Wednesday, January 2, 2013

உலகின் கடைசி இசை

நான்
மெனக்கெட்டு எழுதும்
ஒவ்வொரு கவிதையையும்
எளிதாக
லேசான கண்ணசைவில்
முடித்து வைக்கிறாய்..
முற்றுப்புள்ளியில்
தொடர்கிறது - நம்
அடுத்த கவிதை..
...
முடியவே கூடாதென
உன்னுடன் இருக்கும்
ஒவ்வொரு நொடியும்
நினைத்தும் ,
முடிந்து போகிறேன்!
முடிந்தே தீருவது
என்கிற நொடிகளில் - நீ
மெனக்கெட்டு
மீட்டு வாட்டுகிறாய்..
...
இல்லாததாய் தோன்றும்
இடங்களில் எல்லாம்
இயல்பாய் இருக்கிறாய்..
இருப்பாய் என
எதிர்பார்த்தால்
இல்லாதிருந்து இம்சிக்கிறாய்..
...
வருகின்ற பூங்காற்றை
வரவேற்று
உதிரப் போன
மெல்லிய பூக்களை
மெலிதாகப் பரப்பி
உனக்கான
சிவப்புக் கம்பளம்
நான் விரிக்க
நீயாக வந்து
நொடிப்பொழுதில்
நானாகத்
திரும்பிச் செல்கிறாய்..
...
"கண்ணம்மா நில் " என்றால்
கண்ணிமைத்து
என் கடைசி ஆசையை
நினைவுறுத்துகிறாய் ..
....
நீயில்லாது
நானிருந்த பொழுதுகளில்
நஞ்சை உண்ட
நெஞ்சனாகிப் போய்
நீண்ட தவங்களில்
திளைத்திருப்பேன்  ..
லேசான உன்
கூந்தல் அசைவில்
யுகங்களைத் தாண்டிய
உச்சகட்ட உண்மையுரைப்பாய்
உண்மையுரைத்துப் பின்
உற்று நோக்கிப் போவாய்
நான் உருக்குலைந்து போவேன் !
இது உன்
வாடிக்கையாகிப் போனாலும்
எனக்குள்
ஒளிந்திருக்கும்
உன்னை
அவ்வப்போது
தொட்டுப் பார்த்துக் கொள்வதிலேயே
நான்
நமக்கான காதலின்
உச்சகட்ட உணர்ச்சியில்
ஊறித் திளைக்கிறேன்..
எப்போதும் இல்லாத நானும்
எப்போதுமே இல்லாதிருக்கும் நீயும்
ஒன்றாகிப் போகும் நேரம்
உலகின் ஓசை
ஓய்ந்து போகும் ..
நீர் வற்றி
நிலம் நடுங்கி
புலம் பெயர்ந்து
பூமி
புதியதாகிப் போகும்..
அப்போது -என்
இதயத் துளையில்
உன் மூச்சுக்காற்று
நமக்கான
ஓர் புல்லாங்குழல் இசையை
வார்த்துக் கொண்டிருக்கும்
உலகின் கடைசி சொட்டு
இசை அது...
...


No comments:

Post a Comment