Tuesday, March 26, 2013

போ போய் கவிதைய கட்டிக்கோ..

"நீ அழுதிருக்கிறாயா கிருஷ்ணா?"
இது
அவ்வப்போது
கண்ணம்மா கேட்கும்
கொஞ்சல் கேள்வி..
ஒவ்வொரு முறையும்
விடை சொல்லி
முகம் நோக்காது
திரும்பி நிற்கும் கிருஷ்ணா..
அது ஏனெனத் தெரிந்தும்
வேண்டுமென்றே
"சொல்லு! எதுக்கு அழுத?"
என்பாள்..
உடனே
"அமைதியாய் இரு" என
அழுத்தமாய் சொல்லி
காகிதம் தேடி
தொலைந்து போவான் கிருஷ்ணா..
அவன் மீண்டு வருதலைச்
சீண்டிப் பார்க்க
செல்லச் சதித் திட்டம்
தீட்டிச் சரிந்திருப்பாள்..
நடந்தது மறந்து
ஆசையாய் வந்து
அணைக்கத் தேடி
களைத்துப் போவான் ..
பின்
ஊரின் ஓரமாய்
ஒதுங்கிப் போன
ஒற்றையடிப் பாதையில்
சீட்டியடித்து
சிறுவருடன் சண்டையிடும்
சுட்டிப்பெண்ணாக
வேடம் கட்டி
அழகு கூட்டி
தேடி வரும் கிருஷ்ணாவை
கண்டும் காணாது
கடுப்பு செய்வாள்..
கெஞ்சுதலின் உச்சத்தில்
அவள் கால்தொட்டு
கண்ணொற்றி
அவனும் நடிப்பான்..
"அய்யய்யோ" என
கண் கலங்கி,
மீண்டும் சிணுங்கி ,
"போ, போய் நிலா புடிச்சு வா"
என்பாள் ..
அவனும் தாவிப் போய்
கண்ணாடி கொணர்ந்து
"பாத்துக்கோ என் நிலா " என்பான்..
"இதுக்கு ஒண்ணும் கொறச்சலில்ல"
என மேலும் சீண்டி
"என்ன அழ வச்சவன் தானே நீ
போய் உன்
கவிதையையே கட்டிக்கோ" என்பாள்
ஒரு நொடி
தாமதித்தாலும்
இந்தப் புள்ளி மான்
துள்ளி ஓடுமென
தெரிந்து லாவகமாய்
பின்னிருந்து அணைத்து
"போதும் போதும்
இன்னிக்கு கவிதை,
வா போலாம்" என
இந்தக் கவிதையையும்
முடித்து வைத்து
கவிஞனுக்கு
கனாக் காண நேரம் ஒதுக்கி
மறைந்து போவான் கிருஷ்ணா..
...








No comments:

Post a Comment