Monday, December 31, 2012

கண்ணம்மாவின் புத்தாண்டு முத்தம்

வீசிப்போன புயலில்
தொலைந்து போன கட்டுமரம்
நான்!
தொலை தூர வானில்
வெளிச்சத்தை மெல்ல
வாரி வழங்கி வந்து
எனைக் கரை சேர்த்தாய்
நீ!
தேவதையா?
மாயையா?
கடவுளின் பிரதிநிதியா?
நீ!
செத்துப் போக நினைத்த
எத்தனையோ தருணங்களை
நான் தாண்டி வந்திருப்பது
உன்னுடனான
இந்தத் துயிலில்
தளிர்க்கத்தானா?
உயிர் வாழ்வதற்கும்
உயிர்ப்பித்து வாழ்வதற்குமான
வித்தியாசம் அறியா
வேடிக்கை மனிதனாக
வீழ்ந்து போயிருப்பேன்!
உன் ஒரு துளி
எச்சில் முத்தத்தில்
முழுதாக முற்றுப்பெறுதல்
சாத்தியமாயிற்று..
அது தொடர்ந்த
அத்தனை நொடிகளும்
என் வெளிவராத
உச்சகட்டங்களை
உந்தித் தள்ளின!
...
புகையாகிப் போயிருக்க வேண்டிய
பழுதுபட்ட பரிசு நான்!
இப்போது
பலருக்கும்
தீ மூட்டும் கவி!
இது
உன் ஒரு நொடி
ஸ்பரிசத்தில் விளைந்தது!
பாரதியின் பாதிப்பில்
பேசி மட்டுமே
திரிந்த பதர்
இன்று
புரட்சி பாடித் திரிகிறது...
..
நீடித்தல் தான்
வாழ்க்கை..
முடிந்துபோதல் அன்று!
இது
எனக்காக நீ
வடித்த முதல் வரி!
நான் நீடித்திருப்பதின்
மூலம், முடிவு
நீ!
..
அக்னிக்குஞ்சை
அடக்கி வைத்து
அடக்கமாக
இனிமேலும் நான்
அடிமை இல்லை !
எனக்குள் நீ
ஊற்றிச்சென்ற உயிர்
உணர்வற்ற உயிர்களை
உயிர் உணரச்செய்யும் !
உணர்ந்த உயிர்களை
உன்னதம் நோக்கி
மேலும் உயர்த்திச் செல்லும் !
...
கண்ணம்மா !
காணாமல் போவதற்கு
அலைகின்ற
கரைந்து போவதற்கு
விரைகின்ற மனங்கள்
ஏராளம்,
எத்தனை பேருக்கு
கண்ணம்மா கிடைக்க முடியும்
உயிர் ஊற்றிச்செல்ல?
..
நம் இந்த படைப்பும்
இதில் விளையும்
கவிகளும்
இனி வருகின்ற
அத்தனை உயிர்களும்
ஊறித்திளைக்கும்
உயிர்த் தொழிற்சாலையாக
இருக்கட்டும்..
...
தீயும்
தீ சார்ந்த வெக்கையும்
நோய் நீக்கி
வாய் கொடுத்து
இந்த வதைப்புகளுக்கு
வன்மம் சேர்க்கட்டும்..
சூழ்ச்சி உணரச் செய்யட்டும்
எதிர்த்து நிற்றல்
சாத்தியம் ஆகட்டும்
சாதனைகள்
சத்தியம் ஆகட்டும்
சாத்திரங்கள்
சாய்ந்து கொடுக்கட்டும்
தடைக்கற்கள்
நொறுங்கிப் போகட்டும்
இவர்களை
கட்டி வைத்திருந்த
கடிவாளங்கள்
இவர்கள் உருவாக்கும்
வெற்றிக்கு மேளம் கொட்டட்டும்
இனி வருகின்ற வாழ்க்கை
நீ எனக்குத் தந்த
அந்த நாள் ஸ்பரிசத்தின்
தொடர்ச்சியாகி
உயிர் பரப்பட்டும்...
...





No comments:

Post a Comment