Wednesday, July 24, 2013

பாவிமகன் நல்லாருக்கட்டும்

எப்படா என்ன
எல்லாத்துக்கும் காட்டுவ?
எப்படா உன் கைபிடிச்சு
ஊரெல்லாம் நடப்பேன்?
...
நமக்குன்னு மாத்தின மோதிரமும்
ஆத்தா கோயில் தாலியும்
எப்படா வெளிய காட்ட?
...
யோசிச்சு பேரு வச்சு
இன்னும் பொறக்காமையே
இருக்காளே உம்பொண்ணு!
...
சாதி சனம் சுத்திநின்னு
சடங்கெல்லாம் செஞ்சுவச்சு
உத்தரவா உரிமையோட
கூட்டிக்கிட்டு போவியா?
இல்ல
எப்பவுமே இப்படியே
என்ன கவிதைக்குள்ள
முடக்கிடுவியா?
...
முத நாள் தொட்டு
நேத்தைய நிலா வரைக்கும்
உன்னையும் என்னையும்
சேத்து வச்சுப் பாத்தது
ஊருக்கு வெளிய
ஒத்தயடிப் பாதையில
சாமியா நிக்குற – அந்த
ஒத்தப் பனமரந்தான்
இன்னிக்குப் போனாலும்
எங்க ஆத்தா போலப்
பாசமாப் பாக்குது
கூட்டிக்கிட்டுப் போனவன்
நல்லாப் பாத்துக்குறானான்னு
கேக்காமக் கேக்குது..
என்னத்த நானுஞ்சொல்ல?
அவனப் பாக்கவே முடியல,
அவன் எங்க என்னப்பாக்கன்னு!
..
அப்பப்போ வானத்தையும்
சும்மாப்போற மேகத்தையும்
பேருக்காச்சும் தூதுவிட்டு
காதலக் காட்டுறானாம்..
கள்ளப்பய அவன்,
கையில சிக்குனா
வசமா தூக்கியாந்து
சிறவச்சு சொகமா
சித்ரவத பண்ணியாச்சும்
குடும்பம் நடத்தப்போறேன் ..
..
மரியாத ரொம்ப உண்டு
பாசத்த சொல்ல வேணா
என்ன கொஞ்சம் கோவக்காரன்
பொசுக்குன்னு அடிச்சுட்டு
பேசாமப் போயிடுவான்
பின்ன கொஞ்சம் நேரம்போயி
அவனாவே வந்துநின்னு
ஆகாசத்தப் பாத்துக்கிட்டே
என் ஆத்தா நீ தாண்டி
தங்கக்கொடமே வாடீன்னு
தெரியாம செல்லங்கொஞ்ச
மானங்கெட்டு நானும்போயி
மாரோட சாஞ்சுக்குவேன்
...
இப்போதைக்கு என்ன செய்ய
ராத்திரிக்கு அவன் நெனப்பும்
காலையில எம்பொழப்பும்
போகிறவர போகட்டும்
பாவிமகன் ,
எங்கிருந்தாலும்
நல்லா இருக்கட்டும்...
...

1 comment:

  1. Anna really Superbbbbbbbbb.......No words to explain my feelings.........Superbbbbbbbbb anna..........

    ReplyDelete