உற்ற நேசமும்
அசைவிலா மௌனத்தை
மட்டுமே - என்னில்
விடையாகப் பெற்றுச் செல்ல ..
நீயும் இதைத்தானே
முடிந்தும் முடியாமல்
செய்கிறாய் ..
..
நினைவிருக்கிறதா?
நீயும் நானும்
ஏதோவொரு புத்தாண்டின்
வருகைக்காக
யாருமற்ற நிலவொளியில்
நொடிகளை எண்ணி
கடந்துவிட்ட நொடிகளை எண்ணி
நினைவில் நனைந்து
நீண்ட சுவாசத்துடன்
மௌனத்தைக் கலந்து
கவிதை செய்து கொண்டிருக்க...
எங்கேயோ கேட்ட
குழந்தையின் அழுகைக் குரல்
அது கேட்டு
எனைப்பார்த்த உன் கண்கள்
நீண்டு கொண்டே சென்ற
அந்த நொடி..
...
மௌனத்தைக் கலைக்க
நீயும் நானும்
ஒரே நேரத்தில்
"துளசி" என்றோம்...
நீ
உன்னால் மட்டுமே முடிந்த
அதே முதல் புன்னகையை
உதிர்த்தாய்...
...
புனிதம்
தூய்மை
தெய்வீகம்
பண்பு
வாசம்
சுவாசம்
இசை
நடனம்
ஆனந்தம்
அற்புதம்
இன்னும் பல
இணைந்த "துளசி"
நமக்கான
நம் குழந்தை
காமம் கடந்த
நம் கனவு ...
..
கன நொடிப்பொழுதில்
கண்ணில்
கர்ப்பம் கொண்டோம்
நீயும் நானும் ..
..
அவளது பிறப்பு
அத்தனையும் தாங்கி
வரும் என்றோம்
அதுவே அழகின் இறுதி என்றோம் ..
அதுவே நிதர்சனத்தின் உறுதி என்றோம்  ..
...
இப்படி
ஒவ்வொரு நொடியும்
கடந்த காலத்தில்
எதிர்காலத்தை
வாழ்ந்து முடித்திருந்தோம்...
...
இன்றைய புத்தாண்டு
இரக்கமின்றி
நீயின்றி
நானுமின்றி
சுவாசமின்றி
வாசமின்றி
வறண்டு பிறக்கிறது..
..
எப்பவும்
இலேசாக
விட்டுவிடாத நான்
இதை மட்டும்
விட்டுவிடவா போகிறேன்?
..
எனக்கான
உன் மௌனத்தையும்
உனக்கான
என் மௌனத்தையும்
ஏதோவொரு
அதிசய நிகழ்வு வந்து
கலைத்து விடாதா?
...
நமக்குள்ளான
இந்த
விடைதெரியா விலக்கம்
விளக்கம் பெற்று
நமக்குள்
விதைந்துபோவது எப்போது ?
..
எதைக் காப்பாற்ற
ஏதுமற்ற இந்த
தலைக்கனம்
உனக்கும் எனக்கும் ?
..
விண்ணைத்தாண்டி
வருவதற்கும்
பொன் வசந்தமாகிப் போவதற்கும்
நாமென்ன
கதாபாத்திரங்களா?
..
வா என் கண்ணம்மா..
இன்னும் இருக்கின்ற
ஓரிரு மணித்துளிகள்
நமக்காக மட்டுமே
பிறக்கட்டும் ..
..
வா என் கண்ணம்மா
வராத கவிதையில்
ஒளிந்திருக்கும்
எனையும்
துளசியையும்
மீட்டுப்போ...
...


No comments:

Post a Comment