Tuesday, March 26, 2013

தூர தேசத்துக் கடவுளின் சேதி..

உலகிற்கு
அதிசய சேதி
கொண்டு வந்த
தொலை தூர
நடைபாதை களைப்பில்
தூதன் துயில் கொண்ட நேரம்
கவிஞனின் முதல் காவலன்
சேதி திருடிக் கொணர்ந்தான்
...
காவியக் களைப்பில்
கண்ணம்மாவிற்கான
காத்திருத்தலின் கடைசி நொடியில்
கவிஞனும் துயில் தேட
முதல் காவலனுக்கு
தானும் ஒரு
முதல் கவிதை எழுதிப் பார்க்க
சின்னதாய் ஒரு ஆசை
...
இருந்து சிந்தனை செலுத்தி
நேரம் பல போயினும்
கவி வராமல் போக
என்னதான் சேதி என
ஏதோ ஒரு ஆர்வத்தில்
துணிந்து பிரித்து
மடிந்து விழுந்தான்
...
ஓசை கேட்டு
ஓடி வந்த கண்ணம்மா
செய்வதறியாது திகைத்து
கவிஞனை எழுப்ப ,
அவனோ
உலகம் புதிதாய்ப்  பார்த்து
திகைத்து நின்றான்
...
கனாவிலிருந்து
கனநேரத்தில்
வெளிவருதல் சாத்தியமா என்ன ?
பின்,
எப்போதோ எழுதிய
அரைகுறை கவிதையை
கவிஞன் போல
கண்ணம்மா நடித்து வாசிக்க
துள்ளி எழுந்து
"உத்தரவு" என்றான்
முதற்காவலன்
...
ஏதும் நிகழாதது போல
வீறுடன் சிலை போல்
நின்ற வீரனைப் பார்த்து ,
'அப்படி என்னதான் சேதி' என
கண்ணம்மா கேட்க,
அடுத்த நொடி
கவிஞனின் காலடிக் காகிதமாய்
கசங்கி விழுந்தாள்
...
தொலை தூர கானகத்தில்
ஏதோ நோக்கத்தில்
எங்கோ செல்வதாய்
தான் கண்ட கனவிலிருந்து
துடித்து எழுந்தான் கவிஞன்..
...
நொடிப் பொழுதில் - அவன்
கண்கள் சாரை சாரையாய்
கண்ணீர்க் கவிதை பொழிய
சேதி அனுப்பிய
தூர தேசத்துக்  கடவுளும்
உருகிப்போனான்
...
உலகின் முதல் மழை
அப்போதுதான் விழுந்தது..
அதில் நனைந்து
புதிதாய் எழுந்தாள்
கவிதைக்குப் பிறந்த கவிதை
கூடவே கவிஞனும்
காதலோடு எழுந்தான்
..
கடைசிவரை
உலகிற்கான சேதி புரியாது
கடமை தொடரப் போனான்
கவிஞனின் முதற்காவலன்..
...

No comments:

Post a Comment