Wednesday, March 27, 2013

நமக்கான ஆலமரத்தடி...

இந்த நொடியும்
நேற்றைய அந்த நொடியும்
உனக்காக படைக்கப் பட்டது
கடைசி நொடியில்
கண்ணால் இறுக்கி அணைத்து
பிரிவதுபோல் பிரிந்து
தூரம் செல்லும் வரை
திரும்பித் திரும்பி
துள்ளிப் போகும் - உன்
கண்கள் - அவை
தாங்கிய வசீகரம்
...
ஒவ்வொரு முறை
பிரிகையிலும்
"போ, நீ வேணாம் " என்று கூறி
மீண்டும் வந்து
கட்டிக்கொள்கிறாய்..
வறட்டு கௌரவமா உனக்கு?
அதுவும் என்னோடு!
...
என்னோடு பேசித்திரிகையில்
அவ்வப்போது
அலட்சியமாய்
மிகப் பெரிய
விசயங்களைச் சொல்லி
மெலிதாய் சிரிக்கிறாய்...
நான் வியந்து - உனை
ரசித்து ஆழ்கையில்
தலை தட்டி
மீண்டும் இயல்பாய்
உன் சுட்டித்தனத்தால்
எனைச் சிலிர்க்க வைக்கிறாய்
...
சின்னச் சின்ன சோகங்களை
பகிர்ந்து நீ
தோள் சாய்கையில்
எதைச் சொல்லி
உனை நான் தேற்ற?
உன் மௌனமே எனை
சோகத்தின் அடி ஆழத்திற்கு
இழுத்துப் போகுமே!
பின் உன் சோகமுகம் காண
எப்படி முடியும் கண்ணம்மா?
..
முன்பொரு நாள்
முடியாமல் முணகி
முன் வந்து நின்றாய்..
நான் முடிந்தே போனேனே!
உலகின் மிகக்கொடிய
துயரம் - உனை நான்
சிரிப்பின்றி பார்த்தல் தான்..
..
எதிர்காலம் குறித்த
கவலையோடு
ஒரு கோப்பைத் தேநீரோடு
நமக்கான - அந்த
ஆலமரத்தடியில்
நுனிப்புல் கிள்ளி
எதுவும் பேசாமல்
கழித்த பொழுதுகள்
இன்னும் உள்ளே
உறைந்து கிடக்கின்றன
..
ஒவ்வொரு முறை
கவி எழுதி
ஓய்ந்து சாயும்போதும்
கண்ணிமை மூடும் - அந்த
கணப்பொழுதில்
கழுத்தோடு கட்டிக்கொண்டு
நீ சொல்லும் "கண்ணா" வும்
எனக்கான காதலை
வெட்கத்தோடு கசியும் - உன்
கண்ணீர்த்துளியும்
முன் வந்து நிற்கின்றன
...
பேசிய கணங்களை விட
பேசாமல் கைகோர்த்து
கண் பார்த்திருந்த கணங்கள் தானே
நம்மில் அதிகம்..அழகு
...
நினைவிருக்கிறதா?
நான் வைத்த முதல் முத்தத்தில்
நீ விட்ட கண்ணீரில்
என் கடந்த காலம்
கரைந்து போனது
...
நீ வைத்த முதல் முத்தம்
எனை ஒரு கவிதையாக்க
நீ கவி ஆகிப் போனாய்
...
இன்னும் எத்தனை எத்தனை ?
..
இன்றைய உன்
இத்தனை நேர
மௌனம் கூட - எனை
ஒரு விதமாய்
யோசிக்கச் செய்ய ,
வந்த கவிதையைப் பார்
என்ன சொல்ல கண்ணம்மா?
...


No comments:

Post a Comment