Sunday, November 10, 2013

மாயா - தொடர்ச்சி 3


காடும் காடு சார்ந்த இடமும்
எங்கள் பிழைத்தலுக்கான ஆதாரம்...
கொல்லுதலும்
வெல்ல முடியாததை வெல்லுதலும்
வீரத்தை நிலைநாட்டுதலும்
எம் குலப்பெருமை...
பாற்கடல் அமுதத்திற்காக
மல்லுக்கட்டி நின்றவர்கள்
எம்மூதாதையர்கள்..
பாலை பல கடந்து
நாடு பல வென்று
பளிங்குக்கல் சிங்கச்சிலை செதுக்கி
சென்றவிடமெல்லாம் நிறுவி
நின்று திமிர் செய்தவர்
எம்குலச் சிங்கம்
என் தந்தை...
...
தினம் பூக்கும் குறிஞ்சி,
தாய்மையின் தூயபிரதி,
இருள்சூழ்ந்த எம் கானகத்தின்
தனிப்பெரும் சோதி,
எம் ஒட்டுமொத்த வெற்றிகளையும்
விதைத்து தினந்தோறும்
பயிர்செய்த பக்குவக்காரி,
வேட்டுவ தலைவனை
வாள்முனையில் வளைத்து
‘பிழைத்துப்போ’ எனச்சொல்லி
பின் அவனே
பரிசம்போட்டு பழிவாங்க,
பாசம் கூட்டி
பாடம் பல சொல்லி
நடமாடும்
எம் குலச் சாமி
ஆகிப் போனவள் என் தாய்
...
வீரம் விளைத்து
காடும் வீடும் காக்க
காளைகள் நாலு பெற்றும்
களையற்றுப் போனாள் ..
விட்டுப் பிரிந்த தாய்
மீண்டும் பிறப்பதாய்
செய்து போன சத்தியம்
சாத்தியம் ஆகாது நீடிக்க
நொந்து நூலாகி
உடைந்துபோய் உருகி,
கடைசியாய் காவி தரித்து
கோவில் கோவிலாய்
சுற்றித் திரிந்து,
சூட்சுமமாய் சொல்லிப்போன
ஏதோ ஒரு
ஏழைக்கிழத்தியின் வழிபற்றி
நிலவைக் குறித்து
தீர்க்கமாய் தவமேற்று
நள்ளிரவு நிச்சலனத்தில்
நிலவின் ஒற்றைக்கீற்று
உள்வாங்கி தரித்து
எனைச் சூல் கொண்டாள்
என் சாமி, என் தாய்...
...
எனைத் தாங்கியிருந்த
மாதம் பத்தும்
என் தாய் பேசியதெல்லாம்
இசையாகிப் போக,
அவள் நடை
தனியொரு நடனமாகி,
தனைச் சுற்றி
தன்னியல்பு மீறி,
ஏதோவொன்று
எப்போதும் பிரகாசிக்க,
பகலுறங்கி,
இரவு விழித்து
நிலவோடு நித்திரை காத்து
நடமாடித் திரிந்திருக்கிறாள்
....
நான் வெளிவந்த நொடி,
எம் கானகம் முழுதும்
மஞ்சள் ஒளியும்
மந்தாரப்பூ மணமும்
மாரியெனச் சொரிந்ததாம்..
முதல் மூணு மாசமும்
பசியின்றி , வேட்டையின்றி
தன்னிலை மறந்து
தியானத்தில் மூழ்கித்
திளைத்ததாம்
எம் தீரர் கூட்டம்
...
வால்முனைச் சிணுங்கலும்
யானைப் பிளிறலும்தான்
நான் கேட்ட தாலாட்டு..
குறுங்கத்தி பிடித்து
குளக்கரையில்
அகரம் எழுதி,
காற்றில் வால்நுனியில்
கவிதை எழுதச் செய்தான்
எம் தாய் தந்த மாமன்
...
பல்லாங்குழி வயதில் தொடங்கி
யாருக்கும் முன் எழுந்து
முந்தைய இரவின்
கனவுக் கோலத்தை
கதிரவனுக்குச் சமர்ப்பித்து
எம் குலச் சாமிக்கு
விளக்கு வைத்து முற்றத்தை
வெளிச்சத்தில் மொழுகி வைத்து,
வீரன் என் மூத்த அண்ணனின்
கருப்பழகி குதிரைக்கு
கண் கட்டி பயிற்சி கொடுத்து,
களரி புரிந்து – பின்,
காத்திருக்கும் பலநிற
தோட்டத்து மலர்களுக்கு
தாகம் தீர்த்து,
விரும்பி அடுக்களை புகுந்து,
அமிர்தமாய் சுவைகூட்டி,
அரிசில் படைத்து,
அக்கம் பக்கத்து,
அன்றாடங்காய்ச்சிகளைத் தேடி,
அவர்தம் சிறாருடன்
ஆடி விளையாடி ,
நீராட்டி,
மையிட்டு
வீரமீசை வரைந்து
அழகு சேர்த்து,
காடு சுற்றக் கிளம்பி
மாலை வரை
எமக்கேயான எல்லா
தந்திர விளையாட்டும்
ஆடிக் களைத்து,
நிலாப் பள்ளியெழுச்சி பாடி,
வீடு சேர்ந்தது – என்
மலரக் காத்திருந்த
மொட்டுப் பருவம்...
...
எம் குல
வீரத்தின் சின்னமான
வலம்புரி சங்கைக்
களவு செய்ய வந்து
கடைசி நொடியில் மாட்டி,
கட்டி வைத்து அடித்து
சிரச் சேதம் செய்யப்போன
இறுதி கணப்பொழுதில்,
வானகம் அதிர
இடியாக முழங்கி ,
கண்ணில் மின்னல் தெறித்து
கட்டவிழ்த்து,
தலை கொய்யக்
காத்திருந்த தலையாளியின்
தலைத் திருகி,
திமிறி இவன் சிதறிய
மூர்க்கத்துளி ரத்தம் - என்
முகம் சேர்ந்து
என்னில்
ஏதோ புரியாத
ஏக்கமொன்றை
விதைத்துப் போக,
மறுநாள் காலை
மூலை சேர்ந்தது - என்
திமிறித் திரிந்த பெண்மை
...



Thursday, November 7, 2013

மாயா - தொடர்ச்சி 2


நேற்றைய கனவில்
இவன் காற்சிலம்பு
தெறித்துச் சிதற
பதறி எழுந்து
நான் வரைந்த
இவன் ஓவியத்தின்
திமிர் பார்த்து
பெருமூச்சு விட்டு
எப்போதும் பக்கத்தில்
துணையாய் வைத்திருக்கும்
இவன் பரிசளித்த
அப்போதே உதிர்ந்த
மயிலிறகைத் தொட்டுப்பார்த்தேன்...
மீண்டும் என்னுள்
இவன் குறித்த
போய்விடுவானோ என்ற பயம்
தொற்றிக்கொள்ள,
தலைகவிழ்ந்து தரை பார்த்து
தனித்திருந்தேன்
...
அன்றொரு நாள்,
ஆற்றங்கரையில்
ஆழமாய்ச் சிந்தித்து
தென்றலைக் கீறி முடைந்து
கற்பனை கோட்டையெல்லாம் கட்டி
ஒய்யாரமாய் ஊஞ்சலாடியபோது,
எனக்காகவே
கடவுள் கொடுத்த வரமான
வழக்கமான மயக்கமென்னைத் தழுவ
தனியாய் நீந்தியிருந்த
தங்க மீனுக்குத் துணையாய்ப்போய்
ஆற்றில் விழுந்தேன்...
எப்படித்தான் வருவானோ
ஒவ்வொருமுறையும்
எனைக்காப்பாற்ற!!
...
விழித்துப் பார்க்கையில்
இவன் ஆண்மையின் அரவணைப்பில்
முகமூடிக்குள்ளான
மூர்க்கத்தின் முணுமுணுப்பில்
முறைத்துப் பார்த்த – இவன்
கூரிய விழிகள் விலக்கி
மெலிதாய்ப் புன்னகைத்தேன்..
ஏதோ தோன்றியவனாய்
திடீரென ஓடி,
அடர்ந்து சுற்றியிருந்த
ஆலமர விழுதுகளை
கட்டிப் பிணைத்து
ஏதோ செய்து ,
‘இதோ பார்,
உனக்கான அந்தரத்துக் கட்டில்’ என்றான்
என்னவோ – இவன்
எனைத் தொடும்போது மட்டும்
எனைச் சுற்றிலும்
தென்றலடிக்கிறது ...
எனையறியாமல் எனைத்தூக்கி
அந்தரத்தில் மிதக்க விட்டு,
‘இன்னிக்கு ராத்திரிக்கு
நீ தான் நிலா’ என்றான்..
அன்றைய இரவு
என் வெட்கத்தில் சிவந்தது...
...
தெரியாமலிருந்தும்
தெரிந்ததாய் நான் செய்த
தட்டையும் முறுக்கும்
தின்று விக்கி –இவன்
திணறிய நேரம்,
முடியாமல் சிரிக்க முயன்று – என்னில்
கண்ணீர் கொணர்ந்தான்,
‘பரவால்ல மாயா,
யாரோ திட்றாங்க,
தண்ணி குடு’ என்றான்..
‘கண்ணம்மா தவிர
யாரிருக்கா உன்ன நினைக்க?’
‘ஏன், நீ இல்லியா?’
‘நான்தான் உன்ன
ஜென்மசனியா புடிச்சு
என்கூடவே
வச்சிருக்கேனே’
‘ஏன், கூட இருந்தா
நெனைக்கமாட்டியா?’ என்றான் ..
சில நொடி மௌனம் காத்து,
‘உன்கூட இருந்தா
எனக்கும் சேத்து
நீ தானே யோசிக்ற!’ என்றேன்
...
வழக்கமான ‘ம்ம் ம்ம்’ போட்டு,
‘ஆமா,
கண்ணம்மாவ நேர்ல பாத்தா
என்ன செய்வ?” என்றான்
துளியும் யோசிக்காம,
‘சட்டுன்னு கால்ல விழுவேன்,
அப்புறம் கட்டிக்குவேன்’ என்றேன்..
‘ஏய், அவ என் கண்ணம்மா,
நீ எப்படி கட்டிக்கலாம்’
குழந்தையாகக் கேட்டான்..
‘கண்ணம்மா தானே
என் கண்ணா உன்ன
பாத்துக்கச் சொன்னா,
உனக்கெங்க புரியப்போகுது,
போப்பா போ!’ என்று சீண்ட,
ஏதும் புரியாமல்
அவனுக்கே உரிய
திருட்டு முழியில்
வார்த்தையற்று திக்கினான்
...
“அது சரி,
நீயும் நானும் யாரு?’ என்றேன்
“அப்படின்னா?’
‘நமக்குள்ள என்ன?’ என்றேன்
‘என்னன்னா?’
‘அது வந்து,
வந்து,
நம்ம உறவுக்கு பேர் என்ன?’
இதைக் கேட்கையில்
சத்தியமாய் என்னுயிர்
என்னில் இல்லை..
மௌனமாய் சிலநொடி
வானம் பார்த்து,
அருகே வந்து – பின்
முகம்பார்த்து,
நாடி பிடித்து,
‘நல்லா கேட்டுக்கோ,
நீ மாயா,
நான் மாயன்,
நாம் மாயை’
என்றான்...
இதை நிச்சயிப்பதாய்
எங்களுக்காக
அன்றைய இரவு
புதிதாய் ஒரு
மஞ்சள் மலர்,
ஏழு கடல் தாண்டி,
மிதக்கும் தீவின்
ஏகாந்தத்தில் மலர்ந்திருக்கும்
...


Monday, November 4, 2013

மாயா - தொடர்ச்சி 1


இந்த நொடி – இவன்
எனக்கான மஞ்சள் மலரின்
வாசத்தை நெருங்கியிருப்பான்
...
என் சுண்டு விரல் ஈரம் பட்டு
ஏதோ ஒரு மழைநாளில் – இவன்
சிணுங்கி எழுந்திருக்க
எனையறியாது உந்திப் போய்
இவனுள்ளே விழுந்து விட்டேன் ..
மீண்டு வர முடியாத
அவ்வீழ்ச்சியின் தாக்கத்தில்
என் மனம் சூல்கொள்ள
எந்தப் பூவிலும் இல்லாத
வாசமொன்று எனைப் பிடித்துக்கொண்டது
...
எனக்கும் இவனுக்கும்
மட்டுமே சுவாசிக்க முடிந்த
அவ்வாசத்தின் பிறப்பிடம் தேடி
ஏதுமற்ற ஏழை முதல்
எல்லாம் தெரிந்த வள்ளல் வரை
வானுயர இமயம் முதல்
முக்குளிக்கும் பாடகபுரம் வரை
இருத்தலின் அடித்தளம் முதல்
இல்லாமையின் உச்சம் வரை
இன்னும்
எல்லையுள்ளவை முதல்
எல்லையற்ற ஏதுமற்றது வரை
அலைந்து திரிந்து
களைத்துப் போன பின்னிரவில்
நிலவும் இவனும் தனித்திருக்க
குளிரோடு சேர்ந்து தானும்
ஊளையிட்டு பறந்து வந்த
செஞ்சிவப்புப் பறவையொன்று
இவன் மீது மோதி
மஞ்சள் மலராகி – இவன்
மடியில் விழுந்தது
...
வார்த்தையற்று – என்
வாசம் கிடைத்த மகிழ்ச்சியில்
திளைத்து தூங்கிப் போனான்..
அலைகடலின் மிதத்தலையொத்த
நித்திரை அது..
விழித்தெழுகையில்
மிதக்கும் தீவின்
மஞ்சள் மலரை
எனக்குப் பரிசளிப்பதாய்
இவனுக்குள் பித்துப்பிடித்துப் போனது..
...
இவன் என் கைப்பிடித்து
நின்ற நொடி நினைவிருக்கிறதா?
அந்த நொடி
யாருக்கும் கேளாமல்
என்னருகே வந்து
“மன்னிச்சுக்கோ மாயா”
என்று சொல்லியிருக்கிறான்..
எனக்கே தெரியாமல் – அது
என் மனவெளியில் – ஒரு
புரியாத புதிராக – இன்னும்
சுற்றித் திரிகிறது
...
இவன் கை பற்ற
ஏங்கியிருப்போர் எத்தனை,
அப்படியிருக்க
இவனே வந்து பற்றியதில்
சிலையாகிப் போன நான்
இவனாகியும் போனேன் போலும்..
எதற்கு மன்னிப்பு?
இவன் காலடியில் கிடந்து
காதல் செய்து கிடத்தல்
எனக்கான வரமல்லவா?
இல்லை,
இவனை மன்னிக்கத்தான்
யாரால் முடியும்?
வணங்கா மகுடங்களும்
இவன் வாள்வீச்சும்
சொல்வீச்சும் கண்டு
வாடியிருக்க,
இவனை மன்னிக்க
இவனைப் போலவே
யுகம் பல முன்னர்
வாழ்ந்து போன
வெண்ணைக் கள்ளனாலும்
இயலாதுதானே போகும்..
அப்படியிருக்க,
என்னுள் ஏன் – இப்படி
ஒரு குழப்பத்தை
விதைத்து நின்றான்?
...
ஒரு நாள்
யாருமறியாமல் – இவன்
விட்டு விட எத்தனித்த
கண்ணீர்த்துளியை
கடைசி நொடியில்
கையேந்தி காப்பாற்றி
கண்ணில் ஒற்றி
கண்ணீர் விட்டேன்..
கல்லுக்குள் ஈரம் கண்டு – என்
பேதை மனம் பதைபதைக்க
நடிக்கத் தெரியாமல் நடித்து
ஏதுமற்றதாய்
ஏதோவொன்றை சொல்லிப்போனான்..
அவன் கண்களின்
அப்போதைய வலி
பால் வற்றிய தாயின்
பரிதவிப்பு
...
அமைதியாக நானும்
பின் தொடர,
நிலவு நோக்கி நடந்தவனாய்
தன் நிலவைப் பற்றி
கதை சொன்னான்,
இல்லையில்லை
கவிதை சொன்னான்
கண்ணம்மாவின்
காவியம் சொன்னான்
...
இந்த வரி எழுதி முடிக்கையில்
சராசரி பெண்ணின்
அத்தனை வன்மமும்
பிடிப்பும் பிடிவாதமும்
என்னுள் உச்சநிலை தாண்டி
உயிர் வலி கொடுக்கிறது..
இருந்தாலும் – இவன்
என்னுள் விதைத்துப் போன
ஒவ்வொரு நொடி வாழ்தலும்
இவன் கரம்பிடித்து
என் வாழ்தலை
நீட்டித்துச் செல்கிறது...
...

Tuesday, October 29, 2013

மாயா

என் பெயர் மாயா
ஓர் காட்டுக் கொள்ளையனின்
காதலி நான்...
இதைச் சொல்லிச் சிரிக்கையில்
உலகின் அனைத்துப் பெண்களையும்
வென்றுவிட்ட திமிர்
என்னுள் தலை தூக்கத்தான் செய்கிறது..
எவர்க்கும் அடங்காத இவன் – என்
கடைக் கண் பார்வைக்கும்
அதனோடு சேர்ந்த
மெல்லிய மௌனத்திற்கும்
எப்படி அடங்கியிருக்கிறான் என்பது
எனக்கும் அவனுக்கும் கூட
தெரியாத, தெரிந்துகொள்ள விரும்பாத
உன்னத ரகசியம்...
..
இன்று, இந்த நொடி
உயிர் மீண்டு வருவானா
இல்லையா என்ற
பரிதவிப்போடு
அவன் சார்ந்த கடந்த கால
நிகழ்வுகளும் – அவற்றோடு
பின்னிப்பிணைந்த
என் வெட்கமும் சேர்ந்து
எனைப் பாடாய்ப் படுத்த
ஒரு நொடி புன்னகைத்தும்
மறு நொடி கண் கலங்கியும்
எங்கள் முதற் சந்திப்பை
பரிசளித்த இதோ
இந்த ஆலமரத்தடியில்
கன்னி காத்து காத்திருக்கிறேன்...
...
நான் தலை தூக்கிப் பார்த்த
உலகின் முதல் ஆண்மகன் இவன்..
அந்த நொடி,
என்னுள் ஏதோ ஆகியிருக்க
என்னவென்று குழம்பிப் போய்
நான் உறைந்து நிற்க,
தன் பிறப்பையும் வாழ்வையும்
அதற்குக் காரணமான
அத்தனையும் வெறுத்து
உக்கிரத்தின் உச்சத்தில்
தலைகுனிந்து நின்றிருந்தான்...
...
கானக ராஜனின்
அதிசய பொக்கிஷத்தை
களவு செய்யப் போய்
கடைசி நொடியில்
திரை மறைவில் நின்று
கறுப்புத் துணியில் கண் கட்டி
கண்ணாமூச்சி ஆடியிருந்த
கன்னியின் கீச்சுக் குரலில்
தடுமாறி நின்றான்..
விதி அவளைத் தடுக்கி
இவன் மேல் விழச் செய்ய,
மூவுலகைத் தாண்டிப் போய்
யாரும் பார்த்திரா பூக்களின்
வாசத்தில் விழுந்திருக்கிறான்..
விழித்தெழுந்தபோது
வதைக்கப் படுதலின்
உச்சகட்ட வலியில் இருந்தபோதும்
இவன் கண்கள்
அக்கன்னியின் கடைசி ஸ்பரிசத்தை
தேடித் தவிக்க,
ஒய்யாரப் பல்லக்கில் வந்து
இவனைச் சிரச் சேதம்
செய்யச் சொல்லி
சூழ்ச்சிச் சிரிப்பில்
சேதி சொல்லிப் போனாள் அவள் ..
ஏதும் புரியாமல்
பிணைக்கப்பட்ட சங்கிலிகளின்
ஏளனத்தோடு எடை கூட்டி
கடைசி ஆசைக்கு
தரை பார்த்து
துணிந்திருந்தான் இவன்...
...
தூக்கிலிடுவதற்குத்  துணையாக
வசை பொழிந்து
மண் வாரி இறைத்திருந்தனர்
இவனது களவில்
உடல், பொருள் , உள்ளம்
இழந்தவர்கள்...
கறுப்புத் துணி மூட
கடைசித் துளி இரக்கத்தோடு
வீரன் ஒருவன் முன்னேற,
மெதுவாக தலைதூக்கி
‘மாயா’ என்றான்..
அந்தச் சொல்
என் காதுகளை மட்டுமே எட்டியது..
அடுத்த நொடி
என் கண்களும்
அவன் கண்களும்
எங்களின் புரியாத
முந்தைய உறவின்
முடிச்சுகளை அவிழ்த்தெறிந்து
மூர்க்கமாக சங்கமித்தன...
திடீரென,
அசைவற்ற ஆலமரம்
புயலென ஆர்ப்பரிக்க,
புதைந்து கிடந்த வீரமனைத்தும்
புழுதியாய் சுழற்றியடிக்க,
ஆழிப் பேரலையாய்
காட்டாறு பொங்கியெழ ,
கட்டவிழ்த்து கம்பீரமாய்,
என் கை பிடித்து நின்றிருந்தான்
இவன்..
...
நேற்றைய நள்ளிரவில்
எனக்குத் தெரியாதென எண்ணி
என் பிறந்தநாளுக்குப் பரிசளிக்க
எவரும் கண்டிராத
மிதக்கும் தீவின்
மஞ்சள் மலர் தேடிப்
போயிருக்கிறான்...
..
இவன் உயிர்மீண்டு
வருவானா இல்லையா – என்ற
பரிதவிப்போடு
பாதை பார்த்திருத்தல்
எனக்கு மட்டுமே
கிடைத்த சுகம்...
...
இவன் வந்து சேரும் வரை,
இனி வரும் சில நாட்கள்
இவனுக்கும் எனக்குமான
இயல்பான இரகசியங்களை
இவ்வுலகிற்குப் பகிர்ந்திருக்கும்..
...





Wednesday, July 24, 2013

பாவிமகன் நல்லாருக்கட்டும்

எப்படா என்ன
எல்லாத்துக்கும் காட்டுவ?
எப்படா உன் கைபிடிச்சு
ஊரெல்லாம் நடப்பேன்?
...
நமக்குன்னு மாத்தின மோதிரமும்
ஆத்தா கோயில் தாலியும்
எப்படா வெளிய காட்ட?
...
யோசிச்சு பேரு வச்சு
இன்னும் பொறக்காமையே
இருக்காளே உம்பொண்ணு!
...
சாதி சனம் சுத்திநின்னு
சடங்கெல்லாம் செஞ்சுவச்சு
உத்தரவா உரிமையோட
கூட்டிக்கிட்டு போவியா?
இல்ல
எப்பவுமே இப்படியே
என்ன கவிதைக்குள்ள
முடக்கிடுவியா?
...
முத நாள் தொட்டு
நேத்தைய நிலா வரைக்கும்
உன்னையும் என்னையும்
சேத்து வச்சுப் பாத்தது
ஊருக்கு வெளிய
ஒத்தயடிப் பாதையில
சாமியா நிக்குற – அந்த
ஒத்தப் பனமரந்தான்
இன்னிக்குப் போனாலும்
எங்க ஆத்தா போலப்
பாசமாப் பாக்குது
கூட்டிக்கிட்டுப் போனவன்
நல்லாப் பாத்துக்குறானான்னு
கேக்காமக் கேக்குது..
என்னத்த நானுஞ்சொல்ல?
அவனப் பாக்கவே முடியல,
அவன் எங்க என்னப்பாக்கன்னு!
..
அப்பப்போ வானத்தையும்
சும்மாப்போற மேகத்தையும்
பேருக்காச்சும் தூதுவிட்டு
காதலக் காட்டுறானாம்..
கள்ளப்பய அவன்,
கையில சிக்குனா
வசமா தூக்கியாந்து
சிறவச்சு சொகமா
சித்ரவத பண்ணியாச்சும்
குடும்பம் நடத்தப்போறேன் ..
..
மரியாத ரொம்ப உண்டு
பாசத்த சொல்ல வேணா
என்ன கொஞ்சம் கோவக்காரன்
பொசுக்குன்னு அடிச்சுட்டு
பேசாமப் போயிடுவான்
பின்ன கொஞ்சம் நேரம்போயி
அவனாவே வந்துநின்னு
ஆகாசத்தப் பாத்துக்கிட்டே
என் ஆத்தா நீ தாண்டி
தங்கக்கொடமே வாடீன்னு
தெரியாம செல்லங்கொஞ்ச
மானங்கெட்டு நானும்போயி
மாரோட சாஞ்சுக்குவேன்
...
இப்போதைக்கு என்ன செய்ய
ராத்திரிக்கு அவன் நெனப்பும்
காலையில எம்பொழப்பும்
போகிறவர போகட்டும்
பாவிமகன் ,
எங்கிருந்தாலும்
நல்லா இருக்கட்டும்...
...

உனை விட்டுக் கவியாயிருத்தல்

நீ நினைப்பதையெல்லாம்
எழுதி நான்
கவியாகியிருத்தல்
என்ன பெரிய விஷயம்?
நீ நினைக்கப் போவதையும்
நெடுநாள் முன்பே
எழுதி முடித்து
உன் வாழ்வையும்
அது சார்ந்த வனப்பையும்
நமக்குத் தெரிந்த,
நமக்கு மட்டுமே தெரிந்த
ஓர் தனி இடத்தில்
ஒளித்து வைத்திருக்கிறேன்!
..
அதை நீ
தேடிக் கண்டு
மகிழ்ச்சி மிகுதியில்
எனை முத்தமிடத் துடிப்பாய்!
மூவுலகத் தொலைவில் நான்
உனக்கான
எதிர்காலக் கவிதைகளுக்கான
வார்த்தைகளை
நட்சத்திரங்களுக்கிடையே
விதைத்துக் கொண்டிருப்பேன்
...
எனைக் காணாது
நீ தேடித் தவித்து
துக்கித்துப் போய்
விடுகின்ற பெருமூச்சில்
கடலலையும்
இளந்தென்றலும்
ஒரு கணம்
நின்று, யோசித்து
எனக்குச் சேதி அனுப்பும்
...
வேண்டுமென்றே கண்டு கொள்ளாது
காதலைக் கட்டுப்படுத்தி
தொலைவு பல
இன்னும் கடந்திருப்பேன் நான்..
..
நான் கொடுத்த
முக்குளித்த முத்தையும்
மழை நேரத்து
மயிலிறகையும்
மார்பில் அணைத்து
வான் பார்த்து
ஏதேதோ புலம்பி
உறவு தவிர்த்து
அங்குமிங்கும்
புரண்டிருப்பாய் நீ..
..
பசி ஏது ?
தாகம் ஏது?
பகல் ஏது?
இரவேது?
நேற்று ஏது?
இன்று ஏது?
நாளைதான் ஏது?
ஏதுமற்ற ஏதோ ஒன்றில்
கண் பதித்து
நிலை குத்தி
தானாகக் காலாட்டி
விரல் பிசைந்து
சீரற்ற உடை விலக்கி
உள்ளும் புறமுமற்று
உனக்கான என்
முதல் கவிதையின்
முதல் வார்த்தையை
முணகிக் காத்திருப்பாய் நீ!..
...
உன் வலி
என்னில் உணர்ந்து
ஏகாந்தம் வெறுத்துப் போய்
ஏதும் ஓடாமல்
எனையறியாமல்
ஏதோ ஒன்று
உந்தித்தள்ள
விருப்பு வெறுப்பு தாண்டிய
ஓர் உன்னத ஏக்கத்தில்
எனது உயிர்
உனது உயிர் நோக்கி
என் உடல் விட்டுப் புறப்பட்டு
பறந்து போக
பின் தொடர்கிறேன் நான்...
...
எப்போது நம்
அடுத்த சந்திப்பு என்பதை
நமைப் பற்றி
ஏதும் புரியாத
எவனோ ஒருவனோ
இல்லை
எவளோ ஒருத்தியோ
கனாக் காணட்டும்...
...

கண்ணம்மாவின் காகித முத்தம்

தொலைதூரப் பூக்களின் வாசத்தையும்
வரப் போகும் வானவில்லின் வனப்பையும்
வசதியாய் கவியிருத்தி,
உறக்கமற்ற வேளைகளின்
அலைக்களிப்பையும் - இன்னும்
இடையறாது துரத்தும்
இயல்பான சிரிப்புகளையும்
ஏற்ற இறக்கங்களையும்
இம்சித்திருக்கும்
இஷ்ட தெய்வங்களையும்
மறந்திருந்து ,
இருத்தலை மெய்ப்பிக்க வேண்டி
கண்ணம்மாவின்
கடிதம் தேடி
காத்திருக்கும் கவி!
..
இடையிடையே வந்து போகும்
உன் லேசான புன்னகையும்
குறும்புப் பார்வையும்
அன்றைய இரவின்
அயில மீன் கொழம்பும்
நிலா வெளிச்சக் கண் சிமிட்டலும்
கை கோர்த்த கண நேரமும்
நமக்குப் பின்னால்
ஒளிந்துகொண்ட வெட்கமும்
ஏதோ நான் உளறப் போய்
வருத்தி நீ
வெளிப்படுத்திய
வேண்டாக் கோபமும்
தொடர்ந்த விவாதமும்
முடிவாய் வந்து நின்ற
மௌனமும் - அதைச் சார்ந்த
இஷ்டமில்லா இடைவெளியும் ,
இப்போதைய
கண்ணம்மாவின் இல்லாதிருத்தலும்
கவியின் காத்திருத்தலை
கடினமாக்கி நிற்க,
கலங்கியிருத்தலை
கடந்திருக்க வேண்டி
கண் மூடி நொடிதோறும்
வடக்கிருந்தான் கவி!
...
கடிதம் வராது
கனவு வந்தது
...
நேற்றைய பொழுதின்
நிறைவேறா ஆசையாய்
ஆதங்கமாய்
கண்ணம்மா மனதில்
ஏதோ ஒன்று..
அவள் இமையில்
ஒளிந்திருந்த சோகத்தை
சுலபமாய் உணர்ந்து
சுண்டு விரல் பிடித்திழுத்து
"என்ன ஆச்சு?" என்றான் கவி.
...
வழக்கமான "ஒண்ணுமில்ல"
தவிர்த்து தந்திரமாய்
தலை குனிந்து கண்ணம்மா!
...
கவியும் நமுட்டுச் சிரிப்புடன்
"என்னன்னு சொன்னா,
இன்னொன்னு தாரேன்"
என்று வழிய,
"போ! உனக்கென்ன
என்னப்பத்தி !" என்றாள் ..
"சரி போறேன், விடு!" என்று
கடைசி யுத்தியை
கச்சிதமாய் வீச,
"நேத்து பூவாகிப் போனியாமே?
யாரோ சொன்னாங்க " என்றாள்

"ஏன் உனக்குத் தெரியாமலா?"

"யாருக்கோ தான எழுதின,
எனக்கென்ன?" என்று
கண்ணால் கண் ஊடுருவி
கேள்வியாய் மாறி நின்றாள் ..
..
மூக்கு நுனி கோவத்தில்
"என் கவிதைய
கேவலப் படுத்துறியா ?"
சிவந்து நின்றான்
கவி,
காதலில்!
..
"எனக்கு எழுதுனா
கவிதைல எங்க என் பேரு ?"
என்று தாவணி நுனியால்
விழுவதற்கு முன்
கண்ணீர் தாங்கி
கச்சிதமாய்
கனம் கூட்டினாள்
...
பதிலற்ற நேரங்களில்
பாவம்!
என்ன செய்வான் கவி!
இடைவெளி குறைத்து
உயரம் தாழ்த்தி
அவள் தலை நிமிர்த்தி
கண் ஈரம் உலர
லேசாய் ஊதி
பின்
இறுக்க அணைத்து
"அட பைத்தியமே!
நீ வேற, என் கவிதை வேறயா?
நீ என் கூட இரு,
நான் எதுக்கு
கவிதை எழுதப்போறேன்?
நீ அப்பப்போ விட்டுப் போற,
நான் உன்ன எழுதி
என்னுள் இருத்திப் பாக்கிறேன்!
அவ்ளோதான் என் கவிதையெல்லாம்..."
என்று
அவனுக்கே தெரியாத
உன்னத உண்மையெல்லாம் சொல்லி
இன்றைய பொழுதின்
இதமான உறக்கத்திற்கு
கண்ணம்மாவை
அழைத்துச் சென்றான்
அசட்டுக் கவி!
...
கனாக் கலைந்து
கடிதத்தின் வாசம் பிடித்து
பிரித்துப் பார்க்க
"என்னடா?
மறுபடியும் ஏமாத்துறியா ?"
என்று இரண்டே வரி!
..
கீழே
காகித முத்தத்துடன்
கண்ணம்மா!
....