Thursday, April 3, 2014

தனித்து விடப்பட்டவர்கள்


ஒவ்வொரு முறையும்
எங்கள் கதை
இப்படித்தான் சொல்லப்படுகிறது..

எமது வாழ்க்கை
பச்சைப் பசேல் சூழ்நிலையிலும்
மழை விழும் நாட்களிலும்
மிதமான தென்றலுக்கிடையேயான
சுகமான நடைகளோடும்
இனிமையாய் இல்லைதான்...

எங்கு நோக்கினும்
எமது சொத்து
நிலம் நிலம்
நிலம் மட்டுமே..
அதென்ன நிலம் மட்டுமா..
அது எம்குலத் தாய்..
எமது கடந்த காலத்
துக்கங்களை தனக்குள் தாங்கி
விம்மியிருக்கிறாள்..

அவள் கொண்ட வறட்சி
எமது இதயங்களில்
சூல் கொண்டு
முளை விடக் காத்திருக்கும்
புரட்சி வித்துகளை
அடைகாக்கவே ..

தவித்த வாய்க்கு
தண்ணீர் கிடைக்காமல்
தேடிக் கொணரப் போய்
இங்கிருந்து இல்லாமல் போனவர்கள்
நிச்சயமாய் கோழைகள் அல்லர்..
உலகின் ஏதோ மூலையில் - அவர்கள்
முன்பின் தெரியாத மனிதர்களின்
வலிகளைக் களைபிடுங்கி
வழிகளை விதைத்திருப்பார்கள் ..

இந்நிலத்தின் கானல் நீர்
காண்பதற்குத் தோற்றப் பிழைதான்,
ஆனால் ,
அது எம்மவரின் கனல் நீர்...
தவறிய பொழுதுகளை
மீண்டும் மீண்டும்
நினைந்து மீண்டெழ
திசையெங்கும் காற்றில்
புதைத்து வைத்த
கல்லறைகள்தாம் அவை..

எமை உற்றுநோக்கி
அவ்வப்போது வந்துபோகும்
ஞானியாகத் தோன்றும்
அந்தப் பக்கிரியை – நாங்கள்
கவனிக்காமல் ஒன்றும் இல்லை ...
எம்மோடு அவரும்
ஏதோ ஒரு புள்ளியில்
ஒன்றாகத்தான் தெரிகிறார்..

நிழல் தொலைத்து நிற்கும்
எமது நிகழ்காலமும்
நிஜம் தொலைத்து தேடும்
அவரது நிகழ்காலமும்
எங்களுக்கே தெரியாமல்
அடிக்கடி கைகோர்த்து
கதறி அழுதிருக்கின்றன....
இதை அவர் அறிந்திருக்க
வாய்ப்பில்லை...

அவர் யார் என்பதையோ
எதற்காக அலைந்து திரிகிறார் என்பதையோ
எம்மில் எவரும்
கேட்க விழைந்ததாய் நினைவில்லை..
முதல் முறை – அவர்
எங்களூர் வந்தபோதே
எம்மில் ஒருவராய்
எப்படியோ ஆகிப் போனார்..
எம் குடும்பங்களில் பல
அவரை
தேவ தூதராகக் கூட நினைத்து
வேண்டத் துவங்கியிருக்கின்றன...

பலமுறை – அவர் எம்மிடம்
பேசத் துணிந்து – பின்
பேசாமலே போகிறார் ..
ஆனாலும் – அவர்
சொல்லவந்ததை – நாங்கள்
உணர்ந்தே திரும்புகிறோம்...

எமது முகங்களை
நோக்கும்போதெல்லாம் – அவர்
கதறி அழுகிறார்...
தாய் பிரிந்த குழந்தையாய் – அவர்
தவிப்பது தெரிந்தும் – நாங்கள்
அவரைத் தனித்தே விட்டுவைக்கிறோம்...

எம்மினப் பெண்கள் அழகற்றவர்கள்,
ஆண்களோ இறுகிப்போய்
கண் சிவந்து அலைபவர்கள் ,
எங்கள் இயல்பை
எத்தனையோ போர்களிலும்
கொடும் கலவரங்களிலும்
தீண்டப் படாமையின்
உச்சத்தில் போய்
இடப்பட்ட தூக்குகளிலும்
எம் உழைப்பை
உறிஞ்சிய துரோகங்களிலும்
எப்போதோ இழந்துவிட்டோம்...
இப்போது நாங்கள்
நாங்களாகவின்றி – எமது
கசப்பின் மிச்சங்களாகத்தான்
அலைந்து திரிகிறோம்..

எமது சோகமும் துரதிருஷ்டமும்
வேறு யாருக்கும்
தொற்றிக்கொள்ள வேண்டாமெனத்தான்
நாங்கள் ஒருவரையொருவர்
கண்நோக்கி பார்த்துக்கொள்வதில்லை...

எமது விம்மல்களை
வெளியேற்ற வழியின்றி
தினசரி உணர்ச்சியின் உஷ்ணத்தில்
எமக்குள் மூழ்கிக் கலந்து
விக்கித்து வெறுத்து
அடுத்த தலைமுறைகளை
விதைத்து சதித்திருக்கிறோம் ...
எங்களுக்குள் கொண்டாட
இருக்கும் ஒரே வாய்ப்பு
நடுநிசிக் கலவிதான்...
உச்சத்தின்போது கூட
நாங்கள் கண்மூடிதான்
இயங்கியிருக்கிறோம்..
மீண்டு எழுகையில்
புறமுதுகைக் காட்டி
பின்னோக்கி காரி உமிழ்ந்து
திரும்பி நோக்காது
விட்டு வெளியேறி
பின்னிரவின் பிறப்பை நோக்கி
தனித்திருக்கிறோம்...

எம் இளசுகள்
எம்மிடம் பாலோடு சேர்த்து
வாழ்வையும் உறிஞ்சி வளர்கிறார்கள்..
அவர்கள் பொறுக்கித் திரிகின்ற
சுள்ளிகளிலெல்லாம் – எம்
கடந்த காலம் ஒட்டியிருப்பதை
அவர்கள் எப்படியோ
அறிந்தேயிருக்கிறார்கள்...

எமைச் சார்ந்த
கால்நடைகளை நாங்கள்
கழுத்தோடு கால்கட்டு
போட்டு பிடித்து வைத்திருக்கிறோம்
எம் வாழ்வோடு பிணைத்து வைத்திருக்கிறோம்..
முன்னோக்கி முகம் பார்ப்பின்
பலமுறை அவை
புற மனிதர்களை
எம் எதிரிகளென எண்ணி
முட்டித் தள்ளிவிடுகின்றன..

எம்மூர் எங்கும்,
நீங்கள் நடக்கும் திசையெங்கும்
எங்கள் பெருமூச்சின்
ஒற்றைத்துளியை – நீங்கள்
தழுவிச் செல்லக் கூடும் ..
அவை வெறும் சுவாசக் குமிழிகளன்று,
காற்றின் ஒவ்வொரு இழையிலும்
எங்கள் எதிர்காலத்தின்
வெற்றி சார்ந்த ஏக்கத்தை
ஏவி விட்டிருக்கிறோம்...

அடிக்கடி நாங்கள் விரும்பி
புலால் உண்டு
எமக்குள்ளான வெக்கையை
தக்க வைத்திருக்கிறோம்
எமக்குள் தகிக்கும் இத்தீ
வெகு சுலபத்தில்
அணைந்துவிடாது,
சொல்லப்போயின்
எம் உள்ளத்து வெக்கையின்
ஒரு துளியைக் கூட
நாங்கள்
இதுவரை வெளிக்காட்டியதில்லை
காட்டவும் விரும்பவில்லை ....

என்னவாயினும்
எம் வாழ்வும்
வாழ்வு சார்ந்த
வெறுமையும் வெக்கையும்
எமைத் தவிர்த்து
அலைந்து திரியும்
அவருக்கு மட்டுமே தெரியும்...
இருப்பினும் நாங்கள்
எங்களுக்குள்
தனித்து விடப்பட்டவர்களே...

No comments:

Post a Comment