Friday, January 2, 2015

நீயற்ற நம் வீடு


நீயற்ற நம் வீடு
எனை தினந்தோறும்
வெறித்துப் பார்க்கிறது..
...
தூங்கும்போதும்
கனவுகளின் இடையிலும் – பின்
விழித்தெழுந்து
உள்ளங்கை சேர்த்து
நமக்கு மட்டுமே வருகின்ற – காதல்
ரேகைப் படகைக் கண்டு – நான்
உன்னை நினைத்துச் சிரிக்கையிலும்,
உன் வாசம் ஈர்த்து
கோவிலாகிப் போன – நம்
படுக்கையறைச் சுவர்கள்
எனைப் பார்த்து
ஏதோ கேட்கத் துடிக்கின்றன..
...
நன்றாக வந்துகொண்டிருந்த
சமையலறைச் சில்லுக் குழாய்த் தண்ணீரும்
எனைப் பார்த்து
ஏதோ சொல்லிச் சிணுங்குகிறது...
..
உனக்காக நான் வரைந்த
உனக்குப் பிடித்த யானை முகமும்
எனக்குப் பிடித்த சிவரூபமும்
சேர்ந்த தியானச்சாமி
எனைப் பார்த்து
முகத்தைத் திருப்பிக்கொள்கிறது
...
“தினசரி தண்ணீர் விடு!!”
என நீ சொல்லிப் போக
இல்லாத பழக்கத்தை
இஷ்டப்பட்டு பழகி
அது வாடாமல் பார்த்து,
உனைத் தேடியிருக்கும்
பொழுதுகளில் – என்
பால்கனித் தோழியாகியிருந்த
துளசிச் செடியும்
எனைத் தவிர்த்து
நேற்று முளைத்த
அருகம்புல்லோடு
ஆசை வார்த்தை பேசி
எனைப் பாடாய்ப் படுத்துகிறது
...
சரி! அதுதான் போகட்டும்...
நீ மட்டுமே உலகை ரசிக்கும்
குளியலறைச் சன்னலில்
சமீபத்தில் ஒரு சிட்டுக்குருவி...
நான் பார்க்காத நேரத்தில்
நேர்த்தியாக கூடுகட்டி
குடிவந்து சேர்ந்தது...
என்ன தைரியம்!
...
இது தெரியாமல்
உனக்குப் பிடித்த ஜிங்கிலமணி
பாடலை நான்
கொலை செய்து
கர்நாடகத்தில் கத்தித் தொலைக்க
அந்தச் சின்னஞ்சிறு குருவி,
சொல்லாமல் கொள்ளாமல்
காணாமல் போனது..
...
அது தாய்வீட்டிற்கு
போக முடியாமல்
அடைகாக்க – நம் வீடு
தேடி வந்திருக்கும்...
...
நான் இப்போது
உன் குளியலறைப் பக்கம்
போவதேயில்லை,
அது விட்டுச் சென்ற கூட்டை
இன்னும் அதே இடத்தில்
விட்டு வைத்திருக்கிறேன்
நீ வந்து – எனக்குப்
பாவ விமோசனம் கொடு
கண்ணம்மா...
....
சமீபத்திய – என்
கவியுணர்ந்த அக்கா ஒருத்தியும்
கண்ணீர் விட்டு
“கண்ணம்மா குடுத்து வச்சவ” ன்னு
இன்னும் கொஞ்சம்
உம்முகத்த – என்
நெஞ்சுக்குள்ள
பச்சக்குத்தி விட்டுட்டா...
...
நான் என்னதான் செய்ய?
நீயே சொல்லு கண்ணம்மா!
...
நீ
நிறைமாதம் ஆறதுவர
என்
சிறைவாசம்
கொடுமை கண்ணம்மா!
...
நீயில்லாத
நம் வீட்டை – இனி
நீங்கியிருக்கவே நினைக்கிறேன்..
ஆனாலும் - நீ
கிழிக்காமல் விட்டுச் சென்ற
போன வருஷ நாள்காட்டியும்
இன்னும் அணையாத
காமாட்சி விளக்கும்
சுவரொட்டிய – சோடி
மயிலிறகும்
இடைச்சொருகி
எனைப்பார்த்து
ஏளனமாய்ச் சிரிக்கும் – உன்
நிழற்படமும்
எனை எங்கு போயினும்
ஈர்த்துவந்து
உன் வாசத்தில்
உருக வைக்கின்றன...
..
இப்போதைக்கு ஆறுதலாய்
உன் துப்பட்டாவைச்
சுற்றிக்கொண்டு
வான் பார்த்து நானும்
எனைப் பார்த்து நிலவும்...
...







1 comment: