Thursday, January 10, 2013

கவிஞனின் பிறந்தநாளும் கண்ணம்மாவின் கைக்குட்டையும் ..

உன் ஆசைகள்
ஒவ்வொன்றும்
நீ பிறப்பிக்கும் அற்புதம் !
அவை நிறைவேற்றுதல்
என் ஜென்ம பாக்கியம் ..
என் நள்ளிரவு
புத்தக வாசிப்பின் ஊடே
நீ என் தோளில்
சுகமாய் சாய்ந்திருக்க
உனையும் சேர்த்து
வாசித்தலும் ...
மாலை மயங்கி
நமக்கேயான இரவு
என் புதிய கவிதைக்கான
வார்த்தைகளை
வான வெளியில்
வீசித் தெளிக்க
சாரலின் ஊடே
சன்னலோரம் நானும்
பின்னிருந்து
தொட்டும் தொடாமல் நீயும்
கவிதைக்கான நேரம்
காக்க வேண்டி விரைந்து
உன்னை இழுத்து
உச்சியில்
முத்தம்  வைக்க
"அவ்ளோதானா?" என்று
வழக்கமான உன்
வசீகரிப்பை வீசுவாய்..
நானும் வீழ்ந்ததாய்
நடித்து - என்
மடியில் உனக்கொரு
வாய்ப்பு தருவேன்
ஏதும் பேசாமல்
எனைப் பார்த்து
இருந்து கொல்வாய் ..
காமத்தில் கவிதையை
கலவி செய்து
நான் விழித்திருக்க
வேண்டுமென்றே வேண்டாத
சீண்டுதலை
என் மீது
ஏவித் தொலைப்பாய்...
தோழிகளிடம் பேசுதலையும்
வேலை நேரத்தின்
தொலை பேசி தவிர்த்தலையும்
இன்னும் சில
இத்யாதிகளையும்
"என் கிட்ட மட்டுந்தான்
இப்படி இருக்க!"
என்றும் - பின்
"உனக்கு உன்
பிரண்ட்ஸ் தான் முக்கியம்
நான் இருந்தா என்ன?
இல்லாட்டி என்ன?
நான்தான் பைத்தியமா
பொலம்பிட்டு இருக்கேன்"
சொல்லி முடித்து
உன் செல்லச் சிணுங்கலை
சிந்தித் தொலைப்பாய் ..
என் பொறுமை
உனக்கே தெரியும்
முடிஞ்ச வரை
சொல்லிப்பார்த்து
முடியாமப் போகும்போது
"பளார்"ன்னு ஒண்ணு
போட்டு வைப்பேன்..
"இத வாங்க
நான் என்ன பாடு
பட வேண்டியிருக்கு " ன்னு
தலை தூக்காம
கிசுகிசுப்ப ...
உன்ன என்ன சொல்ல ?
நாடி நிமிர்த்தி
நேரா உன்ன பார்த்தா
என் கண்
நிலை குத்திப் போகும்
நேரம் தெரியாம
உள்ளூர உறைஞ்சு நிப்பேன்...
"என்ன அடிச்சுட்டேல்லா
இப்ப என்ன
செய்யப்போற?" என்பாய்
ஏதும் பேசாம
கைகோர்த்து
உனை இழுத்து
நம் வெள்ளை வண்டில
வெளியே கூட்டிப் போவேன்
"எங்கடா போற?"ன்னு
விடாம நச்சரிப்ப..
நச்சரிப்பா அது ?
இல்லாட்டி
உலகின் மொத்த இசையின்
உச்சரிப்பா?
"உனக்கே தெரியும்
எங்க போறோமுன்னு
என் ஜென்ம சனி
எனைப் பிடிச்ச
இடத்துக்கு " என்பேன்
இறுக்கமா கட்டிக்குவ..
..
கடற்கரை..
உன்னில் நான் கரைந்த
உலகின் அதி உன்னத இடம்..
...
உன் தலை
மட்டும் என்னில் சாய
நினைவலையில்
நீந்தியிருப்போம் ...
உனக்குப் பிடித்த
அத்தனைப் பாடலையும்
பாடி முடித்து
"போலாமா?" என்பேன்
நீ
கடலை கை காட்டுவ
நான்
தலையில் அடித்து
"வந்து தொலை !" என்பேன்
...
கடல் நடுவே
நடு இரவில்
நீயும் நானும்
என் தோழன் தயவில்
தனி கட்டுமரத்தில்
...
நிலாவற்ற வானத்தில்
உன்னோடு நான்
நிசப்தத்தில்
நிறைந்திருக்க
"என் பேரை சொல்லுடா!" என்பாய்
"கண்ணம்மா" எனும்போதே
கரகரத்துப் போவேன்
கழுத்தைச் சுற்றி
அரவணைத்து
அநியாய அழகோட
கண்ணப் பார்த்து
"எனக்காகப்
பிறந்த நாள்
வாழ்த்துக்கள் கண்ணா!" என்பாய்
...
என்னை ஏதும்
பேச விடாம
மூச்சுமுட்ட
முத்தத்தில மூழ்கடிப்ப...
...
முடிச்சுக்கலாம்
கண்ணம்மா
இந்தக் கவிதை
இதுக்கு மேல வேணாம்...
இன்றைய பிறந்த நாள்
உன்
கைக்குட்டையோடு...
...


 

No comments:

Post a Comment