Monday, March 18, 2013

ஒரு துளி மை...

தொலைதூர வெளிச்சம்
இல்லாத நேரங்களில்
சூழ்ந்திருக்கும் இருள்
கடந்து போன நாட்களின்
கழிவுகளை
நினைவுறுத்துவது ஏன்?
...
எத்தனையோ நொடிகள்
எனக்காகவே
இனிமையில் வாழ்ந்திருக்க
அவ்வப்போது சுவைத்த
கசப்பின் மிச்சம் மட்டும்
இன்னும் ஒட்டிக் கொண்டிருப்பதேன்?
...
எதிர்மறை தான்
நிலையானதா?
...
ஒவ்வொரு புல்லும்
புவியீர்ப்பை எதிர்த்துதானே
வளர வேண்டும்..
இல்லை
வளர்ந்திருக்கிறது..
இதன் சூட்சுமம்தான் என்ன?
..
மலர்தல்
மேல்நோக்கிய
சாதாரண நிகழ்வு மட்டுமா?
இல்லை
ஒவ்வொரு மொட்டின்
ஞானமடைதலா?
...
நீரும் காற்றும்
இயல்பாகக் கிடைப்பனவா?
இல்லை
உயிரோடு நீடித்திருத்தல் சார்ந்த
விடாமுயற்சியின் பலனா?
..
கோவத்தில் சிதறும்
ஒவ்வொரு துளி மையும்
படைக்கத் தவறிய
உன்னத கவிதைதான் இல்லையா?
..
விடையிலா கேள்வி
எனத் தெரிந்தும்
சுழல்களுக்குள்
சிக்கிச் சுழன்று வருவதில்
இந்த மனத்திற்கு
அப்படி என்னதான்
சுகமோ?
..
தொடர்பே இன்றி
இங்கொன்றும் அங்கொன்றுமாக
பார்த்த, பார்க்காத
மனித முகங்கள்
தோன்றி மறைவதேன்?
..
நான் படைத்த கவிகளும்
எனைப் படைத்த கவிகளும்
எங்கோ யாரோ
வாசிப்பது கேட்கிறதே!
இது நிஜம் தானா?
..
நெடுநாள் முந்தைய
உச்சகட்ட முடிவின்
நீண்ட நகம் கடித்தல்
கண்முன் விரிவது ஏன் ?
..
உச்சிமுகர்ந்த
உன்னத நொடிகளும்
உச்சகட்ட மௌனமும்
நீடித்த வெறுமையும்
நொடிப் பொழுதும் நீங்கா
கண்ணம்மாவின்
கைப்பிடித்தலும்
இக்கனத்தில் சாத்தியமா?
..
புத்தி பேதலித்தல்
என்பது இதுதானா?
இல்லை
புரிந்துகொள்ளுதலின்
உச்சம் நோக்கிய பயணமா?
தொடர்ந்து
இவ்வுயிரை
தக்கவைத்துக் கொண்டு
எதைத் தாண்டப் போகிறேன்?
..
நிகழ்காலம் கூட
எனக்கு அடிமையாயிருக்க
அடுத்த நொடியின்
நிலைப்புத்தன்மை
எனை ஏன்
இப்படிக் கொல்கிறது ?
இது தான்
இயற்கை எனக்குக் காட்டும்
நியாயத்தின் நிலைநாட்டலா?
...
முடிவற்ற இந்த
முரண்படுதலை
முடித்து வைத்தல்
சாத்தியமா?
முற்றுப் புள்ளிக்குள்
முகம் புதைத்து
ஒளிந்துகொள்ள
இந்த மூடனுக்கு
வாய்ப்பு இருக்கிறதா?
..
எல்லாவற்றிற்கும் மேல்
எது நடந்தாலும்
ஏற்றுக்கொள்வதாய்
சொல்லித்திரியும் எனக்கு
என்னதான் உரைக்கும்?
..
இப்போதைக்கு
இன்னுமொரு துளி
மை சிதறல் மட்டுமே
என்
அடுத்த நொடி  சாதனை ..
பார்க்கலாம்
போரிடத்தானே - இந்தப்
புதிர் வாழ்க்கை
...

No comments:

Post a Comment