Monday, November 4, 2013

மாயா - தொடர்ச்சி 1


இந்த நொடி – இவன்
எனக்கான மஞ்சள் மலரின்
வாசத்தை நெருங்கியிருப்பான்
...
என் சுண்டு விரல் ஈரம் பட்டு
ஏதோ ஒரு மழைநாளில் – இவன்
சிணுங்கி எழுந்திருக்க
எனையறியாது உந்திப் போய்
இவனுள்ளே விழுந்து விட்டேன் ..
மீண்டு வர முடியாத
அவ்வீழ்ச்சியின் தாக்கத்தில்
என் மனம் சூல்கொள்ள
எந்தப் பூவிலும் இல்லாத
வாசமொன்று எனைப் பிடித்துக்கொண்டது
...
எனக்கும் இவனுக்கும்
மட்டுமே சுவாசிக்க முடிந்த
அவ்வாசத்தின் பிறப்பிடம் தேடி
ஏதுமற்ற ஏழை முதல்
எல்லாம் தெரிந்த வள்ளல் வரை
வானுயர இமயம் முதல்
முக்குளிக்கும் பாடகபுரம் வரை
இருத்தலின் அடித்தளம் முதல்
இல்லாமையின் உச்சம் வரை
இன்னும்
எல்லையுள்ளவை முதல்
எல்லையற்ற ஏதுமற்றது வரை
அலைந்து திரிந்து
களைத்துப் போன பின்னிரவில்
நிலவும் இவனும் தனித்திருக்க
குளிரோடு சேர்ந்து தானும்
ஊளையிட்டு பறந்து வந்த
செஞ்சிவப்புப் பறவையொன்று
இவன் மீது மோதி
மஞ்சள் மலராகி – இவன்
மடியில் விழுந்தது
...
வார்த்தையற்று – என்
வாசம் கிடைத்த மகிழ்ச்சியில்
திளைத்து தூங்கிப் போனான்..
அலைகடலின் மிதத்தலையொத்த
நித்திரை அது..
விழித்தெழுகையில்
மிதக்கும் தீவின்
மஞ்சள் மலரை
எனக்குப் பரிசளிப்பதாய்
இவனுக்குள் பித்துப்பிடித்துப் போனது..
...
இவன் என் கைப்பிடித்து
நின்ற நொடி நினைவிருக்கிறதா?
அந்த நொடி
யாருக்கும் கேளாமல்
என்னருகே வந்து
“மன்னிச்சுக்கோ மாயா”
என்று சொல்லியிருக்கிறான்..
எனக்கே தெரியாமல் – அது
என் மனவெளியில் – ஒரு
புரியாத புதிராக – இன்னும்
சுற்றித் திரிகிறது
...
இவன் கை பற்ற
ஏங்கியிருப்போர் எத்தனை,
அப்படியிருக்க
இவனே வந்து பற்றியதில்
சிலையாகிப் போன நான்
இவனாகியும் போனேன் போலும்..
எதற்கு மன்னிப்பு?
இவன் காலடியில் கிடந்து
காதல் செய்து கிடத்தல்
எனக்கான வரமல்லவா?
இல்லை,
இவனை மன்னிக்கத்தான்
யாரால் முடியும்?
வணங்கா மகுடங்களும்
இவன் வாள்வீச்சும்
சொல்வீச்சும் கண்டு
வாடியிருக்க,
இவனை மன்னிக்க
இவனைப் போலவே
யுகம் பல முன்னர்
வாழ்ந்து போன
வெண்ணைக் கள்ளனாலும்
இயலாதுதானே போகும்..
அப்படியிருக்க,
என்னுள் ஏன் – இப்படி
ஒரு குழப்பத்தை
விதைத்து நின்றான்?
...
ஒரு நாள்
யாருமறியாமல் – இவன்
விட்டு விட எத்தனித்த
கண்ணீர்த்துளியை
கடைசி நொடியில்
கையேந்தி காப்பாற்றி
கண்ணில் ஒற்றி
கண்ணீர் விட்டேன்..
கல்லுக்குள் ஈரம் கண்டு – என்
பேதை மனம் பதைபதைக்க
நடிக்கத் தெரியாமல் நடித்து
ஏதுமற்றதாய்
ஏதோவொன்றை சொல்லிப்போனான்..
அவன் கண்களின்
அப்போதைய வலி
பால் வற்றிய தாயின்
பரிதவிப்பு
...
அமைதியாக நானும்
பின் தொடர,
நிலவு நோக்கி நடந்தவனாய்
தன் நிலவைப் பற்றி
கதை சொன்னான்,
இல்லையில்லை
கவிதை சொன்னான்
கண்ணம்மாவின்
காவியம் சொன்னான்
...
இந்த வரி எழுதி முடிக்கையில்
சராசரி பெண்ணின்
அத்தனை வன்மமும்
பிடிப்பும் பிடிவாதமும்
என்னுள் உச்சநிலை தாண்டி
உயிர் வலி கொடுக்கிறது..
இருந்தாலும் – இவன்
என்னுள் விதைத்துப் போன
ஒவ்வொரு நொடி வாழ்தலும்
இவன் கரம்பிடித்து
என் வாழ்தலை
நீட்டித்துச் செல்கிறது...
...

2 comments:

  1. Oi semma sushil... i read 5 times... true love a feel panna mudiyuthu...
    ithe maathiri neraya yeluthu.... excellent lover and writer u r bcoz u r feeling and loving the love... semmayo super by SHERIE

    ReplyDelete
  2. அ. ஸ்ரீதாகுமார்January 11, 2014 at 7:39 PM

    இனிய கவிதை மா

    ReplyDelete