Tuesday, January 6, 2015

நீயற்ற நம் கனவு

 அந்த வறண்ட நிலத்தின்
நிழல்களற்ற வெளியில்
குளிர் காற்று தேடி
தொலை தூரம்
பறந்திருந்தேன் நான்..
...
நீண்ட நாட்கள்
காத்திருந்த மௌனமும்
வேண்டுமென்றே தனித்திருந்து
எனை நானே
வதைத்துக் கொண்ட வலியும்
நீ விட்டுச் சென்ற
ஒரு பிடி மண்ணும்
அது சார்ந்த பாரமும்
கடக்க வேண்டிய தூரமும்
இமைகளை அழுத்தி
எனை பூமிநோக்கி இழுத்த
உறக்கமும் – எல்லாமும்
ஒன்றாய்ச் சேர்ந்து – எனை
வீழ்த்தி – அந்தப்
பாலைப் புழுதியில் – என்
மொத்தத் திமிரையும்
மண்ணோடு மண்ணாக்கின...
...
அதுவே என்
கடைசி நாளாய்
இருந்திருக்கக் கூடும்..
அவ்வளவு சீக்கிரம்
எனை நீ
சொர்க்கத்துக்கு
அனுப்பி விடுவாயா என்ன?
...
மீண்டு விழிக்கையில்
தொலை தூர மேகத்தினூடே
முகம் காட்டாது
எனை விலகிச்
சென்றிருந்தாய் நீ...
...
கூவி அழைக்கத் துடித்த
என் நாவும் – கூடப்
பறந்துவரத் தவித்த
என் உயிரும்
செய்வதறியாது
தரையில் தத்தளிக்க
எதையும் கண்டுகொள்ளாமல்
உன் விலகியிருத்தலைத்
தொடர்ந்தாய் நீ...
இரக்கமற்றவளாய் நீ
தோன்றிய
ஒரே தருணம் அது...
...
நீ எதைச் செய்தாலும்
அது எனக்காகத்தான்
இருக்கும்...
இதுவரையிலும் – நீ
எனை செதுக்கிய
ஒவ்வொரு தருணத்திலும்
இதை நினைத்துதானே
உனை நம்பியிருந்தேன்..
இப்போது
முகம் கூட
காட்டாது – எனை
முடித்துவிட
முடிவெடுத்தாயோ?..
...
நான் மௌனத்தில்
புகுந்து கொண்டது
உனக்காக மட்டுமே
என்பதை மறந்துவிட்டாயோ?
தெரிந்தும் ஏன்
இந்தப் புறக்கணிப்பு?
...
நீ காணாமல் போன
புள்ளியைப் பார்த்திருந்து
உன் நினைவுகளிலேயே
நான் புதைந்து போவதுதான்
எனக்காக நீ
தேடிக் கொணர்ந்த
சாதல் தாண்டிய
காதலின் பரிசா கண்ணம்மா?
...
அழகின் உச்சத்தில்
நமக்காக நாம் கட்டிய
மர வீடும்
விழுதுகளின் ஊடாக
உன் புடவைகளின்
பின்னலில் உருவான
ஒய்யார ஊஞ்சலும்
எப்போதும் கனன்று கொண்டிருந்த
சருகுகளின் கதகதப்பும்
தெரிந்தும் தெரியாமலும்
நாம் இசைத்திருந்த
பெயரற்ற ராகங்களும்
சின்னச் சிரிப்புகளும்
சீண்டுதலும் – அதன் பிந்தைய
உன் ரகசியக் கண்ணீரும்
அதற்கான என்
வெகுளித்தனமான
சமாதானச் சமிக்கையும்
நினைவில் வந்து போகின்றன...
...
மீண்டெழுந்து
ஆரத் தழுவி
அழுது நீ முடித்ததும்
நான் கேட்பேன்,
“ஏன்டீ, உனக்கு
சூடு, சொரனையே கெடையாதா?”
நீ உன்
உள்ளங்கையக் காட்டி
கண்ணால பேசுவ பாரு,
அந்த நொடி,
நான்
இன்னமும் என்
கண்ணுக்குள்ள
கட்டி வச்சிருக்கேன்...
...
இழக்க முடியாத,
இழக்கக் கூடாத - என்
இரண்டாம் குரல் தானே நீ ...
இப்போ மட்டும்
ஏன் இந்த
அபஸ்வரம் பாடத்
துணிந்தாய் கண்ணம்மா?
...
நீயாக வந்து – உன்
சுவாசம் சேர்த்து
கை தந்து – உன்
மாரோடு அணைத்து
ஒரு துளி கண்ணீர் விட்டு
தூக்கி எழுப்பாவிடில்
இந்த உயிர்
இப்படியேதான்
உறைந்து கிடக்கும்...
எத்தனை யுகங்களாயினும்,
இருக்கின்ற எல்லாமும்
இல்லாமற் போயினும்,
தளிர்க்கக் காத்திருக்கும்
என்
காதலும் – நீ
நாவில் தொட்டுப்
பேச வைத்த – என்
கவிதையும்...
...
இந்தத் தணல் மணலின் தகிப்பும்
உனைத் தேடும் தவிப்பும்
வெறும் கனவாய்
இருந்துவிடக் கூடாதா என்றுதான்
இப்போதும் எண்ணியிருக்கிறேன்...
என்ன செய்ய?
உயிரோடிருத்தலையும்
உணர்வின் உச்சத்தில் இருத்தலையும்
ஏன்
உயிரற்றிருந்த ஒருசில கணங்களையும்
உனைத்தவிர
யாரெனக்குத்
தந்துவிட முடியும் கண்ணம்மா?
..
நான் பிறந்ததும்,
வாழ்ந்ததாய் நம்பியிருந்ததும்
இப்போது சகித்துக்கிடக்கும்
நீயற்ற வலியும்
என்னாலன்றி உன்னால்தானே
சாத்தியம் கண்ணம்மா?
..
ஒருவேளை
உன் நீண்ட துயிலின்
அழகிய கனவின்
ஒரு வேண்டா இடைச்செருகல்
கதாபாத்திரம்தானோ நான்?
இல்லை,
நான் நம்பியிருப்பதுபோல்
நீயற்ற நொடிகளனைத்தும்
நான் – வெறும்
கனவில்தான் வாழ்கிறேனா?
இல்லை,
நீயே என் கனவு மட்டும்தானோ?
...
பதில் சொல்லவாவது
என் கனவில் – இல்லை
என் கனவாய்
வந்து போ கண்ணம்மா..
...


No comments:

Post a Comment