Monday, January 14, 2013

நாய்க்குட்டிப் பார்வை (தொடர்ச்சி 1 )


எனைப் போலவே
அவனுக்கும்
நான்கு சகோதரிகள்
வருடந்தோறும்
அறுவடை முடித்து – பின்
பருவ மழை பொய்த்ததால்
வறண்டு போன வயலாக
வாடிப் போயிருந்தாள்
அவன் தாய் !
இன்னும்
பத்து வருடங்களில்
ஆடை கிடைக்க வேண்டும்
இவன் சகோதரிகளுக்கு !
கவரிமான் இனம்
அழிந்து கொண்டிருக்கும்
இந்தப் பூமியில்
பிறந்த மேனியுடன்
கவலையின்றி
ஆடிக் கொண்டிருந்தனர்..
மகா லக்ஷ்மி ,
தன லக்ஷ்மி ,
பாக்ய லக்ஷ்மி,
விஜய லக்ஷ்மி !
..
விரல் விட்டு
எண்ணி விடும்
எலும்புகள்
வியர்வையில்
மட்டுமே நனைந்த
தேகம்!
...
‘கார் கூந்தல்’ என்று
வருணித்த கவிஞர்களும்
‘இயற்கையிலேயே
மணம் உண்டு ‘ என்றவர்களும்
இவர்களின்
சடைபிடித்த
தலைமுடியைக்
காணக் கடவர்..
சமையலுக்கு
எண்ணெய் இல்லை
அழகாய்
சமைதலுக்கு ஏது?
வறுமையின் நிறத்திற்கு
இவர்கள் பற்கள் தான்
வரையறை!
ஆனாலும்
அவை உதிர்க்கின்ற
புன்னகை – என்
ஒட்டுமொத்த சோகத்திற்கும்
ஒத்தடம் கொடுத்தது!
...
தினசரி இரவு
சோற்றுப் பருக்கைகளை
நீரில் நீந்தவிட்டு
ஓடிப்பிடித்து
விளையாடும்
இவர்கள் விரல்கள்!
இடது கையில்
25 பைசா
ஊறுகாய் பாக்கெட் ..
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு ஊறுகாய்!
பற்றாக்குறைக்கு
பச்சைமிளகாயும்
இவர்களுடைய நரம்புகளில்
சூடு சுரணை
ஏற்றிக் கொண்டிருக்கும்!
.....
பக்கத்து பங்களாவில்
பரபரப்பு
“கல்யாணத்துக்கு
ஏழு கறியா ?
ஒன்பது கறியா ?”
...
இவர்களும் ஒரு நாள்
இன்பத்துப் பாலில்
திளைத்திருக்க நேரும்!
அப்போது
இவர்கள்
மார்பின் மத்தியில்
மயங்கிக் கிடப்பது
மஞ்சள் கயிறு தானோ?
தங்கத்தை
தாலிக்கயிற்றில்
தாலாட்டும் பாக்கியம்
இவர்களுக்கேது?
அதுசரி!
இது போன்ற
வீடற்ற சராசரிகள்
முதலிரவு கொண்டாடுவது
நிலா வெளிச்சத்தில்
கூவத்துக் கரைகளில்தானோ?
பாலின்றி பழமின்றி
பகுத்தறிவை மட்டுமே
பஞ்சணையாகக் கொண்டு
நடந்தேறும்
பக்குவப் பரிமாற்றம்..
..
அடுத்த சந்ததிக்கு
உணவூட்ட
இவர்களது மார்புகள்
பால் சுரக்குமா?
இல்லை
வியர்வை மட்டுமே
சுரக்குமா?
உடைகளில்
இடைவெளி விட்டு
இடையையும்
தொடையையும் காட்டும்
போலிச் சடைப்
பெண்கள் மத்தியில்
கிழிந்தவற்றைத் தைத்து
மானங்காக்கும்
இவர்களும்
இருக்கத்தான் செய்கிறார்கள்..
இவர்கள்
வயதுக்கு வந்தால்
கூரைப் புடவையுடன்
சீர் செய்ய
மாமனும் வரப் போவதில்லை
கூட்டத்தோடு
வாழ்த்திப் பேச
மந்திரியும் வரப்போவதில்லை..
வயதையே மறந்துபோகும்
வர்க்கம் இது!
..
இவர்கள்
முகம் பார்க்கும்
கண்ணாடி
துண்டு துண்டாகத்தான்
இருக்கும்..
கம்மலும் ஜிமிக்கியும்
தொங்க வேண்டிய
காதுமடல் துளைகளைக்
காற்று
துளைத்து வெளியேற
எத்தனிக்கும்..
அதைத் தடுத்து நின்று
அழகு சேர்க்கும்
ஒரு சிறு துண்டு
ஈக்கிள்!
...
விளையாடும் போதெல்லாம்
உடைந்துபோய்
இவர்களின்
இரத்த நிறத்தை
சோதிக்கும்
கண்ணாடி வளையல்கள்
சோடி சேராமல்..
எப்போதோ கண்டெடுத்த
விவாகரத்தான
மெட்டி ஒன்றைத்
தன்
மோதிர விரலில்
மாட்டியிருப்பாள்
இவர்களில் ஒருத்தி..
கண்களைச் சுற்றி
கருப்பு வளையம் இருப்பதால்
இவர்கள்
மையிட்டுக் கொள்வதில்லை..
ஏழு வாரத்தில்
நிறம் மாறும் வித்தையும்
இவர்களுக்குத்
தெரிவதில்லை..
..
பக்கத்து வீதி
அம்மன் கோவிலில் திருவிழா!
இரவைப் பகலாக்கும்
கடைத்தெரு
ஈச்சி மொய்க்கும்
தேன் குழல்
மிட்டாய்க்கடை!
ஆவி பறக்கும்
மொளகா பஜ்ஜிக்கடை
எச்சில் ஊற
கையில்
வாட்ச் கட்டிக் கொடுக்கும்
சவ்வு மிட்டாய்க் காரன்
“எத எடுத்தாலும் பத்து ,
பத்து ரூவாய்க்கு மூணு “
என ஏகப்பட்ட
ஏற்ற இறக்கங்கள்!
எல்லாரையும்
இடித்துப் போகும்
ஏட்டு மாமா தொப்பை
கலர் கலராய் தாவணியும்
ஜதி சொல்லும் கொலுசொலியும்
அலம்பாத குஞ்சலமுமாய்
ஐயராத்து அக்காங்க!
இவை எல்லாவற்றையும்
வாய் பொளந்து பார்த்து
இவர்கள் செல்ல
பின்னால் நானும்
நாக்கைத் தொங்கவிட்டுத்
தொடர்ந்தேன்!
..
“ஐ! ராட்டு!” என
தனலக்ஷ்மி ஓட
அரைஞாண் கயிற்றின்
அறுக்க முடியா பந்தத்தில்
எங்கள் இரயில் வண்டி
கொஞ்சம்
தடுமாறி ஓடியது!
..
ஆகாய விமானத்தை
‘ஆ’ வென பார்த்து
துள்ளிக்குதிக்கும்
இவர்களுக்கு
வானத்தைச் சுற்றிக்காட்டும்
வாடகை விஞ்ஞானி
இந்த ‘இராட்டினம்’
எனப்படும்
‘ராட்டு’!
...
ராட்டு மாமா பக்கத்துல
பாவம் போல
நின்றிருந்தோம்..
இடம் பொருள் ஏவல்
அறிந்து
எதையும் பார்த்து
குரைக்கவில்லை நான் !
கூட்டமெல்லாம்
கலைஞ்ச நேரம்
வாடிப்போன ராட்டுமாமா
எங்களையும் ஏத்திக்கிட்டார்..
‘விண்வெளிக்குப் போகும்
இரண்டாவது நாய்
நான் தானோ?’
என்
அடிவயிறு கலங்க
உச்சியை அடைந்தபோது
இவர்கள்
நிலவையும் நட்சத்திரங்களையும்
பங்கு வைத்துக் கொண்டிருந்தனர்..
..
வானை அளப்போம்
கடல் மீனை அளப்போம்
வயிற்றுப்பசியுடன்
பாரதி படிப்போம் !
காக்கையும் குருவியும்
சேர்த்துக் கொண்டவன்
உயிரோடு இருந்திருந்தால்
என்னையும் சேர்த்திருப்பான்!
நானும் நன்றியோடு
வாலாட்டியிருப்பேன்..
...
பூக்காரப் பேச்சியக்கா
புருஷன் போனபின்னும்
பொழச்சிருக்கா !
பூவோடக் காத்திருக்கா
போற வரப் பொண்ணுக்கெல்லாம்
பூச்சூடிப் பாத்திருக்கா!
பேரமெல்லாம் பேசமாட்டா
பேராசைப் படமாட்டா
ஆசை மட்டும்
ஒண்ணே ஒண்ணு!
‘ரஜினிகாந்தப்’ பாக்கணுமாம்
‘என் ராசான்னு’ கொஞ்சணுமாம்!
..
தம் பொண்ணாத்தான் நெனச்சி
தனலக்ஷ்மி கையப் புடிச்சி
இத்துனூண்டு சரத்தைப் பிச்சி
தலையிலதான் சொருகி விட்டா..
வாடியிருந்த மல்லிகையும்
வாடாமல்லி ஆகிப்போச்சு!
..
அம்மன் கோயில் வாசலுக்கு
ஒருவழியா வந்து சேர்ந்தோம்
பூமிதிக்கப் போறாங்கன்னு
படபடன்னு
வேட்டுச் சத்தம் !
பயந்துபோன நானும்
பதறியடிச்சு ஓடிப்புட்டேன்!
பின்னாலயே ஓடிவந்தான் – என்
பாசக்கார அண்ணங்காரன்..
அன்னிக்கி ராத்திரி
எனக்கு மட்டும்
தூக்கமில்ல
ஏன்னுதான் தெரியவில்லை..
என் தங்கச்சிங்க ஞாபகம்
எங்க இருக்காங்களோ ?
திரும்பிப் போலாமான்னு
யோசிச்சுக் கிடந்தப்போ
“மணி..மணி”..ன்னு
தூக்கத்துல அண்ணங்காரன்
எம்பேரப் பொலம்புனான்!
அவன் கைல
என் கயிறு
வெறுங்கயிறாத் தெரியல!
பாசக்கயிறாத் தான்
தெரிஞ்சுது!
..
தன்னந்தனியா
நன்றியோட வாலாட்டி
கண்ணுல
உப்புத்தண்ணி
வடியவிட்டேன்!
என் சோகத்த
மடிய விட்டேன்!
பூர்வ சென்ம பந்தம்போல
புடிச்சுக்கிட்டே அலையிறான்
பாசமுள்ள அண்ணங்காரன்..
...

No comments:

Post a Comment