Thursday, January 3, 2013

உனக்கான கடைசிக் கடிதம் ...

உனக்காக என்
கடைசிக் கடிதம் கண்ணம்மா!
...
"எப்படி இருக்க?
நினைவிருக்கிறதா?
எதையும் லேசாக
வெளிக்காட்டா எனை
வேண்டுமென்றே
சீண்டிப் பார்ப்பாய் !
பிடித்தவரில் முதலிடம்
உனக்கே என்பதில்
உனக்கென்ன இவ்வளவு
பிடிவாதம்?
எங்கெங்கோ ஆரம்பித்து
என்னவெல்லாமோ கேட்டு
எனை
எரிச்சலூட்டுவாய் ..
யாரிடம் பேசினாய்
என்ன பேசினாய்
என்பதோடு நில்லாமல்
"ஏன் பேசினாய்?" என்பாய்..
இதை சமாளித்து
"அப்பாடா!" எனும்போது
உன் தினசரி ஏவுகணை
"இன்னிக்கு என்ன
மிஸ் பண்ணியா?"
என் மீது பாயும்...
எனக்கிருக்கும்
ஒரே கவசம்
"ஆமா கண்ணம்மா!"
பின் - நீ
"எப்போல்லாம்?" என்பாய்
இத்தனை கேள்விகள்
கேட்டுத்தான் காதலிக்க
வேண்டுமா என்ன?
நீ என்ன
தமிழுக்குப் பிறந்தவளா?
உன் தந்தை
பாவமோ பாவம்
தாயும் தான்!
நீ மட்டும்
எப்படி இப்படி?
..
என் பதில்
பாதுகாப்பாக
"எப்பவுமே மிஸ் பண்றேன் !" என வரும் ..
நிறுத்தி முறைத்துக் கேட்பாய்
"வேற எதாவது சொல்லு!" என்று..
நான் என்ன சொல்ல ?
ஒவ்வொரு நாளும்
உன்னைப்  பிரிந்திருக்கையில்
உன் கேள்விகளும்
முக பாவங்களும்
எனைச் சுற்றி வருவது
உனக்கெப்படி புரியும்?
எனது இசை
எனது வேலை
எனது பொழுதுபோக்கு
எனது தியானம்
எனது சுவாசம்
எனது தூக்கம்
எங்கும் - உனது
கேள்விக்குறிகள் தான் ...
உன் கண்களே
கேள்விக்குறிகள் தானே!
..
எப்போதாவது
நான் கேட்கும்
கேள்விகளை
அனாயாசமாக
என் மீதே
திருப்பி விடுகிறாய்..
அதற்குப் பதில் இல்லையேல்
மௌனத்தில் தண்டிக்கிறாய்..
..
உன்னோடு நான்
எப்படித்தான் பேசியிருப்பது?
பேசாமல் பாடலாம் என்றால்
"கையில் மிதக்கும் கனவா நீ " கேட்பாய்
பாடலாக நானே
மாறிப்போய் - உன்
மடியில் வீழ்வேன்...
"எப்படி இவ்ளோ
உணர்ச்சியோட பாடற?
யார நெனச்சு பாடற" என்று
வேணுமென்றே கேட்பாய் ..
கடுப்பா இருக்குமா
இருக்காதா?
நீயே சொல்லு!
..
நேற்று ஒரு கேள்வி !
"கண்ணம்மா முக்கியமா
கவிதை முக்கியமா ?" என்று
நான் "கவிதை" என்றேன்
நிஜமும் கூட அது தான்..
இது தெரிந்தே
அடுத்த கேள்வி
"அப்போ நான் வேணாம்லா ?"
கவிதையென்ன
மல்லுக்கு வரவா போகிறது,
போனால் போகட்டும் என்று
"நீ இல்லாட்டி
கவிதை ஏது கண்ணம்மா!" என்றேன்
"என் இரத்தம் கவிதை
இதயம் கண்ணம்மா ,
என் உடல் கவிதை
உயிர் கண்ணம்மா"
இன்னும் பல
உவமை உருவகம் போட்டு
இடையிடையே
மானே தேனே
கண்மணி பொன்மணியும் போட்டு
வஞ்சமில்லாமல் ஒரு
புகழ்ச்சி செய்தேன்!
வசமாக
வீழ்ந்து போனாய்...
...
என் மடியில் சாயும்
தங்கச்சியை
முறைப்பாய் பார்...
ஒரு நொடி
குருக்ஷேத்ரம் அது..
..
வேன்றுமென்றே
"உங்க அக்கா
சாமி மாதிரி
எனக்கு ரொம்ப பிடிக்கும்!" என்பேன்
உனக்கு அவள்
உயிராகிப் போனாலும்
காதலின் விதிமுறை
கட்டுப்பாடு எல்லாம்
காப்பாற்ற வேண்டி
கடிந்து கொள்வதாய்
நடிப்பாய் ...
நானும் ரசிப்பேன்!
...
கடிதம் இப்போது
முடிவு நோக்கி
நகரப் போகிறது கண்ணம்மா..
முடிந்தால்
முடிவில்
கண்ணீரை எனை நினைத்து
சேமித்து வை...
...
நள்ளிரவில்
தொலைபேசியில்
நீ
வேற்று உருவம்
கொள்கிறாயா என்ன?
பெரும்பாலும்
மௌனத்தில் ஆரம்பித்து
கண்ணீரில் முடிக்கிறாய் ..
முடியாத முடிவுகளை
முடிச்சவிழ்க்க நினைக்கிறாய்..
மூன்று முடிச்சும்
முகூர்த்தப் புடவையும்
மஞ்சள் குங்குமமும்
மாலை மேளமும்
மயங்கிய மோகமும்
நமக்கு நாளையோ ?
இல்லை , இல்லையோ ?
இல்லவே இல்லையோ?
இது தான்
உன்
நெடுநாள் கேள்வி
விடையிலாக்  கேள்வி ..
...
கண்ணம்மா!
போர்க்களத்தில்
புரட்சி படைத்து
புனிதமாய் மனிதம் சமைத்து
கவி எழுதி
காதல் நிறைத்து
கடைசிவரை
கால்நடையாய்
காணாமல் திரிவதே
எனக்கு விதிக்கப் பட்டது..
இதில்
எனக்கான ஒரே சுகம்
எனக்கான ஒரே துக்கம்
நீ!
உன்னோடான
இந்தக் கவிதைக்காதல்!
..
வெளிச்சம் பரப்பி
வீறுகொண்ட உள்ளங்களை
உயரவைத்து
பாரதி கண்ட
வீதி சமைத்து
விடியலை நோக்கி
விரைந்து செல்கிறேன் ..
அவ்வப்போது
இவ்வாறாக
வாழ்க்கை வழங்கிய
வார்த்தைகளை
விதைத்துப் போகிறேன்!
முளைக்கின்ற
மரமெல்லாம்
என்னைத் தண்டாகவும்
உன்னைப் பூவாகவும்
நம் காதலைக் கனியாகவும்
வாரி வழங்கட்டும் ..
..
நம் வேடிக்கை
விளையாட்டுகளையும்
செல்லச் சண்டைகளையும்
திமிர் பிடித்த தர்க்கத்தையும்
சொல்லவொணா சோகத்தையும்
சுவை கூட்டிய சுகங்களையும்
கேட்கமறந்த  கேள்விகளையும்
சொல்ல விரும்பா பதில்களையும்
சொல்லி மறந்த 'சும்மா'க்களையும்
நம் நீடித்திருத்தலின்
நமக்கேயான ரகசியத்தையும்
நீயாக இருந்த நானையும்
நானாகத்  திரிந்த நீயையும்
நாமாகி நிலைத்த
தமிழையும் - அது
உயிர்ப்பித்த கவியையும்
இனி
வருகின்ற வர்க்கம்
தத்தெடுத்துக் கொள்ளட்டும்...
...
இன்னும் என்ன?
புறப்படு!
நீண்ட நாளைய
உன் நீங்கா ஆசை !
நமக்கான
இறுதிப் பயணம்
எல்லையில்லா
வெட்டவெளி தாண்டி
இருக்கின்ற எல்லாமும் தாண்டி
இல்லாத இடம் நோக்கி...
புறப்படு!
..
இப்போதும் கூட
உனக்கான
பாடல் வரி
உள்ளுக்குள் ஊறுகிறது
"உன்னை மட்டும்
சுமந்து நடந்தால்,
உயரம் தூரம்
தெரியாது...."
..
புறப்படு!






No comments:

Post a Comment