Saturday, February 25, 2012

எனைக் கொல் கண்ணம்மா

எனக்கான என் தேவதையே
எதைக் கொண்டு வந்தாய்
எனைக் கொன்று செல்ல
கொண்டு செல்ல
உன் அழகான இதழ்களின்
ஓரப் புன்னகையையா ?
உன் சுருண்டு நீளும் கூந்தலின்
மர்ம வாசத்தையா ?
உன் மூச்சுக் காற்றின்
மூர்க்க காதலையா ?
உன் விம்மித் தவிக்கும்
விடை தெரியா சோகத்தையா ?
உன் பதுங்கித் தாக்கும்
பருவத் தேகத்தையா ?
வருடித் தீர்க்கும் - உன்
வசிய விரல்களையா ?
இதனை இதனால்
என்றெல்லாம் பேசித் துணிந்து
போயும்போயும்
எனைக் கொன்று செல்லவா
இத்தனை போர்த் தந்திரமும் ?
முதல் பார்வையிலேயே
உன் எண்ணத்தை
என் மீது
வீசி எறிந்திருக்கலாமே...
முழு மனதோடு - உன்
காலடியில்
மூர்ச்சையடைந்திருப்பேனே.....
இருக்கட்டும் ...
உன் உலகில்
நானும் ஒரு
தேவதையாகி - உனைச்
சுற்றி வருவேன்...
அப்போதாவது - உன்
பாசாங்கு மனதில்
ஒளிந்திருக்கும்
எனக்கான காதலை
ஒரே ஒரு துளி
கண்ணீராய்
காட்டி விட்டுப் போ...

No comments:

Post a Comment