Tuesday, January 8, 2013

பரதேசியின் ஒரு நாள்

கிழிஞ்ச செருப்பின் ஊடே
குத்திக் கிழித்த முள்
உறுத்தலாய்
எனைப்பார்த்து
கேள்வி கேட்பதாய்த் தோன்ற
அதன் நோக்கம்
புரியாது - நான்
விழி பிதுங்க
வலி தாங்கி நடந்திருக்க
கடைசியாய் உட்கொண்ட
உணவின் நினைவு
தோன்றி மறைய
அது நேற்றைக்கா?
இல்லை அதற்கு
முன் தினமா?
இல்லை எனக்கே
தெரியாத என்றைக்கோவா ? - என்று
பசி மயக்கத்தில்
பல்வேறு திசைகளில் - நான்
போய்த் திரும்ப
ஊசிப்போன காட்சிகளும்
உள்ளூர உறைந்து கிடக்கும்
உணர்வுகளும் - அவை தாங்கிய
உரையாடல் எதிரொலிகளும்
எங்கெங்கோ வாங்கிய
எதிர்பாரா அடிகளும்
எச்சில் துப்பல்களும்
எட்டி உதைத்த கால்கள்
எனக்குள் உருவாக்கிய
வாழ்க்கை குறித்த ஏளனமும்
இவை தாண்டி
அவ்வப்போது அதிசயிக்க வைத்த
ஞானப் பிதற்றல்களும்
வந்து வந்து போகும்
வாழ்ந்து முடித்த
வசந்த கால வாசனையும்
காலைச் சுற்றி
மோந்து பார்த்து
பின்
அறிந்து கடித்து
தெறித்து ஓடும்
அசிங்கமான, அழகான
தெரு நாயும்
எங்களுக்கேயான ஒற்றுமையும்
உடுக்கத் துணி இல்லாதவனுக்கு
இரத்தம் துடைக்க
துணி ஏது?
உயிர் காக்க
மருந்துப் பிச்சை
எடுக்கவா முடியும் ?
ஆமாமா ..
மானமே போயாச்சு
மருந்தென்ன மருந்து?
இருந்தும் இல்லா
உயிர் மேய்க்கும்
இடையன் நான்..
இல்லாதவர்க்கும்
இருந்தும் இல்லாதவர்க்கும்
இல்லாமலே போனவர்க்கும்
எல்லாமாய்
இருந்தும் இல்லாதிருக்கிறேன்..
என் முகமும்
முகமூடியும்
பிரியா பிணைப்புகள்..
அகம் பார்த்து
தெறித்தவரும்
புறம் பார்த்து
முறைக்க வேண்டி முறைத்தவரும்
பார்க்காமலே பயந்தவரும்
இப்படிப் பலவாறு
எனைச் சுற்றி
மனித உயிர்கள்..
இன்னும் என்
நினைவில் - எனக்கான
இரவு நேர
ஒரே சுகம்..
எங்கோ தினசரி
நடைபாதை வானொலியின்
"ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு..."
அதில் - உன்
நினைவைக்  கனவு கண்டு
மயங்கி
உறங்கிப் போவதில்
முடிகிறது - என்  இன்றைய
ஒரு நாள்...

No comments:

Post a Comment