Tuesday, January 1, 2013

முதல் வாசகியின் முடிவு...

என் முதல் வாசகி
உனைப் பார்த்து
பொறாமை கொள்கிறாள்
கண்ணம்மா!
உனக்காக
நான் எழுதி
கிழித்துப் போட்ட
காகிதத்துடன்
காலங்காலமாய்
கவிதை பேசித்
தவிக்கிறாளாம்...
ஒன்று விடாமல்
ஒப்புவிக்கிறாள்...
உன்னை ஒரு முறையேனும்
பார்த்தால் போதுமாம் ...
பின்...
உன் கால் பாதத்தின்
மெல்லிய தடத்தில்
ஒரு முறை
நடந்து பார்க்க வேண்டுமாம்...
நீ வீசிஎறிந்த
வாடிய பூக்களுக்கும்
எதோ வசீகர
வாசம் இருக்கிறதாமே?
இன்னும் ஏதேதோ
உளறிக் கொட்டுகிறாள்..
இவள் வாயடைக்க
வசமாக ஏதும்
சொல்லிப்போ கண்ணம்மா
இல்லை,
இவள் முன்
என் கரம்கோர்த்து
ஓர் கவிதை செய் ..
கண்ணாரக் கண்டு களிக்கட்டும்..
சில நேரங்களில்
உனைப் போல
உடுத்திக்கொள்கிறாள் இவள் ..
ஒய்யாரமாய்
ஒவ்வாத ஒப்பனையுடன்
அன்ன நடையும்
பயில்கிறாள்..
இல்லாது இருக்கும்
உன் இடையின் இளமை
இவளுக்கும் வேண்டுமாம்...
இதழில் இமைக்கிறாயாமே ..
இதென்ன
எனக்குத் தெரியாமல் ?
இவள் ஏதேதோ
உனைப்பற்றி
என்னிடமே
வருணிப்பதாய்
வசமாய் நடிக்கிறாள்..
நீயும் நானும்
இவளின்றி இல்லையாம்...
உனக்கான என் கவியும்
இவளது
முதல் சுவைப்பில்தான்
முற்றுப்பெறுகிறதாம்...
போதும் ..
இனியும் இவள்
இதுபோலப் பேசி
உனக்கான என்
கன்னிக் காதலை
கொச்சை செய்ய வேண்டாம்..
பிழைத்துப் போகச் சொல்..
இல்லை
என் கவி சொல்லும் பேனா
இவள்
இதயத்தின் மீது
கண்ணீர் அஞ்சலி
எழுதிச் செல்லும்...
...



No comments:

Post a Comment