Tuesday, January 8, 2013

விதியின் விபச்சாரம் ...

இஷ்டமில்லா இரவில்
இணைந்து போன
நிமிடங்களில்
என்னுள் இறங்கிப் போன
விஷம் தாங்கி
அன்று தொலைத்த
விடியலைத் தேடி
இன்று வரை
நானும் - என்
வியர்வை காயா
பச்சைப் புடவையும்
...
மார்புக் காம்பை
வருடும் ஒவ்வொரு முறையும்
ஏமாந்து கதறும்
என்னவளின்
எதிர்காலம் எங்கே?
முதலில் நிகழ்காலம் எங்கே?
...
சார்ந்திருக்க நினைத்து
சாதாரணமாய்
சாய்ந்து கொடுத்து - பின்
சாவதே மேல்
என்பதாக முடிகிறது
பெரும்பாலான பிறப்புகள்....
..
வீம்பு பிடித்து
ஒற்றைக்கால் காதல்
வென்று வாழத்துணிந்து
வாலிபம் வீழும் வரை
வார்த்தைகளிலும்
வசியங்களிலும்
மயங்கியிருந்து
பின்
ஏன் எப்படி எதற்காக
என்ற கேள்விகளில்
வேள்வி வளர்த்து
வரங்களை சாபங்களாக
சமைத்து
ருசி நீக்கி
ரசனை நீங்கி
வாழ்வதற்கான ஆசை
வற்றிப் போய்
ஒன்றுமற்றுப் போகும்
ஓர் நொடி விபரீதங்கள்
...
வசதியும் வாய்ப்பும் இனிக்க
பின் வசதியான வாய்ப்புகளும்
வரிசையாய் விலை பேச
வாடிக்கையாய் தொடங்கி
விற்றுச் சலித்து
இன்று
வெற்றுச் சூழலில்
வசை பேசித் திரியும்
வேடிக்கையும்  வேதனையும்
தொட்டுத் தொடரும்
துர்மரணக் கனவும்
தீண்டா தூரமும்
திகட்டும் அண்மையும்
சொல்லவொண்ணா சிந்தனைகளும்
சிரிக்க வெறுக்கும்
முரண்பாட்டு மூர்க்கமும்
முடிவை நோக்கிய
பரிதவிப்பு பயணங்களும்
..
கடைசி சொட்டு பாலும்
பாசாங்கும்
பேச்சுக்கு பாசமும்
கொஞ்சமாய் கொள்ளியும்
கூடி நின்று ஒப்பாரியும்
எப்போதுமே ஏங்கி நின்ற
ஒற்றை ரூபாய் நாணயமும்
கடைசியாய் முகம் பார்க்க
யாருமற்ற எவனோ
இல்லை எவளோவும்
இதுகூட இல்லாது
பொணமாப் போகும்போதும்
அனாதையாப் போறதுக்கு
எதுக்குதான் பொறந்தேனோ?
என்னதான் வாழ்க்கையோ?
...
எனக்காக சாமி
அனுப்பி வச்ச சாமி
குப்பையில பொறந்தாலும்
குப்பையாப் பொறக்கல ..
எம்மக மகராசி ..
நான் செஞ்ச பாவமே
நாலு சென்மம்
நல்லாத்தாங்கும்..
எம்மக எனப்பாத்து
நீ தாம்மா பாவமுன்னா..
நாம்படிச்சு பெரியாளா
நல்லா வந்து பாத்துக்கிடுறேன்
நீ எதுக்கும் கலங்காத
 எஞ்சாமி நீதாமுன்னா..
இப்போ
நாடியத்து நான் கெடக்கேன் -மகராசி
நாதியத்துப் போவாளே...
..
வீதியிலே போகும்போது
வேண்டியத வாங்கிக்கோன்னா
"வேணாம்மா வீடு போலாம்
வேற ஒண்ணும் வேணாம்மா
வந்தவனும் போறவனும்
வாடின்னு கூப்பிட்டா
வெட்டிப்போட நான் துடிக்க
வெட்கப்பட்டு நீயும் போற
மானங்கெட்டுப் போறதுக்கு
மாறிப் போலாமுன்னு சொன்னா "
...
அப்போவே போயிருந்தா
எம் மக
அன்றாடம் காய்ச்சியிருப்பா
என்ன சுகம் நானும் கண்டேன்?
எதுக்காக இங்க கிடந்தேன் ?
உடம்புலதான் உயிரே இல்ல
பின்ன என்ன சுகம் கிடக்கு?
விட்டுப்புட்டு போறதுக்கு
உனக்குன்னு ஏதுமில்ல
வேடிக்கை வசமாப்பாத்து
வேசிமக வாடியின்னு
வார்த்தையில உன்னக் கொல்ல
வாய்ப்பு  ஏதும் வைக்க மாட்டேன் ..
வாடி என்கூட
விசத்தோட விசமாக
வேற என்ன நானும் செய்ய
விதியின்னு நொந்துக்கிடுறேன்..









No comments:

Post a Comment