Wednesday, January 9, 2013

போயி வாறேன் என் சனமே !

தொடர்ந்து பயணிக்கும்
இரு சக்கர வாகனம்
நடந்து செல்பவன்
மீதான ஏளனத்தில்
என்னை எனக்கே
தோலுரித்துக் காட்டுகிறது
...
நடந்து செல்பவர்கள்
பாதையில் படுத்திருப்பவர்களை
அறிந்தும் அலட்சியம்
செய்தே செல்கிறார்கள்
...
கிளிஞ்சலான ஜீன்சும்
கதிரவனைத் தாங்கவியலா
குளிர்க் கண்ணாடியும்
வாசனைத் திரவியமும்
தரையைப் பார்த்திரா
பளபள பாதங்களும்
புரியா வார்த்தையும்
புரிந்த நடிப்பும்
போலிச் சிரிப்பும்
எளிதில் கொடுத்து விடும்
சில்லறை லஞ்சமும்
தாராள கஞ்சத்தனமும்
குளிர் அறையில்
கூடியிருந்து
தனி உலகம் படைத்து
வெளி உலக
வேற்று கிரக வாசிகளை
வெறும் வார்த்தைக்காக
வாதாடி தீர்ப்பு கூறி
குடித்து கூத்தாடி
தூக்கத்தின் சுகமறியாது
தூங்கிப்போய் - பின்
காலைச் சூரியனும்
வேர்வை வாடையும்
வீதி நாற்றங்களும்
வெறித்த பார்வைகளும்
கோவில் கூழும்
கூட்ட நெரிசலும்
குறை கூறலும்
பேரம் பேசலும்
தன்மானம் காக்கும்
தெருவோரச் சண்டையும்
டீக்கடை பெஞ்சும்
கலங்கிய நீரில்
கழுவிய கிளாசில்
ஒரு கோப்பைத் தேநீரும்
அது தொடரும்
அடிமட்ட அரசியலும்
உள்ளூர்ப் பஞ்சாயத்தும்
ஓடிப்போன கதைகளும்
திரும்பி வாரா சோகங்களும்
தொடர்ந்து வரும் வதைப்புகளும்
இவை யாவும் அறிந்திலா,
அறிய முற்படா
வேடிக்கை மனித இனம்
அதற்கானதாகவே தோன்றும்
அகழ்வாரைத் தாங்கும் நிலம்...
...
இதில் நானும்
மத்திய வர்க்க மனிதனாய்
சொல்லிக்கொண்டு திரிய
எங்கெங்கோ பார்க்கும்
ஏதேதோ காட்சிகள்
அவ்வப்போது என்னை
அறிவு தாண்டி
அந்தஸ்து தாண்டி
தொலைத்து விட்ட - என்
தன்மானத்தின் கருவறைக்கு
தன்னிச்சையாய்
இழுத்துச் செல்ல ,
எல்லாம் தெரிந்த
ஏதும் பேசவியலா
பெருசுகளும்
"ஆமாப்பா..இப்படித்தானே!"
என்று
அனுபவத்தின் இறுமாப்பை
அள்ளித்தெளித்து
அக்கறை காட்ட,
தொலைத்தது என்னவென்றே
தெரியாது நானும்- என்னைத்
தெரிந்து வானும்
கடல் கொண்ட மீனும்
தொலை தூர காற்றும்
இறந்து பட்ட சூரியனும்
இனி வரும் செடியும்
நான் போயிராத பாலையும்
நடை சோர்ந்த ஒட்டகமும்
எனை ஈர்த்த
அரபு நாட்டு ஜிப்ரானும்
அவன் படைத்த
ஆழ்ந்த அழகின்
ஆத்மார்த்தமும்
முற்றப் பெறாது போயினும்
முற்றுப் பெற்று நிற்கும்
எத்தனையோ இலக்கியமும்
இதிகாசமும்
எனைப் பெற்ற
பத்தினியும் பெரியவரும்
என் ஆசானும்
கியூபப் புரட்சியாளனும்
அவனைப் பேசித் திரியும்
போலிகளும்
சட்டைப் பட பைத்தியங்களும்
சல்லாபங்களும்
அத்துமீறும் ஆன்மீகமும்
தலைநகர மானபங்கமும்
சட்டை செய்யாத
கவுரவ கவர்ன்மெண்டும்
இன்னும் இன்னும்
எத்தனையோ கேள்விகளும்
வித்தியாச விடைகளும்
வந்து வந்து போயினும்
மீண்டும் மீண்டும்
மனிதனாகி
மானங்கெட்டுப் போகிறேன்...
மீதி வாழ்க்கை
வாழ்ந்து போக
மாபெரும் வேஷம் போட்டு
கருத்து சொல்லும் கவிஞனாகி
கன்றாவி செய்கிறேன்...
..
போதுமடா இப்பொழப்பு
தலைய பிச்சிகிட்டு போகப்போறேன்!
பொறந்து தொலைக்க
நான் என்ன
தலைகீழா நின்னேனா?
தறுதலையாப் போறதுக்கு
தற்கொலையாப் போய்த்தொலைய
தீர்ப்பு ஒன்று எழிதிக்கிட்டேன்..
போயி வாறேன் என்சனமே...
...



No comments:

Post a Comment