Wednesday, July 24, 2013

கண்ணம்மாவின் காகித முத்தம்

தொலைதூரப் பூக்களின் வாசத்தையும்
வரப் போகும் வானவில்லின் வனப்பையும்
வசதியாய் கவியிருத்தி,
உறக்கமற்ற வேளைகளின்
அலைக்களிப்பையும் - இன்னும்
இடையறாது துரத்தும்
இயல்பான சிரிப்புகளையும்
ஏற்ற இறக்கங்களையும்
இம்சித்திருக்கும்
இஷ்ட தெய்வங்களையும்
மறந்திருந்து ,
இருத்தலை மெய்ப்பிக்க வேண்டி
கண்ணம்மாவின்
கடிதம் தேடி
காத்திருக்கும் கவி!
..
இடையிடையே வந்து போகும்
உன் லேசான புன்னகையும்
குறும்புப் பார்வையும்
அன்றைய இரவின்
அயில மீன் கொழம்பும்
நிலா வெளிச்சக் கண் சிமிட்டலும்
கை கோர்த்த கண நேரமும்
நமக்குப் பின்னால்
ஒளிந்துகொண்ட வெட்கமும்
ஏதோ நான் உளறப் போய்
வருத்தி நீ
வெளிப்படுத்திய
வேண்டாக் கோபமும்
தொடர்ந்த விவாதமும்
முடிவாய் வந்து நின்ற
மௌனமும் - அதைச் சார்ந்த
இஷ்டமில்லா இடைவெளியும் ,
இப்போதைய
கண்ணம்மாவின் இல்லாதிருத்தலும்
கவியின் காத்திருத்தலை
கடினமாக்கி நிற்க,
கலங்கியிருத்தலை
கடந்திருக்க வேண்டி
கண் மூடி நொடிதோறும்
வடக்கிருந்தான் கவி!
...
கடிதம் வராது
கனவு வந்தது
...
நேற்றைய பொழுதின்
நிறைவேறா ஆசையாய்
ஆதங்கமாய்
கண்ணம்மா மனதில்
ஏதோ ஒன்று..
அவள் இமையில்
ஒளிந்திருந்த சோகத்தை
சுலபமாய் உணர்ந்து
சுண்டு விரல் பிடித்திழுத்து
"என்ன ஆச்சு?" என்றான் கவி.
...
வழக்கமான "ஒண்ணுமில்ல"
தவிர்த்து தந்திரமாய்
தலை குனிந்து கண்ணம்மா!
...
கவியும் நமுட்டுச் சிரிப்புடன்
"என்னன்னு சொன்னா,
இன்னொன்னு தாரேன்"
என்று வழிய,
"போ! உனக்கென்ன
என்னப்பத்தி !" என்றாள் ..
"சரி போறேன், விடு!" என்று
கடைசி யுத்தியை
கச்சிதமாய் வீச,
"நேத்து பூவாகிப் போனியாமே?
யாரோ சொன்னாங்க " என்றாள்

"ஏன் உனக்குத் தெரியாமலா?"

"யாருக்கோ தான எழுதின,
எனக்கென்ன?" என்று
கண்ணால் கண் ஊடுருவி
கேள்வியாய் மாறி நின்றாள் ..
..
மூக்கு நுனி கோவத்தில்
"என் கவிதைய
கேவலப் படுத்துறியா ?"
சிவந்து நின்றான்
கவி,
காதலில்!
..
"எனக்கு எழுதுனா
கவிதைல எங்க என் பேரு ?"
என்று தாவணி நுனியால்
விழுவதற்கு முன்
கண்ணீர் தாங்கி
கச்சிதமாய்
கனம் கூட்டினாள்
...
பதிலற்ற நேரங்களில்
பாவம்!
என்ன செய்வான் கவி!
இடைவெளி குறைத்து
உயரம் தாழ்த்தி
அவள் தலை நிமிர்த்தி
கண் ஈரம் உலர
லேசாய் ஊதி
பின்
இறுக்க அணைத்து
"அட பைத்தியமே!
நீ வேற, என் கவிதை வேறயா?
நீ என் கூட இரு,
நான் எதுக்கு
கவிதை எழுதப்போறேன்?
நீ அப்பப்போ விட்டுப் போற,
நான் உன்ன எழுதி
என்னுள் இருத்திப் பாக்கிறேன்!
அவ்ளோதான் என் கவிதையெல்லாம்..."
என்று
அவனுக்கே தெரியாத
உன்னத உண்மையெல்லாம் சொல்லி
இன்றைய பொழுதின்
இதமான உறக்கத்திற்கு
கண்ணம்மாவை
அழைத்துச் சென்றான்
அசட்டுக் கவி!
...
கனாக் கலைந்து
கடிதத்தின் வாசம் பிடித்து
பிரித்துப் பார்க்க
"என்னடா?
மறுபடியும் ஏமாத்துறியா ?"
என்று இரண்டே வரி!
..
கீழே
காகித முத்தத்துடன்
கண்ணம்மா!
....



1 comment: