Saturday, August 23, 2014

காதல்...மொழி...புன்னகை...மௌனம்..

நீண்ட நாட்களாய் வராது
விலகி நின்ற
கண்ணம்மா கவிதையும்
நானே விலக்கி வைத்திருந்த
கதைசொல்லிக் கவிதையும்
அந்த ஒரு நொடியில்
நேற்றைய ரயில் பயணத்தில்
சிலிர்த்து துளிர்விட்டது...
என்னையும் மீறி,
திமிறிக்கொண்டு - இப்போது
வேண்டா வெறுப்பாய் - எனை
எழுத வைத்துப் பார்க்கிறது
ஏதுமற்ற அப்பார்வை...
...
அவள் பார்வை
என் மீது விழவில்லை..
அதென்ன எதிர்பார்ப்பு எனக்கு?
அவள் அப்பயணத்தின் முழுமைக்கும்
எனை கவனித்ததாய் தெரியவில்லை...
எதற்கு கவனிக்க வேண்டும்?
சொல்லப் போனால்,
அவள் தனித்தே இருந்தாள் ,
உலகத்தின் எந்தச் சத்தமும்
அவளோடு இல்லை ...
அவளுடைய சத்தமென்று ஒன்றும்
இந்த உலகத்தில் இல்லை...
பேசுவதற்கு அவள்
கையாண்ட மொழி
மிகவும் அழகான
புன்னகை!!!
புன்னகை மட்டும்!!!
...
பிறந்தது முதல்
ஒரு பெண் புன்னகையில் மட்டுமே
பேசித் திரிந்து எப்படி
வாழ்ந்திருக்க முடியும்?
...
சில மலைப் பிரதேசங்களைத்
தாண்டி அவ்வப்போது
அவளைத் தவிர்த்து - நான்
தனித்து ஏனோ
சோகமாகிப் போனேன்..
...
மீண்டும் அவள்புறம் - நான்
திரும்பியபோது - அவள்
புன்னகையை ஒருவன்
அரவணைத்துப் பருகியிருந்தான்..
தாய் மடி சேய் போல - அவளும்
அவன் கைகளில்
சுருண்டு சாய்ந்து
காற்றில் ஏதோ
எழுதிக் காண்பித்தாள் ...
...
அவன் - வீரன்,
நல்ல ஆண்மகன்,
அவன் கண்கள்
அவளைத் தவிர,
வேறு எதையும்
ஒரு நொடியும்
கண்டுகொள்ளவில்லை...
அவன் - உலகின்
எல்லா சத்தங்களோடும்
இணைந்து வாழ்பவன்,
தன் சத்தத்தை இணைத்து
உலகைத் தொந்தரவு
செய்ய வேண்டாமென
நிச்சயம் அவன்
முடிவெடுத்திருக்க வேண்டும்...
அவளுக்காகவே
தனித்துப் பிறந்து
எங்கிருந்தோ வந்து
அவளைப் பார்த்திருப்பான் போலும்..
...
அவள் காற்றில்
விரலெழுதிப் பேச,
இவனும் இமையசைத்து
பதில் பேசியிருந்தான்..
அவன் ஒவ்வொரு இமைத்தலும்
அவளது புன்னகையை
ஒரு படி அதிகரித்தது...
...
அவர்களை - நான்
கவனிப்பதை - அவன்
நிச்சயம் கவனித்தேயிருந்தான்...
...
ரம்மியமான இசை
காதுகளுக்குள் கேட்டு,
அவளுக்கு அதை
ஸ்பரிசத்தில் விளக்கியிருந்தான்
அவன்..
இசை புரிந்ததுபோலவே
அவளும்
கண் சொக்கி
சாய்ந்திருந்தாள் ...
..
அவர்களுக்கிடையேயான
அந்த ஒவ்வொரு நொடியும்
எனக்குள்
விடையில்லா பல கேள்விகளையும் ,
சோகம் கலந்த ஆச்சர்யத்தையும்
அழுத்தி விதைத்தது..
...
அவர்கள்
காதல் படைத்து
போகுமிடமெல்லாம்
காதலின் வாசத்தைத்
தூவிச் செல்கிறார்கள்..
...
இரவில்,
அவள் கால்
தன் மடி வைத்து
அமுக்கி கொடுத்து
தனக்கு மட்டுமே கேட்கிற தாலாட்டை
தனக்குள்ளே பாடி
அவள் தூக்கத்துக்குள்
முதல் அடி எடுத்துவைக்க,
இவன் முதல் சொட்டு
கண்ணீர் விட்டான்...
...
இரவு முழுவதும்
அவள் முகம் மட்டுமே பார்த்து
இவன் முகம் முழுவதும்
நனைந்தே இருந்தது..
நானும் ,
என் திமிரும்
தூக்கமின்றி
வடக்கு நோக்கி
தனித்து இருந்தோம்...
...
என் கவிதையை மீட்டெடுத்து
தெரியாமலேயே எனக்குப் பரிசளித்து
ஏதோ ஒரு திசை நோக்கி
எதற்காகவோ அவர்கள்
தொடர்ந்து பயணிக்கிறார்கள்..
...
உலகின் எந்தச் சலனத்திலும் சிக்காமல்
ஆழ்கடலின் நிசப்தத்தோடு
அக்கடவுள்கள் எனக்குத் தந்த
தரிசனம், வரம்
நேற்றைய பயணம்...
...




1 comment: