Wednesday, January 9, 2013

கண்ணம்மாவின் கவிதை விளையாட்டு

நீ பார்த்த விழியும்
உன்னை நினைத்துப் பார்த்து
நிதமும் நனையும் விழியும்
இன்றும் தனியாக..
நமக்கேயான
நாம் மறந்த சைகை மொழியும்
அது தொடர்ந்த
மௌன மயக்கமும்
பின் ஆழ்ந்திருந்து
நாம் கொணர்ந்த
அதிசய முத்தும்
அதன் நீங்கா பிரகாசமும்
நீ விட்டுச் சென்றதில்
உயிரிழந்து - என் நெஞ்சில்
வாடிப் போய்
வெடித்துக் கிடக்கிறது..
இன்றும்
உன் நெஞ்சு நடுவே
மஞ்சம் கொண்டிருக்கும்
நான் தந்த
கடைசி முத்தமும்
தாலிக்குப் பதிலாக
நீ வேண்டிய
தங்கமில்லா டாலரும்
இல்லாத என்னை
உன்னிடத்தில் உறுதியாக
விதைக்கிறதா?
 "எதாவது கிறுக்கு
எனக்காக கிறுக்கு" என்பாய்
கிறுக்கியதை கவிதை என்பாய்..
இன்று
கிறுக்கியதும் நானும்
தீண்டப்படாமல் தனியாக..
என் கவிதைக்குச்
சுவை அதிகமாம்..
நெஞ்சை விதைத்து
அறுவடை செய்தால்
சுவை இருக்காதா என்ன?
..
நீயும் நானும்
முதல் முதலாக
விளையாடிய
கவிதை நினைவிருக்கிறதா?
"உன்னில் வீழ்ந்த என்னை
மீட்டெடு" என்றாய்
"என் அத்தனை ஏக்கத்தையும்
அனுப்புகிறேன்
முடிந்தால் மீண்டு வா,
இல்லை உன்
முடியா முத்தத்தை
முடிந்து அனுப்பு" என்றேன்
நீயும் வெட்கத்துடன்
முத்தத்தை முடித்து
"கவிதையைப்  படிக்காதே
குடி " என்றாய்
"உன்னில் ஊறி
உன் விழியின் கவியில் வீழ்ந்து
என்னில் நானாக
எதோ வளர்கிறேன்" என்றேன்
"அதெப்படி நீ
நீயாக வளர்வது ?
நானாக வளர்" என்றாய்
"ஆமாமா
தொலைவிலிருந்தே என்னை
கணப் பொழுதில்
கலைத்து விடுகிறாய்
உள்ளுக்குள் விட்டால்
ஊர் என்ன ஆகும் ?
ஊரை விடு ,
உனக்கும் என்
உள்ளூறிய கவிக்கும்
மோதலோ இல்லை
காதலோ ஆகிப்போயின்
நான் என்ன செய்வது?" என்றேன்
நீயோ பதிலின்றி
முறைத்துப் பார்த்தாய்..
பின்
மெதுவாய்
"போ போ
எத்தனை நாள் இந்த
வார்த்தை விளையாட்டு
பார்ப்போம் " என்றாய்
"உன்னில் வாசகியும்
என்னில் கவியும்
நம்மில் தமிழும்
கலந்திருக்கும் வரை" என்றேன்
லேசாகச் சிரித்தாய்
கடைசி வரை
வெட்கம் கொண்டாய் ...
அன்று பிறந்த
கவிதை விளையாட்டு
இன்று
என்னில் மட்டுமே
ஒற்றைக்கு ஒற்றையாய் ..
வீம்பு பிடித்து -விடாமல்
உன்னை விடாமல்
எழுதுகிறேன் ..
வார்த்தை வறண்டு
இது என்னில்
நின்று போகும் நாள்
நானும்
நின்று போவேன்
எனக்காக
எங்கோ காத்திருக்கும்
உன் எழுதாக் கவிதையுடன்
ஓடி வந்து
ஒட்டிக்கொள்வேன்..
கண்ணம்மா
ஓடி வந்து
ஒட்டிக் கொள்வேன் ...
..






No comments:

Post a Comment