Tuesday, January 1, 2013

எனையும் கூட்டிச் செல் கண்ணம்மா

உன்னை மீட்டெடுக்க
ஒவ்வொரு முறையும்
நான்
பிரசவ வலி
கொள்கிறேன் கண்ணம்மா ...
உனைச்சார்ந்த
ஒவ்வொரு கவியும்
உன்னை நிகழ் காலத்தில்
நீடிக்கச் செய்வதற்காகத்தான் ...
என் கவி கண்டு
நீ சுவாசம் பெறுதலே
எனக்கான
சுவாசத்தை
விட்டு வைக்கிறது..
சோகத்தின் அடியாழத்தில்
அசைவின்றி உறங்கிப்போகிறாய்
உனக்கான என் தாலாட்டும்
தவிப்பும்
பிரார்த்தனையும்
உன்னை
ஒருபோதும் எட்டவில்லையா?
உன் கனவின்
உச்சகட்டத்தில் கூட
என் ஈரம் தோய்ந்த கண்கள்
உனக்குப் பரிட்சயமாகவில்லையா?
உன் இமையின்
ஒவ்வொரு திறப்பிலும்
நான் என்
இறப்பிலிருந்து
தட்டுத் தடுமாறி
பிழைத்து வருவது
உனக்குப் புரிகிறதா?
உன்னுடனான
தற்காலிக பிரிவுகளுக்கே
நான்
தயங்கித் தயங்கி
விடை கொடுக்க
எப்படி நினைக்கிறாய்
எனை விட்டுப் போவதை?
என் இதயத்துடிப்பையும்
சேர்த்து எடுத்துச் செல்வாயா என்ன?
இல்லை
எனக்கான
பாசக் கயிற்றை
உன் இதழ் வழியாக
என் உயிரில்
விதைக்கப் போகிறாயா?
எதுவாக இருந்தாலும்
இப்போதே சொல்!
ஏதுமற்ற வெட்டவெளியில்
உன் ஒற்றைச்சொல்லில்
உலகையே ருசித்தவன் நான் !
உனக்காக
உனக்குமுன்
இந்த
உயிர்நீத்துப் போவது
என் வரம் தானே ?
அதுவும் வேண்டாம் என்கிறாய்...
....
நீ இரு ..
என் இருத்தலை மெய்ப்பிக்க
நீ இரு...
மீறிப் போயின்
எடுத்துச்செல் ..
இல்லாமல் இருக்கும்
இந்தப்
பாவி உயிரை
வேரிலிருந்தே எடுத்துச்செல் ..
இனி வருகின்ற கவி
என் ஆவியின்
அரைகுறை
புலம்பலாக இருக்கட்டும் ..
என்னுடன்
உலகின் ஒட்டுமொத்த
காதலும்
கவியும்
கரைந்து போகட்டும்.....
....

No comments:

Post a Comment