Tuesday, July 23, 2013

நான் பூவாகிப் போகிறேன்

நீ கொடுத்து நானும்
நான் கொடுத்து நீயுமாய்
வாழ்வதால் இந்த வாழ்வு
நமைத் தாண்டி
எங்கோ நிகழ்கிறது...
விரல் பிடித்து சாவதாய் நீயும்
மடி சாய்ந்து முழுதாய்
உறங்கிப் போவதாய் நானும்
கண்ட காட்சிகள்
இன்னும் இந்த
வாழ்தலை புனிதமாக்க ,
தொலைத்த மூச்சை மீட்டெடுக்க
உன் கானத்தில் கரைகிறேன் நான்
நெடுநாளாய் ..
..
நீ கேட்கும் கேள்விகளில் ஒளிந்திருக்கும்
எனக்கான காதலில் – நான்
பதிலற்றுப் போகிறேன்
நீயோ
காதல் முத்தி
கோவித்துப் போகிறாய் ..
..
ஒரு வழியாய்
நினைவு திரும்பி நான்
உனக்கான பதிலை – என்
காதலில் பொதிந்து அனுப்ப
பாவம் உன்
பாசாங்கு கோவத்தில்
அது பொசுங்கி
புகையாய் மாறி – உன்
கூந்தலிடையே மறைகிறது..
உன் வாசம் கூடிப்போன கதை
இது தானோ?
..
வியந்து கேட்கும்போது
வெட்கப்படுகிறாய்
அதில் விழுந்து – நான்
என் வார்த்தைகளை இழந்து
இப்போது உனை
வரைய இயலாது தவிக்கிறேன்..
வாயோரம் எனை
லேசாக வசை பாடேன்
என் வரிகள் உயிர்பெற்று
வெட்கம் கொண்டு – பின்
சுரனை உணர்த்தட்டும் ..
..
வசை பாடச் சொன்னால்
காதல் சொல்கிறாய்..
இப்படி என் உயிரை
அவ்வப்போது
ருசித்துப் பார்க்கிறாயோ?
உன் வார்த்தைகள்
இப்படித்தான் என் இதயத்தின்
கல்வெட்டுகளாகிப் போகின்றனவோ?
..
காதல் கூறி பின்
தலை மேல் கை
வைக்கக் கேட்பாய்
தலை கோதி – உன்
விதி படித்து
நான் மீள்கையில்
மீண்டும் கை பிடித்து
கண் ஒற்றி – எனை
கலங்கச் செய்வாய்..
உன் உச்சி முகர்ந்து
என் உள்ளங்கை ரேகை
உன்னில் பதிக்கின்ற
ஒவ்வொரு நொடியும்
முடியாது தொடர்கின்றது..
..
சிற்சில கோவங்களின் போது
முறைத்து முனகி – பின்
சிரிக்கும் நொடி ஒவ்வொன்றிலும்
என் இதயம் நின்று
பின் துடிக்கின்றது...
நீயோ
இதை அறியாது
அதையே தொடர்கிறாய்..
இப்படி என்னால்
இந்த இதயத்தை
நீண்டநாள்
பொத்தி வைக்க முடியாது
வா, வந்து எடுத்துப் போ ..
..
உனை நான்
உனக்கு உணர்த்த
என் கண்களும்
கவிதையும் இருக்க
என் கைகளுக்குள்
இருந்தால் மட்டுமே
போதும் என்கிறாய்
கை பிடித்து நீ விடாவிடின்
நான் என்ன
இதழிலா கவியெழுத ?
..
“எனை விட கவிதை முக்கியமா?”
எனக்கேட்டு
சிணுங்குகிறாய் !!!
..
ஒவ்வொரு நொடியும்
நமக்குப் பிறக்கும்
குழந்தைதானே
என் கவிதை...
ஆயினும்,
நீ எனக்கு
உயிரும் தமிழுமாய் இருப்பதால்
நம் குழந்தை
உன் காதலின்முன்
தோற்றே போகிறது..
..
எனை
வெளியிலும் உள்ளும் சுமந்து
தள்ளாடி நீ நடக்கையில்
உன் நிழலுக்கு விடுமுறை
..
கவிதையின் உச்சம்தொட்டால்
நீ அழுது அழகு சேர்க்கிறாய்..
உன் ஒவ்வொரு துளி கண்ணீரும்
என் பிரசவ வலி
பாத்து அழு..
..
உன் கண்ணீர் தேற்ற
உன்னருகில் வந்தாலே
என் உடல் முழுதும்
இதழ்களாய் மாறி – உன்
வாசத்தை உறிஞ்சி
நான் பூவாகிறேன்..
நீ எனை முகர்ந்து முத்தமிட்டு
உன் காதல் மொட்டினை
மலரச் செய்துகொள்..
..





No comments:

Post a Comment