Friday, March 29, 2013

கடைசி மாலைக்காக...

ஒரு காலைச் சூரியனைப்
பார்த்து பெருமூச்சுவிட்டு
புல்லின் மேல்
இறந்து கொண்டிருந்த
அந்த ஒற்றைப்
பனித்துளியோடு - நான்
ஏதேதோ பேசிக்கொண்டிருந்தேன்..
இடையிடையே
இரைச்சலா இசையா
எனத் தெரிந்துகொள்ளவியலா
ஏதேதோ சத்தங்கள்..
வாழ்க்கை தேடி
சில கால்களும்
வாழ்க்கையைத்  தொலைத்து
தேடுவதை நிறுத்திக் களைத்த
சில கால்களும்
காரணம் தெரியாது
எதற்கோ
யோசித்தலின்றி
விரைந்து ஓடும்
சில கால்களும்
இன்னும்
பற்பல இயக்கங்கள்
இயல்பாய் இருந்திருக்க,
நான் மட்டும்
நிலை குத்திய கண்களுடன்
சிந்தனைகளின் எண்ணிக்கை
குறைந்து சூன்யம் நோக்கி
விரைந்து கொண்டிருந்தேன்..
அவ்வப்போது தழுவிச் செல்லும்
அப்போது பிறந்த தென்றலும்
வாழ்க்கையைக் கூவி விற்கும்
சிறகொடிந்த வாண்டுகளும்
எத்தனையோ முகமறியா கால்களின்
தொடர்பில் தெறித்து - என்
முகமூடியை அர்ச்சித்த மண்ணும்
எனையறியாமல் - நான்
குவித்த மண் குவியலும்
கால் புதைந்த ஈரமும்
இன்னும்
சிதைந்து தெளிவின்றி
வராமல் வந்துபோன
காட்சிகளும் - கண நேர கற்பனையும்,
எந்த வதைப்பிலிருந்து
எனைக் காப்பாற்ற
இப்போராட்டம்?
இல்லை,
காப்பற்றப்படுதல் என்ன
அவ்வளவு எளிதானதா?
வேண்டி விரும்பி
மாட்டிகொள்வதும் - பின்
விழி பிதுங்கி
வழி தெரியாது நிற்றலும் தான்
இந்த வாழ்க்கையின் சூட்சுமமா?
இதைக் கடந்து
மகிழ்ந்திருத்தல்
வாய்க்கப்பெறுதல் என்ன
அவ்வளவு கடினமா?
கனமின்றி சுகமாய் சுற்றித்திரியும்
எத்தனையோ உயிர்களின்
மத்தியில் தானே நானும்
நொடிக்குநொடி
தள்ளாடிப் புலம்பித் திரிகிறேன்..
முடிவு தேடிக் கொள்ளும்
தைரியமும் இல்லை..
முன்னோக்கிப் பாயும்
துணிச்சலும் இல்லை ..
எக்காளங்களின் மத்தியில்
மேடை போட்டு
எதற்காக இந்த
நாடக அரங்கேற்றம்?
எப்போது கிடைக்கும்
எனக்கான கைத்தட்டலும்
மாலை மரியாதையும்?
இல்லை
கடைசி மாலைக்காகத்தான்
இந்தப் பரிதாபப் பயணமா?
..
 





No comments:

Post a Comment