Tuesday, February 12, 2013

விரைந்து வா கிருஷ்ணாவை மீட்டெடு...

என்றோ எழுதிய
ஈரப் பூங்காற்றின்
அழகியல் ரசித்து
என்பால் வலிய விழுந்து
என்னுள் ஆழ்ந்து
என் கவி ஊடுருவி
சுவை சேர்ப்பதாய்
வலி சேர்த்து
நீயே கவியாகவும்
மாறிப்போனாய் ..
மீண்டு வாரா
இந்த வாழ்தலில்
உனக்கேன் இத்தனை பிடித்தம்?
உனைக் கரைத்து
ஒவ்வொரு நொடியும்
எனக்கான வார்த்தைகளை
வெளித்தள்ளுகிறாய்
உள்ளூர படிந்து கிடக்கும்
உன் சார்ந்த
உணர்ச்சிப் படிமங்களை
பொறுக்கியெடுத்து
பதமாய் பதம் சமைத்து
எங்கோ எனக்காக
ஏங்கித் தவித்திருக்கும்
ஏகாந்தத்தை நோக்கி நான்
கவி புனைய..
கண் அசைவிலா
கவிதையொன்றை
கணப்பொழுதில் என் முன்
வீசியெறிந்து
விடை கேட்பாய் நீ...
விட்ட கவி
தொட்டும் தொடாமல்
கருத்து சொல்ல
உன் தாக்குதல் கண்டு
தன்னிலை மறந்து
வீழ்ந்து படுவேன் நான்..
வென்றதாய் மெல்லச் சிரித்து
என் கவியின் மீது
கடைசி பூச்சு
உன் பூவிதழால்
செய்வாய் நீ....
அவ்வப்போது
அமைதியாகத் தோன்றினாலும்
உன் வேறுபல
உருவங்கள்
நான் அறிந்ததே...
சமீபத்திய
கவிஞனின் சோகம்
உன் சார்ந்ததா?
இல்லையா?
இதை நீ ஆராய்ந்து முடிக்கையில்
கவிஞன் முடிந்து போயிருப்பான்..
கண்ணம்மா சார்ந்த எதுவும்
இப்போது அவனை
தட்டி எழுப்பத் தவறவில்லை தான்..
ஆயினும்
ஆழ்ந்து ருசித்த
சோகத்தின் சுகத்திலேயே
சுருண்டு கிடக்கிறான்
உன் கிருஷ்ணா..
இந்த ருசி
இவன் இதுவரை
பார்த்திரா ஒன்றாகிப் போனதால்
எதையும் முழுமையாய்
வாழ்வதாய் கொண்ட
நோக்கம் தழுவி
இன்னும் இறுக்கமாய்
இதனுள்ளே மூழ்கிப் போகிறான்..
எதுவும் யாரும்
நீயும் - இல்லை
இவன் பால்
கவி கொடுத்த
கடைசி மேய்ப்பனும்
அவன் சந்ததி வந்த
எந்தக் கொம்பனும்
இவன் இந்நிலை
மாற்றல் சாத்தியமன்று..
ஒருவேளை
இவன் என்றோ
எழுதி வெறுத்து
உள்வாழ்ந்து
ஒதுக்கி வைத்த
ஒன்றும் விளங்கா
கவிதையின் உறுத்தல்
இவனைத் தட்டி
எழுப்பக்கூடும் ..
ஆனால்
அதைக் கொணர்ந்து
இவன் முன்
வீசியெறிய
இன்றைய உன் நிலை
போதாது கண்ணம்மா..
உன் முதல் பார்வையையும்
முதல் வார்த்தையையும்
மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்து
விரைந்து வா?
மூர்ச்சையடையும் முன்
இந்த
மூர்க்கக் கவிஞனை
மீட்டெடுக்க
முயன்று பார்ப்போம்..
..


No comments:

Post a Comment