Friday, November 2, 2012

எனக்கான கடவுளே ..கண்ணம்மாவைக் காப்பாற்று ..

எனக்கான கடவுளே
நீண்ட நாட்களின்
உன் மௌனம்
எனக்குப் பிடித்துப்
போகும் போலும்..
உனைக் கண்டுகொள்ளாது
நடிப்பதில்
என் மௌனம்
எனக்கே விசித்திரமாகிறது..
என் இப்போதைய
கேள்விகள் முற்றிலும்
முரணாகவே இருக்கின்றன..
எதிர்பார்த்திரா பதில்களை
எதார்த்தமாக
ஏற்றுக்கொள்கிறேன்...
எது வேண்டுமோ
அதை விட்டுவிட்டு
விட்டுவிடக்கூடியன பின்
வேண்டா வெறுப்புடன்
அலைந்து திரிகிறேன்..
என் கவியும் கூட
எனை வதைக்கிறது
எனக்கான வார்த்தைகள்
வராமல் போக
வசதிக்காக எதையெதையோ
எழுதித்தள்ளுகிறேன்..
என் வாசகனும்
எனக்காக என்
எழுத்தை ஏற்றுக்கொள்கிறான்..
இயல்பாக என்னோடிருந்த
எனக்கேயான இயல்பு
எங்கே போயிற்று?
எனைச் சோதிப்பது
இன்னும் உனக்குப்
பிடித்தமான விளையாட்டா?
உன் இந்த
எல்லையற்ற ஆட்டத்தில்
நான் கரைந்து போவதை
நீ அறிந்தே இருக்கிறாய்..
நான் இல்லாமல் போகத்தான்
எனை இங்கு
இருக்கச் செய்தாயா?
என்னோடு சேர்ந்து
என் கண்ணம்மாவையும்
எதற்கு அலைக்களிக்கிறாய் ?
எங்கோ பஞ்சணையில்
பாவையர் பாதம் வருட
பக்குவமாய் படுத்திருக்கப்
பிறந்தவள் அவள் ..
இன்று என்
பக்குவமற்ற வரிகளைப்
பாரமாகத் தாங்கி
பிறவிக்கடன் தீர்த்துக்
கிடக்கிறாள்..
அவள் பங்குக்கு
அவளுக்கே உரித்தான
அநாயாச கேள்விகளை
அடுக்கி விட்டு விழிக்கிறாள் ..
அவளை அரவணைத்தலைத்
தவிர வேறு
என்ன பதில்
கூறி விட முடியும்?
எதிர்காலம் குறித்த
எத்தனையோ கேள்விகள் ..
ஏமாற்றத்தைத் தவிர
அவளுக்கு நான்
என்ன தந்துவிட முடியும்?
எனக்குப் பிறகு
அவளைக் காப்பாற்று
ஏகாந்தத்திலிருந்து காப்பாற்று
என் வெறுமையிலிருந்து காப்பாற்று
என் மீளமுடியா
துயரின் வன்மை
அவளைத்
தீண்டாமல் காப்பாற்று..
வேண்டுமானால் - உன்
வதைத்தலின் அரசியாக
அவளை
எனைத் தொடர்ந்து
நரகத்திற்கு அனுப்பு...
என் காதல் செய்த
கொடூர சந்தோசங்களுக்கு
அவள்
பழி தீர்த்துக்கொள்ளட்டும் ..
உன் வதைத்தலில்
நொந்து போவதற்குப் பதில்
அவள் காலடியில்
கழிந்து போகிறேன்..
அவள் காரி உமிழும்
எச்சில்
என் பாவங்களைக்
கழுவித் தீர்க்கட்டும்..
உன் இரக்கத்தின்
எடுத்துக்காட்டாக
இந்த ஒரு வரம் மட்டும்
எனக்குக் கொடு..
இன்று  என்னோடு
என் கவியும்
மடிந்து போகட்டும்...
...






No comments:

Post a Comment