Wednesday, July 24, 2013

உனை விட்டுக் கவியாயிருத்தல்

நீ நினைப்பதையெல்லாம்
எழுதி நான்
கவியாகியிருத்தல்
என்ன பெரிய விஷயம்?
நீ நினைக்கப் போவதையும்
நெடுநாள் முன்பே
எழுதி முடித்து
உன் வாழ்வையும்
அது சார்ந்த வனப்பையும்
நமக்குத் தெரிந்த,
நமக்கு மட்டுமே தெரிந்த
ஓர் தனி இடத்தில்
ஒளித்து வைத்திருக்கிறேன்!
..
அதை நீ
தேடிக் கண்டு
மகிழ்ச்சி மிகுதியில்
எனை முத்தமிடத் துடிப்பாய்!
மூவுலகத் தொலைவில் நான்
உனக்கான
எதிர்காலக் கவிதைகளுக்கான
வார்த்தைகளை
நட்சத்திரங்களுக்கிடையே
விதைத்துக் கொண்டிருப்பேன்
...
எனைக் காணாது
நீ தேடித் தவித்து
துக்கித்துப் போய்
விடுகின்ற பெருமூச்சில்
கடலலையும்
இளந்தென்றலும்
ஒரு கணம்
நின்று, யோசித்து
எனக்குச் சேதி அனுப்பும்
...
வேண்டுமென்றே கண்டு கொள்ளாது
காதலைக் கட்டுப்படுத்தி
தொலைவு பல
இன்னும் கடந்திருப்பேன் நான்..
..
நான் கொடுத்த
முக்குளித்த முத்தையும்
மழை நேரத்து
மயிலிறகையும்
மார்பில் அணைத்து
வான் பார்த்து
ஏதேதோ புலம்பி
உறவு தவிர்த்து
அங்குமிங்கும்
புரண்டிருப்பாய் நீ..
..
பசி ஏது ?
தாகம் ஏது?
பகல் ஏது?
இரவேது?
நேற்று ஏது?
இன்று ஏது?
நாளைதான் ஏது?
ஏதுமற்ற ஏதோ ஒன்றில்
கண் பதித்து
நிலை குத்தி
தானாகக் காலாட்டி
விரல் பிசைந்து
சீரற்ற உடை விலக்கி
உள்ளும் புறமுமற்று
உனக்கான என்
முதல் கவிதையின்
முதல் வார்த்தையை
முணகிக் காத்திருப்பாய் நீ!..
...
உன் வலி
என்னில் உணர்ந்து
ஏகாந்தம் வெறுத்துப் போய்
ஏதும் ஓடாமல்
எனையறியாமல்
ஏதோ ஒன்று
உந்தித்தள்ள
விருப்பு வெறுப்பு தாண்டிய
ஓர் உன்னத ஏக்கத்தில்
எனது உயிர்
உனது உயிர் நோக்கி
என் உடல் விட்டுப் புறப்பட்டு
பறந்து போக
பின் தொடர்கிறேன் நான்...
...
எப்போது நம்
அடுத்த சந்திப்பு என்பதை
நமைப் பற்றி
ஏதும் புரியாத
எவனோ ஒருவனோ
இல்லை
எவளோ ஒருத்தியோ
கனாக் காணட்டும்...
...

No comments:

Post a Comment