Sunday, January 4, 2015

நீயற்ற நம் ஊர்

நேற்றைய தூக்கமற்ற இரவில்
இடையிடையே – வந்துபோன
ஏதேதோ முகங்களுக்கிடையே
தொலைவில்
ஒரு கூட்டத்திலிருந்து
நீ
என்னை அழைத்தாய்...
...
பிரமையாகத்தான் இருக்குமென்று
கண்டுகொள்ளாது
இசையில் மூழ்கி
இளைப்பாறப் பார்த்தேன் ...
பாடல்கள் தொலைவில் போய்
உன்குரலில்
ஒலிப்பதாய்த் தோன்ற
எனக்கு நானே முணகி
உன் குரலை
விலக்கியிருக்க முயன்றேன்..
...
வேண்டுமென்றே
விளக்கனைத்தும் அணைத்து
இருளில் மூழ்கிப்போய்
உன் நினைவில்
சிறிது நேரம்
நிலைத்திருந்தேன்..
உண்மையில் – அது
நீண்ட நேரம்
நீடித்திருக்க வேண்டும் ..
....
உறங்கி விழுந்து
திடுக்கிட்டு – உன்
மடியில் – உன்
மூச்சுக்காற்றில் – உன்
சுருள் கூந்தலின் ஊடே
நீ
‘கண்ணா’ என அழைக்க,
சூரியனின் முதல் கற்றை
எனை
சுய நினைவிற்குள் இழுத்தது..
....
தினசரி
உனக்குப் போட்டியாக
முன்னெழ முயற்சித்து
தோற்றுப்போகும்
சூரியன் – இப்போதெல்லாம்
மேக தேவதையின்
உள்ளங்கைச் சூட்டில்
உற்சாகமற்று
உறங்கிக் கிடக்கிறான்...
...
எனக்காக வந்து போன
நிலவும் – நீ
சுட்டிக்காட்டி கதைசொன்ன
சோடி நட்சத்திரங்களும்
நெடிதுயர்ந்த
மரங்களின் பின்
ஒளிந்துகிடக்கின்றன
...
அவைகள் ஒன்றுகூடி
இதுவரை யாரும் கேட்டிராத
ராகமொன்றை இசைக்கின்றன
சுகமா சோகமா – என
சொல்லவொண்ணா அது
எனக்கு மட்டும்
இமை மூடும் போதெல்லாம்
கேட்கிறது..
அவ்விசை எனக்கு
ஏதோ சொல்ல நினைப்பதாய்
நான் நினைத்துத் தவிக்கிறேன்...
...
எனக்கு மிகவும் பிடித்த - நம்
இரு சக்கர வாகன சவாரி
இப்போது
இயந்திரத்தனமாகி
திசையற்று அலைந்து திரிகிறேன்...
வழியே,
வழக்கமாக வணங்கிப் போகும்
ஐயப்பன் கோவிலையும் மறந்து,
ஊடே நான் முணங்கும்
“பூவாசம்” பாடலற்று,
வார்த்தையற்ற,
காற்றற்ற,
வண்ணமற்ற – ஏதோ
ஒரு தொலைதூர உலகில்
நான்
பயணித்திருக்கிறேன்...
...
கடந்து போகும்
கிராமங்களெல்லாம் – நான்
இதுவரை காணாதன...
கூடவே வருகின்ற
நீண்ட மலைத்தொடரும்
இப்போது
ஆழமான பள்ளத்தாக்காய்
மாறிவிட்டது..
...
யானைப் பாதையாய்
உனை பயமுறுத்திய – அந்த
ஆளற்ற நெடுநிலம்
எங்கே போயிற்று?
...
உன் புன்னகைக்காகவே
ஒருமுழம்
அதிகம் தரும்
பூக்காரப் பாட்டியும்
அவள் பெட்டிக்கடையும்
எங்கே?
...
நாம் இருவரும்
சோடியாய் முகம்பார்த்து
லேசாகச் சிரித்துப் போகும்
சாலையோர கண்ணாடிக் கடையும்
காணாமல் போனது ஏன்?
...
ஒரு நாள் விடாமல்
உனைக் கேட்டுப் போகும்
பக்கத்து வீட்டு ராஜி
எனைப் பார்த்து முறைப்பதாய்த்
தோன்றுவது ஏன்?
...
எப்போதும் கவிதையில்
அழகைக் கூட்டும்
என் வார்த்தைகள் – இன்று
தறிகெட்டுப் போவதேன்?
...
இன்று நீ அனுப்பிய
நீல வண்ணப் புடவை
நிழற்படத்தைப் பார்த்து
தங்கச்சி கேக்குறா
“அக்காக்கு வயிறு வந்துருச்சுலா?”ன்னு
எனக்கென்னவோ
என் வயிறு பெருசான மாதிரி
வெட்கம் வேறு...
எனக்கு நானே
சிரிச்சுக்குறேன்..
...
இன்னும் கொஞ்ச நாள்தான்னு
உன் மனச தேத்திவிட்டுட்டு
இப்படி நான்
பொலம்பறேன் பாரு கண்ணம்மா!
...
சரி சரி
மறக்காம மாத்திரய  சாப்பிட்டு
நல்லாத் தூங்கு
நானிருக்கேன் உங்கூட ...
...
நீயும் எங்கூட
.....






2 comments: