Wednesday, April 2, 2014

தனித்து விடப்பட்டவன்


ஒவ்வொரு முறையும்
நான் சொல்லத்துவங்கும் கதை
இப்படித்தான் துவங்குகிறது...
....
...நான் நடந்துகொண்டிருந்தது
ஏதோ ஒரு மழை நாளில் அன்று
எனைச் சூழ்ந்திருந்தனவெல்லாம்
பச்சைப் பசேலெனவும் இல்லை
மிதமான தென்றலும் – எனக்கு
துணை வரத் துணிந்திருக்கவில்லை...
எங்கு நோக்கினும்
நிலம் நிலம்
நிலம் மட்டுமே..
அதுவும் நிழலற்ற நிலம்...
உலகின் ஒட்டுமொத்த வறட்சியையும்
தன்னகத்தே கருக்கொண்டிருந்த
முன்னாளில் தருமன் ஆண்ட நிலம்...

வெக்கை தாளாது
தண்ணீர் தேடி
தொலைதூரம் போய்
தொலைந்தே போனவர்களின் நிலம்...
காணுமிடமெல்லாம்
கானல் நீரின் கரிசனத்தில்
நாம் முன்னர் செய்த
கருமம் உரைத்து நிற்கும்
காட்சிப் பிழைகள்...

இந்த நிலமும் நானும்
ஏதோ ஒரு புள்ளியில்
மிகவும் நெருங்கியிருக்கிறோம்...
தொலைத்துவிட்ட நினைவுகளைத் தேடி
தீர்க்கமாய் நானும்
தொலைந்துபோன நிழலைத் தேடி
துக்கித்து இந்நிலமும்
ஏதோ ஒரு நொடியில்
கை கோர்த்து
கதறியழ காத்திருக்கிறோம் ...

ஈரம் படாத இந்நில மேனியில்
பகற்பொழுதின் வியர்வையும்
நித்திரையற்ற நிசியின்
கண்ணீர்த் துளியும் சிந்தி
ஈரம் சேர்த்து
வராத விடியலுக்காக
ஒரு இனமே காத்திருக்கிறது..

இவர்களிடத்தில் – நான்
என்ன சொல்லித் தேற்றுவது?
விடியலுக்கு காத்திருத்தலைத் தவிர்த்து
எப்படி விட்டுவிட்டு
ஓடிவிடச் செய்வது?

எனை அவ்வப்போது வந்துபோய்
அலைந்து திரிபவனாக மட்டுமே
அறிமுகமுள்ள இவர்கள்
இதுவரை – நான்
யார் என்பதையோ
எதற்காக அலைகிறேன் என்பதையோ
கேட்டதாய் எனக்கு நினைவில்லை..

நானும் இவர்களிடம் – பலமுறை
பேச முற்பட்டு
பேசாமலேயே மௌனித்திருந்திருக்கிறேன்...
அதுவும்,
ஒவ்வொரு முறையும்
இவர்கள் முகம் நோக்கி – நான்
பேசத் துணிகையில்
கண்ணீர் மல்கி எனக்குள்
கதறியிருக்கிறேன்...

என்ன இருக்கக்கூடும்?
எனக்கும் இவர்களுக்கும்
இடையில்?

உலகின் மிக அழகற்ற
பெண்களும்
சிரிப்பை மறந்த
கடுமை நிறைந்த
கண் சிவந்த ஆண்களும்
இவர்களுக்கிடையேயான
வேண்டா வெறுப்பான
உணர்ச்சி உக்கிரத்தின்
விளைவாய் விளைந்து – இன்று
அடுத்த வேலைக்கான – சுள்ளி
பொறுக்கித் திரியும்
சிறகை மறந்த சிட்டுகளும்,
இவர்களை நம்பி
மெலிந்து காயும்
கால்நடைகளும்,
எனை மட்டும்
உற்று நோக்குவதாய் தெரிகிறது..
ஆனால்,
இவர்கள் தங்களுக்குள்
கண் நோக்கி பார்த்துக்கொள்வதேயில்லை...

தொலைந்து விடாமல் இருக்க,
இங்குள்ள கால்நடைகளுக்கு
கழுத்தோடு சேர்த்து
கால்கட்டு போட்டிருக்கிறார்கள்..

என் கண்களுக்கு
இங்குள்ள மனிதர்களும்
அதே கட்டுடன்
திரிவதாகவே தோன்றுகிறது..

நான் அலைந்து திரிகின்ற
திசையெங்கும்
இவர்களின் பெருமூச்சு
என் காதுகளுக்குள்
இரைந்து கொல்கிறது ...

இவர்கள் இயல்பாய்
அடிக்கடி புலால் உண்பது
எனக்கொன்றும்
இயல்பாய்த் தோன்றவில்லை...
தங்களுக்குள்ளான
அசுர கணத்தை
அவ்வப்போது இவர்கள்
வெளிப்படுத்துவதாகவே தோன்றுகிறது...

என்னவாயினும்,
கடைசியாய் உண்டதும்
குளித்ததும் சுகித்ததும்
இன்னும் பலவும் மறந்து
தொடர்ந்து நடந்திருக்கிறேன் நான்...
....

No comments:

Post a Comment