Wednesday, March 27, 2013

மலைச்சாரலின் வதைப்பு...

மலைச்சாரல் என்றதும்
என்ன நினைவு வரும்
உனக்கு?
...
பின்னின்றிழுத்த கூந்தலா
இல்லை - நான்
சூடிய சூடக் கூடாத பூவா?
அதன் வாசம் தாங்கிய
ஒற்றை முடியை
பத்திரமாய் எடுத்து
நான் கொடுத்த கைக்குட்டையில்
ஒளித்து வைத்திருக்கிறாய் தானே ?
..
நீ "அவ்ளோதானா" என
முதல்முதலாய்
சொல்லிச் சிரித்த நொடி
இன்னும் என் இதயத்தில்
கல் வெட்டாய்
..
"பொய் சொல்லாத" என
பொய்யாய் நீ வீசும்
கோவப் பார்வைக்காகவே
பல பொய்களைச்
சொல்லியிருக்கிறேன் தெரியுமா?
..
கெட்டவார்த்தை
சொல்லித்தரச் சொல்லி
நச்சரித்தாயே ,
நானும்
எனக்குத் தெரிந்தன தவிர்த்து
உனக்காக ஒரு சில
சொல்லிக் குடுக்க,
பின்னாட்களில்
என்னையே திட்டிச் சிரித்தாயே ,
அழகாகிப் போயின கெட்டவார்த்தைகள்,
அவை தாங்கி நானும்
நீ திட்டிய பெருமிதத்தில்
அலாவுதீன் போல
பறக்க ஆரம்பித்தேன்
..
கடுங்குளிரில்
துண்டு பீடி கேட்டாய்..
இன்னும் என்னென்ன செய்தாய்?
எத்தனை காலம் காத்திருந்தாய்
இவையெல்லாம்
என்னோடு செய்ய?
இன்று
இவை யாவும் இருக்க
உனைத் தேடி நான்
எந்த மலைச் சாரலிலோ
சுற்றித் திரிகிறேன்..
..
மாய்த்துக்கொள்ள
முடிவெடுக்கும் கணங்கள் எல்லாம்
எப்படியோ
எதன்மூலமோ
எனைத் தடுத்து
இந்த வாழ்வின் வலியில்
நீடித்து இருக்கச் செய்கிறாய்
...
கவி எழுதி
எத்தனை காலம் தான்
கடத்தியிருக்க?
நீயின்றி தமிழ் கூட
வதைப்பதாய்த் தோன்றுகிறது..
 ..
இந்த நொடி இருளும்
இன்னும் கொஞ்சம்
இருள் சேர்க்கும்
மயங்கிய உன் நினைவும்
வெளிவர முடியா
சுழலுக்குள் - எனை
சிக்கச்செய்ய
நானும்
சிக்கியிருத்தலையே
விரும்புகிறேன்
..
நீயற்றுப் போன நான்
கூடிய சீக்கிரம்
கவியற்றுப்
போக வேண்டும்
எங்கிருந்தோ
வரம் அனுப்பி
வதைத்திரு கண்ணம்மா..
...


No comments:

Post a Comment