Monday, May 1, 2017

புழுதி வாசம்

காவியத்தலைவன் ஒருவன்
நீண்ட என் பயணத்தில் குறுக்கிட்டான்
ஏதேனும் பேசு என்றான்
அவன் கண்கள்
நிலைகொள்ளாமல்
சுற்றுமுற்றும் அலைந்தன
கைகள் நடுங்க
தண்ணீர் தண்ணீர் என்றான்
எதோ சொல்ல வாயெடுத்தவன்
மயங்கி என்
மடியில் வீழ்ந்தான்
பரபரத்து ஓடி
ஈரத்துணி கொண்டு
விரைகையில்
நூற்றாண்டுகள் பழைய
அவன் ஆடையின் புழுதி
என் கண்முன்
சுழன்று வீசியது
அந்த கணம் தான்
என் கடைசி நினைவு
ஏதோ ஓர் ஓலைச்சுவடியின்
இரு வரிகளுக்குள் சிக்கி
வெளியேறத் தவித்திருக்கிறேன் இப்போது
புழுதி வாசம்
இப்போதும் எனைச்சுற்றி


No comments:

Post a Comment