Wednesday, January 4, 2012

அசையும் நிலா

உன் காலடி பட்ட
கருங்கல் வாசம்
நிலவில் நாம்
கண்டெடுத்த
கறுப்புப் பூவின் வாசத்தை
நினைவுபடுத்துகிறது!

நீ வீசியெறிந்த
சுருள் முடி - என்
சட்டைப் பையில் இருக்க
இதயக் குழாய்களும்
சுருண்டு கிடக்க
அடம் பிடிக்கின்றன !

உன் வயிற்றுவலி
என் வயிற்றுப்பசியை
மறக்கச் செய்கிறது!
இதுதான்
இரத்த சம்பந்தமா?

தயங்கித் தயங்கி
சொல்ல முடியாததைச் சொல்லி
"சீ" என
தலையில்
அடித்துக் கொண்டாய்
உன் வெட்கத்தில்
நானும் பங்கு கொண்ட
தருணம் அது!

அதென்ன ?
குழந்தைக்குப்
பாலூட்டும்போது மட்டும்
என் கண்களை
நேராகப் பார்ப்பதில்லை
நீ!

நிஜமான கோவத்திலும் கூட
உன் கண்கள்
விளையாடவே செய்கின்றன!

உன் மூலை முடுக்குகளை
என் முத்தக்காற்று
குத்தகை எடுத்துவிட்டதாம்
பொறுத்துக்கொள் !

நீ
நிஜமாகவே
உயிரோடு தான் இருக்கிறாயா?
இல்லை
அவ்வப்போது
என் கனவில்
வந்து போகிறாயா?

நீ
ரகசியமாய் சொல்லும் எதுவும்
எனக்குக் கேட்பதேயில்லை

உன்
தவறிய
அழைப்புகளின்போதும்
நான்
பேசிக்கொண்டுதான் இருக்கிறேன் !

உன் முதல் முத்தத்தில்
நிலைகுத்திய
என் கண்கள் உயிர்பெற
மீண்டும் ஒரு
முத்தம் கொடேன்!

உன்
குறும்புப்பார்வையுடன்
குழந்தையாய் விளையாட
எனக்கும்தான் ஆசை !

உன்
அமைதிதான்
அதிகம் பேசுகிறது!

உன்
பாத வெடிப்பிலிருந்து
விழுந்த மண்ணில்
பொன் விளைகிறதாம்
பொய்யில்லை !

என் இடதுகையும்
உன்னைப்பற்றி
எழுதத் துடிக்கிறது
என்ன செய்ய?

ஆங்கிலத்தில் வருணித்தால்
அந்நியமாகிப் போவாய் நீ
அதனால்தான் தமிழ்கிறேன்!

தலைகீழாய் பார்த்தாலும்
உன் நிழற்படம்
நேராகச் சிரிக்கிறதே
எப்படி?

உன்
முடியாத பொழுதுகளின்
கண்ணீர் தாங்கிய
கைக்குட்டை
எப்போதோ
முக்தி அடைந்துவிட்டது
தெரியுமா உனக்கு?

உனைப் பார்த்த கண்கள்
என்னிடமிருக்கின்றன
யாராவது
கண் போட்டு விடாமல்
சுத்திப் போட வேண்டும்!

நீ
நேரம் கேட்டதிலிருந்து
என் கைக்கடிகாரம்
கண்ட நேரத்தில்
அலாரம் அடிக்கிறது!

உன்
பார்வைக்குப் பதிலாக
நான்
என்ன தந்துவிட முடியும்?

நீ
முணுமுணுக்காத பாட்டெல்லாம்
ஒரு பாட்டா?

நீ போகும்
சாலையோரம்
பூங்கா எதற்கு?

வேண்டுமென்றே - உன்
தலையில் சிக்கிய பூக்களை
என்ன செய்கிறேன் பார்?

என் மீசையின்
வெள்ளைமுடிக்காக
விரதமிருந்து
மூக்கு குத்தியவள்தானே நீ?

நீ அழகாய் இருக்கிறாயாம்
என் தோழி சொல்கிறாள்
பெருமையாகத்தான் இருக்கிறது !

நீ வந்த பிறகு
தூக்கம் வருவதில்லை
கனவு வருகிறது!
ஆனால்
என் கனவில்
நீ மட்டும்
அழகாய் தூங்குகிறாய் !

நீ
அசையா நீரூற்று !
அசையும் நிலா !
பிசகா ஓவியம் !
பிசகிய தென்றல்!
முடியா தூரம் !
முடியும் பாரம் !
ம் .. ம் .. ம் ..
கவிதை
வறண்டு போய்விட்டது
உனைக் கொஞ்சம்
குடித்துக் கொள்ளவா?

No comments:

Post a Comment