Thursday, June 20, 2013

பனித்துளியின் கருணையில்..

நீண்ட நாள் வாட்டிய
தனிமையிலிருந்து தப்பித்து
எண்ணமற்று
சோகத்தின் அடி ஆழத்தில்
அசையாது நிலைத்திருக்க
எங்கோ சென்று
ஒளிந்து கொண்டான் கவி!
விடாது விரட்டிய
எண்ணங்களுக்கும் அவனுக்கும்
இடையே - பெரும்
போராட்டம்..
'பணயமாக மானத்தைக் கொடு' என
எதேச்சையாக கேட்டு
தீர்க்கமாகப் பார்த்தன எண்ணங்கள்..
இல்லை,
'உறக்கமற்று கொடுங்கனவில்
தொலைந்து போ' என
ஏளனம் வேறு..
கனவின் சாட்சியாக
சில எண்ணங்கள் பல்லிளித்தன..
மறைத்த குரல்கள்
முன்பு எப்பொழுதையும் விட
துல்லியமாக
காதருகே ஒலித்தன..
மறந்த சில முகங்களும்
சமயம் பார்த்து
வெடுக்கிட்டு திரும்புவதாய்த்
தோன்றின..
சுகம் கொடுத்த
வருடிய நகங்களும்
முகம் மறைத்து
மோகத்தில் மூழ்கடித்த
கருங்கூந்தலும் கூட
தொலைதூரத்தில்
தப்பித்து ஓட,
விட்டுச் சென்ற வாசம் மட்டும்
விடாமல் வதைக்கிறது..
 காலடியில் ஈரம் சேர்க்கும்
பனித்துளியின் கருணையில்
நிறுத்தி வைத்திருந்த கவிதையை
எழுத எத்தனிக்கிறான் - கவி!