Thursday, November 1, 2012

நான் ..பொய்...நீ...கண்ணம்மா


உன் இதயத் துடிப்பை
தொட்டுப் பார்க்க
விரைந்த என் விரல்களை
உன் விரல்கள்
தடுத்து நிறுத்திய இடம்..
அதில் உனக்கான என் முத்தம்..
அடக்கி வைத்த
அத்தனை காதலையும்
மொத்தமாய் முத்தமாய்
எடுத்துப் போ ...
மீண்டு வா..
உன் பங்கிற்கு - என்
உயிரை மீட்டு எடுத்து வா...
....
ஏன் இந்த தூரம்
உனக்கும் உன் உயிருக்கும் இடையில்..
இந்த நொடி ..
உனக்கான என் சுவாசம்
எனை விட்டு
தூரமாக செல்கிறது..
எங்கோ கேட்ட உன் குரல் தேடி..
தேடிக் கொணர்ந்த
ஏழாம் கடலின் முத்து
உனக்கான
என் முத்தத்தின் முன்
மரித்துப் போயிற்று..
...
நீ மரித்துப் போக நேரின்
என் கவிதை நீர்த்துப் போகும்..
என் சுவையும்
என் கவியின் சுவையும்
நீ தானே..
நீ கூறும் ம்ம்ம்-ன் அர்த்தம்
எனக்கு மட்டும் எப்படிப் புரிகிறது?
இல்லை எனக்கு மட்டுமே
நீ ம்ம்ம் பிறப்பிக்கிறாயா ?
என் அத்தனை கவிதைகளையும்
அது விஞ்சி நிற்கிறதே...
...
என் காதல்
ஞானம் அடைந்தது
உன் கண்ணசைவில்..
பாடல் விளையாட்டின்
வேதியல் மாற்றத்தில்...
இன்னும் இனிக்கிறது
அப்போது பார்த்த- உன்
கழுத்தின் சுவாசம்.
நீ பார்க்காமல்
நான் பார்த்த
நம் கவிதை அது..
...
வீட்டுப் போனது நீ இல்லை..
என் வாழ்தலின் மிச்சம்..
விட்டுப் போனதால்
இன்று தொட்டுத் தொடர்கிறேன்..
..
பிறப்பின் வாசத்தை -என்
காதல் மறக்குமா?
மறந்து விட்டாயா என்கிறாயே?
என் காதலின் தாய் நீ..
நினைவில் கொள்..
உன் முதல் முத்தம்
என் முதல் வார்த்தை..
உன் முதல் முத்தத்தில்
நம் காதல் குழந்தை
முதல் வார்த்தை பேசியது..
தமிழில் என் அபிமான வார்த்தை அது..
...
நீ எனைப் பிரிந்ததை -ஒரு
கடிதமாக எழுதுகிறாய் - நான்
உனைப் பிரிந்ததை - ஒரு
புத்தகமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்..
ஆனாலும்
உன் கடிதமே ஜெயிக்கிறது..
புரிந்து கொள்ளுதலைத்
தாண்டிய எழுத்து அது..
நம் காதலுக்கு - மட்டுமே
அது புரியும்..
ஒரு வேளை
நம் குழந்தைக்கும் கூட....
...
உன் கண்ணீர்த்துளி ஏன்
என் முத்தத்துடன் போட்டி போடுகிறது ?
முத்தத்தின் முடிவிலும் கண்ணீர் விடுகிறாய்..
கண்ணீரின் முடிவிலும் முத்தம் கேட்கிறாய்?
இது தான் உன் விழி ஈர்ப்பு விசையா??
என் கவிதையின் முடிவில்
கண்ணீர் விடாதே..
கவிதையை முடிப்பதா?
இல்லை உன் கண்ணீரை முடிப்பதா?
என் கவிதை
உன்னைக் காதலிக்கிறது...
எனக்குத் தெரியாமல்..
...
பொய்யாக நீ சொல்லும்
ஒவ்வொரு பொய்யும்
என் சிரிப்பின் விதை..
என் உயிர்ப்பின் விதை..
என் கவிதையின் அலங்காரம்..
நம் குழந்தையின் திருஷ்டிப் பொட்டு ..
என் கவிதையின் பொய்..
உன் கள்ளக் கோவத்தின் விதை..
உன் கடைசி முறைத்தலின் விதை.
..
அடிக்கடி
இப்படி என் கவிதையை
முடிக்கவிடாமல்
பாதியிலேயே போய்விடுகிறாய்
கண்ணம்மா..
அடுத்த கவிதையின்
ஆரம்பத்தில் சந்திக்கிறேன்.
...



No comments:

Post a Comment