Tuesday, January 15, 2013

நாய்க்குட்டிப் பார்வை (முடிவு)


அடுத்த நாளு காலையில
கவர்ன்மெண்டு ஆபிசரு
கடையெல்லாம் காலி பண்ண
கண்டிப்பா கத்திப் போனார் ..
புல்டோசர் கொண்டு வந்து
பழசெல்லாம் புடுங்கிப் போட்டு
பாதையத்தான் விரிக்கப் போறான்
மனுசப்பய
மனசு மட்டும்
சுருங்கிக் கெடக்கு
வோட்டு கேட்டு வரும்போது
நோட்டுக் கட்ட மாத்திக்கிட்டு
ரோட்டு மேல சத்தியமா
“அத செய்வோம்
இத செய்வோம்”னு
ஆளாளுக்கு வாயடிச்சான்..
இப்போ
ஒரு பயலும்
துணைக்கு வரல !
மழையிலயும் வெயிலிலயும்
மறைவு தந்து
காத்து நின்ன
மகராசி வேப்ப மரம் !
முகராசி இழந்து
வாடி நின்னா!
மறைஞ்சு போன
அப்பா அம்மா
போட்டோவ மாட்டி வச்ச  
ஆணியத்தான் தாங்கி நின்னா !
சிவப்புத்துணி கட்டிவச்சு
மஞ்சள் குங்குமம்
பூசி வச்சு
‘மாரியாத்தா’ என்று சொல்லி
ஒரு
மாலையத்தான் கட்டி வச்சான்
இப்போ
அடியோடு புடுங்கப் போறான்
இக்குடும்பத்த
வேரோட
சாய்க்கப் போறான்
ஒத்த ரூவா நாணயத்த
உன் நெத்தியில ஒட்டிவைக்க
பாவிப்பய மனசுக்கு
யாரும்
பக்குவமா சொல்லித்தரல!
கட்டிவச்ச ஊஞ்சலையே
கெட்டியாப் புடுச்சிக்கிட்டு
பாசக்கார அண்ணங்காரன்
பரபரன்னு
முழிச்சு நின்னான்!
...
வேப்ப முத்த உடச்செடுத்து
மொழியில தான்
வச்சொடச்சு
இரத்தம் பார்த்து
ஆடிநின்னா
மூத்தக்கா தன லக்ஷ்மி
தலைமேல மண் விழுந்த
சோகத்த அறியாம
குழிதோண்டி வீடு கட்டி
தங்கச்சிங்க விளையாட
நான் மட்டும்
நா வலிக்க
நாள் பூரா
குரைச்சுக் கிடந்தேன் !
ரேசன் கார்ட பாக்காத
இவுக மேல மண்ண போட்டு
பளபளன்னு ரோடு போட்டு
பயணம் போகப் போறாக
அடுத்த ராத்திரி
என்ன செய்ய?
வாடகைக்கு
வீடு வேண்டாம்
வாடையில்லா
கூடு போதும் !
இல்ல
பாடையொண்ணு
செஞ்சுத்தாங்க
இவுக
பரலோகம் போகட்டும்!
..
ஒவ்வொண்ணா அள்ளிப்போட்டு
ஒட்டுமொத்த குடும்பமும்
ஒரு கோணியில
அடங்கிப் போச்சு !
“ஐ ! ஐ! “ன்னு
ஆடிக்கிட்டு
டூரு போறதா நெனச்சுக்கிட்டு
லக்ஷ்மிங்க படையெடுக்க
மனசுலயும் தோளுலயும்
பாரத்த தாங்கிக்கிட்டு
பைய நடந்தான் அப்பாக்காரன்
மரநிழலில் மட்டுமே
மறைஞ்சு குளிச்சத
மறக்க முடியாம
மனசின்றி மண்பார்த்து
பின் தொடர்ந்தா அம்மாக்காரி!
..
“வா மணி, போலாம்”னு
என்னையும் கூப்பிட்டான்
பாசக்கார அண்ணங்காரன்
இப்பவும் வாலாட்டி
அவன்
பின்னாடி நானும் போனேன்!
..
மூணு நாள் ராப்பகலா
ஊர் முழுசும்
சுத்திப் பார்த்தோம் ..
காலாற களைப்பாற
தெருவோரம் உக்காந்தா
‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ன்னு
காவல் துறை
நீதி பேச
‘புள்ளக்குட்டிக் காரன்’னு
பொழச்சுக்க இடங்கேட்டான் !
இந்தமுறை
இரக்கமின்றி
முட்டியில லத்தி பேச
பொழ பொழன்னு
அழுதுபுட்டான் !
எத்தனையோ வருசமா
அடக்கி வச்ச அத்தனையும்
கண்ணீரா வடிச்சுப்புட்டான்..
இருந்த கொஞ்சம் சில்லரையும்
இன்னிக்கே தீர்ந்து போகும் !
..
அடுத்த வேளை
அரை வயிறு
நமக்குன்னு இல்லாட்டியும்
நாக்கு செத்துப்
போன புள்ளங்க
மூச்சுவிட என்னசெய்ய?
..
முந்தானையில் முகந்தொடச்சி
மயங்கி விழுந்தா
அம்மாக்காரி!
..
சீவனத்த அப்பாக்காரன்
மூக்குபக்கம் கைய வச்சி
பாசமுள்ள பொண்டாட்டி
இருக்காளா போய்ட்டாளான்னு
பதபதச்சி சிதறிப்போனான்!
..
“அரசாங்க ஆஸ்பத்திரி
தூக்கிப் போக
ஆட்டோக்காரன்
ஓசியில வருவானா?
இல்ல
எனக்கிருந்த
ஒரே சொத்த
எருமையில தூக்கிப்போக
எமராசா வருவாரா?
என்னப் பெத்த மகராசி
வுட்டுப் புட்டு போய்ட்டான்னா  
எங்க போயி நானும் நிற்பேன்?
கொள்ளி போடா காசு இல்ல
கொழந்தகள என்ன செய்வேன்?
புண்ணியஞ் செஞ்சவ நீ!
சுமங்கலியா பொறியடீ!
மண்ணுல உன்னவிட்டா
மனுசியினு யாரிருக்கா?
பல வருஷம் முன்னாடி
படுத்துக்க கூப்புட்டான்னு
ஒருத்தன் தலையறுத்து
வந்து நின்னா !
உடம்ப வித்து
பொழப்பவங்க
உந்தன்
கால் கழுவி
குடிக்கணுன்டீ!
என்ன விட்டுப் போறீன்னா
எந்தன் உசிருந்தாரேன்
எடுத்துப் போடீ!
அழுது முடிச்சு
நெஞ்சப் புடிச்சு
சரிந்து விழுந்தான்
அப்பாக்காரன்!
..
இரு உடம்பும்
ஈ மொய்க்க
இறுதிச்சடங்கு
யாரு செய்வா?
புள்ளக்குட்டி இருந்துங்கூட
அனாதப் பொணமா
போயிட்டீங்களே!
..
சுத்தி சுத்தி
நானும் வந்தேன்
கண்ணோரம் ஈரமாக
இப்போதும் வாலாட்டி!
..
செஞ்சுவச்ச அப்பாக்காரன்
கொஞ்சி வளர்த்த அம்மாக்காரி
இனிமே இல்லையினு
புரிஞ்சுபோன பிஞ்சுகளும்
நெஞ்சுல ஏதுமின்றி
மிஞ்சியிருந்த
கொஞ்சம் கண்ணீரையும்
அஞ்சலியாய்
கொட்டித் தீர்த்தன..
அரசாங்க வண்டி வந்து
அலுத்துக்கிட்டு அள்ளிப்போய்
மின்சார சுடுகாட்டுல
சொகுசாக கொள்ளிவைக்க
அஞ்சே நிமிஷத்துல
சட்டியில சாம்பலாக
அண்ணங்காரன் கையில!
..
அத
கரைக்கணுமா ஒடைக்கணுமா
என்னனு தெரியாம
சாக்குப் பையில்
எடுத்துக்கிட்டு
ஊரவிட்டு
வெளிய வந்தோம்!
உச்சி வெயில் கானல் நீர்
கைதட்டி வரவேற்க,
சாக்குப்பையில் கால்வேக
தார் காய்ச்சி
ரோடு போடும்
அன்றாடங்காய்ச்சிகளை
அசதியுடன் கடந்து போனோம்..
..
வெட்டிவச்ச குழியினிலே
புதைக்காம விட்டுவச்ச
இம்மாம்பெரிய வட்டக் குழாய்..
ரோட்டோரம்
தாகத்தோடு தனிமையில்
தவம் இருந்தது!
“இருக்க இடம்
கிடச்சிப்புட்டா
நான்தான்
இங்கிலாந்து இளவரசன்”னு
தெளிச்சலோடு அண்ணங்காரன்
குழாய் வீட்டத்
திறந்து வச்சான் ..
..
வயிறெல்லாம் வத்திப்போய்
வறண்ட நாக்க சப்பிக்கிட்டு
பாசமுள்ள ரோசாங்க
வாசமின்றி வந்துச்சுங்க!
குழாயடித் தண்ணீர
கொஞ்சங்கொஞ்சமா
மொண்டு வந்து
தங்கச்சிங்க தாகத்த
அண்ணங்காரன் தீத்து வச்சான்!
எம்பொழப்பு நாய் பொழப்பு..
இதையெல்லாம் பாத்துப்புட்டு
நானும் ஓர் அண்ணந்தான்னு
உள்மனசு குத்திச்சு!
...
தங்கமான தங்கைகள
தவிக்கவிட்டு வந்துட்டனே!
எங்கபோயி நானுந்தேட?
எங்கம்மா இருக்காளோ?
காக்கி டவுசர் போட்ட மாமா
கார்ப்பரேசன் வண்டியில
கண்ணிவச்சு வந்திறங்கி
ஊசி போட்டு கொன்னுட்டானோ?
மந்திரிவீட்டு மரத்துக்கு
உரமாக்கிப் போட்டுட்டானோ?
எம் மருமகனப் பெத்துப்போடும்
வயசிருக்கும் தங்கச்சிக்கு..
பணக்காரப் பண்ணையாரு
செல்ல நாயா ஆயிட்டியோ?
இல்ல
பாவிப்பய என்னப்போல
பரிதவிச்சு பொலம்புறியோ?
..
வாசம் புடிச்சு
வந்துருவேன்
கொஞ்ச நாளு பொறு தாயி !
எங்கூட இருக்குதுங்க
நம்மப் போல
நாலும் ஒண்ணும்!
..
கரை சேத்து விட்டுப்புட்டு
வந்துருவேன் பொறு தாயி!
அதுக்குள்ள செத்துப்புட்டா
சாமிகிட்ட
போயி சொல்லு..
‘மறு சென்மம் வேணாஞ்சாமி!
படைச்சதுக்கு சோத்தப்போடு!’
..
இத்தனையும் பொலம்பிக்கிட்டு
கண் திறந்து பாத்தமுன்னா
ஒத்தயடிப் பாதையில
ஒரு கூட்டம் ஊர்ந்து போச்சு !
தெருக்கூத்து கூட்டம் போல
இசையோட சேர்ந்து போச்சு !
பின்னாடியே பசைபோட்டு
நாங்களுந்தான் ஒட்டிக்கிட்டோம்..
..
அன்னிக்கி ராத்திரி
அரிசிக்கஞ்சியும் அப்பளமும்!
ரொம்ப நாள் ஆச்சுதேன்னு
ஒரு புடி புடிச்சிட்டோம்
..
ரெண்டு பேரு மத்தளமும்
ரெண்டு பேரு தப்பட்டையும்
தட்டித் தட்டி
தாளம் போட
நாலு கம்பு நாட்டி வச்சு
கயிறு ஒண்ண கட்டி வச்சான்..
எங்கிருந்தோ பறந்து வந்தா
இடுப்பில்லா சிங்காரி!
சரசரன்னு மேல ஏறி
ராணியாட்டம்
ஒய்யாரமா
கயித்துமேல நடந்துபோனா..
..
வளையத்துல துணிய சுத்தி
கிஸ்னாயில கொஞ்சம் ஊத்தி
நெருப்ப வச்சான் குள்ள ராசா!
அத
கழுத்துலயும் இடுப்புலயும்
மாறிமாறி மாட்டிக்கிட்டு
பம்பரமா சுத்தி வந்தான்
மீசைக்கார பெரிய ராசா!
கத்தி ஒண்ண உருவிக்கிட்டு
அத
தீப்பறக்க தீட்டிக்கிட்டு
வாய்வழியா வயிறு வர
சொருகிக்கிட்டு உருவி எடுத்தான்..
எல்லாத்துக்கும் எசப்பாட்டு
ஏத்திக்கட்டி பாடினாரு
வெள்ளைமுடி கொள்ளுத்தாத்தா..
மயில் போல வளைஞ்சாடி
வட்டம்போட்டு நின்னாங்க
அக்காங்க மூணு பேரு
அத்தைங்க ரெண்டு பேரு!
..
 “புதுசா வந்திருக்கோம்
எங்களையும் சேத்துக்குங்க!”
ஆறு பேரும் போயி நின்னோம்
அழுகையெல்லாம் மறந்து நின்னோம்..
..
மூத்த அக்கா
பக்கம் வந்து
“அச்சச்சோ”ன்னு அள்ளிக்கிட்டா..
..
வித்தையத்தான் கத்துத்தந்து
விதியத்தான் மாத்திவிட்டா..
..
“வாழ்க்கையின்னா இதுதான்”னு
வாலக் கொஞ்சம் ஆட்டிக்கிட்டு
கயிறு மேல நான் நடந்து
கம்பீரமா கத்திச் சொன்னேன்
கடவுளுக்கும்
நன்றி சொன்னேன்..
....
...
..
(22-03-2009-ல் எழுதியது)

No comments:

Post a Comment