Wednesday, January 2, 2013

தூரத்து வெளிச்சம்

நீ இல்லாத பொழுதுகளின்
ஏதுமற்ற வெட்டவெளியும்
எல்லையில்லா
காட்சிகளும்
காட்சிப் பிழைகளும்
ஏனோ தோன்றி மறையும்
ஏதேதோ கேள்விகளும்
எனக்குள்ளேயான
எக்கச்சக்க பதில்களும்
எதிர்பார்ப்புகளை மிஞ்சிய
எளக்காரங்களும்
எதிர்வந்து போகும்
உணர்ச்சியற்ற முகங்களும்
ஏமாற்றம் தாங்கிய
உறைந்துபோன உள்ளங்களும்
அவைதாங்கிய
அன்றாடச் சலிப்புகளும்
அக்கறை கொண்டதாய்
அலட்டிக் கொள்ளும்
அங்கலாய்ப்புகளும்
இன்னும் வராமல்
வாட்டி வதைக்கும்
உனக்கான என்
கவிதையின்
கடைசி வார்த்தையும்..
இவை யாவும்
கடந்து சோர்ந்து
வீதியை வெறித்துப்
பார்த்த - என்
வீண் நடையும்
வெளிப்படுத்த விரும்பா
விசும்பலும்
வதைத்தலைத் தேடும்
வன்மமும்
குணம் தாண்டிய
கோவமும் மூர்க்கமும்
அவ்வப்போதைய பசியும்
அது தாண்டிய விரதமும்
இஷ்டமில்லா வேண்டுதலும்
வானம் பார்த்த
வெற்று விமர்சனமும்
மூச்சுமுட்டும்
முடிச்சுகளும்
அவை தாங்கிய
உன்னத புதிர்களும்
உறக்கமற்ற
உரக்க சிந்தனைகளும்
கர்மம் தொடரும்
கடின வார்த்தைகளும்
காதல் இருந்ததை
இன்னும் இருப்பதை
நினைவுறுத்தும்
நீங்கா நினைவுகளும்
நீண்ட நாள் முன்பு
நாம் சேர்ந்து பார்த்த
நடுநிசி நிலவும்
நாணமற்ற உன்
நளினமும்
நீங்கா நெருடலும்
நீண்டு கொண்டே போன
நீ, நான், நாமான தருணங்களும்
நமக்கிடையே
உருவான
என் "நானும்"
உன் "நானும்"
இவை தொடர்ந்த
"ஏன்"
"எதற்கு"
"எப்படி" யும்
தர்க்கத்தில் விளைந்த
"சரி விடு" வும்
நொடிப் பொழுதில்
நீங்கிப் போன
நீயும்
உன் நேர் பார்வையும்
தொடர்ந்து வந்த
மௌனத்தில் விளைந்த
என் முடியா
மூர்க்கமும்
முணுமுணுத்தலும்
எனை நானே
அசிங்கப்படுத்த
நினைத்து வைத்த
அழகான தாடியும்
வருத்தி வரவழைத்த
தத்துவப் புத்தகத்
தலையணைகளும்
நடை உடை மாற்றமும்
நடு உச்சி
தலை வகிடும்
நீண்ட முடியும்
நித்தம் தொடரும்
இந்த
வலைப் பின்னல்
வார்த்தை விளையாட்டும்...
இடையிடையே
வந்துபோகும்
வாசகர் வேண்டுதலும்
வருத்தமும் மற்றும்
விமர்சனமும்..
எல்லா நொடியிலும்
என்னுள் நிகழும்
மேற்கண்ட
அத்தனை சிந்தனையும்
எதற்காக கண்ணம்மா?
..
தேம்பி முடித்து -உன்
கண்ணீர் துடைத்து
திரும்பிப் பார்...
எனக்கான
தூரத்து வெளிச்சம்
தொலைந்து போகட்டும்
...
வா என் கண்ணம்மா
நமக்கான இருளில்
உன்னுள் எனை
இழுத்துப் போ
உன் முடிவில்லா
மனச் சுருளில் -நான்
மீண்டு வராமல்
தொலைந்து போகிறேன் ..
...


















No comments:

Post a Comment